Thursday, April 16, 2026
Home Blog Page 3

கிணத்துக்கடவு தொகுதி விவகாரம் : கோவையில் பா.ஜ.க வினர் சாலை மறியல் – தீக்குளிக்க முயற்சி பரபரப்பு !!!

0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்–2026ஐ முன்னிட்டு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கோவையில் பதற்றமான சூழல் நிலவியது. குறிப்பாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க விற்கு ஒதுக்கப்படாததை கண்டித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிர எதிர்ப்பில் இறங்கினர்.
இந்நிலையில், கோவை அருகே ஈச்சனாரி பகுதியில் பா.ஜ.க வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய சாலையில் அமர்ந்து போக்குவரத்தை மறித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.

இந்த போராட்டத்தின் போது பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, பா.ஜ.க வில் செயல்பட்டு வரும் விக்னேஷ் என்ற இளைஞர் திடீரென தீக்குளிக்க முயன்றார்.

அவர் கொண்டு வந்து இருந்த எரிபொருளை தனது உடலில் ஊற்றி தீவைக்க முயன்றதை அங்கிருந்த போலீசார் மற்றும் கட்சியினர் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் அவரை பாதுகாப்பாக காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

பா.ஜ.க நிர்வாகிகள் கூறுகையில்,

“கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு வலுவான ஆதரவு உள்ள பகுதி. இருந்தும் அந்த தொகுதி ஒதுக்கப்படாதது கட்சித் தொண்டர்களின் மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது” என தெரிவித்தனர். மேலும் கடந்த முறை பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வசந்த ராஜன் இரண்டாம் இடம் பிடித்த நிலையில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றதால் அவருக்கு கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கப்படும் என கட்சியினர் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை அடுத்து ஈச்சனாரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கூட்டணி தொகுதி ஒதுக்கீடு விவகாரம் கோவையில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கும் ஸ்டாலின்…

0

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என்று தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் என்பது கவனிக்கத்தகுந்தது. திருவாரூரை அடுத்து ஜெயங்கொண்டம், திருவெறும்புதூர் ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரிக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி திருச்சியிலும், ஏப்ரல் 4இல் கரூர், திருப்பூரிலும், ஏப்ரல் 5 ஆம் தேதி நாகர்கோவில், திருநெல்வேலியிலும், ஏப்ரல் 7ஆம் தேதி கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்திலும் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

ஏப்ரல் 8ஆம் தேதி ஈரோடு, பரமத்திவேலூரிலும், ஏப்ரல் 9 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரியிலும், ஏப்ரல் 10 ஆம் தேதி வேலூர் மற்றும் ஆரணி ஆகிய தொகுதிகளிலும் அவர் பரப்புரை மேற்கொள்ள இருக்கின்றார். இதற்கு அடுத்தபடியாக ஏப்ரல் 11ஆம் தேதி சிவகங்கை, மதுரையிலும், ஏப்ரல் 12ஆம் தேதி விருதுநகர், சங்கரன்கோவிலிலும், ஏப்ரல் 13ஆம் தேதி தஞ்சாவூர், மயிலாடுதுறையிலும் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளார்.ஏப்ரல் 14ஆம் தேதி விழுப்புரம், நெய்வேலியிலும், ஏப்ரல் 15ஆம் தேதி ராணிப்பேட்டை, அணைக்கட்டிலும், ஏப்ரல் 16 கள்ளக்குறிச்சி. சேலம் ஆகிய தொகுதிகளிலும் முதலமைச்சர் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார். தொடர்ந்து ஏப்ரல் 17-இல் தேனி மற்றும் ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். ஏப்ரல் 18 அன்று ராமநாதபுரம் மற்றும் விளாத்திகுளத்திலும், ஏப்ரல் 19 ஆம் தேதி செங்கல்பட்டு மற்றும் பெரம்பலூரிலும், 21 -ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இறுதியாக அவரது கொளத்தூரிலும் தொகுதியில் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி ஏப்ரல் 2 முதல் 21 ஆம் தேதி வரை அவர் தொடர் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கின்றார். தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஏப்ரல் 6 -ம் தேதி, மு.க. ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல் தனது தேர்தல் பிரச்சாரம் பயணத்தை துவக்கி உள்ளார் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோன்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமிழ்நாடு முழுவதிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாமகவின் மாம்பழம் சின்னம் யாருக்கு? ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்…

0

பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்பு மணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பும் கட்சிக்கு உரிமை கொண்டாடினர். ஆவணங்களின் அடிப்படையில் பாமகவின் மாம்பழம் சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை அன்புமணி தரப்பே பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எதன் அடிப்படையில் அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் ஒரு ஃபிரண்ட்லி மேட்ச் ஆடியுள்ளது என்று கருத்து கூறியது. அன்புமணி அல்லது ராமதாஸ் என்ற தனிநபர்களுக்காக மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் சின்னத்தை முடக்க நீதிமன்றத்திற்கு அனுமதியில்லை. பொது சின்னமான மாம்பழத்திற்கு முதலில் உரிமை கோரியவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தவெக விழாவில் விஜய் பாடலுக்கு நடனம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியை ‘சஸ்பெண்ட்’

0

ஒரத்தநாடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் நடனம் ஆடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பின்னையூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் முன்பு சங்கரநாதர் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தற்போது வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஒரத்தநாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, விழா மேடையில் ஒலிபரப்பப்பட்ட விஜய் திரைப்பட பாடலுக்கு நடனமாடினார். அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியில், அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருக்கும் ஒருவர் நடனமாடியது குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகனுக்கு கல்வித் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதன் பேரில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் இது குறித்து விசாரணை நடத்தியதில், தவெக மகளிர் தின விழாவில் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கலந்து கொண்டு மேடையில் நடனம் ஆடியது உண்மை என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, தான் வகிக்கும் பணியின் தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக, நன்னடத்தை விதியை மீறி ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை, அரசியல் கட்சி விழாவில் கலந்து கொண்டு நடனமாடியதற்காக, கிருஷ்ணவேனியை பணியிடை நீக்கம் செய்து பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் உத்தரவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் பங்கேற்று நடனமாடியதால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாப்பூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி

0

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மயிலாப்பூரில் இருந்து இன்று (மார்ச்) தொடங்கினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி, வேகமாக தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்து, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது.
அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்து, பின்னர் மந்தைவெளியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். ஏற்கெனவே 193 தொகுதிகளில் நான் மக்களை சந்தித்து விட்டேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முதலாக மேற்கொள்ளும் பிரசாரம் இது.
அதிமுக, கூட்டணிக் கட்சிகளுடன் விரைவாக தொகுதிகள் ஒதுக்கீட்டை முடித்து, முதற்கட்டமாக 23 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும். ஆனால், திமுக, கூட்டணி அமைப்பதற்கே நீண்ட நாட்கள் போராடியது. திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் மிகுந்த அழுத்தத்தில் உள்ளன” என்றார்.

திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலை விட குறைவான தொகுதிகளையே வழங்கியுள்ளது என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி எவ்வளவோ போராடி 8 இடங்களை மட்டுமே பெற்றது என்றும் அவர் விமர்சனம் செய்தார்.அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக தொகுதிகள், அங்கீகரிக்கப்பட்ட விசிகவுக்கு குறைந்த தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது என்றும், திமுகவை நம்பியவர்கள் நடுத் தெருவில் நிற்பார்கள் என்பதை இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால், அதிமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை தரப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு பயன் இல்லை எனவும், குடும்ப ஆட்சி, ஊழல், வரி உயர்வு ஆகியவை மட்டுமே நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மின் கட்டணம், சொத்து வரி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்களுக்கு பொருளாதார சுமையை திமுக அரசு ஏற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் திட்டத்தை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதி அதிமுக ஆட்சியில் பெறப்பட்டது என கூறினார்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சரியில்லை. போதைப்பொருள் புழக்கம், கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.திமுக ஆட்சி “கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன்” என்ற முறையில் செயல்படுகிறது. அதிமுக ஆட்சியில் கரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு உதவி செய்தது. இலவச உணவு, ரேஷன் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும், பேருந்தில் ஆண்களுக்கும் இலவச பயணம், 3 சிலிண்டர் இலவசம், இளைஞர்களுக்கு மாதாந்திர உதவி உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.

தமிழ்நாட்டில் 4 நாள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும்; தேர்தல் அதிகாரி தகவல்

0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பால், 4 நாள் மட்டுமே வேட்புனுத் தாக்கல் செய்ய முடியும் என தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்ரல் 6 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

8 நாட்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்று வேட்பாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வேட்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம் திடீரென்று இன்று (மார்ச் 25) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மொத்தமுள்ள 8 நாட்களில் 4 நாட்கள் விடுமுறை வருவதால் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல், மார்ச் 30ஆம் தேதி தொடங்கி, கடைசி நாளான ஏப்ரல் 06ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம்.

மேலும், மார்ச் 31 (செவ்வாய்), ஏப்ரல் 01 (புதன்), ஏப்ரல் 03 (வெள்ளி), ஏப்ரல் 05 (ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் அரசின் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 4 விடுமுறை நாட்களிலும் வேட்புமனுக்கள் பெறப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், மார்ச் 30, ஏப்ரல் 02, ஏப்ரல் 04, ஏப்ரல் 06 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, அவசர அவசியம் கருதி, தேர்தல் ஆணையம் 4 நாள்கள் விடுமுறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மார்ச் 28 முதல் பிரச்சாரம்…

0

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஏற்கனவே 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். அதிமுக சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படும் நிலையில், மார்ச் 28 ஆம் தேதி முதல் அங்கு விஜய் பிரச்சாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுசட்டமன்ற தேர்தாலுக்காக தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதால் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மார்ச் 30 ஆம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவுள்ளது. அதனால் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று துகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் விஜய் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக மும்பை சென்றது சர்ச்சையானது.234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடும் என்று விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் தவெக சார்பில் மார்ச் 27 ஆம் தேதி (நாளை மறுநாள்) மாமல்லபுரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. தவெக வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.இதற்காக பெரம்பூரில் ஏசியுடன் கூடிய தவெக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை நாளை மறுநாள்.. அதாவது 27 ஆம் தேதி விஜய் திறந்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மார்ச் 28 ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பிரச்சாரம் செய்வது தொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், உள்துறை செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.மொத்தம் 20 நாட்கள் பிரச்சாரம் செய்யும் விஜய், தினசரி 5-6 இடங்களில் பிரச்சாரம் செய்து பேசவுள்ளதாக சொல்லப்படுகிறது. தவெகவின் நட்சத்தி பேச்சாளர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது. விஜய், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் உள்ளிட்ட 20 நிர்வாகிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெரம்பூரில் இருந்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது .

பாமக சார்பில் 3 வேட்பாளர்களை அறிவித்தார் அன்புமணி

0

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் மூன்று பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று வெளியிட்டுள்ளார்.

வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 30- ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (மார்ச் 25) அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, அமமுக, தமாகா, பாமக, புரட்சிப் பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சித் தலைவர்களின் முன்னிலையில் அறிவித்திருந்தார்.இதில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு சேலம் மேற்கு உள்ளிட்ட 18 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பாமக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மூன்று பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று வெளியிட்டார்.அதன்படி, கீழ்வேளூர் சட்டப் பேரவை தொகுதியில் பாமகவின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், அம்பத்தூர் சட்டப் பேரவை தொகுதியில் நகர்மன்ற முன்னாள் தலைவரும், கட்சியின் மாநில துணைத் தலைவருமான சி.ஹெச். சேகர், செஞ்சி சட்டப் பேரவை தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கணேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி? முழு பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

0

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் கடந்த சில வாரங்களாக தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முறை டெல்லி சென்றும் கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நிறைவடைந்ததையடுத்து, அக்கட்சிகளுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, பாஜக 27 , பாமக 18, அமமுக 11, தமாக 5, ஐஜேகே 2, தமமுக 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக சார்பாக போட்டியிடும் 23 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை அதிமுக அறிவித்திருந்து. இதில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார் இபிஎஸ். மேலும், வேப்பனஹள்ளியில் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், கரூர் தொகுதியில் எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியில் சி. விஜயபாஸ்கர், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார், சிவகாசி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இதன் தொடர்ச்சியாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமையில் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அப்போது, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகளை அதிமுக ஒதுக்கிய நிலையில், 169 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், “அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவதாக கூறப்படும் நிலையில், அங்கு பாமகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கூட்டணி அமைத்த பிறகு எல்லாம் சமமாக தான் பார்க்க வேண்டும். சிறியவர், பெரியவர்கள் எல்லாம் இல்லை. எல்லாம் கட்சிக்கும் பலம் உள்ளது. எல்லாம் கட்சியும் சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். 234 தொகுயிலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.

காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள்: மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

0

தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 2020 ஜூன் மாதம் 19ஆம் தேதி, சாத்தான்குளம் பகுதியில் இரவு நேரத்தில் மொபைல் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ் (58) மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) உள்ளிட்டோரை விசாரணைக்காக சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் அவர்களை கொடூரமாக தாக்கிய போலீசார், ஜூன் 20 ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதல் காரணமாக ஜூன் 22 ஆம் தேதி மாலை பென்னிக்ஸிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து 23ஆம் தேதி அதிகாலை ஜெயராஜும் மருத்துமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், காவல் துறையில் நிலவும் காவல் மரணங்கள் தொடர்பாக இந்தியா முழுவதும் பெரிய அளவில் விவாதம் எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எற்றது. இந்த கொடூர கொலை சம்பவத்தின் போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர், காவல் நிலையத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் இது மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.மேலும், இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.எஸ்.ஐ பால்துரை, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன் உள்ளிட்ட 10 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில், எஸ்.எஸ்.ஐ பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்ததால், தற்போது வழக்கில் எஞ்சிய 9 காவலர்கள் மீதான வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வில் நடைபெற்று வந்தது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன்னிலையில், சுமார் ஆறு ஆண்டுகளாக இந்த விசாரணை நடைபெற்றது. சிபிஐ தரப்பில் 50-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, பல்வேறு ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தந்தை-மகன் இருவரும் காவல் துறையினரால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதே அவர்களின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30 -ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.