Wednesday, June 24, 2026
Home Blog Page 4

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

0

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்று ஆட்சியை பிடித்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்ததால் அந்த பதவி காலியானது. இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை தலைமை வழக்கறிஞராக நியமித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால், விரைவில் அவர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நாராயண், தனது பள்ளி கல்வியை பீகார் மாநிலத்தில் இருந்த ராஞ்சியில் முடித்தார். பின்னர் தனது பட்டப்படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும், சட்டப்படிப்பை சென்னை அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தை மேம்படுத்த பணியாற்றிய குழுவில் இடம்பெற்ற பிரபல வழக்கறிஞர் எம்.கே.நம்பியார் இவரது தாத்தா ஆவார். மத்திய அரசின் தற்போதைய அட்டர்னி ஜெனரலான கே.கே.வேணுகோபாலும் இவரது உறவினராவார். வரலாற்று ஆய்வாளரும், பத்திரிக்கையாளருமான சர்தார் கே.எம்.பணிக்கர் தாய்வழி தாத்தா ஆவார்.தொழிலாளர், அரசியலமைப்பு, நிர்வாகம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் குறித்த வழக்குகளில் ஆஜரானவர். 2004-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும், நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் ஆஜராகி திறம்பட வாதம் செய்தவர்.
இந்திய சட்ட நிறுவனத்தின் சென்னை மண்டல செயற்குழு உறுப்பினராக இந்திய தலைமை நீதிபதியால் 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் பொதுக்குழு உறுப்பினராக கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தொன்மையான வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேசனின் தலைவராக இருந்தவர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார்.அதன் பின்னர் 2021-இல் திமுக ஆட்சி வந்தவுடன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்தார். இந்நிலையில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததை அடுத்து, தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

0

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அவையில் இருந்து வெளிநடுப்பு செய்வதாக அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான மொத்தம் 4 கோடி 93 லட்சம் வாக்குகளில், ஒரு கோடி 72 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகள் தவெக பெற்றது. தவெகவிற்கு எதிராக சுமார் 3 கோடி பேர் வாக்களித்துள்ளனர். உங்களுக்கு வாக்களித்தவர்களுக்கே உங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது.

தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை முதலமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ஒரு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வாக்களிக்கவில்லை. அதன்படி, 106 இடங்கள் தான் உள்ளது. திமுக கூட்டணி ஆதரவு கட்சிகள் உடன் ஆட்சி அமைத்துள்ளீர்கள். குடியரசு தலைவர் ஆட்சி அமைந்துவிடும் என கூறியதால் எங்கள் கூட்டணி கட்சிகள் ஆதரவளித்தன. அப்போதும் திமுக உடன் கூட்டணியைத் தொடர்வதாக விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூறியுள்ளனர்தேசிய ஜனநாயக கட்சி ஆதரவில் வெற்றி பெற்ற அமமுக வேட்பாளர், அவருடைய கட்சி தலைவருக்கே தெரியாமல் உங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்.சட்டப்பேரவை உறுப்பினர்களை கடன் பெற்று ஆட்சியை முதலமைச்சர் தக்கவைத்துள்ளார். இந்த வாக்கெடுப்பில் திமுக கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்கிறது. நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், காலை உணவு, தாயுமானவர், அன்புக் கரங்கள் போன்ற திமுக-வின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர வேண்டும்” என்று குறிப்பிட்டு பேசினார்இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம். தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது.

மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை. மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், ‘sofa’ அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.” என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில் முன்மொழிந்தார். அதனைத்தொடர்ந்து தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிநடப்பு செய்வதாக அறிவித்த நிலையில், திமுக மற்றும் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை என சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தினார். பெரும்பான்மையை பெற 117 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தவெக அரசிற்கு 144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவை அளித்தனர். இதன் மூலம் தவெக பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்தது. மேலும், அதிமுக சார்பில் 22 எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பும், பாமக, பாஜக சார்பில் 5 பேர் நடுநிலையும் வகித்தனர். மொத்தம் 171 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர், 60 பேர் பங்கேற்கவில்லை. திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை விதிப்பு காரணமாக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்றதாக அறிவிப்பு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை பெற்று, வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்து, வாழ்த்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தவெக 144 வாக்குகளை பெற்றது எப்படி?

தவெக எம்.எல்.ஏ-க்கள் 105, காங்கிரஸ் 5, சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தலா 2, காமராஜ் (அமமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்) 1 மற்றும் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் 25 என மொத்தம் 144 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் 2 தொகுதிகளில் நின்று வெற்றி பெற்ற காரணத்தினால், எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 107 ஆக குறைந்தது.

திமுக கூட்டணி 73 இடங்களில், அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் தொங்கு சட்டப்பேரவை என்ற நிலை உருவானது. இதனையடுத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களை பெற, பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. தவெகவின் கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவளித்தது. தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் இராசேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆதரவு கடித்ததை வழங்கி ஆட்சியமைக்க அழைக்கக் கோரினார். அதனையடுத்து, முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், மே 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. மே 10-ம் தேதி சென்னை நேரு அரங்கத்தில் தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் மே 11-ம் தேதி கூடியது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட தற்காலிக சபாநாயகர் கருப்பையா, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மறுநாள் சபாநாயகராக தவெக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த கே.சி.டி.பிரபாகர் மற்றும் துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகியவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, இன்று சட்டப்பேரவையில் தவெக அரசிற்கான பெரும்பான்மைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

0

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக திங்கட்கிழமை செய்தி வெளியான நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, பொதுத் தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைளை மூட உத்தரவு வெளியாகியுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மை பெறாத காரணத்தால், காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.அப்போது, தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு, 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ உருவாக்கப்படும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்இந்நிலையில், இன்று காலை மதுபானக் கடைகள் மூடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்ட அரசாணையில், “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இந்த மூன்று இடங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கடைசியாக இசைக்கப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்.

0

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் கடைசியாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் இசைக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, தவெக ஆட்சியமைக்க ஆதரவுத் தெரிவித்திருந்த அரசியல் கட்சிகள், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவதாக இசைக்கப்பட்டதற்கு அதிருப்தியையும், இதுப்போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாது என்ற உறுதியை தமிழ்நாடு அரசு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், ” ‘நீராரும் கடலுடுத்த…’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் ‘உலகெங்கும் பரவ வேண்டும்…’ என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலல் முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான். வாய்மையே வெல்லும்! வாழ்க தமிழ்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு…

0

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில், 9 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது. தலைமைச் செயலகத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, சட்டம்- ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையையும் மேற்கொண்டார். இந்த நிலையில், சோழவந்தான் தவெக எம்எல்ஏ தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, நாளை (மே 11) காலை 09.30 மணிக்கு 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடுகிறது. இதில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எம்எல்ஏவாகப் பதவியேற்கவுள்ளதாக சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த மே 07- ஆம் தேதி மாலை 05.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் திமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றக் குழுவின் துணைத் தலைவராக கே.என்.நேரு, கட்சியின் கொறடாவாக எ.வ.வேலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 59 இடங்களில் வெற்றி பெற்று திமுக பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. அமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உள்பட அனைத்து சலுகைகளும் எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடைக்கும்.108 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சியமைக்க, திமுகவின் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர். எனினும் வரும் மே 13- ஆம் தேதிக்குள் முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெகவுக்கு ஆதரவு அளித்த விசிக…

0

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பாரா என தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில், தலா 2 எம்.எல்.ஏக்களை கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மை பலம் இல்லாததால் பிற கட்சிகளின் ஆதரவை தவெக நாடி வந்தது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு பெற்ற போதிலும், இன்னும் 2 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான ஆதரவு கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவனிடம் இருந்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரடியாக பெற்றுக் கொண்டார்.

அந்தக் கடித்ததில், “தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சியமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறது. விசிகவின் தேர்தெடுக்கப்பட்ட 2 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இதனை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் நிலையான மற்றும் ஜனநாயக அரசாங்கத்தை உறுதி செய்யும் நலன் கருதி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிகவின் ஆதரவின் மூலம் தவெகவின் பலம் 118 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை தவெக பெற்றுள்ளது. முன்னதாக, திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டி, தவெக நிர்பந்திக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், எந்த நிபந்தனையும் இன்றி தவெகவுக்கு விசிக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனயடுத்து நேற்று ஆதரவில்லை என தெரிவித்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இன்று ஆதரவளிப்பதாக கடிதத்தை தவெகவிடம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தவெகவுக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய் விரைவில் முதலமைச்சராக பதிவேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறதுதமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு மே 4-ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை பெறாததால், இதர கட்சிகளில் ஆதரவைப் பெற வேண்டிய சூழல் உருவானது. இதனையடுத்து, திமுகவின் கூட்டணிக் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது.முதல் கட்சியாக, திமுக கூட்டணியில் 20 ஆண்டுகள் அங்கம் வகித்த காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் தவெகவின் எம்எல்ஏக்கள் பலம் 113-ஆக உயர்ந்தது. இதில், தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காரணத்தினால் ஒன்றில் ராஜிநாமா செய்ய வேண்டும். இதனால் ஆதரவு எம்.எல்.ஏ-களில் எண்ணிக்கை 112 என குறையும்.

இதனையடுத்து, தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு

இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிகவிடம் தவெக ஆதரவு கோரியது. தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியே இருந்து ஆதரவளிப்பதாக நேற்று (மே 8) அறிவித்தன. இதன் மூலம் தவெகவுக்கான ஆதரவு 116 என உயர்ந்தது.திருமா முடிவுக்காக காத்திருந்த தவெக

பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிகவின் முடிவுக்காக தவெக காத்துக் கொண்டிருந்தது. இதனிடையே, தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் விசிக நிர்வாகிகள் தொடர்ந்து 2 நாட்களாக ஆலோசித்து வந்தனர்.

இதுதொடர்பாக விசிகவின் உயர்மட்டக் குழு கூட்டம் இணைய வழியில் நடத்தப்பட்டு, அதில் இதுகுறித்து முடிவெடுக்க திருமாவளவனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

அந்த வகையில், இன்று காலை 10 மணிக்கு தவெகவுக்கு ஆதரவா, இல்லையா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. காலை முதல் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்பாகவே, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை நேரில் அழைத்து விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளார். அதன் பின்னர் சில நிமிடங்களிலேயே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தங்களின் ஆதரவு கடித்ததை தவெக நிர்வாகிகளான செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியவர்களிடம் வழங்கியது. இதன் மூலம் விஜய், தமிழக முதலமைச்சர் ஆவதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.

ஒரேயொரு காங்கிரஸ் மேயருக்கும் சிக்கல்.. திமுகவினர் திட்டம்?

0

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தவெக தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க மேலும் 11 தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் தவெக சார்பில் காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கிறது. மேலும், இனிவரும் காலங்களில் உள்ளாட்சி, மாநிலங்களவை, மக்களவை என அனைத்திலும் தவெகவுடன் கூட்டணி தொடரும் என பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் அறிவித்துள்ளது. காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டுக்கு திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதன் விளைவாக, கும்பகோணத்தில் மேயராக பதவி வகித்து வருகிற காங்கிரஸைச் சேர்ந்த கே. சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, துணை மேயரான திமுகவை சேர்ந்த சு ப தமிழழகனை மேயராக்க திமுகவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக திமுக தலைமையின் முடிவிற்கு காத்திருப்பதாக தெரிகிறது.
கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில், 39-ல் திமுகவும், 3-ல் அதிமுகவும், (மேயர் உள்ளிட்ட) 2 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், மதிமுக, ஐயூஎம்எல், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.திமுக 39 இடங்களை பெற்றிருந்த போதிலும், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது. காங்கிரஸின் இரு மாமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஆட்டோ ஓட்டுநர் கே. சரவணன் கும்பகோண மேயராகவும், துணை மேயராக திமுகவை சேர்ந்த சு ப தமிழழகனும் தேர்வு செய்யப்பட்டனர்தற்போது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில் கும்பகோணம் திமுக மாமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் மேயரை பதவியிலிருந்து நீக்க ஒருமனதாக திட்டமிட்டு வருவதாக தற்போது சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது தொடர்பாக ஈடிவி பாரத் சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர் கே சரவணனிடம் கேட்டபோது, “இது வெறும் வதந்தி. ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை. திமுக அப்படியொரு முடிவை எடுத்தால், காங்கிரஸ் திமுகவிற்கு ஆதரவு அளித்துள்ள தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களிலும் எதிரொலிக்கும்.

எனவே இது போன்ற முடிவை திமுக தலைமை எடுக்காது என நம்புகிறேன். ஒருவேளை திமுக தலைமை என்னை மேயர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வந்தால், எங்கள் காங்கிரஸ் தலைமையின் முடிவை கேட்டு அதன்படி செயல்படுவேன்” என்றார்.

கோபிச்செட்டிபாளையத்தில் வெற்றியை நிலைநாட்டிய செங்கோட்டையன்..!

0

ஈரோடு மாவட்டத்தின் விஐபி தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் தவெக வேட்பாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் வெற்றிப் பெற்றுள்ளார்.

இவர் தம்மை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்லசிவத்தை விட 16,620 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். செங்கோட்டையன் மொத்தம் 82,612 வாக்குகளும், திமுக வேட்பாளர் என்.நல்லசிவம் 65,992 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மொத்தம் 2,39.179 வாக்காளர்கள் உள்ள நிலையில், மொத்தம் 2,16,910 பேர் வாக்களித்துள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,14,070, பெண் வாக்காளர்கள் 1,25,096 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 13 பேர். 90.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரான கே.ஏ.செங்கோட்டையன், திமுக வேட்பாளர் ஜி.வி.மணிமாறனை சுமார் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

செங்கோட்டையனின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில் இந்த முறையும் கே.ஏ.செங்கோட்டையன் களம் காண்கிறார். ஆனால் அவர் இந்த முறை அவர் தவெக சார்பில் போட்டியிடுகிறார் என்பதால் இத்தொகுதி கூடுதல் கவனம் பெற்றுள்ளது. அவரை எதிர்த்து திமுக சார்பில் என்.நல்லசிவம், அதிமுகவில் வி.பி.பிரபு, நாம் தமிழர் கட்சியில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

கோபிச்செட்டிப்பாளையம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது.

செங்கோட்டையனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவித்துள்ள நிலையில், அவரது வெற்றியை திமுக அல்லது அதிமுக தட்டிப்பறிக்குமா? தவெக வெற்றிக்கொடி நாட்டுமா? என்பது இன்றைக்கு தெரிந்துவிடும்.

தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து

0

திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று (மே 4) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், தவெக 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் 1977இல் எம்.ஜி.ஆர் பெற்ற 33.5% வாக்குகளே அதிகபட்சமாக இருந்த நிலையில், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 34% வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வரலாற்று படைத்திருக்கிறது தவெக.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்துகள் – மோடி

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், “மிகச் சிறப்பாக செயல்பட்ட தவெக கட்சிக்கு எனது வாழ்த்துகள். தமிழக மக்களின் வளர்ச்சிக்கான அனைத்து செயல்பாடுகளையும் பாஜக அரசு செய்யும். என்.டி.ஏக்கு வாக்களித்த மக்களுக்கும் எனது வாழ்த்துகள் ” என்று தெரிவித்துள்ளார்இனிமேல் வாரிசு அரசியல் இல்லை – அண்ணாமலை

பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, தமிழக மக்களின் தீர்ப்புக்கு தான் தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், “வாக்குகளை விலைக்கு வாங்க முடியாது, வாரிசு அரசியல் இனிமேல் இல்லை என்ற கருத்தை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெளிப்படுத்தி இருப்பதை பார்ப்பதில் மகிழ்ச்சி.மக்கள் அனைவரும் அடுத்த தலைமுறை அரசியல் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். தமிழக அரசியலில் மிக சிறப்பான அறிமுகத்தை பெற்றதற்காக தவெக மற்றும் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என்.டி.ஏ கூட்டணியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார் – தமிழிசை சௌந்திரராஜன்

பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் அளித்த பேட்டியில், “மக்களின் நம்பிக்கையை விஜய் காப்பாற்றுவார் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அதே நேரத்தில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் யாரும் கவலையடைய வேண்டாம். அரசியலில் சிலர் வெற்றி பெறலாம், சிலர் தோற்கலாம்.

ஆனால், அவர்கள் என்ன பணிக்காக அரசியலில் இருக்கிறார்களோ அந்த பணியை தொடர்வது தான் இயற்கை. என் அரசியல் பணி இன்னும் தீவிரமாக தொடரும். மக்களுக்காக நல்லது செய்தால் புதிய ஆட்சி பாராட்டு பெறும்” என்றார்.தமிழகத்தில் அமைதி புரட்சி – கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “உலக வரலாற்றில் மக்கள் எழுச்சியால் ஏற்பட்ட நிகழ்வுகளுடன் ஒப்பிடும் வகையில், தமிழக மக்கள் தேர்தல் வாயிலாக அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் உரிமையை அசைத்து பார்க்கும் விதமாக தவெக ஆட்சி அமைக்கவுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.முதல் தேர்தலிலேயே ஈர்க்கக்கூடிய சாதனை – ஜெகன் மோகன் ரெட்டி

தவெக தலைவர் விஜய்க்கு ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது பதிவில், “என் அன்பு சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது ஈர்க்கக்கூடிய சாதனை. மக்கள் பணிக்காக புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.