Wednesday, June 24, 2026
Home Blog Page 2

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

0

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை.

ஆனால், காரைக்குடி, சிங்காநல்லூர், ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், மதுரை (தெற்கு) மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.
இதனிடையே, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதனை நிரூபிக்கும் வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லி பயணம் மேற்கொண்ட அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அண்ணாமலையின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பாஜக தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதளத்தில் அண்ணாமலை பேசினார். அப்போது அவர், “பாஜகவில் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி டெல்லியில் இருந்து வந்து இணைந்தேன். தமிழ்நாட்டு மக்களுக்காக 6 ஆண்டுகள் பணியாற்றியதை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து விலகியுள்ளேன். இன்று முதல் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம். இதுவரை எனது அரசியல் பாதை வளைந்து, நெளிந்து இருந்தது. இது எளிதானது அல்ல. அதனால் ஒரு சில கருத்துக்களை தற்போது பகிர விரும்புகிறேன்.
முதலில் ஐஐம் லக்னோவில் படிக்கும் போது 25 வயதில், விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவில் இண்டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு 3 மாதங்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பாஜகவில் இணைவதற்கு முதல் நாள், நடிகர் ரஜினிகாந்த் என்னை தொடர்பு கொண்டு அவர் தொடங்கவிருந்த அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவரிடம் எனக்கு நீண்ட கால நட்பு உள்ளது. அவருடைய அரசியல் பாதை எப்படி இருக்க வேண்டும் என பல முறை அவரிடம் பேசியுள்ளேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தான் தமிழ்நாட்டிற்கு நல்லது. ஆனால் கோவிட் கால கட்டத்தில் அரசியலுக்கு வராமல் இருப்பது தான் அவருக்கு நல்லது. இது பற்றி ரஜினிகாந்த்திடம் தெரிவித்து விட்டு பாஜகவில் இணைந்தேன். பிறகு அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டேன். அவரும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார்“ என்றார்.தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “என்னிடம் பலர் நீங்கள் தமிழனா? இந்தியனா? என கேட்பார்கள். எனது பெற்றோர் தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்றதில்லை. ஆனால் நான் தமிழ்நாட்டை விட்டு லக்னோ, டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும், கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் படிக்கவும் பணியாற்றவும் செய்துள்ளேன். நான் ஒரு பெருமைமிகு இந்தியன், பாரம்பரியம் மிக்க தமிழன். தமிழ்நாட்டில் மக்களோடு பயணித்து, சமரசமில்லாமல் மாநிலத்தின் வளர்ச்சியை உங்களோடு முன்னெடுத்து செல்ல வேண்டும்“ என்றார்.மேலும் பாஜகவில் இருந்து வெளியேறியது குறித்தும் அவர் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் ஆகியவற்றில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என அப்போது கட்சியின் தலைவராக இருந்த ஜே.பி.நட்டாவிடம் கூறினேன். ஆனால், எனது கருத்து ஏற்கபடவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக சார்பில் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பாஜகவை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். பிரதமர் மோடி மீது மிகப்பெரும் மரியாதை உள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் பல பிரச்சனைகள் குறித்து எடுத்து கூறினேன். கடந்த 18 மாதங்களாக பாஜக தலைமையுடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதனையடுத்து கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி பாஜகவில் இருந்து விலகுவதாக கூறினேன். ஆனால் தேர்தல் பணியை முடித்து விட்டு செல்ல சொன்னார்கள். அதனால் பணியாற்றினேன். கட்சியில் இருந்து விலகுவது என்பது உடனடியாக எடுத்த முடிவு அல்ல“ என்றும் அண்ணாமலை கூறினார். தொடர்ந்து தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்தும் அண்ணாமலை அறிவித்தார். அப்போது அவர், “தற்போது தமிழ்நாட்டில் அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம். வரும் 2031 சட்டப் பேரவைத் தேர்தலில் இதனை கட்சியாக மாற்றி போட்டியிடுவோம். தமிழ் கலாச்சாரம், மாநில உரிமைகள் மற்றும் தேசிய பார்வை ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு ‘தமிழ்-முதல்’ மற்றும் மதச்சார்பற்ற கொள்கைப் பாதையில் இந்த இயக்கம் பயணிக்கும். முதலில் அரசியல் இயக்கத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு சற்று அவகாசம் தேவை. இன்னும் 6 முதல் 8 மாதங்களுக்குள் இது அரசியல் கட்சியாக முழு வடிவம் பெறும். அப்போது அதன் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால், களப்பணிகள் இப்போதே தொடங்கி விட்டன. அனைவரையும் முன்னிலைப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். பழைய அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும்.
பண பலம் மற்றும் குடும்ப அரசியலை சார்ந்து இல்லாமல், தமிழக இளைஞர்களை முன்னிறுத்தி தூய்மையான அரசியல் செய்வதே இலக்கு“ என்றும் அவர் கூறினார்.

மேலும், www. betheleader.org என்ற இயக்கத்தின் இணையதளத்தையும் அண்ணாமலை அறிமுகப்படுத்தினார். இதில் பொதுமக்கள் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்தார்.தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கோயம்புத்தூரில் ‘APJ center for ethics and politics’ என்ற மையம் தொடங்கப்படுவதாகவும், அங்கு இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறினார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர், நமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு முன்பு, இந்த மையத்தில் பயிற்சி பெற வேண்டும். அவர்கள் மக்களின் தேவைகளை புரிந்து கொள்ள வேண்டும். நாம் மாறினால் மாற்றம் நடக்கும். எனக்கு யார் மீதும் வன்மம் கிடையாது.

இந்த இயக்கம் மக்களுக்கான பாதையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளை போன்று பாஜகவை பார்க்கிறேன். நாம் யாருக்கும் போட்டி கிடையாது என்றும் தெளிவுபடுத்தினார்.

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

0

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘அன்னபூர்ணா பண்டார்’ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில் உள்ள மாநில தலைமைச் செயலகம் ‘நபன்னா’வில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ₹3,000 நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும். தொடக்க விழாவில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அக்னிமித்ரா பால் ஆகியோர் ஐந்து பெண் பயனாளிகளுக்கு நிதியுதவிக் காசோலைகளை நேரில் வழங்கினர்.விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, முதற்கட்டமாக 28,25,769 பெண்கள் இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அனைவருக்கும் மாதந்தோறும் ₹3,000 நிதி நேரடியாக வழங்கப்படும் என்றார். இன்னும் தகுதியான பெண்கள் பதிவு செய்ய அடுத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் முழுமையான உதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். அன்னபூர்ணா பண்டார் திட்டத்தில் பயன்பெற 25 முதல் 60 வயது வரையிலான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இது பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும். முந்தைய ‘லக்ஷ்மிர் பண்டார்’ திட்டத்தில் வழங்கப்பட்ட ₹1,500 உதவியை இரட்டிப்பாக்கி ₹3,000 ஆக வழங்குவோம் என்ற வாக்குறுதியை ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றியுள்ளனர். அமைச்சர் அக்னிமித்ரா பால் பேசுகையில், முந்தைய லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளும் கூட புதிய திட்டத்திற்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்றார். முந்தைய திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் எழுந்ததால், தற்போது அனைத்து விண்ணப்பங்களும் புதிய முறையில் கடுமையாக பரிசீலிக்கப்படுகின்றன என்று விளக்கினார். முன்பு சுமார் 2.2 கோடி பயனாளிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மனோஜ் அகர்வால் கூறுகையில், பயனாளிகள் பட்டியல் முழுமையாக பொதுவில் வெளியிடப்படும் என்றார். தகுதியற்ற நபர்கள் பலன் பெற்றால் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றார். எனினும், அரசு வெளியிட்டுள்ள 11 பக்கங்கள் கொண்ட நீண்ட விண்ணப்பப் படிவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிய பெண்களுக்கு இந்தப் படிவம் மிகவும் சிக்கலானதாகவும், நீளமானதாகவும் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும், தகுதியான அனைத்து பெண்களுக்கும் நிதியுதவி சென்றடைய அரசு உறுதியுடன் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் மேற்கு வங்க பெண்களின் பொருளாதார சுயசார்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதன் மூலம் பாஜக அரசு பெண் வாக்காளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டம் மேற்கு வங்க அரசியலில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. முந்தைய திட்டத்தின் குறைபாடுகளைத் தீர்த்து, மிகவும் வெளிப்படையான முறையில் செயல்படுத்த அரசு முயற்சி எடுத்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் எத்தனை புதிய பயனாளிகள் இணைகிறார்கள் என்பதைப் பொறுத்து திட்டத்தின் வெற்றி அளவிடப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஹார்டு டிஸ்க் திருட்டில் அதிகாரிகளுக்குப் பங்கா..?

0

அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத்தின் (TNEB) தலைமையகத்திலிருந்து, குறிப்பாக டெண்டர்கள் மற்றும் கொள்முதல்கள் மேலும் நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான பதிவுகள் அடங்கிய, ரகசியத் தரவுகள் உள்ள சுமார் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன.

செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முக்கிய பதிவுகள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் உள்ள அலுவலகங்கள் உட்பட, மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) பல்வேறு பிரிவுகள் மற்றும் அதன் அலுவலகங்களை அரசு ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார்.

“முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முதன்மை நோக்கம். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் சிலரைக் கைது செய்துள்ளனர். இருப்பினும், இந்த நிலையில் மேலதிக விவரங்களை எங்களால் வெளியிட இயலவில்லை. விசாரணை முடிந்தவுடன், அனைத்து உண்மைகளும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் (TNGECL) அதிகாரிகள் மீது சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய நிர்மல் குமார், ஹார்டு டிஸ்க் திருட்டு நடந்த நேரம், இதற்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்றார்.
“TNGECL நிறுவனத்தின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் உள்ளிட்ட சில அதிகாரிகள் சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில், ஹார்டு டிஸ்க் திருட்டு நடைபெற்றுள்ளது. எனவே, இடைநீக்கங்களுக்கும் திருட்டுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். விசாரணை உண்மையை வெளிப்படுத்தும்,” என்று அவர் கூறினார். திருட்டுக்கான நோக்கத்தையும், அதற்குப் பொறுப்பானவர்களையும் அரசாங்கம் இன்னும் கண்டறியவில்லை என்று அமைச்சர் கூறினார்.
ஹார்ட் டிஸ்க்குகள் ஏன் திருடப்பட்டன என்றோ அல்லது இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றோ எங்களுக்குத் தெரியாது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துவிடலாம் என்று நம்பலாம், ஆனால் தகவல்களை மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்,” என்று அவர் கூறினார். டிஜிட்டல் காப்புப்பிரதிகள் மற்றும் பிற தொழில்நுட்ப வழிமுறைகள் மூலம் தரவுகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். முக்கியமான ஆவணங்களை மீட்டெடுக்க முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட எவரும் தப்பிக்க விடப்பட மாட்டார்கள். இதற்குப் பொறுப்பானவர்கள் எனக் கண்டறியப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சார நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மின் கொள்முதல் ஒப்பந்தங்கள், டெண்டர்கள் மற்றும் பிற முக்கிய பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களைத் தொகுக்குமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நிர்மல் குமார் மேலும் தெரிவித்தார் . இந்தப் பணி அடுத்த ஓரிரு நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஆட்சியின் போது நடந்ததாகக் கூறப்படும் மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்துக் குறிப்பிட்ட அமைச்சர், மேலதிக விசாரணைக்காக சில ஆவணங்கள் ஏற்கனவே மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்த தவெகவினர் ..!

0

அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ,பட்டக்காரன் புதூர் மற்றும் கரப்பாளையம் புதூர் ஆகிய கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பட்டக்காரன் புதூர் கிராமத்தில் உள்ள சில வீடுகளில் வசிப்பவர்கள் குடிநீர் வசதியின்றி அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து அவர்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் சிலர், ஊராட்சி குடிநீர் குழாயில் இணைப்பு எடுத்து அந்த வீடுகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளனர். தவெகவினர் ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு குழி தோண்டி குடிநீர் இணைப்பு கொடுத்த நிலையில், அது குறித்து அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு கொடுத்தது குறித்து அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலத்திற்கும் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், எங்களிடம் அனுமதி பெறாமல் எப்படி குழி தோண்டினீர்கள்? எப்படி குடிநீர் இணைப்பு கொடுத்தீர்கள்? என தவெக நிர்வாகிகளை கேள்வி எழுப்பினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தவெகவினர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மற்றொரு தரப்பினர் ஆளும் கட்சி என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? இதற்கு அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தனர். இதனையடுத்து தோண்டிய குழிகளை மூடியதுடன், சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

தவெக ஆட்சி அமைந்த பிறகு அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அவ்வப்போது மருத்துவமனை, மாநகராட்சி மண்டல கூட்டங்களில் அனுமதி இன்றி நுழைந்து ஆய்வு மேற்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு கொடுத்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.18,600 கோடி முதலீடு; 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து…

0

18,600 கோடி முதலீட்டில் எல்&டி லிமிடெட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் எல்&டி நிறுவனம் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொண்டு தொழில்துறையில் வலுவான தடம் பதித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பரவலாகவும், வெவ்வேறு துறைகளிலும் மேலும் 18,600 கோடி ரூபாய் முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் அமைக்க முன்வந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தொடர்ந்து வழங்கும்.
லார்சன் & டூப்ரோ லிமிடெட் (L&T) நிறுவனம், தமிழ்நாட்டில் மேற்கொள்ள இருக்கும் மூன்று திட்டங்கள்காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம்,
கோயம்புத்தூரில் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம்,
திருவள்ளூர் மாவட்டத்தில், 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் 5,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காட்டுப்பள்ளி எல்&டி கப்பல் கட்டும் தளம் விரிவாக்கத் திட்டம்.2036- ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் இலட்சிய இலக்கினை எய்துவதற்கான முயற்சியின் மைல் கல்லாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும். பல்துறை சார்ந்த இம்முதலீடுகளின் மூலம் மாநிலத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள் வளர்ச்சிப் பெறுவதுடன், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பு மேம்படும்.

மேலும் காட்டுப்பள்ளி திட்டம், கடலோர காற்றாலை கட்டுருவாக்கத் தொழிலுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டு வரும். இத்திட்டங்கள் செயலாக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பெரிய அளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், மாநிலத்தின் பொருளாதாரமும் மேம்படும்.தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்..!

0

தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுத்தொடர்பாக ரிப்போர்ட் கொடுக்க முதல்வர் விஜய் ஏற்கனவே உளவுத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார்.இந்த நிலையில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இணைந்து மாநிலம் முழுவதும் கடந்த மே 28ஆம் தேதி அதிரடியான கூட்டுச் சோதனையை நடத்தின.இந்தத் திடீர் சோதனையின் போது, டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட MRP விலையை விட கூடுதலாக ரூ.10 முதல் ரூ.50 வரையிலும், சில இடங்களில் அதற்கு மேலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது கச்சிதமாகக் கண்டறியப்பட்டது.இந்த மிகப்பெரிய முறைகேட்டின் அடிப்படையில், முதற்கட்டமாக 277 கடைப்பணியாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) தற்பொழுது அதிகாரப்பூர்வமான மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த மே 28ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய 277 பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்குத் டாஸ்மாக் நிர்வாகம் தற்பொழுது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது ஒட்டுமொத்த டாஸ்மாக் வட்டாரத்திலும் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றால், அவர்கள் பின்வரும் நிபந்தனைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் கறாராகக் கூறியுள்ளது.அபராதம் மற்றும் ஜிஎஸ்டி வட்டி: கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து பிடிபட்ட பணியாளர்கள் தங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் அதற்குரிய வட்டித்தொகை ஆகியவற்றை முழுமையாக வங்கியில் செலுத்தி, அது செலுத்தப்பட்டதை டாஸ்மாக் நிர்வாகத்திடம் உறுதி செய்ய வேண்டும்.

சம்பள உரிமை ரத்து:
சஸ்பெண்ட் செய்யப்பட்டு வேலை செய்யாமல் இருந்த நாட்களுக்குத் டாஸ்மாக் நிர்வாகத்திடம் எந்தவிதமான சம்பளமும் கேட்க மாட்டேன் எனப் பணியாளர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்.

காப்புத்தொகை சரிபார்ப்பு:
ஊழியர்கள் பணியில் சேரும்போது செலுத்திய காப்புத்தொகை (Caution Deposit) தற்பொழுது முழுமையாக அரசிடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொது கலந்தாய்வு கட்டாயம்:
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று பணியை செய்ய முடியாது, பொது கலந்தாய்வு (General Counselling) வாயிலாக மட்டுமே அவர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிரந்தர பணிநீக்க எச்சரிக்கை:
மீண்டும் இதேபோன்று கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் தவறுகளில் ஈடுபட்டால், எவ்வித விசாரணையும் இன்றி அவர்கள் நிரந்தரமாகப் பணிநீக்கம் (Dismiss) செய்யப் பரிந்துரைக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளதுதமிழ்நாட்டில் மதுக்குடிப்போர் தங்களது உழைப்பில் ஒரு பகுதியை இந்த மதுபான கொள்முதலுக்குச் செலவிட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், அரசு நிர்ணயித்த விலையைத் தாண்டி அவர்களின் பாக்கெட்டில் கூடுதலாக பணம் பறிக்கப்படுவதை ஒடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களிலும் இதுபோன்ற கூடுதல் விலை விற்பனை தொடர்பான வேட்டை தொடரும் என்றும், மீறும் ஊழியர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை பாயும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை நாளை கூடுகிறது

0

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் ஆட்சியமைக்கப் போதிய எண்ணிக்கை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் 13- வது முதலமைச்சராக விஜய், கடந்த மே 10- ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் விஜய் உள்பட 35 அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சர்கள் நேற்று (ஜூன் 03) நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை (ஜூன் 05) காலை 11.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு பதவியேற்று நடக்கும் முதல் கூட்டம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளில் சிலவற்றிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரை எப்போது கூட்டுவது? பட்ஜெட் தாக்கல் செய்வது, பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய சிறப்பம்சங்கள், புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய சிறப்பம்சங்கள் உள்ளிட்டவைக் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. அதேபோல், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும், டாஸ்மாக் கடைகள், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாத நிலையில் அது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் – மு.க.ஸ்டாலின் மரியாதை

0

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அங்கு சென்ற திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

அவருடன் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு, திமுக துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ ராசா எம்பி, கனிமொழி எம்பி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் நினைவிடத்தில் “புத்தெழுச்சி நாள் அகவை 103” என்ற வாசகம் மலர்களால் எழுதப்பட்டுள்ளது.

தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு எதிரே உள்ள கருணாநிதியின் திருவுருவ சிலைக்கும் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கும் அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், 75 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து, அங்குள்ள கருணாநிதியின் திருவுருவச்சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார். கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தலைவரின் பிறந்தநாள்! தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சு வரை, தமிழினத்திற்காக – தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்.வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது. நீங்கள் நிறைந்த போது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.

உறுதியாய்ச் சொல்கிறோம்… மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம். உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்

‘ஜாக்பாட்’ – ராஜ்யசபா சீட் வழங்கினார் முதல்வர் விஜய்

0

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் அவர் தனது மாநிலங்களவை உறுப்பனர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காலியான அந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.இந்த நிலையில், மாநிலங்களவை இடைத் தேர்தலில் தவெக போட்டியிட்டால் மிக எளிதாக வெற்றி பெறும் என்ற சூழ்நிலையில், அக்கட்சியை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டி முதல்வர் விஜய்யை இன்று சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவினர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து, மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை தொடர்ந்து, காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தமிழக சட்டப் பேரவையில் 5 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், அமைச்சரவையில் அந்த கட்சியின் சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸுக்கு தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுகவிடம் ஒரு மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சி பெற்றது. அப்போது அக் கட்சியின் சார்பில் கிறிஸ்டோர் திலக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தேர்தல் முடிவு வெளியான இரண்டு நாட்களில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. மேலும் அமைச்சரவையிலும் பங்கேற்றது.

கடந்த மூன்று மாதங்களில் இரு கட்சிகளிடம் இருந்து இரண்டு எம்பிகள் பதவிகளை காங்கிரஸ் கட்சி பெற்றதன் மூலம், மாநிலங்களவையில் அதன் பலம் 30 ஆக அதிகரிக்க உள்ளது.

இதற்கிடையே இந்தியா கூட்டணியில் தவெகவை இணைப்பது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், முதல்வர் விஜய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்…

0

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி அண்ணாமலை இன்னும் எதுவும் கூறவில்லை. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை முதலில் புதிய இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாகவும், அந்த இயக்கத்தின் பெயர், விவரம் அதன் செயல்பாடு குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 2020 ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார். உடனடியாக அவர் பாஜக மாநில தலைவர் பதவியை எட்டிப்பிடித்தார். ஆனால் கடந்த ஆண்டு அவரது மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது.தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இந்த கூட்டணி சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலையிடம் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் வழங்கப்பட்டது.இந்த அதிமுக – பாஜக கூட்டணி சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது. அதிமுக 47 தொகுதிகளிலும், பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. இந்நிலையில் தான் பாஜகவின் தோல்வியை தொடர்ந்து அண்ணாமலை விரைவில் தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தான் அண்ணாமலை உடனடியாக அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் தனி இயக்கம் ஒன்றை கட்டமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாமலை தற்போது “We the Leaders” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது தமிழ்நாட்டில் கோவையை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அதனை இயக்கமாக மாற்றும் திட்டத்தில் அல்லது வேறு பெயரில் புதிய இயக்கத்தை அண்ணாமலை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த இயக்கத்தின் கீழ் அண்ணாமலையை போன்ற ஒத்த எண்ணம் கொண்டவர்களை அணியாக ஒருங்கிணைக்கவும், இளைஞர்கள், இளம்பெண்களை இயக்கத்தின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு அரசியல் சார்ந்த பயிற்சி அளிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த 6 மாதங்களுக்கு புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தில் அண்ணாமலை இல்லை என்று கூறப்படுகிறது. முதலில் இந்த இயக்கத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தக்கட்ட நகர்வை அண்ணாமலை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.