கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார், சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடனே, அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். புகார் வருவதற்கு முன்பே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால், காவல்துறை துரிதமாக செயல்பட்டு கைது செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை மேலும் துரிதப்படுத்தப்படும். கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் நீதிமன்ற காவல் உள்ளனர். சிறுமி கொலை வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளேன். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி தருவதில் தவெக அரசு உறுதியாக இருக்கிறது.அதேசமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரணமும் வழங்கப்படும். கோவை சிறுமிக்கு நேர்ந்த இந்த சம்பவமே, தமிழ்நாட்டில் இறுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதுவே முதலமைச்சரின் எண்ணமும் கூட. குற்றம் செய்பவர்களுக்கு பயம் இருக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்று கொடுப்பது எங்களது கடமையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் சிங்கப்பெண்கள் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரும் 27ஆம் தேதி இத்திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். காவல்துறை மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம். கோவை சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவியை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். சம்பவம் நடந்த பகுதியை நான் பார்க்கவில்லை. காவல்துறை விசாரித்து வருகின்றனர். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதில் எங்கள் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. அது யாராக இருந்தாலும் சரி, தண்டனை கடுமையாக இருக்கும். குற்றம் நடந்த பகுதியில் கண்காணிப்பைப் பலப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல, குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கக் கூடிய பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்படும்” என்றார்.


