வி.சி.க காட்பாடி செய்தி தொடர்பாளர் அஜித் செல்வராஜ் – மரிய ஜோன் சிந்து ஆகியோரது திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் வருகை புரிந்திருந்தனர். விழாவில் , கலந்துகொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் ஜூலை 5-ஆம் தேதி எனது தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. 2026ஆம் ஆண்டுக்கான விருதுபெறும் சான்றோர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த விழாவில் இயக்கத் தோழர்கள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மேகதாது விவகாரம் – அனைத்துக் கட்சிக் கூட்டம்
தொடர்ந்து, மேகதாது விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாலொழிய தீர்வு எட்டமுடியாது என துரைமுருகன் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்மொழ்ந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம், புதிய முதலமைச்சரும் மேகதாது அணைக்கு ஒன்றிய அரசு அனுமதிக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். இருப்பினும், நாம் என்ன செய்ய வேண்டும்? அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து எவ்வாறு செயல்பட வேண்டும்? மேகதாது பகுதியில் அணை கட்டினால், தமிழ்நாடு எந்த வகையில் பாதிக்கப்படும்? விவசாயிகள் மட்டுமின்றி குடிநீருக்காக மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்? கால்நடைகள் எவ்வாறு பாதிக்கப்படும்? குறித்தெல்லாம் ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது அவசியமானது. விசிகவும் அதற்கு கோரிக்கை விடுக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும், “காங்கிரஸ் கட்சி எப்போதுமே தமிழ்நாட்டு நலன்களை முன்னிறுத்தி முடிவுகளை எடுத்திருக்கிறது. தமிழ்நாடு எடுக்கிற முடிவுகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒத்துழைப்பு அளித்திருக்கிறது. இதுதான் கடந்த கால வரலாறு. எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மக்களுக்கு ஒத்துழைப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


