Wednesday, June 24, 2026
Home Blog

திமுகவின் 33 மாத ஆட்சியில்! இத்தனை கோடி முதலீடா?

0

கடந்த 33 மாதங்களில், தமிழக அரசு பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் மூலம், சுமார் 8.65 லட்சம் கோடி ரூபாயை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக, சுமார் 30 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை மக்களுக்கு உருவாக்கியுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:-

2021க்கு பிறகு 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல், 27 தொழிற்சாலைகள் திறப்பு காரணமாகவும் 74,757 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. 2030க்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்திற்கு மிக முக்கிய பங்களிக்கும் மாநிலமாக தமிழகத்தை உயர்த்த, திமுக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்று மாநாடு மூலம், ரூ.1,90,803 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாட்டு பயணங்கள் மூலம் ரூ.7,441 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

ஜனவரி 7,8-ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணம் மூலம் ரூ.3,440 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்…

0

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது ச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 22) திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான பெ. ஜான் பாண்டியன் கலந்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அலர், “தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance)-யில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இன்று முதல் வெளியேறுகிறது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நட்பு தொடரும். ஆனால், அந்த கூட்டணியில் நாங்கள் இல்லை.

உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேவைகளும், சேவைகளும் அதிகமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறுகிறது. தேர்தல் காலத்தில் யாரோடு பயணிக்க வேண்டும்? யாரோடு இணைய வேண்டும்? என்பதை பொதுக்குழு கூட்டி முடிவு எடுப்போம். நாங்கள் என்டிஏ-வில் இருந்து வெளியேறியதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. ஆகாஷ் டெலிசன், மரண வழக்கில் தவறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் சிபிசிஐடி இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவரின் உடலை காவலர்களே அடக்கம் செய்துள்ளார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன் என்பதால் காவல்துறை இதுபோன்று செயல்படுகிறதா என அச்சம் எழுந்துள்ளது. ஆகாஷ் டெலிசன் விவகாரத்தில் போராடியவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால், அரசு மௌனமாக இருக்கிறது. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது வருத்தமளிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்று கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக இணைந்து வருகிறார்கள். ஆனால், எங்களது கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளோ, பொறுப்பாளர்களோ யாரும் இணையவில்லை. ஒரு சொம்பு பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் விஷம் தான். விஷத்தை உங்களோடு சேர்த்து, நீங்களும் அழிந்து போக வேண்டாம். முதலமைச்சர் விஜய் மௌன விரதம் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் மௌன விரதத்தை கலைக்கும் போது தான் தமிழக மக்கள் அவரை புரிந்து கொள்வார்கள். அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு அவர் கொடுக்கும் பரிசு மௌனம் தான்.அதிமுக எம்எல்ஏ-க்கள் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றது, பேரம் பேசியதனாலேயே நடந்துள்ளது. துரோகம் செய்தவர்களை இனியும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். ராஜினாமா செய்தவர்களை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது” என தெரிவித்தார்..

மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – திருமாவளவன்

0

வி.சி.க காட்பாடி செய்தி தொடர்பாளர் அஜித் செல்வராஜ் – மரிய ஜோன் சிந்து ஆகியோரது திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் வருகை புரிந்திருந்தனர். விழாவில் , கலந்துகொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் ஜூலை 5-ஆம் தேதி எனது தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. 2026ஆம் ஆண்டுக்கான விருதுபெறும் சான்றோர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த விழாவில் இயக்கத் தோழர்கள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மேகதாது விவகாரம் – அனைத்துக் கட்சிக் கூட்டம்
தொடர்ந்து, மேகதாது விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாலொழிய தீர்வு எட்டமுடியாது என துரைமுருகன் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்மொழ்ந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம், புதிய முதலமைச்சரும் மேகதாது அணைக்கு ஒன்றிய அரசு அனுமதிக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். இருப்பினும், நாம் என்ன செய்ய வேண்டும்? அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து எவ்வாறு செயல்பட வேண்டும்? மேகதாது பகுதியில் அணை கட்டினால், தமிழ்நாடு எந்த வகையில் பாதிக்கப்படும்? விவசாயிகள் மட்டுமின்றி குடிநீருக்காக மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்? கால்நடைகள் எவ்வாறு பாதிக்கப்படும்? குறித்தெல்லாம் ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது அவசியமானது. விசிகவும் அதற்கு கோரிக்கை விடுக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “காங்கிரஸ் கட்சி எப்போதுமே தமிழ்நாட்டு நலன்களை முன்னிறுத்தி முடிவுகளை எடுத்திருக்கிறது. தமிழ்நாடு எடுக்கிற முடிவுகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒத்துழைப்பு அளித்திருக்கிறது. இதுதான் கடந்த கால வரலாறு. எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மக்களுக்கு ஒத்துழைப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை தேடும் கரூர் போலீஸ்?

0

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்ட செந்தில் பாலாஜி, டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் ரூ.400 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்த சிபிஐ, விசாரணையையும் துரிதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் கஸ்தூரி நகர் பகுதியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் இல்லத்துக்கு மஃப்டி உடைகளில் சென்ற கரூர் ஏடிஎஸ்பி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அங்கு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லாததால் காவல்துறையினர் திரும்பிச் சென்றனர். செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது சகோதரர் அசோக்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அசோக்கை பலமுறை கைது செய்ய முயன்றது. எனினும், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிரான சட்டப் பாதுகாப்பை அவர் பெற்று வந்தார்.இதுபோன்ற சூழலில், அசோக்கின் செல்போன் சிக்னல் சென்னை எம்.ஆர்.சி. நகர் பகுதியில் காட்டியதாக கூறப்படும் நிலையில், செந்தில் பாலாஜி இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், வீட்டின் பாதுகாவலரிடம் இருந்து செல்போனை பெற்று, சமீபத்திய அழைப்புகள் மற்றும் தொடர்புகள் குறித்தும் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று இரவு முதல் அசோக்கை தேடும் நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அசோக் மீது பண மோசடி தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், தற்போது எந்த வழக்கில் அவரை தேடி வருகின்றனர் என்பது குறித்து காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கரூரில் அசோக் மீது புதிதாக ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேகதாது அணை கர்நாடக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் – நிறைவேற்றம்

0

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், “அரசியலே மக்களுக்கானது தான். அதே மாதிரி அரசியல் கட்சினாலே அது மக்களுக்காகதான். அது எல்லாம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். கொள்கையில், நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மக்களுக்கான பிரச்சனைன்னா, எல்லாம் அரசியல் கட்சிகளுமே மக்கள் பக்கம் தான் நிற்கும்; நாங்களும் அப்படி தான்; மனசாட்சியுள்ள மக்களாட்சியாகவே இருக்கவே எங்கள் ஒரே விருப்பம். நமது விவசாயிகளுக்காகவும், நமது மக்களுக்காகவும் நின்றே ஆக வேண்டியது நமது கடமை; நமது உரிமை. எல்லாவற்றையும் தாண்டி அதுதான் நமது உயிரான உணர்வு. நீராதாரம் தான் நமது மிக முக்கியமான அடிப்படையான வாழ்வாதாரத்தில் ஒன்று. நதிநீர் உரிமையும் நமது மிக முக்கிய உரிமைகளில் ஒன்று. அதைப் பாதுகாத்தே ஆக வேண்டிய பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது. அந்த உணர்வோடு அடிப்படையில் ஒரு தீர்மானத்தை நமது மாமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒப்புதலுக்காகவும் கொண்டு வரவிருக்கிறோம் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, யாரும் யாரையும் குறைச் சொல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்பவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமாறு அனைத்து சட்டமன்றக் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறோம். நம்முடைய சொந்தங்களான விவசாயிகளுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம். ஒருமித்த கருத்தோடு இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும் என அன்போடு கேட்டுக்கொண்டு இந்த தீர்மானத்தைப் படிக்கிறேன். காவிரி நடுவர் மன்றம் 05/02/2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16/02/2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடகா அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை பேரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
கர்நாடகா அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை பேரவை வலியுறுத்துகிறது. காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரி படுகை, ஒரு பற்றாக்குறை படுகை எனக்குறிப்பிட்டு படுகையின் மொத்த நீரிணையும, படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்துவிட்டதால் காவிரி படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரைப் பயன்படுத்தவோ இயலாது. காவிரி பிரச்சனை இரு மாநிலங்களின் உணர்வுப் பூர்வமான பிரச்சனையாகும். ஆதலால், கர்நாடகா அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையின் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகா அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை பேரவை வலியுறுத்துகிறது.கர்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று மத்திய நீர்வளத்துறை குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடகா அரசின் இந்த முயற்சியை முறியடித்து தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாகத் தெரிவித்துக் கொள்கிறது என்னும் இத்தீர்மானத்தை முன்மொழிகிறேன். இதனை மாண்புமிகு உறுப்பினர்கள் முழு மனதோடு ஆதரிக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளின் சட்டமன்றக் குழுத் தலைவர்களும் ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

மகன் மிதுனுக்கு அதிமுகவில் எந்த பதவியும் கொடுக்க மாட்டோம்- எடப்பாடி பழனிசாமி

0

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தவெகவுக்கு ஆதரவாகவும் முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனி அணியாக செயல்பட்டிருந்தனர்.இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் பழனிசாமியை சந்தித்து ஓரணியாகினர். ஆனால் சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இவர்களில் விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகிவிட்டார். அவர் தவெக அல்லது திமுகவில் இணைவார் என சொல்லப்படுகிறது. ஆனால் சி.வி.சண்முகத்தின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமியின் மகன் மிதுனை நேரடி அரசியலுக்கு கொண்டு வருமாறு எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் வலியுறுத்தினராம்.மிதுனுக்கு இளைஞரணி அல்லது ஐடி விங்கில் பதவி கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஐடி விங் செயலாளராக இருக்கும் ராஜசத்யன் தனது பதவில், அரசியலில் அல்லாதவர்களை ,
கழக பொதுசெயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்து, கழகத்திற்கு எதிரான பல கதைகள் உருவாக்கப்படுகிறது. அது சமூக வலைதளம் தொடங்கி, பத்திரிகை, ஊடக விவாதம் வரை தற்போது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது. தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின் நடந்த உட்கட்சி நிகழ்வுகள், எங்களுடைய உழைப்பை குறைத்து சொல்லி கொச்சைப்படுத்துவது என கழகத் தொண்டர்கள்-அடுத்த தலைமுறையினர் பல வலிகளை சுமந்து வருகிறோம்…இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறு தான்! என தெரிவித்திருந்தார். அது போல் மகனை அரசியலுக்கு கொண்டு வர எடப்பாடி பழனிசாமி நாடகம் போடுகிறார் என சி.வி.சண்முகம் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இபிஎஸ் அணியை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி போட்ட பிச்சையில் வெற்றி பெற்ற சண்முகத்திற்கு பழனிசாமி குறித்து பேச எந்த தகுதியும் இல்லை. இந்த தேர்தலில் தமிழகத்திலேயே மிக அதிகமான 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இபிஎஸ். அரசியல் நிகழ்வுகளில் ஒரு போதும் தன் மகனை பழனிசாமி முன் நிறுத்தியது கிடையாது என தெரிவித்திருந்தார்.

இதை எடப்பாடி பழனிசாமியும் தெளிவுப்படுத்தினார். இன்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ஊடகங்கள், செய்தித்தாள்களில் என் மகன் மிதுனுக்கு பதவி கொடுக்கப்படும் என தகவல் பரவுகிறது. அதில் உண்மையில்லை. என் மகன் மிதுன் அதிமுகவில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டார். அவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகவே இருக்கிறார் என தெளிவுப்படுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை…!

0

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் ஏக்கர் அல்லது கட்டுமானத்திற்கு ஏற்ப லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அந்தப் புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு 37 லட்ச ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்தனர்.அதன் தொடர்ச்சியாக, அரசு அலுவலகங்களை கண்காணித்து வருவதாகவும், குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் தொடர் சோதனைகள் நடைபெறும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எச்சரித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தாம்பரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாகனத்தின் ஆவணங்களில் பெயர் மாற்றுதல், பெயர் நீக்குதல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனப் பதிவு மற்றும் தகுதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக வரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.இவர்கள் வாகனப் பதிவு தகுதி சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு எவ்வளவு பணம் லஞ்சம் பெறுகிறார்கள்? அதற்கான ஆவணங்களில் எவ்வளவு பணம் வாங்கியதாக கணக்கு காட்டுகிறார்கள்? என பல்வேறு முக்கிய கோப்புகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவது, புதிய வாகனங்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான குழுவினர் வட்டடார போக்குவரத்து அலுவலகத்திற்குள் நுழைந்து அனைத்து கதவுகளையும் மூடினர்.சோதனை தொடங்கியதும், அலுவலக வளாகத்தில் இருந்த இடைத்தரகர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் அதிகாரிகளின் மேஜைகளில் இருந்த கோப்புகளைப் போலீசார் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சோதனைக்குப் பயந்து போலீசாரை கண்டதும் ஊழியர்கள் வெளியே ஓட முயன்றனர். அவர்களை போலீசார் அழைத்து வந்து சோதனையை தொடர்ந்துள்ளனர்

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், விஜயதரணி…!

0

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. விழாவில், அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, இளவரசன் மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால், திருநெல்வேலி முன்னாள் மேயர் விஜயலட்சுமி, அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி ஜான் மகேந்திரன், ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி உள்ளிட்டோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களை அமைச்சர் ஆனந்த், கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜய் தமிழன் பார்த்திபன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.விஜயதரணி, “தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை அன்போடு அரவணைத்துச் சேர்த்துக் கொண்டனர். தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும், நேர்மையான ஆட்சியைத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கில் இக்கட்சி செயல்படுகிறது. போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற சபதத்தை ஏற்று, பெண்களின் பாதுகாப்பை உயர்த்திப் பிடிக்கும் ஒரு சிறந்த தலைவராக விஜய் விளங்குகிறார். தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய தகுதி தவெகவிற்கு முழுமையாக உள்ளது. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியாவை வழிநடத்தக்கூடிய முக்கிய இடத்தில் தலைவர் விஜய் இருப்பார் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த இரண்டரை ஆண்டு காலம் பாஜகவில் எனக்கு எந்தப் பணியும் இல்லாமல் இருந்தது. அரசியலில் உழைப்பும், மக்கள் பணியும் மிக முக்கியம். என்னைப் போன்ற உழைக்கக் கூடியவர்களுக்கு தவெக ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. எங்கள் உழைப்பு மக்களுக்குத் தேவை என்பதை அறிந்து எங்களை அழைத்திருக்கிறார்கள். நிச்சயமாக தவெக ஆட்சி, இந்திய நாடே திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு சிறந்த ஆட்சியாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதரணி, கடந்த 2024- ஆம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த ஆல் இந்தியா சிந்தாரிக் பெந்தோகஸ் சபைகளின் தலைவர் பேராயர் ஜோஸ்வா இமானுவேல் அளித்த பேட்டியில், “கடந்த 21 ஆண்டுகளாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் பிரிவில் பயணித்து பல்வேறு பணிகளைச் செய்து வந்தேன். ஆனால், தற்போதைய சூழலில் மக்களின் நலனுக்காகவும், திருச்சபைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காகவும் ஒரு மாற்றுப்பாதை தேவைப்படுகிறது. சிறுபான்மையினருக்கான ஆட்சி என்று சொன்னதால்தான் இத்தனை காலம் திமுகவோடு பயணித்தோம். ஆனால், சிறுபான்மையினரின் நலன் மற்றும் உரிமைகளுக்காக எப்போது அணுகினாலும், உரிமைகள் பறிக்கப்படும் சூழலே நிலவுகிறது. திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதே கசப்பான உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்த நகைச்சுவை நடிகர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி இனி தமிழ்நாட்டில் தொடரும். உச்ச வருமானத்தை விட்டுவிட்டு சேவை செய்யும் மனப்பான்மை இனி தலைவர் வழியில் ஒவ்வொரு வரும் பின்பற்ற வேண்டும்; தமிழ்நாடு சிங்கப்பூராக விரைவில் ஆக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக மையக்குழு கூட்டம்…

0

தமிழ்நாடு பாஜகவில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதில் தேர்தல் தோல்விக்கான காரணங்களையும் ஆராய்ந்தனர்

இதநிடையே, சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் கடந்த ஜூன் 4-ஆம் தேதி தனது பிறந்த நாளில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய இயக்கத்தை துவங்கி உள்ளார். அந்த இயக்கத்திற்கு பாஜகவில் இருந்தவர்கள் அதிகளவில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியிலும், இயக்கத்திலும் ஒரே நேரத்தில் இருக்க தொண்டர்களால் இருக்க முடியாது. அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் ஆதரவு இல்லை என்று தெரிவித்தார். மேலும், பாஜகவில் இருந்து பிரிந்து இருந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் மையக்குழு ஆலோசனைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைசசர் முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியக் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில், “மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் தமிழக பாஜகவின் மையக் குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த முக்கிய மையக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இணைந்து பங்கேற்றோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கியை இழக்கவில்லை. தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாஜகவை பலப்படுத்த வேண்டும். சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தோல்வியாக கருத வேண்டாம். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்துவிட்டு, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அடுத்தக் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலை மனதில் வைத்து பாஜகவினர் தங்களின் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

0

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 18- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவைக் மண்டபத்தில் கூடும். அன்றைய தினம் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குகிறது. சட்டப்பேரவைக் கூட்டடத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தி பின்னர் அறிவிக்கப்படும் இந்தக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின்போது என்ன நடக்கிறது என்பதை நீங்களே பார்க்கப்போகிறீர்கள். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனு தொடர்பாக இதுவரை முடிவு எடுத்திருந்தால் அறிவித்திருப்பேனே? அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறேன். காத்திருங்கள் ஆய்வு முடிந்தபின் உரிய நேரத்தில் அறிவிக்கிறேன்.
சட்டப்பேரவையில் தவெக அரசு தமது பெரும்பான்மையை நிரூபித்த நிகழ்வு நேரலை செய்யப்பட்டது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை அதிகமாகப் பார்க்க வேண்டும் என்று மக்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இளம் வயதினர், அரசியலில் நேரடி தொடர்பில் இல்லாதவர்கள் மிக ஆர்வத்தோடு சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த முதலமைச்சரை நேரலையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துள்ளேன். சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதுமாக நேரலை செய்வது தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படும்” என்று சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் 2026- 2027 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் பொதுவாக காலை 09.30 மணிக்கு தொடங்கும் நிலையில், வரும் ஜூன் 18- ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தொடர் காலை 10.00 மணிக்கு தொடங்கும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் காலை 10.00 மணிக்கே சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது.

இருப்பினும், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளை பேச கூடுதல் நேரம் தேவைப்படுவதாகக் கூறி, கடந்த திமுக ஆட்சியில் அவை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு கடந்த 2024- ஆம் ஆண்டு ஜூலை முதல் காலை 09.30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

0

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ‘வெற்றி தமிழகம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல், ஆளுநர் உரை, தொழில் முதலீடுகள், டாஸ்மாக் விவகாரம், நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, சட்டமன்றத் தேர்தலில் தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, வேலைவாய்ப்பு, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவைக் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் விரிவாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார். அமைச்சர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும், லஞ்சம் லாவண்யம் கட்டாயம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமைச்சர்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக தெரிகிறது. அமைச்சர்கள் மட்டுமின்றி அவர்களின் கீழ் பணியாற்றக் கூடியவர்களும் தவறு செய்யாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். ‘Clean Government’ ஆக பணியாற்றுவதே இலக்கு. நாம் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர வேண்டும். திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்கிறதா என்பதையும் அமைச்சர்கள் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றவுடன் நடைபெற்ற இந்த முதல் அமைச்சரவைக் கூட்டம், தவெக அரசின் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.