புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக, அவரது கிராமத்தில் இருந்து மற்றொரு ஊருக்கு பேருந்தில் சென்று வந்தார், நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்த அப்பெண், பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இருவர், அப்பெண் தனியாக நிற்பதை பார்த்து காரை நிறுத்தியுள்ளனர். மேலும், பெண்ணை அவரது ஊரில் இறக்கி விடுவதாகவும் கூறி அழைத்துள்ளனர். ஆனால், அப்பெண் மறுத்த நிலையில், வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மறைவான இடத்திற்கு சென்ற அவர்கள், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனால் மயங்கிய பெண்ணை காரில் அழைத்து சென்று கறம்பக்குடி – ஆலங்குடி சாலையில் தள்ளி விட்டுச் சென்றதாக தெரிகிறது. மயக்கம் தெளிந்த அந்த பெண் அழுது கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், பெண்ணை மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.அதில், பெண்ணை காரில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கார் உரிமையாளர் சேகர் (56) மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து (55) என்பதும், இருவரும் அப்பெண்ணிற்கு தெரிந்த நபர்கள் என்பதும் தெரியவந்தது. உடனடியாக மாரிமுத்துவை கைது செய்த மழையூர் போலீசார், தலைமறைவாக இருந்த சேகரை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், தலைமறைவாக உள்ள நபரை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி வழங்க வேண்டும் எனவும் அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மழையூர் காவல்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக இருந்த சேகரை திண்டுக்கல்லில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாகவும் புதுக்கோட்டை நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், சேகர் கைது செய்யப்பட்டதில் நம்பிக்கை இல்லை எனக் கூறி போராட்டத்தை கைவிட மறுத்த பெண்ணின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


