Friday, March 6, 2026
Home Blog

திமுகவின் 33 மாத ஆட்சியில்! இத்தனை கோடி முதலீடா?

0

கடந்த 33 மாதங்களில், தமிழக அரசு பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் மூலம், சுமார் 8.65 லட்சம் கோடி ரூபாயை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக, சுமார் 30 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை மக்களுக்கு உருவாக்கியுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:-

2021க்கு பிறகு 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல், 27 தொழிற்சாலைகள் திறப்பு காரணமாகவும் 74,757 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. 2030க்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்திற்கு மிக முக்கிய பங்களிக்கும் மாநிலமாக தமிழகத்தை உயர்த்த, திமுக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்று மாநாடு மூலம், ரூ.1,90,803 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாட்டு பயணங்கள் மூலம் ரூ.7,441 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

ஜனவரி 7,8-ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணம் மூலம் ரூ.3,440 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.

இன்று (பிப்.25) பிற்பகல் 1.55 மணியளவில் அவர் காலமானார் என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நல்லகண்ணு மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘உடல்நலக் குறைவு காரணமாக, 01.02.2026 அன்று நல்லக்கண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின்போது அவரது உடல்நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தன. பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு (25. 02.2026) இன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக்குழுக்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மறைந்த நல்லகண்ணு’வின் பூத உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

0

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என வைகோ தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தே.ஜ கூட்டணியில் இணையும் என எதிர்பார்த்த தேமுதிக, இன்று (பிப்.19) திடீரென திமுக கூட்டணியில் இணைந்தது.

இந்த நிலையில், மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் மதுரை அழகர்கோவில் சாலையில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, “தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கக்கூடும். இது ஒரு நாள் தேர்தலாகத் தான் இருக்கும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும் என சிலர் ஏடுகளில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மதிமுக இந்த முறையும் தனி சின்னத்தில் தான் போட்டியிடும். சட்டமன்ற தேர்தலில் மதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என கோவை மற்றும் ஈரோட்டில் கேட்ட போது, அது பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு திமுகவிடம் சென்று பேசிய பின்பு தான் முடிவெடுக்க நேரிடும் என சொன்னேன். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். அதுவே தேர்தல் முடிவாக அமையும் என்பது எனது கருத்து. கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. திமுக தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்பட்சத்தில், கூட்டணிக் கட்சிகள் அந்த அரசுக்கு பக்கபலமாக அரசியல் செய்யும். இதே நிலைமை தான் தமிழ்நாட்டில் தொடரும் என்பதும் என்னுடைய கணிப்பு.
தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே வலுவாக இருந்த திமுக, இதன்மூலம் இன்னும் வலிமை பெரும். திமுக கூட்டணியே தேர்தலில் வெற்றி என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது எனக் கூறி வந்தேன். இப்போது எங்கள் கூட்டணி மேலும் பலம் பெற்றுள்ளது. இது எனக்கு தித்திக்கும் வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்த்தரப்பிலே (அதிமுக கூட்டணி) கலகலத்துப் போயுள்ளது” என தெரிவித்தார்.மேலும் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “மாணிக்கம் தாகூர் எம்.பி “நான் திருப்பி அடிப்பேன்” என்ற கருத்தை எல்லாம் தெரிவித்து வருகிறார். செல்வப் பெருந்தகையும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்கிறார். காங்கிரஸ் கட்சியில் நிலவுவது உட்கட்சி விவகாரம். இதை திமுக பொருட்படுத்தாது. மேலும், அழகிரி ஆதரவாளர்கள் அதிமுகவிற்கு செல்வது ஒரு சதவீதம் கூட திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது” என்றார். மேலும், விஜய் அதிக வாக்குகள் வாங்குவார் எனக் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளே கருத்து தெரிவித்து வருகின்றனர் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஒரே நேரத்தில் 9 குரல் கொடுப்பார்கள். அதைப் பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை” என தெரிவித்தார்.

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

0

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நீட், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, மகளிர் உரிமைத் தொகை என பல்வேறு விவகாரத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்தார். திமுக அரசு மீதான அவரின் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். அவையில் நடைபெற்ற காரசார விவாதம்:

எடப்பாடி பழனிசாமி: கடந்த 59 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,அதன் பிறகு எனது தலைமை என அதிமுக தான் 39 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுள்ளது. எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் மாநிலத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை புதிய சாலைகளை அமைத்தோம்.

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை இருக்கக்கூடாது.ஆனால், இத்தனை நாள்கள் இல்லாத அளவுக்கு வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் நிதி மேலாண்மை சரிசெய்ய குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த குழு கடன் வாங்க அறிவுரை அளித்ததா? 5 லட்சம் கோடி ரூபாய் கடன் அதிகம் பெற்று, கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: கடன் வாங்குவதாக இருந்தாலும், நிதி மேலாண்மையாக இருந்தாலும் அதிமுக ஆட்சியில் 4.8 லட்சம் கோடி ரூபாய் உடன் கடன் வளர்ச்சி 128% இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் கடன் வளர்ச்சி 96% தான் உள்ளது. வரம்புக்குள்ளாகதான் கடன் வாங்கப்படுகிறது.அமைச்சர் எ.வ.வேலு: அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு கடந்த 5 ஆண்டுகளில் 1.88 லட்சம் கோடி ரூபாய் வட்டி கட்டியுள்ளோம். அப்போது ஒட்டுமொத்தமாக வட்டியுடன் சேர்த்து அதிமுக ஆட்சியின் கடன் 6.45 லட்சம் கோடி ரூபாயாகும். இதன்படி பார்த்தால் திமுக ஆட்சியில் 2.85 லட்சம் கோடி ரூபாய் தான் கடன் வாங்கியுள்ளோம். ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும் உள்ளன. அவற்றுக்காகவும் அரசு செலவு செய்கிறது.

எடப்பாடி பழனிசாமி: இரவோடு இரவாக மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட உள்ளதாக கூறி, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் போட்டுள்ளீர்கள். இது உங்களுக்கு (திமுக) தேர்தல் காய்ச்சால் ஏற்பட்டுள்ளது என்பதை காண்பிக்கிறது என பேசுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தான் கோடைக்காலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை தேர்தல் உஷ்ணம் அதிகம் உள்ளதால் 5000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

அமைச்சர் தங்கம் தென்னரசு: சதி திட்டம் போடப்பட்டபோது அதனை முதல்வர் முறியடித்தார்.

அமைச்சர் கீதா ஜீவன்: இது புது திட்டம்.மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்படும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: மக்களுக்கு நாங்கள் கொடுப்பது எல்லாம் சூழ்ச்சி என்றால் பீகார், மகாராஷ்டிராவில் பாஜக கொடுத்துள்ளதே அது சூழ்ச்சி இல்லையா?

இவ்வாறாக அவையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கும் இடையே சுமார் மூன்று மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்றது.

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

0

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு 20 நிபந்தனைகளை போலீசார் nu விதித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேசமயம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம்சேரி பகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, வேலூர் கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய இடவசதி, குடிநீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் இதற்கான மைதானம் அமைக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க க்யூ-ஆர் கோட் (QR Code) அடிப்படையிலான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள இந்த நிகழ்ச்சிக்காக, அகரம்சேரியில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான திடல் தயார் செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து சுமார் 25,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி கோரி அக்கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் மனு அளித்திருந்தார். இதனைப் பரிசீலித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், நிகழ்ச்சி நடத்துவதற்கு 20 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கிய பின்னரே அதிகாரப்பூர்வ அனுமதி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் வேலூர் வருகிறார். உற்சாக மிகுதியில் அவரது வாகனத்தை யாரும் பின்தொடர்ந்து செல்லக் கூடாது. கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆக அறிவுறுத்தப்பட்டுள்ளது.விஜய் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களே இருப்பதால் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

ஏற்கனவே சேலம், ஈரோடு போன்ற இடங்களில் தனது உரையின் மூலம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்த விஜய், வேலூர் அகரம்சேரி கூட்டத்தில் எப்படியான பேச்சைப் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

0

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் வேலைகளிலும் பாஜகவினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த மாதம் மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் தமிழ்நாட்டில் அவர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அந்த வகையில், மார்ச் 1ம் தேதி மதுரையிலும், மார்ச் 7 ஆம் தேதி வேலூரிலும் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். பிரதமரின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்த, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி மதுரைக்கு பொறுப்பாளர்களாக பாஜக மாநில பொதுச் செயலாளர்கள் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், பொன் வி.பாலகணபதி ஆகியோரும்; வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக மாநில துணைத்தலைவர் நாகராஜன், பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இவர்களுடன் அதிமுகவின் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் மற்றும் கூட்டணி கட்சியினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக, வேலூர் கோட்டை மைதானம் மற்றும் பள்ளிகொண்டா அருகே கந்தனேரி பகுதியில், சென்னை – பெங்களூரு ஆறுவழிச் சாலையோரம் உள்ள மைதானம் ஆகிய இடங்கள் பார்வையிடப்பட்டன. தேர்வு செய்யப்படும் இடத்தின் பரப்பளவை பொருத்து, கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களின் எண்ணிக்கை திட்டமிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 7-ம் தேதி நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட தே.ஜ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அதுமட்டுமின்றி, புதிதாக இணையவுள்ள கூட்டணிக் கட்சிகளும் மோடி வருகை தரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி வேலூருக்கு வருகை தரும் அதே நாளில், ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் மும்முரமாக நடந்து வருகிறது. குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடி இந்த கோயிலுக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

0

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள் உள்ளன. இவை சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே. வாசன் உள்ளிட்ட ஆறு பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைகிறது.
இந்நிலையில், காலியாகும் இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கி மார்ச் 5ஆம் தேதி நிறைவடைகிறது. போட்டி இருந்தால் மார்ச் மாதம் 16ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். தற்போது 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுவதால், 34 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க இயலும். அத்தகைய சூழ்நிலையில், திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் மீண்டும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

0

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையாக ரூ.3000, கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5,000-ஐ பெண்களின் வங்கிக்கணக்கில் இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் அவர்களுடைய வங்கிக்கணக்கில் ரூ. 1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1.14 கோடி பெண்கள் பயனடைந்து வந்த நிலையில், புதிய பயனாளர்கள் சேர்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்நாட்டில் 9 ஆயிரம் இடங்களில் ‘மக்களுடன் முதல்வர்’ முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் நான்காம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மேலும் முந்தைய பெயர் சேர்க்கையின்போது விடுபட்டவர்களும் இந்த முறை இணைத்துக் கொள்ளலாம் என முதலமைச்சர் அறிவித்ததன்பேரில் தற்போது மகளிர் உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கை 1.31 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இன்னும் ஓரிரு மாதங்களில் திராவிட மாடல் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத்தொகையை முன்கூட்டியே கணக்கில் வரவு வைத்திருப்பதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். மேலும், கோடைகால சிறப்பு பணமாக ரூ. 2 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ. 5 ஆயிரமாக வரவு வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்து, காலையிலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுபோக, திராவிட மாடல் 2.0-இல் மகளிர் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நமது திராவிட மாடல் அரசு முந்திக்கொண்டது.பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5,000 வழங்கி உள்ளோம். அதன்படி, 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப் பெண்களின் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்.

திராவிட மாடல் 2.Oவில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

0

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

சமூக ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைகள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,200-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில் அத்தொகையை அரசே ஏற்கும்.
வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.
அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு, அரசு சார்பில் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆன்லைன் முறை ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறையே (Manual) மீண்டும் பின்பற்றப்படும்.
இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட முதற்கட்ட வாக்குறுதிகள்

குல விளக்குத் திட்டத்தின் மூலம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 2,000/- வரவு வைக்கப்படும்.
நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம் செய்யலாம். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடுகளும், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகளும் என்று அரசு சார்பில் இடம் வாங்கி கட்டிக் கொடுக்கப்படும்.
அதே போல, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லும்போது, அவர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அது 150 நாட்களாக உயர்த்தப்படும்.
ரூ. 25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்’ என கடந்த ஜனவரி 16-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

0

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். 4 தேசிய விருதுகள், 20 ஃபிலிம்பேர் விருதுகள், 11 மாநில அரசின் விருதுகள், 4 நந்தி விருதுகள், கலைமாமணி, பத்மபூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ’நீயே விடை’ என்ற நிறுவனம், தனது புகைப்படம், பெயர், தனது வசனங்களை உரிய அனுமதியின்றி பயன்படுத்தி டி–ஷர்ட்களை விற்பனை செய்து வருவதற்கு தடை விதிக்கக்கோரி கமல் ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வர்த்தக ரீதியில் கமல் ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து கடந்த ஜனவரி 12-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் சென்று சேரவில்லை. அதனால், மின்னஞ்சல் மூலமாக வழங்க கால அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும்’ என கமல் ஹாசன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, இந்த விவகாரம் அனைவருக்கும் தெரியும்படி பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியும், பின்னர் ஏன் விளம்பரம் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து வழக்கு விசாரணையை பிப் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

0

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள – தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி 20 கிலோ மீட்டருக்கு மேல், வனப்பகுதிக்குள் செல்கின்றன. இந்த மலைப்பகுதியில் யானைகள் அதிகம் வசித்து வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ரயிலில் அடிபட்டு சுமார் 25க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன.
யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க, நீதிமன்ற உத்தரவின்படி தமிழக வனத்துறையின் சார்பில் ஏஐ உதவியோடு இயங்கும் தெர்மல் கேமராக்கள், மதுக்கரை முதல் வாளையார் வரை பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தமிழக எல்லைப்பகுதிகளில் வசிக்கிற யானைகள் கண்காணிக்கப்படுகின்றன. இதனால் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரள வனப்பகுதியில் தெர்மல் கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதால், யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. கேரள வனப்பகுதியான வாளையார் பூங்கா அருகே இன்று காலை 4.30 மணியளவில், கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 வயது ஆண் யானையின் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் யானை உடல் சிதறி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்த யானையின் உடல்பாகங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வன ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், “கேரளா எல்லைப் பகுதியான வாளையார் அருகே ரயில் மோதி யானை உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. எட்டிமடை – மதுக்கரை இடையே தமிழக வனத்துறையின் சிறப்பான முயற்சியால் 12 கோபுரங்களில் தலா இரண்டு கேமராக்கள் உட்பட மொத்தம் 24 தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு யானைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் 2022 அக்டோபர் மாதம் முதல் ரயில் மோதி யானைகள் எதுவும் உயிரிழக்கவில்லை.

எனவே தமிழக வனத்துறைக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது போல வாளையார் – கொல்லங்கோடு இடையேயும் தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்று ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க முடியும். ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் 10 முதல் 15 யானைகள் ரயில் மோதி உயிரிழக்கின்றன. எனவே ரயில்வே துறை இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.