2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தவெகவுக்கு ஆதரவாகவும் முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனி அணியாக செயல்பட்டிருந்தனர்.இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் பழனிசாமியை சந்தித்து ஓரணியாகினர். ஆனால் சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இவர்களில் விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகிவிட்டார். அவர் தவெக அல்லது திமுகவில் இணைவார் என சொல்லப்படுகிறது. ஆனால் சி.வி.சண்முகத்தின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமியின் மகன் மிதுனை நேரடி அரசியலுக்கு கொண்டு வருமாறு எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் வலியுறுத்தினராம்.மிதுனுக்கு இளைஞரணி அல்லது ஐடி விங்கில் பதவி கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஐடி விங் செயலாளராக இருக்கும் ராஜசத்யன் தனது பதவில், அரசியலில் அல்லாதவர்களை ,
கழக பொதுசெயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்து, கழகத்திற்கு எதிரான பல கதைகள் உருவாக்கப்படுகிறது. அது சமூக வலைதளம் தொடங்கி, பத்திரிகை, ஊடக விவாதம் வரை தற்போது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது. தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின் நடந்த உட்கட்சி நிகழ்வுகள், எங்களுடைய உழைப்பை குறைத்து சொல்லி கொச்சைப்படுத்துவது என கழகத் தொண்டர்கள்-அடுத்த தலைமுறையினர் பல வலிகளை சுமந்து வருகிறோம்…இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறு தான்! என தெரிவித்திருந்தார். அது போல் மகனை அரசியலுக்கு கொண்டு வர எடப்பாடி பழனிசாமி நாடகம் போடுகிறார் என சி.வி.சண்முகம் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இபிஎஸ் அணியை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி போட்ட பிச்சையில் வெற்றி பெற்ற சண்முகத்திற்கு பழனிசாமி குறித்து பேச எந்த தகுதியும் இல்லை. இந்த தேர்தலில் தமிழகத்திலேயே மிக அதிகமான 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இபிஎஸ். அரசியல் நிகழ்வுகளில் ஒரு போதும் தன் மகனை பழனிசாமி முன் நிறுத்தியது கிடையாது என தெரிவித்திருந்தார்.
இதை எடப்பாடி பழனிசாமியும் தெளிவுப்படுத்தினார். இன்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ஊடகங்கள், செய்தித்தாள்களில் என் மகன் மிதுனுக்கு பதவி கொடுக்கப்படும் என தகவல் பரவுகிறது. அதில் உண்மையில்லை. என் மகன் மிதுன் அதிமுகவில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டார். அவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகவே இருக்கிறார் என தெளிவுப்படுத்தியுள்ளார்.


