Wednesday, June 24, 2026
Home Blog Page 3

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

0

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம் இந்நிலையில் வாரத்தில் வியாழன் சந்தை நடைபெறும் என்பதால் இங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது இந்நிலையில், விளையாட்டு மைதானத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார் அப்பொழுது மைதானத்தில் குடிபோதையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் இளம் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து வம்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் கோபமடைந்த இளம்பெண் குடிபோதையில் வம்பு செய்தவரை தனது கைகளால் தாக்கியுள்ளார் இதனால் கீழே விழுந்த அவர் மயக்கம் அடைந்த நிலையில் அங்கு நடை பயிற்சி மேற்கொண்டவர்கள் உடனடியாக தலையிட்டு இளம்பெணை தடுத்து நிறுத்தி காவல்துறைக்கும் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயக்கமுற்ற குடிபோதை நபரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்றி வைத்தனர் அப்பொழுது அந்த இளம் பெண் காவல்துறையினர் வராமல் ஆம்புலன்ஸ் எடுக்க கூடாது என்று தகராறில் ஈடுபட்டார் இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறையிடம் அந்த இளம் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சரியான நேரத்துக்கு வரவில்லை.

மேலும் என் துப்பட்டாவை பிடித்து இழுத்தவனை இறக்கி விடுங்கள் நான் அவனை கொன்று விடுகிறேன் என்று காவல்துறையினரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்பு காவல்துறையினர் இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து ஆம்புலன்சை எடுத்துச் சென்றனர் இதனால் காந்திமா நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அறநிலையத்துறை அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் …!

0

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வெகு நாட்களாக எழுந்த நிலையில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பது தொடர்பாக வந்த புகார்களின் உண்மைத்தன்மையை கண்டறிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிகாலை 5 மணி அளவில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார். அப்போது அவர் தனது காரை கோயிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு, முகக்கவசம் மற்றும் டி சர்ட் அணிந்து சாதாரண பக்தர் போல் கோயிலுக்குள் சென்றார்.

திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வைகாசி விசாக திருவிழா நேற்று தொடங்கிய நிலையில், பக்தர்கள் அனைவரும் சமமாக தரிசனம் செய்வதற்காக அனைத்து விதமான கட்டண தரிசன முறைகளையும் கோயில் நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.கோயிலுக்குள் அமைச்சர் ரமேஷ் வந்த நிலையில் உடன் வந்திருந்த அவரது உதவியாளர்களில் ஒருவர், விரைவாக சாமி தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும்? என்று அங்கிருந்த அர்ச்சகர்களிடம் கேட்டுள்ளார். வந்திருப்பவர் அமைச்சர் என்று தெரியாத அர்ச்சகர்கள், தலைக்கு ரூ. 1,000 வீதம் மொத்தம் 4 பேருக்கு ரூ. 4,000 லஞ்சமாக கேட்டுள்ளனர். அப்போது கையில் ரொக்கமாக பணம் இல்லை என்று கூறிய அமைச்சர் ரமேஷ், அர்ச்சகர்களில் ஒருவரின் ஜிபே கணக்கிற்கு 4,000 ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். பின்னர், டிஜிட்டல் ஆதாரத்துடன் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்களை அமைச்சர் ரமேஷ் கையும் களவுமாகப் பிடித்தார். இதனால், திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அமைச்சர் ரமேஷ் முறைகேட்டில் சிக்கிய அர்ச்சகர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அறநிலையத் துறை ஊழியர்களை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை கடுமையாக எச்சரித்தார். பின்னர் அவர்களிடம் விளக்கக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விரைவில் மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும் இந்த விவகாரம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது- முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

0

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த சந்திப்பின் போது பிரமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (27.05.2026) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, [மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது. ஆனால் உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்க வேண்டும்.
மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பிற்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர். 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

0

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு எதிராகவும், எஸ்.பி.வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.இதன் காரணமாக, எஸ்.பி.வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு எஸ்.பி.வேலுமணி தரப்பும் மாறி மாறி சபாநாயகரிடம் மனுக்களை அளித்தனர். இதற்கிடையே, அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பும், எஸ்.பி.வேலுமணி தரப்பும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இருதரப்பு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமைச் செயலகத்திற்கு வந்து, சபாநாயகரிடம் தாங்கள் கொடுத்திருந்த மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “தேர்தல் முடிந்த பிறகு சில கருத்து வேறுபாடுகளால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சில முடிவுகளை எடுத்தோம்.எங்கள் தரப்பை சேர்ந்த 25 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் மனு கொடுத்தார்கள். நாங்களும் அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு கொடுத்திருந்தோம். இருவரும் நாங்கள் கொடுத்த மனுக்களை வாபஸ் பெற்று விட்டோம். அந்த கடிதத்தை பேரவை தலைவரிடம் கொடுத்துள்ளோம். எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தான். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி தான். தோல்விக்கு பிறகு நாங்கள் சில கருத்துக்களை முன்வைத்திருந்தோம். அதிமுக நூறாண்டுகளுக்குப் பிறகும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில கருத்துக்களை சொல்லி இருந்தோம். கட்சியில் வெற்றி, தோல்வி சகஜம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற கருத்தை வைத்திருந்தோம். எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து ஒன்றன் பின் ஒன்றாக செய்வதாக எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். எங்களுக்கு இடையே பிளவு இல்லை; கருத்து வேறுபாடு தான்.

பதவிக்காக சென்றதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். நாங்கள் பதவிக்காக செல்லவில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். ஆளும் தரப்பும் சொல்லிவிட்டார்கள். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்தின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த வேலுமணி, “நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” என்றார். அதைத் தொடர்ந்து பேட்டி அளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே பேரவைத் தலைவர் என்ற முறையில் என்னிடம் சில மனுக்களை அளித்திருந்தார்கள். அந்த மனுக்கள் என்னிடம் ஆய்வில் உள்ளன.

இதற்கிடையே இரு வேறு குழுக்களாக இருந்த அதிமுக உறுப்பினர்கள் தனித்தனியாக என்னை சந்தித்து மனுக்களை அளித்துள்ளார்கள். அந்த மனுக்கள் ஆய்வில் இருக்கின்றன. நாளை காலை எனது முடிவை அறிவிக்கிறேன்” என்றார்.

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

0

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இங்கு அரசின் விதியை மீறி அளவிற்கு அதிகமாக கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, அதிக பாரத்துடன் கனிமவளத்தை ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் கிராமப்புறச் சாலைகள் சேதம் அடைவதாகவும், கட்டுப்பாடு இல்லாமல் கனரக வாகனங்கள் இயங்குவதால் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு மனுக்கள் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை என்பதும் அப்பகுதி மக்களின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. ஆகையால், கனிமவளங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்வதற்கு நேர கட்டுப்பாடு விதிக்க தேவையில்லை, அவற்றை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது புளியரை பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது இந்த கோரிக்கை வலுத்துள்ளது. இதையடுத்து, கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு நேரடியாக இங்கு வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில், இன்று (மே 25) அதிகாலை கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு, புளியரை சோதனை சாவடியில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது, புளியரை சோதனைச்சாவடி வழியாக சென்ற கனிமவள வாகனங்களின் பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆய்வின் ஒரு பகுதியாக சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலர்களிடமும் கனிமவள வாகனங்களின் வருகை போன்ற பல்வேறு முக்கிய விபரங்களைக் கேட்டறிந்தார்.குறிப்பாக, அனுமதி சீட்டுடன் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறதா? அனுமதிக்கப்பட்ட அளவில் தான் கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? முறைப்படிதான் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்துள்ளார். கனிமவளத் துறை அமைச்சர் பிரபுவின் இந்த திடீர் ஆய்வு அதிரடியாக இருந்த நிலையில், இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

0

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார், சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடனே, அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். புகார் வருவதற்கு முன்பே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால், காவல்துறை துரிதமாக செயல்பட்டு கைது செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை மேலும் துரிதப்படுத்தப்படும். கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் நீதிமன்ற காவல் உள்ளனர். சிறுமி கொலை வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளேன். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி தருவதில் தவெக அரசு உறுதியாக இருக்கிறது.அதேசமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரணமும் வழங்கப்படும். கோவை சிறுமிக்கு நேர்ந்த இந்த சம்பவமே, தமிழ்நாட்டில் இறுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதுவே முதலமைச்சரின் எண்ணமும் கூட. குற்றம் செய்பவர்களுக்கு பயம் இருக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்று கொடுப்பது எங்களது கடமையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் சிங்கப்பெண்கள் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரும் 27ஆம் தேதி இத்திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். காவல்துறை மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம். கோவை சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவியை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். சம்பவம் நடந்த பகுதியை நான் பார்க்கவில்லை. காவல்துறை விசாரித்து வருகின்றனர். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதில் எங்கள் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. அது யாராக இருந்தாலும் சரி, தண்டனை கடுமையாக இருக்கும். குற்றம் நடந்த பகுதியில் கண்காணிப்பைப் பலப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல, குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கக் கூடிய பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்படும்” என்றார்.

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

0

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் சிறுமியை தேடியுள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், சிறுமி சென்ற மளிகைக்கடைக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. ஆனால் அவர் யார் என்று தெரியாததால் உடனடியாக சிறுமியின் பெற்றோர், சூலூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், நேற்று கண்ணம்பாளையம் குளக்கரை அருகே உடலில் காயங்களுடன் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பதை அறிய, அவரது உடலானது சிங்காநல்லூர் ESI மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, சிறுமிக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும் பெற்றோரும் சூலூர் காவல் நிலைய வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு சுமார் 9 மணியளவில் துவங்கிய மறியல் அதிகாலை 5 மணியை தாண்டி, 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனையடுத்து வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சிறுமியை கடத்தி கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், கைதான கார்த்திக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு துணையாக இருந்த மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர்கள், சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், சிறுமியின் முகம் உள்ளிட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி, துணைத் தலைவர் சாமிநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சூலூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கார்த்திக், அருகிலுள்ள மதில் சுவர் மீது ஏறி குதித்ததில் கால் மற்றும் கையில் முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது குற்றவாளியான மோகன்ராஜ், சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரித்த நீதிபதி, மே 27-ஆம் தேதி வரை மோகன்ராஜை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

0

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக, அவரது கிராமத்தில் இருந்து மற்றொரு ஊருக்கு பேருந்தில் சென்று வந்தார், நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்த அப்பெண், பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இருவர், அப்பெண் தனியாக நிற்பதை பார்த்து காரை நிறுத்தியுள்ளனர். மேலும், பெண்ணை அவரது ஊரில் இறக்கி விடுவதாகவும் கூறி அழைத்துள்ளனர். ஆனால், அப்பெண் மறுத்த நிலையில், வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மறைவான இடத்திற்கு சென்ற அவர்கள், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனால் மயங்கிய பெண்ணை காரில் அழைத்து சென்று கறம்பக்குடி – ஆலங்குடி சாலையில் தள்ளி விட்டுச் சென்றதாக தெரிகிறது. மயக்கம் தெளிந்த அந்த பெண் அழுது கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், பெண்ணை மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.அதில், பெண்ணை காரில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கார் உரிமையாளர் சேகர் (56) மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து (55) என்பதும், இருவரும் அப்பெண்ணிற்கு தெரிந்த நபர்கள் என்பதும் தெரியவந்தது. உடனடியாக மாரிமுத்துவை கைது செய்த மழையூர் போலீசார், தலைமறைவாக இருந்த சேகரை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், தலைமறைவாக உள்ள நபரை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி வழங்க வேண்டும் எனவும் அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மழையூர் காவல்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக இருந்த சேகரை திண்டுக்கல்லில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாகவும் புதுக்கோட்டை நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், சேகர் கைது செய்யப்பட்டதில் நம்பிக்கை இல்லை எனக் கூறி போராட்டத்தை கைவிட மறுத்த பெண்ணின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

0

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனைப் பல இடங்களிலும் தேடியுள்ளனர், சிறுவன் கிடைக்காததால் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவுச் செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சிறுவனின் நண்பர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, இருகூர் ரயில் நிலையத்தின் சிறிய மேடை அருகே மறைவான பகுதியில் புதைக்கப்பட்ட ரித்தீஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் சிறுவனின் மர்ம மரணம் குறித்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கடந்த மே 15- ஆம் தேதி அன்று ரித்தீஷ் தனது நண்பர்களுடன் இருகூர் பொங்காளியம்மன் கோயில் அருகே உள்ள கால்வாய்க்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த 13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள், ரித்தீஷை கல்லாலும், மதுப்பாட்டிலாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து நிலைகுலைந்த ரித்தீஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ரித்தீஷ் நண்பர்களான இரண்டு சிறுவர்களையும் சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

0

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து, யார் அடுத்த முதலமைச்சர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது, காங்கிரஸ் தலைமை வி.டி.சதீசன் தான் அடுத்த கேரளம் முதலமைச்சர் என முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டது.

தொடர்ந்து, இன்று வி.டி. சதீசனுக்கு கேரளம் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தமிழ்நாட்டில் நடைபெற்றது போலவே, முதலில் வந்தே மாதரம், அதன்பின்னர் தேசிய கீதம் பாடப்பட்ட பின், வி.டி.சதீசன் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

கேரளம் சட்டப்பேரவை வளாகத்திற்கு பின்னால் அமைந்திருக்கும், சென்ட்ரல் மைதானத்தில் வைத்து முதலமைச்சர் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலமைச்சர் வி.டி. சதீசனுடன் 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.இம்முறை கேரளம் சட்டப்பேரவையில் 3 பெண் உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிந்து கிருஷ்ணா, கே.ஏ. துளசி ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டப்பேரவையின் துணைத்தலைவராக ஷைனிமோள் உஸ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1960-ஆம் ஆண்டில் பேரவை அதிகாரத்தில் அங்கம் வகித்த ஏ. நஃபீசத் பீவிக்குப் பிறகு, இம்மாநிலத்தின் சட்டப்பேரவையில் அதிகாரத்தைப் பெறும் முதல் பெண்ணாக ஷைனிமோள் உருவெடுத்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியில் அங்கம்வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பி.கே. குன்ஹாலிகுட்டிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக, வி.டி.சதீசன் அமைச்சரவையில், 21 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்த அமைச்சர்களின் பெயர் பட்டியலை நேற்றைய தினமே (மே 17) ஆளுநர் அர்லேகரிடம் வி.டி. சதீசன் ஒப்படைத்திருந்தார்.

மொத்தம் 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற நிலையில், மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.அதில், ஆளும் அரசாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி (எல்.டி.எஃப்) வெறும் 35 இடங்களை பெற்று படுதோல்வியை சந்தித்தது. அவர்களுக்கு எதிராகக் களம்கண்ட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (யூ.டி.எஃப்) 102 தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றியை பதிவு செய்தது. மூன்றாவது இடத்தில் பா.ஜ.க 3 தொகுதிகளை வென்றிருந்தது.

கேரளம் முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்ற நிகழ்வில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்துகொண்டு, புதிய அமைச்சரவைக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.