திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்ட செந்தில் பாலாஜி, டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் ரூ.400 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்த சிபிஐ, விசாரணையையும் துரிதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் கஸ்தூரி நகர் பகுதியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் இல்லத்துக்கு மஃப்டி உடைகளில் சென்ற கரூர் ஏடிஎஸ்பி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அங்கு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லாததால் காவல்துறையினர் திரும்பிச் சென்றனர். செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது சகோதரர் அசோக்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அசோக்கை பலமுறை கைது செய்ய முயன்றது. எனினும், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிரான சட்டப் பாதுகாப்பை அவர் பெற்று வந்தார்.இதுபோன்ற சூழலில், அசோக்கின் செல்போன் சிக்னல் சென்னை எம்.ஆர்.சி. நகர் பகுதியில் காட்டியதாக கூறப்படும் நிலையில், செந்தில் பாலாஜி இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், வீட்டின் பாதுகாவலரிடம் இருந்து செல்போனை பெற்று, சமீபத்திய அழைப்புகள் மற்றும் தொடர்புகள் குறித்தும் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று இரவு முதல் அசோக்கை தேடும் நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அசோக் மீது பண மோசடி தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், தற்போது எந்த வழக்கில் அவரை தேடி வருகின்றனர் என்பது குறித்து காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கரூரில் அசோக் மீது புதிதாக ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


