Thursday, April 16, 2026
Home Blog

திமுகவின் 33 மாத ஆட்சியில்! இத்தனை கோடி முதலீடா?

0

கடந்த 33 மாதங்களில், தமிழக அரசு பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் மூலம், சுமார் 8.65 லட்சம் கோடி ரூபாயை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக, சுமார் 30 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை மக்களுக்கு உருவாக்கியுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:-

2021க்கு பிறகு 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல், 27 தொழிற்சாலைகள் திறப்பு காரணமாகவும் 74,757 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. 2030க்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்திற்கு மிக முக்கிய பங்களிக்கும் மாநிலமாக தமிழகத்தை உயர்த்த, திமுக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்று மாநாடு மூலம், ரூ.1,90,803 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாட்டு பயணங்கள் மூலம் ரூ.7,441 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

ஜனவரி 7,8-ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணம் மூலம் ரூ.3,440 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிடுவோம் – முதல்வர் ஸ்டாலின்

0

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் ஏப்ரல் 16ஆம் தேதி கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று (14-04-2026) தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்ட பேராபத்தைப் பற்றிச் சொல்லவும், ஒன்றிய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தாலும் இந்தக் கடமையை தவிர்க்க முடியாது. நாளை மறுநாள் ஏப்ரல் 16 அன்று, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது. கூடுகிறது என்று சொல்வதைவிட, தமிழ்நாடு, மேற்கு வங்கத் தேர்தலுக்கு இடையில் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

‘Delimitation’ என்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்டத் திருத்தத்தை இந்தத் தொடரில் ‘புல்-டோஸ்’ செய்யப் போகிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே இதுபற்றி நாம் தொடர்ந்து எச்சரித்தோம். மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமிருந்து, இதனால் பாதிப்படையவுள்ள மாநில முதலமைச்சர்களையும், முக்கியக் கட்சித் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடத்தினோம்.

‘மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துங்கள்; அளவாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடியுங்கள்’ என ஒன்றிய அரசு சொன்னதையெல்லாம் நாங்கள் கேட்டோம். சொன்னதை ஒழுங்காகச் செய்ததற்காகவே எங்களுக்குத் தண்டனை தருவீர்களா?

‘தென்மாநிலங்கள் பாதிப்படையாது’ என நாடாளுமன்றத்தில் வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவாதம் தரவேண்டுமென்று கேட்டதற்கு பதில் இல்லை. இதற்காக பல்வேறு கட்சி எம்.பிக்கள் பிரதமரை நேரில் சந்தித்து முறையிட நேரம் கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை. இப்படி நாங்கள் சொன்ன எதையும் காதில் வாங்காமல், பிற கட்சிகள், மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தாமல், அவர்கள் இஷ்டத்துக்கு செய்யப் பார்க்கிறார்கள்.இப்படி அவசர அவசரமாக ‘Delimitation’ செய்ய நினைப்பது, பாஜக அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல். மாநில உரிமைகளை படுகொலை செய்யும் இந்த செயல் குறித்தும், சட்டத்திருத்தம் என்ன என்பது பற்றியும் இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இப்படி மறைத்து செய்தாலே அதில் ஏதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் வலுவடைகிறது. குறிப்பாக, தென்மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

நான் ஒன்றிய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்த நேரத்தில் முக்கியமாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எங்கள் எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டை பாதிப்பது போன்றோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ, ஏதாவது நடந்தால், நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பைக் கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம். தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் என்னுடைய தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

தேர்தல் மீதுதான் கவனம் இருக்கும். நாம் டெல்லியில் அமைதியாக தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை செய்துவிடலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். ஏனென்றால் இதை சொல்கிற நான் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கத்தின் தலைவரும் கூட. நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டியிருக்கும். 50-கள், 60-களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும்.இதை மிரட்டலாக நினைக்காதீர்கள். நாங்கள் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் இதை மிரட்டல் என்று நினைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. தேர்தல், ஆட்சி அதிகாரம் எல்லாம் எங்களுக்கு இரண்டாம்பட்சம் தான். நாங்கள் சுயமரியாதைக்காரர்கள். எங்களுக்குக் கொள்கைளும், மாநில உரிமையும் தான் முக்கியம்.

தமிழ்நாட்டுக்குத் தவறிழைத்துவிட்டு, வழக்கம்போல் சும்மா கடந்துசெல்ல நினைத்தால், நடப்பதே வேறு. சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில், அவர் மேல் ஆணையாகச் சொல்கிறேன். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிடுவோம். பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டிலிருந்து விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை இது.

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விசில் ஊதிக்கொண்டு சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த தொண்டர்கள் ..!

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், முதல் முறையாக தேர்தல் களம் காணும் தவெக தலைவர் விஜய்யும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று பிற்பகல் பிரசாரம் செய்தார். இதற்காக விஜய் இன்று காலை 10.20 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 11 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தார். பின்னர் அவர் அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். பகல் 12.30 மணியளவில் விஜய் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.அங்கு அவரை பார்ப்பதற்காக ஏராளமான தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து விஜய் கையசைத்தார். அதன்பிறகு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வேனில் ஏறி விஜய் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விஜய் வேனில் சென்ற போது வழி நெடுக ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டு நின்று உற்சாக கோஷம் எழுப்பி அவரை பார்த்து கையசைத்தனர். பதிலுக்கு விஜய்யும் வேனுக்குள் இருந்தபடியே அவர்களை பார்த்து கையசைத்தார்.

சைக்கிளில் ரவுண்டு அடித்த விஜய் கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மகாதானபுரம் ரவுண்டானா பகுதிக்கு வந்த விஜய், திடீரென சைக்கிளில் இறங்கி ரவுண்டானாவை சுற்றி சுற்றி வந்தார். விசில் அடித்துக்கொண்டே சைக்கிளில் சுற்றி விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது விஜய்யை பார்ப்பதற்காக தடுப்புகளை உடைத்துக்கொண்டு தவெக தொண்டர்கள் வந்ததால் பரபரப்பு உண்டானது.இதனால் விஜய்யை பார்க்க முண்டியடித்துக் கொண்டு அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் விஜய்யின் பவுன்சர்கள் கடும் பாடுபட்டனர். ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் வரை விஜய் ரோடுஷோவாக புறப்பட்டுள்ளார். விஜய்யின் வருகையால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

வாக்குறுதி அளித்த விஜய்
தொடர்ந்து குமரியில் பேசிய விஜய், “இடைத்தரகர்கள் இல்லாமல் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு செல்லப்படும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை நம் ஆட்சி அமைந்தால் பொதுமக்களும் முன் வைக்க முடியும் என்றும் கூறினார். மேலும் 10 ஆயிரம் அதிகாரப்பூர்வ கையெழுத்துடன் மனு அளிக்கப்பட்டால் அரசு பதில் அளிப்பது கட்டாயம் ஆக்கப்படும் எனவும், 5 லட்சம் பேர் கொடுத்தால் சட்டசபையில் ஒரு நாள் நேரம் ஒதுக்கி அது பற்றி விவாதிக்கப்படும் என்றும் விஜய் கூறினார்.

அதிமுகவும், திமுகவும் இரண்டும் ஒரே கட்சிகள் தான்- சீமான்…

0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதியை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆண்டிபட்டி பகுதியில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் பேசிய அவர், “ஆண்டிபட்டி தொகுதியில் பல பிரச்சனைகள் உள்ளன. மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு அனைத்து செல்ல வனத்துறை தடுக்கிறது; மேய்ச்சல் நிலம் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக, திமுகவில் ஒரே வீட்டில் உள்ள அண்ணன் தம்பி வேட்பாளராக போட்டியிடுகிறார்கள், கடந்த தேர்தலில் தம்பி உதவி செய்து அண்ணன் வெற்றிபெறுவது, இந்த தேர்தலில் அண்ணன் உதவி செய்து தம்பி வெற்றி பெறுவது என தொடர்ந்து நடைபெறுகிறது. இது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. வாக்குக்கு காசு கொடுப்பதால் ஜனநாயகம் செத்து பணநாயகம் வென்றுள்ளது. பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிகு ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும்.கடலில் தனது அப்பாவின் பேனாவை வைப்பேன் என ஸ்டாலின் சொன்னபோது, அதை தடுத்து நிறுத்தியது இந்த சீமான் மட்டுமே. மக்களுக்கு பிரச்சனை தந்தவர்கள் ஒரு பக்கம். பிரச்சனையை தீர்ப்பவர்கள் நாங்கள் ஒரு பக்கம், எங்கள் இருவருக்கும் இடையே தான் போட்டி. நான் ஏசி பஸ் தருகிறேன். அதில் காசு கொடுத்து போங்கள், இலவசங்களை நோக்கி சென்று உங்கள் தன்மானங்களை இழக்காதீர்கள். நிலம், வளம் சார்ந்த தொழிற்சாலைகளை தொடங்குவேன், நாட்டு கோழி வளர்ப்பேன், ஆடு, கோழி வளர்ப்பேன். அதில் இருந்து ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன். நான் உங்களை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர்கள் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது நான் 20 ஆயிரம் கொடுப்பேன் என சொல்லி இருக்க மாட்டேனா? வீட்டிற்கு ஹெலிகாப்டர், 1 கிலோ தங்கம் தருவேன் என சொல்ல முடியாதா? எத்தனை காலத்திற்கு இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவீர்கள். இரண்டு கட்சிகளும் மீண்டும் வந்தால் டாஸ்மாக் மூடப்படுமா, கொலை கொள்ளை நடக்காமல் இருக்குமா?மலைகளை சுரண்டும் இந்த குவாரி உரிமையாளர்களை ஒரு நாள் மரத்தில் கட்டி வைத்து பச்சை மரத்தால் வெளுத்து எடுப்பேன். கனிம வளங்களை கணக்கு இல்லாமல் வெட்டி எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்தது திமுகவும், அதிமுகவும் தான். பொதுமக்கள் வாக்கு செலுத்தும் போது சிந்தித்து வாக்கு செலுத்துங்கள். அதிமுகவும், திமுகவும் இரண்டும் ஒரே கட்சிகள் தான். அதிமுகவில் இருந்து எத்தனை அமைச்சர்கள் திமுகவில் சென்றுள்ளார்கள்? இந்த தொகுதியில் கூட ஒரே வீட்டில் உள்ள அண்ணன், தம்பி இரண்டும் கட்சிகளிலும் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள். இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கு வாக்களித்து அவர்கள் வென்றார்கள், எம்எல்ஏ ஆனார்கள், அமைச்சர்கள் ஆனார்கள், ஆனால் நீங்கள் தோற்று போனீர்கள், எனவே இந்த முறை எங்களுக்கு வாக்களித்து நீங்கள் வெல்லுங்கள்” என்றார்.

‘பூத் சிலிப்’ விநியோகிக்கும் பணி தொடக்கம்…

0

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையவுள்ளதை அடுத்து, தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸை அடுத்து, ஏப்ரல் 9-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 4,023 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி இன்று (ஏப்ரல் 12) முதல் தொடங்கியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 28,93,505 வாக்காளர்களுக்கு இன்று முதல் ஏப்.18 ஆம் தேதி வரை வாக்காளர் தகவல் சீட்டு, அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாக விநியோகம் செய்யப்படவுள்ளது.

வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பூத் சிலிப்பிற்கு ஒப்புதலான அவர்களின் கையெழுத்து அல்லது கைரேகை பெறப்பட்டு வருகிறது. வாக்காளர்களின் வசதியை அதிகரிக்கும் நோக்கில், வாக்காளர் தகவல் சீட்டு வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, வாக்காளரின் வரிசை எண், பகுதி எண் ஆகியவை சீட்டின் மேல் வலது மூலையில் பெரிய எழுத்துருவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் காணும் வகையிலும், வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்காளர் பெயரை வாக்காளர் பட்டியலில் விரைவாக கண்டறியவும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இதில் கியூ-ஆர் குறியீடும் இடம்பெற்றுள்ளது.

வரும் 17ஆம் தேதிக்கு முன்பாக, அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்பை விநியோகித்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது. பதிலாக, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 12 ஆவணங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் பிரிவு 135-8-ன் படி, தேர்தல் நடைபெறும் நாளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

0

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 210 தொகுதிகளில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிப் பெறும். அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக எடப்பாடியை மீண்டும் மாற்றிடும் வகையில் பணிகளை மேற்கொள்வோம் என்றார்.மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புறக்கணித்து வருகிறது என்று குற்றம்சாட்டிய ஈபிஎஸ், அதிமுக ஆட்சி அமைந்ததும் அந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று சூளுரைத்தார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார். ஆ ராசா ஆடியோ இணையதளங்களில் வெளியானது. அதைத்தான் நான் கிருஷ்ணகிரி கூட்டத்தில் பேசினேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் திமுக தலைமை என் மீது பாய்வதால் என்ன பலன்? என்றும் கேள்வி எழுப்பினார். திமுக ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம் என்று கூறிய பழனிசாமி, திமுக அமைச்சர்கள் ஊழல் குறித்து அமலாக்கத் துறையே சட்டம் – ஒழுங்கு டிஜிபி வசம் மூன்று முறை அறிக்கை அளித்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அதனால் தான் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதில் காலதாமதம் ஆகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதிமுக தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி; மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற கட்சி; மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்பும் கட்சி. அதனால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக எடப்பாடி பகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையை அவர் திறந்து வைத்தார்.

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

0

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் – மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரும், தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., இன்று தனது வேட்பு மனுவை அதிகாரப் பூர்வமாகத் தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வு, பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பலத்தை வெளிப்படுத்தும் ஒரு பிரம்மாண்ட நிகழ்வாக அமைந்தது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வின் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன் லால் சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழக பா.ஜ.க வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வில் பங்கேற்றது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக, வடவள்ளி லாலி ரோடு அருகே தொடங்கிய இந்த பிரம்மாண்ட ஊர்வலம், வேளாண் பல்கலைக் கழகப் பகுதியைத் தாண்டிக் கோலாகலமாக மேளதாளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து வானதி சீனிவாசனுக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

பின்னர் தடாகம் சாலையில் அமைந்து உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாளிடம் வானதி சீனிவாசன் தனது வேட்பு மனுவைச் சமர்ப்பித்தார்.

இந்த நிகழ்வில் அ.தி.மு.க சார்பில் வடவள்ளி சந்திரசேகர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு, கூட்டணியின் ஒற்றுமையை உணர்த்தினர்.

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

0

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசும்போது ;-

தமிழகத்திலே வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்கள், நானும் கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்று காலை மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கூட்டத்தை முடித்துவிட்டு கொண்டு இருவரும் இன்று முதல் தங்களுடைய தேர்தல் பணிகளை தொடங்கியதாகவும் கூறியவர்,

தமிழகத்தினுடைய அரசியல் சூழல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிக, மிக சாதகமாக சென்று கொண்டு உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டு இருக்க கூடிய திராவிடம் மாடல் அரசு மக்கள் முன்பாக தங்களுடைய தோல்வி பயத்தால், ஒவ்வொரு நாளும் நாடகத்தை நடத்திக் கொண்டு இருப்பதாகவும், பெண்களுடைய பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருள் பயன்பாடு தமிழகத்தினுடைய இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டுதல் இல்லாமல், நம்முடைய தொகுதிகள் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இவர்களால் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம் மற்றும் சொத்து வரி தொடர்பான பிரச்சனைகள் என்று ஒவ்வொரு தரப்பு மக்களும் இந்த அரசாங்கம் எப்பொழுது வீட்டுக்கு செல்லும், வீட்டுக்கு அனுப்பவும் என்று காத்துக் கொண்டு உள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், தங்களுடைய கூட்டணியை பற்றி பேசி கொண்டு உள்ளதாகவும், இப்பொழுது இண்டி அலையன்ஸில் இருக்கக் கூடிய கூட்டணி ஒவ்வொரு கட்சிகளும் அவர்களுக்குள் இருக்கின்ற அதிருப்திகள், வெளிச்சத்திற்கு வந்து கொண்டு உள்ளதாக கூறியவர், எங்களுடைய பிரச்சாரத்தில் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாற்று பல்வேறு மட்டத்தில் இருக்கக் கூடிய அத்தனை தலைவர்களாலும், ஒவ்வொரு இடங்களிலும் அதற்கென்று கூட்டங்கள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது தொடர்பாக கட்சி அறிவிப்புகளை வெளியிடும் என பார்த்துக் கொண்டு உள்ளதாக கூறினார்.

இந்தப் பகுதியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியிலே கடந்த 2024 நின்றதில் இந்தப் பகுதி மக்களுக்கு சிறப்பாக உழைத்துக் கொண்டு இருக்க கூடிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் சட்டமன்ற தொகுதி அவிநாசிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்தப் பகுதி என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய பகுதி மட்டுமல்ல, மக்களுடைய ஆதரவையும் இருக்கக் கூடிய பகுதி அதனால் இங்கு போட்டியிடக் கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கடந்த முறை தேர்தலில் பத்துக்கு பத்து 10/10 என்ற முறையில் எடுத்தோம், இந்த முறை கோவை – அவிநாசி தொகுதியும் சேர்த்து கோவை மாவட்டத்தில் 11 க்கு 11 என்று வெற்றி பெற போவதாக கூறினார்.

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பேச்சாளர் பட்டியல் இடம் பெற்று உள்ளார். ஸ்டார் வேட்பாளர் அது குறித்தான கேள்விக்கு

பரப்புரை தங்களுக்காக பண்ணுவதாக, கூறியிருக்கிறார். கட்சி இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறி உள்ளதாகவும், அவருடைய பணி என்ன ? என்று, நாங்களும் அவருடைய பரப்புரை தங்கள் தொகுதியில் குறிக்கு இன்று காலை பேசி வந்ததாகவும், என்னென்ன தேதிகளில் எங்கெங்கு ? வருவதாக உள்ளார் என்றும், நாளை மாலை கோவை வடக்கு தொகுதிக்கு வருகிறார். நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சர் முருகன் ஜி வுடன் செல்கிறார். அவருடைய பணிகள் சரியாக போய்க் கொண்டு உள்ளதாக கூறினார்.

அண்ணாமலை சீட்டு கொடுக்காதது குறித்தான கேள்விக்கு

சீட்டு கொடுக்கின்ற இடத்தில் முதலில் நாங்கள் இல்லை, அதனால் இது மாதிரி தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள். அவர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். நான் தேர்தலில் போட்டியிடவில்லை, என்று அவரை கூறியதற்கு பின்னரும் திரும்பவும், திரும்ப கட்சி பூசல், அக்கா – தம்பி, அண்ணன் – தம்பி ஒன்று விடாமல், அதாவது இன்றைக்கு ஊடகங்களை பார்க்கிறோம். தேர்தல் பிரச்சாரம் சென்று கொண்டு இருக்கக் கூடிய தலைவர்கள் அவருடைய பிரச்சனைகள், தமிழகத்தினுடைய மக்களுடைய பிரச்சினைகளை பேசாமல் எங்கெங்கெல்லாம் ? இது போன்ற வைப் கிடைக்குமா ? அங்கெல்லாம் இது போன்ற கருத்துக்களை உருவாக்குவது என்பது நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால் உண்மையான பிரச்சனைகளை நீங்கள் பேசினீர்கள் என்றால் பதில் சொல்லலாம்..

அ.தி.மு.க முன்னாள் சபாநாயகர் தனபால் தேர்தலில் சீட்டு கொடுக்காமல், பா.ஜ.க விற்கு கொடுத்து இருப்பதாக பேசியது குறித்தான கேள்விக்கு

கூட்டணிப் பேச்சு வார்த்தையில் எந்தெந்த தொகுதி என்பது கட்சியினுடைய மேல் மட்டத்தில் தலைமை முடிவெடுக்கிறது. அதில் இருக்கின்ற ஒவ்வொரு விபரங்கள் நீங்கள் கொடுத்தீர்களா ? நீங்கள் இந்த பட்டியல் கொடுத்தீர்களா ? நீங்கள் அதை பேசினீர்களா ? எப்படி வரும் என்று அதை எப்படி ? நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

எல்லா கூட்டணியும் தி.மு.க விடம் கேட்டார்கள், அதை நீங்கள் ஏன் ? கொடுக்கவில்லை என்று கேட்பீர்களா ? என கேள்வி எழுப்பியவர், கேளுங்கள் நாங்கள் அதை தான் சொல்கிறோம், ஒவ்வொரு கூட்டணி தலைமையும், அவர்கள் தலைமை தான் முடிவு செய்கிறது. இதற்கு மேல் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், பேசும்போது ;

பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதம் பெற்று பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே நோக்கம் என தெரிவித்தார்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பல வேதனைகளை சந்தித்து வருவதாகவும், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என குடும்ப ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் தடைபட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் சர்க்காராக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் தேவை எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசோடு தி.மு.க அரசாங்கம் அனுசரணையாக இல்லாததால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மக்கள் விரும்பும் வளர்ச்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தான் கொடுக்கும் எனவும், கட்சி சொல்வதை கேட்டு அனைவரும் உழைத்து வருகிறோம் என குறிப்பிட்டார்.

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

0

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே மக்களிடையே பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியை ஒதுக்கவில்லை, மறுபக்கம் பாஜகவிற்கு கோவை வடக்கு தொகுதியை ஒதுக்கி உள்ளார். அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகிய இருவருக்குமே கோவை வடக்கு தான் ஒரே ஆப்சன், மறுபக்கம் செந்தில் பாலாஜி கோவைக்குள் வந்துள்ளார். இதனால் என்னாகும் என்பதை பார்ப்போம்.

இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜகவிற்கு ஒதுக்கிய 27 தொகுதிகளில் நான்கு தொகுதிகள் மட்டும் தான் பாஜகவிற்கு மிகவும் எளிதான தொகுதிகள், மற்ற தொகுதிகள் எல்லாம், திமுகவின் மிகவும் வலுவான செல்வாக்கு உள்ள தொகுதிகள். அதில்வெற்றி பெறுவது மிக மிக சவாலானது. தற்போதைய நிலையில் கோவை தெற்கு (ஏற்கனவே வானதி சீனிவாசன் ஜெயித்தது), நெல்லை (நயினார் நாகேந்திரன் செல்வாக்கு), கன்னியாகுமரி/நாகர்கோவில் (பாஜக-வின் பாரம்பரிய கோட்டை), மொடக்குறிச்சி (பாஜகவின் சரஸ்வதி ஜெயித்த இடம்), இதில் கோவை தெற்கு இந்த முறை ஒதுக்கப்படவில்லை. கோவை வடக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் பாஜகவிற்கு சாதகமானது தான்.ஆனால் இதனைவிட சாதகமான சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட சில தொகுதிகள் உள்ளன. ஆனால் அவற்றை எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு ஒதுக்கவில்லை, இதன்மூலம் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தாலும், கோயம்புத்தூர் மண்டலத்தில் தனது பிடியை தளர்த்த எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

கோவை வடக்கு சிக்கல் என்ன
பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை மற்றும் பாஜக மகளிரணி தேசிய தலைவியான வானதி சீனிவாசன் ஆகிய இருவருமே கோவை வடக்கு தொகுதியைத்தான் கேட்கிறார்கள். இருவரையும் ஒரே தொகுதியில் மோத விடுவதன் மூலம், பாஜக-விற்குள் இருக்கும் விரிசலை அவர் ஊதிப் பெரிதாக்கி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் யாரை தேர்வு செய்வது என்பது தான் பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதத்திற்கு காரணம் என்கிறார்கள். அதேபோல் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்புள்ள கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் போன்ற தொகுதியை தராமல் (நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள்) அவருக்குச் சவாலான தொகுதிகளை மட்டும் ஒதுக்கியிருப்பது, அண்ணாமலையின் அரசியல் செல்வாக்கை அவரது சொந்த மண்டலத்திலேயே முடக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதாக அண்ணாமலை ஆதரவாளர்கள் விமர்சிக்கிறார்கள்.எடப்பாடி பழனிசாமியின் வியூகம் ஒருபுறம் எனில், கரூரைவிட்டு விட்டு, கோவை தெற்கில் செந்தில் பாலாஜி மீண்டும் களமிறங்குவது அதிமுகவின் கொங்கு மண்டல கோட்டைக்கு மட்டுமல்ல.. பாஜக-விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜிவின் அதிமுகவின் அத்தனை வியூகங்களும் நன்றாகவே தெரியும். எனவே அவர்களை வியூகத்தை முறியடித்து கொங்கு மண்டலத்தில் திமுக-வின் தேர்தல் வியூகத்தை மிகத் தீவிரமாக முன்னெடுப்பார். எனவே செந்தில் பாலாஜியின் வருகை பாஜக மற்றும் அதிமுக-வின் ஓட்டு வங்கியில் அவர் பெரிய ஓட்டையைப் போட வாய்ப்புள்ளது. குறிப்பாக, பண பலம் மற்றும் ஆள் பலத்தில் செந்தில் பாலாஜியைச் சமாளிப்பது பாஜக-விற்கு எளிதான காரியமல்ல. இதுதான் தற்போதைய சிக்கலை இன்னும் அதிகமாக்க போகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

0

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், தமிழ்நாடு டிஜிபி-யை தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பதவி வகித்து வந்த நிலையில், அவரை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நாளை காலை 11 மணிக்கு சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்க உள்ளார்.மேலும், சஞ்சய் குமார் ஐபிஎஸ் தாம்பரம் காவல் ஆணையராகவும், அபிஷேக் தீக்ஷித் ஐபிஎஸ் மதுரை காவல் ஆணையராகவும், ஆர்.வி. ரம்யா பாரதி மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களும் நாளை காலை 11 மணிக்கு பொறுப்பேற்க உள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். அந்தவகையில், அருண் தம்புராஜ் சேலம் மாவட்ட ஆட்சியராகவும், விஷ்ணு மஹாஜன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால்

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என அவிநாசியின் சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தனபால் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அவிநாசி தொகுதியில் போட்டியிட நான் விருப்பனு அளித்திருந்தேன். ஆனால் அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த தகவலை கூட கட்சி சார்பில் என்னை அழைத்து சொல்லவே இல்லை.அவிநாசி போய்விட்டதால் வேறு தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என்று கூட அவர்கள் என்னை கேட்கவில்லை. சிட்டிங் எம்எல்ஏ, முன்னாள் சபாநாயகரான எனக்கு சீட் வழங்கவில்லை, எனக்கு மரியாதையும் கொடுக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததும் தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய போது அவர்களை தகுதி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என்று தனது மனக்குமுறலை கொட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி) தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த தனபால். இவர் முன்னாள் சபாநாயகராகவும் இருந்தார். இவரது மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன்.இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் தனபாலுக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போவதால், தொகுதி பக்கமே வருவதில்லையாம். தனபால் எங்கே என கேட்டு அந்த தொகுதி மக்கள் போஸ்டர் ஒட்டாத குறையாக அதிருப்தியில் இருக்கிறார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடர்பான அதிமுக பாராட்டு விழாவில் மட்டும் தனபால் கலந்து கொண்டாராம். அதன் பிறகு தொகுதி பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள்.

இந்த நிலையில் தனபால் செயல்படாமல் உள்ளதாலும், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதாலும் வரும் தேர்தலில் அதிமுக சார்பில் களம் காணும் வேட்பாளருக்கு வெற்றி உறுதி என்றார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் முயற்சித்து வந்தார். அவர் அதிமுக சார்பில் விருப்பமனுவையும் கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கக் கூடாது என பலர் போர்க் கொடி உயர்த்தி, அதை தலைமைக்கே கொண்டு சென்றுவிட்டனராம். அதிமுகவில் ஐடி விங்கில் இருந்த லோகேஷ், அவிநாசி தொகுதி பொறுப்பாளராகவும் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். லோகேஷ் மீது புகார் சென்றதால் அவருக்கு சீட் கிடைக்காது என்றே சொல்லப்பட்டது. இதையடுத்து தனது அப்பாவுக்கு மரியாதை இல்லை, அவர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது கூட கட்சி சார்பில் யாரும் வந்து பார்க்கவில்லை என குற்றச்சாட்டுகளை முன்வைத்த லோகேஷ், தவெகவில் இணைந்துவிட்டார்.

அவர் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில்தான் அவிநாசியில் தனக்கு சீட் கொடுக்கவில்லை என தனபால் குற்றம்சாட்டியுள்ளார்.