கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனைப் பல இடங்களிலும் தேடியுள்ளனர், சிறுவன் கிடைக்காததால் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவுச் செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சிறுவனின் நண்பர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, இருகூர் ரயில் நிலையத்தின் சிறிய மேடை அருகே மறைவான பகுதியில் புதைக்கப்பட்ட ரித்தீஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் சிறுவனின் மர்ம மரணம் குறித்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கடந்த மே 15- ஆம் தேதி அன்று ரித்தீஷ் தனது நண்பர்களுடன் இருகூர் பொங்காளியம்மன் கோயில் அருகே உள்ள கால்வாய்க்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த 13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள், ரித்தீஷை கல்லாலும், மதுப்பாட்டிலாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து நிலைகுலைந்த ரித்தீஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ரித்தீஷ் நண்பர்களான இரண்டு சிறுவர்களையும் சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்


