தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், “அரசியலே மக்களுக்கானது தான். அதே மாதிரி அரசியல் கட்சினாலே அது மக்களுக்காகதான். அது எல்லாம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். கொள்கையில், நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மக்களுக்கான பிரச்சனைன்னா, எல்லாம் அரசியல் கட்சிகளுமே மக்கள் பக்கம் தான் நிற்கும்; நாங்களும் அப்படி தான்; மனசாட்சியுள்ள மக்களாட்சியாகவே இருக்கவே எங்கள் ஒரே விருப்பம். நமது விவசாயிகளுக்காகவும், நமது மக்களுக்காகவும் நின்றே ஆக வேண்டியது நமது கடமை; நமது உரிமை. எல்லாவற்றையும் தாண்டி அதுதான் நமது உயிரான உணர்வு. நீராதாரம் தான் நமது மிக முக்கியமான அடிப்படையான வாழ்வாதாரத்தில் ஒன்று. நதிநீர் உரிமையும் நமது மிக முக்கிய உரிமைகளில் ஒன்று. அதைப் பாதுகாத்தே ஆக வேண்டிய பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது. அந்த உணர்வோடு அடிப்படையில் ஒரு தீர்மானத்தை நமது மாமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒப்புதலுக்காகவும் கொண்டு வரவிருக்கிறோம் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, யாரும் யாரையும் குறைச் சொல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்பவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமாறு அனைத்து சட்டமன்றக் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறோம். நம்முடைய சொந்தங்களான விவசாயிகளுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம். ஒருமித்த கருத்தோடு இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும் என அன்போடு கேட்டுக்கொண்டு இந்த தீர்மானத்தைப் படிக்கிறேன். காவிரி நடுவர் மன்றம் 05/02/2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16/02/2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடகா அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை பேரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
கர்நாடகா அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை பேரவை வலியுறுத்துகிறது. காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரி படுகை, ஒரு பற்றாக்குறை படுகை எனக்குறிப்பிட்டு படுகையின் மொத்த நீரிணையும, படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்துவிட்டதால் காவிரி படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரைப் பயன்படுத்தவோ இயலாது. காவிரி பிரச்சனை இரு மாநிலங்களின் உணர்வுப் பூர்வமான பிரச்சனையாகும். ஆதலால், கர்நாடகா அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையின் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகா அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை பேரவை வலியுறுத்துகிறது.கர்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று மத்திய நீர்வளத்துறை குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடகா அரசின் இந்த முயற்சியை முறியடித்து தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாகத் தெரிவித்துக் கொள்கிறது என்னும் இத்தீர்மானத்தை முன்மொழிகிறேன். இதனை மாண்புமிகு உறுப்பினர்கள் முழு மனதோடு ஆதரிக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளின் சட்டமன்றக் குழுத் தலைவர்களும் ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.


