Wednesday, April 15, 2026
Home Blog Page 2

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

0

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்.2) வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம், தேர்தலை நேர்மையாகவும், 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கை அடையும் வகையிலும் தேர்தல் ஆணையம் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி தேதி ஏப்ரல் 6- ஆம் தேதி என்பதால், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் பரபரப்பாக காணப்படுகின்றன.இந்நிலையில், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 02) சென்னை ஐஸ் ஹவுஸ் அருகே பெசன்ட் சாலையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்.சுகந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.இந்நிகழ்வின் போது, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அண்ணா நகர் திமுக வேட்பாளர் சிற்றரசு, திமுக மாநில ஊடகப்பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இது ஒரு வரலாறு வெற்றியாக இருக்கும். கண்டிப்பாக இந்த முறையும் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி ஒரு பார்வை

கடந்த 2008- ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி உருவானது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியில் மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானார். இந்நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்: திறந்த வாகனத்தில் பிரச்சாரம்…

0

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பின்னர் தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார்.

திருச்சி வந்தடைந்த விஜய்க்கு, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து, திருச்சி மாநகராட்சியின் பாலக்கரை பகுதியில் மண்டல அலுவலகத்திற்கு சென்ற விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேசபாண்டியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர்கள் உடனிருந்தனர்.வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர், பிரச்சார வாகனத்தில் நின்றவாறு சென்ற விஜய்க்கு, சாலையின் இரு புறங்களிலும் நின்று தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, விஜய் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

கட்சித் தொடங்கி முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகம் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.கடந்த மார்ச் 30-ம் தேதி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் விஜய் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அன்றைய தினமே கொளத்தூர், பெரம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் பாதுகாப்பு குறைபாடு காரணம் என்று கூறி வில்லிவாக்கத்தில் தனது பிரச்சாரத்தை அவர் ரத்து செய்திருந்தார்.

திருச்சி கிழக்கில் திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். சிறுபான்மையினர் வாக்கு அதிகம் உள்ள தொகுதி என்பதால் திருச்சி கிழக்கில் திமுக – தவெக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுவை தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

0

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவி மற்றும் தாயுடன் சென்று இன்று (மார்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளுக்கும் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பு மனு தாக்கல் செய்யும் முதல் நாளான இன்று காரைக்குடி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் இன்று அவர் அவர் பகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் மாங்குடி எம்எல்ஏ மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள அமமுகவை சேர்ந்த தேர் போகி பாண்டி, தவெக சார்பில் டாக்டர் பிரபு ஆகியோர் களத்தில் உள்ளனர். போட்டி கடுமையாக இருக்கும் சூழலில், நேற்று பரப்புரையை தொடங்கிய சீமான் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக தனது சொந்த ஊர் மற்றும் எல்லா சமுதாய மக்களும் காரைக்குடியில் இருப்பதால் தான் இங்கு போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் கேட்டது இலவசம்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “எம் மண்ணின் வளத்தை, மக்களின் நலத்தை அடமானமாக வைத்து கடன் பெறுகிறீர்கள். கடனில் மட்டும் வளர்ச்சி என்று காட்டினால் எப்படி? கல்வி, மருத்துவம், குடிநீர், தடையற்ற மின்சாரம், தரமான போக்குவரத்து, நல்ல சாலை போன்றவை தரமானதாக உள்ளதா? ஒவ்வொரு ஆண்டும் மக்களை வெள்ளத்தில் மிதக்க விட்டு வெள்ள நிவாரணம் கொடுப்பது நல்ல ஆட்சியா? வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு மழை நீர், கழிவு நீர் வழிந்தோட வசதி ஏற்படுத்திக் கொடுத்து மக்களைப் பாதுகாப்பது தான் ஆட்சி.யார் கேட்டது இலவசம்.. ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்தபோது ‘இலவசங்களை மக்கள் விரும்பவில்லை, அதை எதிர்பார்க்கவில்லை, அவர்கள் வேலை தான் கேட்கிறார்கள்’ என்று பேசியது உண்டு. இப்போது திருப்பி நீங்கள் அதையே செய்கிறீர்கள். ஒரு இனத்தின் மகனாக, இலவசத்திற்கு ஆயிரம், ஐநூறுக்கு கையேந்துவதை தன்மான இழப்பாக, இனமான இழப்பாகப் பார்க்கிறேன். அவமதிப்பாகப் பார்க்கிறேன். இது எந்த மாதிரி ஆட்சி முறை?இப்படியே சென்றால் எங்கு போய் நிறுத்துவீர்கள்?
இப்போது பத்தரை லட்சம் கோடி கடன் உள்ளது. அடுத்த ஐந்தாண்டு யாராவது வந்தால்.. கொடுமை! இதை எப்படி இந்த அறிவுச் சமூகம் ஏற்கிறது? மக்களை ‘இலவசம் கொடுக்கிறோம்’ என்று சொல்லி ஏன் ஏமாற்ற வேண்டும்?மிக்சி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், வேட்டி, சேலை, ஒரு லிட்டர் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு – இதை எல்லாம் கூட வாங்கிக் கொள்ள முடியாதா? ஒரு அடிப்படை தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஏழ்மை, வறுமை – அந்த அளவுக்குக் கூட வருமானம் இல்லை. என்ன கொடுமை இது?எங்கே கொண்டு போய் நிறுத்துவீர்கள் என்று சொல்லுங்கள். மலை, மணல், மரங்கள் இல்லை.. கொடுமை!” என தெரிவித்தார்.

பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய்

0

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தேர்தலில் போட்டிடும் 243 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார் விஜய்.

தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த கையோடு, பெரம்பூரிலிருந்து பரப்புரை பயணத்தை தொடங்கியுள்ளார். அவரை காண மக்கள் கூட்டம் அலைமோதியதால் அந்த பகுதியில் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே, ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று வெளிப்படையாகவே கூட்டணிக்காக பிற கட்சிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்த போதிலும், தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை. இருப்பினும், ‘மக்களின் துணையோடு தேர்தல் களம் காண்போம்’ என்று விஜய் கூறியிருந்த நிலையில், நேற்று 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை ஒரே கட்டமாக வெளியிட்டார். அதன்படி, சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார்.1952-ம் ஆண்டு முதல் 16 சட்டமன்ற தேர்தல் மற்றும் ஒரு இடைத்தேர்தல் என இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ள பெரம்பூர் தொகுதி இந்த ஆண்டு தனது 18-வது தேர்தலை சந்திக்கிறது. இதில் 9 முறை திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், அதிமுக 2 முறையும், சுயேட்சை 2 முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதால், அவருக்கு எதிராக ஏற்கனவே இந்த தொகுதியில் இடைத்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆர்.டி சேகரை திமுக களம் இறக்கியுள்ளது. அதிமுகவில் அதன் கூட்டணி கட்சியான பாமகவிற்கு சீட் வழங்கப்பட்டிருப்பதால் விஜயை எதிர்கொள்ளும் வகையில் திலகபாமாவை பாமக களம் இறக்கியுள்ளது. அதே போல், 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி அந்த தொகுதிவாசியான வெற்றித்தமிழனை களம் இறக்கியுள்ளது. இவை மட்டுமல்லாமல் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) கட்சி சார்பில் சுயேட்சையாக செபாஸ்டின் களமிறங்குகிறார்.

வேட்பு மனு தாக்கல்; வெற்றி நிச்சயம் என நம்பிக்கை மு.க.ஸ்டாலின்

0

கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியிடும் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

சென்னை, செம்பியம், பேப்பர் மில் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலக கட்டட வளாகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் அவர் தனது வேட்பு மனுவை அளித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திமுகவின் வேட்பாளராக, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். கொளத்தூர் தொகுதி மக்கள் நான்காவது முறையும் என்னை அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெற வைப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.எங்களின் தேர்தல் பிரச்சாரம் எப்போதும் போல வலுவாக இருக்கும். கடந்த மூன்று முறை நின்று போட்டியிட்டதை விட 4-வது முறை கொளத்தூர் தொகுதி மக்களிடம் அதிக ஆதரவை பார்க்க முடிகிறது. டெல்லியை எதிர்த்து தமிழ்நாடு போராடுகிறது. தமிழ்நாட்டின் உரிமையை காப்பதற்கான இந்த வெற்றி மிகப் பெரிய வெற்றியாக அமையும்” என்று ஸ்டாலின் கூறினார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு முதலமைச்சர் என்ற அந்தஸ்தை கொடுத்த தொகுதி கொளத்தூர். 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அதற்கு முன்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.அதாவது 1984 முதல் 2006 -ம் ஆண்டு வரை 6 சட்டமன்றத் தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 4 முறை மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியும் கண்டுள்ளார். இந்த நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக, 2026 சட்டப் பேரவை தேர்தலிலும் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே களமிறங்குகிறார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சுந்தர பாண்டியன், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வி.எஸ் பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை 68,677 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வீழ்த்தினார். 2016 பொதுத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஜெ.சி.டி. பிரபாகரனை 91,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார்.

இதேபோன்று, 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வென்றார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, ஒன்பது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் 7 முறை வெற்றி கண்டுள்ளார். 2026 தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் செந்தில் பாலாஜியை தோற்கடிப்பேன் – அம்மன் அர்ஜூனன்

0

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறியுள்ளார்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணம் சுந்தரமும், கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் செந்தமிழ் செல்வன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி, சூலூர் தொகுதியில் தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் தொகுதியில் என்.ஆர்.கார்த்திகேயன், கிணத்துக்கடவு தொகுதியில் சபரி கார்த்திகேயன், வால்பாறை தொகுதியில் சுதாகரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் கோட்டை என கருதப்படும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திமுகவை அதிக தொகுதிகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முறை கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.இந்நிலையில், கோவை தெற்கில் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இது தொடர்பாக பேசியதாவது, ”திமுக, அதிமுகவிற்கு போட்டியில் வெற்றி பெறுவது அதிமுக தான். 2026 மே மாதம் 5-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார்” என்றார். செந்தில் பாலாஜி கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, ”செந்தில் பாலாஜி எங்கள் வேட்பாளர் விஜயபாஸ்கரை கண்டு பயந்து இங்கே வந்துவிட்டார். கரூரில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் என்று அறிவிக்கப்பட்டதும் செந்தில் பாலாஜிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. இது சிறிய தொகுதி என்பதால் மக்களை ஏமாளிகள் என்று நினைத்து டப்பா, பாக்ஸ் போன்று ஏதாவது கொடுத்து விடலாம் என்று நினைத்து விட்டனர். ஆனால் கொங்கு மக்களுக்கு வரவேற்கவும் தெரியும், அடித்து விரட்டவும் தெரியும்.நிச்சயமாக 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். இங்கு அவருக்கு இடமில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உலக நாயகன் போட்டியிட்டார் அவரால் வெல்ல முடிந்ததா? இல்லை தானே. இங்குள்ள மக்கள் யோசித்து அவர்களுக்கான மக்கள் பணியை செய்யும் நபர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள். ஓட்டு வாங்கி விட்டு சென்னைக்கு செல்பவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். 2016ஆம் ஆண்டு இதே தெற்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி பலமும் உள்ளது. அதேபோன்று இந்த முறையும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.

வெளியானது திமுக வேட்பாளர்கள் பட்டியல் – கொளத்தூரில் மீண்டும் மு.க. ஸ்டாலின் ..!

0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்டார். இதில் 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல், அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். மொத்தம் 150 தொகுதிகளுக்கு அதிமுக தலைமை வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 17 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கப்படவில்லை.இதனிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆளும்கட்சியான திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

அதன்படி, கொளத்தூர் தொகுதியில் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர்.அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு:

காட்பாடியில் துரைமுருகன், திருச்சி மேற்கில் கே.என்.நேரு, ஆத்தூரில் ஐ. பெரியசாமி, திருவண்ணாமலையில் எ.வ.வேலு, குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திருச்சுழியில் தங்கம் தென்னரசு, திருமயம் தொகுதியில் ரகுபதி, ஈரோடு மேற்கில் முத்துசாமி, திருப்பத்தூரில் பெரியகருப்பன், ஆலந்தூரில் தா.மோ.அன்பரசன், காங்கேயத்தில் மு.பெ,சாமிநாதன், தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், முதுகுளத்தூரில் ராஜகண்ணப்பன், சேலம் வடக்கில் ராஜேந்திரன், ஒட்டன்சத்திரத்தில் சக்கரபாணி, சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன், மதுரை கிழக்கில் பி.மூர்த்தி, குன்னத்தில் எஸ்.எஸ். சிவசங்கர், துறைமுகம் தொகுதியில் பி.கே.சேகர்பாபு, திருவிடைமருதூரில் கோவி.செழியன், மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆவடியில் சா.மு.நாசர், திருவெறும்பூரில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆலங்குடியில் மெய்யநாதன், திட்டக்குடியில் சி.வி.கணேசன், மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா, ராசிபுரத்தில் மதிவேந்தன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு மீண்டும் வாய்ப்பு:

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவுக் காரணமாக திமுக பொதுச்செயலாளரும், தற்போதைய மூத்த அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகனுக்கு சீட் வழங்கப்படாது எனக் கூறப்பட்ட நிலையில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 13-வது முறையாகப் போட்டியிடும் துரைமுருகன், 10 முறை சட்டமன்றத்திற்கு சென்றுள்ளார்.பொன்முடி மகனுக்கு வாய்ப்பு:

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான மருத்துவர்.கௌதமசிகாமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக தலைமையிடம் பொன்முடி விருப்ப மனுத்தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு, கீழ்பென்னாத்தூரில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவைக்கு மாறிய செந்தில்பாலாஜி

கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை

எனினும், தற்போதைய அமைச்சர்களான மனோ தங்கராஜ், காந்தி, கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருந்தாலும், அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி, ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், செஞ்சி தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுகவின் கோட்டையான சேலம் தெற்கு தொகுதியில் புதுமுகமாக லோகநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருக்கோவிலூரில் முன்னாள் எம்.பி.யும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம சிகாமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்), வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) ஆகியோருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆண்டிபட்டியில் மோதும் அண்ணன், தம்பி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் திமுக சார்பில் மகாராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகிராஜன் இவரது சகோதரர் ஆவார். ஒரே தொகுதியில் அண்ணன் தம்பி இருவரும் வழக்கம் போலவே களமிறங்குகின்றனர்.

ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ரகுமான் கானின் மகன் சுபேர்கான், தியாகராய நகரில் மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சீமானுக்கு எதிரான தேச விரோத வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்…

0

காரைக்காலில் நிலக்கரி இறக்குமதி செய்வதை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக சீமான், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட தேச விரோத வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால் மார்க் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் இருந்து வரும் துகள்கள் நாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் சுற்றுச்சூழலை பாதிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், நிலக்கரியில் இருந்து வரும் துகள்கள் பரவுவதை கண்டித்து கடந்த 2018ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து சீமான், நாகப்பட்டினம் முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் உள்ளிட்டோர் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை தாக்கல் செய்தது.இதையடுத்து. தான் முன்னாள் எம்.எல்.ஏ என்பதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு அரசிடம் முறையான அனுமதியை காவல்துறை பெறவில்லை என்று கூறி, இந்திய தேசிய லீக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் ஆஜராகி குற்றப்பத்திரிகையையும், வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

“திமுகவின் அடக்குமுறை” தேர்தல் பிரச்சார அனுமதி மறுப்பிற்கு விஜய் கண்டனம்…

0

பெரம்பூரில் நாளை நடைபெறவிருந்த தவெக பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.

நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்” என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி ‘ என கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை, பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார் என கூறப்படும் நிலையில், நாளை அப்பகுதியில் பிரச்சாரத்தை துவக்க தவெக திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் நாளை விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கொடுக்க மறுத்து, பிரசாரத்திற்கு மாற்று இடம் கேட்டு விண்ணப்பம் செய்யுங்கள் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

மொத்தம் 127 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் பிரபு, திருப்பூர் வடக்கு தொகுதியில் எம்எஸ்எம் ஆனந்தன் உள்ளிட்டோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 23 பேர் அறிவிக்கப்பட்டிருந்த தற்போது இரண்டாம் கட்ட பட்டியலில் 123 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அதன்படி, கும்மிடிபூண்டி தொகுதியில் சுதாகர், பொன்னேரி (தனி) தொகுதியில் சிறுணியம் பலராமன், திருத்தணி தொகுதியில் கோ.அரி, திருவள்ளூர் தொகுதியில் ரமணா, மாதவரம் தொகுதியில் மாதவரம் மூர்த்தி, திருவொற்றியூர் தொகுதியில் குப்பன், ஸ்ரீபெரும்புத்தூர் (தனி) தொகுதியில் பழனி, தாம்பரம் தொகுதியில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், செங்கல்பட்டு தொகுதியில் கஜேந்திரன், செய்யூர் (தனி) தொகுதியில் ராஜசேகர், மதுராந்தகம் (தனி) மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் தொகுதியில் சோமசுந்தரம், அரக்கோணம் (தனி) தொகுதியில் ரவி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் தொகுதியான காட்பாடியில் அதிமுக சார்பில் ராமு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கீழ்பென்னாத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு தொகுதியில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன், அதிமுகவின் கோட்டையான சேலம் தெற்கு தொகுதியில் வினோத், ஓமலூர் தொகுதியில் எம்எல்ஏ மணி ஆகியோர் களம் காண்கின்றனர். இவர்களை போன்று, உளுந்தூர்பேட்டை தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு, கெங்கவல்லி (தனி) தொகுதியில் எம்எல்ஏ நல்லதம்பி, ஆத்தூர் (தனி) தொகுதியில் எம்எல்ஏ ஜெய்சங்கரன், மேட்டூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலம், பரமத்திவேலூர் தொகுதியில் எம்எல்ஏ சேகர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன், உடுமலைபேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் உடுமலைப்பேட்டை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், புவனகிரி தொகுதியில் எம்எல்ஏ அருண்மொழிதேவன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சூலூர் தொகுதியில் எம்எல்ஏ கந்தசாமி, கவுண்டம்பாளையம் தொகுதியில் எம்எல்ஏ அருண்குமார், அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா, ஆலங்குளம் தொகுதியில் முன்னாள் எம்பி கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக சார்பில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 150 வேட்பாளர்களில் 46 பேர் தற்போது அதிமுக எம்எல்ஏக்களாக உள்ளனர். 17 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். அதேபோல் 31 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.