Wednesday, June 24, 2026
Home Blog Page 5

தவெக தொடர்ந்து முன்னிலை.. அரசியல் ஆலோசகருடன் விஜய் அவசர ஆலோசனை!

0

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தொடர் முன்னிலை வகித்து வரும் நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் ஆலோசகருடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது.தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகம் 107 சட்டமன்ற தொகுதிகளுடன் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டை சுற்றி போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகளை தமிழக வெற்றி கழகம் நெருங்கி வரும் நிலையில், அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமியுடன் தவெக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.தவெக தலைவர் வீட்டுக்கு வருகை தந்த ஐபிஎஸ் அதிகாரிகள்
மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளான சேபாஸ், கார்த்திகேயன், விஜயகுமார் ஆகியோர் சென்றுள்ளனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சி தொடங்கியது முதல் தற்போது வரை அவரது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி தொடர்ந்து அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்து வருகிறார்.

தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்த ஜான் ஆரோக்கிய சாமி
மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மேற்கொண்ட கட்சிக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பரப்புரை மற்றும் பிரச்சாரம் ஆகியவற்றில் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி தயாரித்துக் கொடுத்த பேச்சுகளை மட்டுமே விஜய் பேசி உள்ளார். மேலும், ஜான் ஆரோக்கியசாமி வகுத்துக் கொடுத்த வியூகங்களை செயல்படுத்தியுள்ளார். தற்போது, பெரும்பான்மை தொகுதியை தமிழக வெற்றிக் கழகம் நெருங்கி வரும் நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமியுடன், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக அறிவிப்பு
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு வெளியிடும் என கூறப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு 2 அடுக்கு பாதுகாப்பு….

0

தவெக தலைவர் விஜயை காண அவரது வீட்டின் முன்பு ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்துவரும் நிலையில் அவரது வீட்டிற்கு செல்லும் வழியிலும், வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகுத்தது.
அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி, முதன்முறையாக தேர்தல் களம்கண்ட தவெக முன்னிலை வகித்து வருகிறது.தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே காலை 10.50 நிலவரப்படி தவெக தான் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 220 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக முதலிடத்திலும், அதிமுக இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.இந்நிலையில், விஜய்யை முன்கூட்டியே வாழ்த்த, பலர் அதிகாலையே விஜய் வீட்டின் முன்பு திரண்டதால் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் வீட்டிற்கு வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் விஜய் இல்லத்திற்கு வரக்கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலிலும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். விஜயை காண்பதற்காக அங்கு ரசிகர்களும் தொண்டர்களும் அதிகளவில் கூடாமல் இருக்க 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே தவெக பனையூர் தலைமை அலுவலகத்தின் வெளியேயும் தொண்டர்களும், நிர்வாகிகளும் காத்திருக்கின்றனர்.

மே 4 வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன?

0

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 23-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் நாளை ( மே 4) எண்ணப்பட உள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமே ஆவலோடும், ஆர்வத்துடனும் எதிர்பார்த்திருக்கும் மே 4-ம் தேதியில், வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற பெருமித்ததுடன் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ தமிழ்நாடு சட்ட மன்றப் பொதுத் தேர்தல் 2026 க்கான வாக்கு எண்ணிக்கை, மே 4, 2026 அன்று நடைபெறும். 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் பெறப்பட்ட தபால் வாக்குகள் ஆகியவற்றின் வாக்கு எண்ணிக்கை, இதற்காக அமைக்கப்பட்ட 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடத்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVMs) பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே வளாகங்களில், தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் வாக்குகளை (ETPBs) எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்படும்.
வாக்கு எண்ணும் பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதிசெய்ய 4,624 நுண் பார்வையாளர்கள்(Micro Observers) அவர்களுக்கு துணையாக இருப்பார்கள்.
வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒருவர் என மொத்தம் 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்களை (Counting Observers) இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 1,135 கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் செயல்முறையின் நேர்மை மற்றும் சுமூகமான நடத்தையை உறுதி செய்வதற்காக அனைத்து மையங்களிலும் விரிவான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:

முதல் அடுக்கு (வெளிப்புறச் சுற்றளவு): ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றியும் 100 மீட்டரில் இருந்து பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்திற்குள் நுழைவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அடையாளச் சான்றுகளை சரிபார்க்கவும், முறையான உடல் பரிசோதனை செய்யவும் நுழைவு வாயில்களில் போதுமான காவல் துறையினர் நிறுத்தப்படுவார்கள்.

  • இரண்டாவது அடுக்கு (நடுப்பகுதி): வாக்கு எண்ணும் வளாகத்தின் நுழைவு வாயில்கள் மாநில ஆயுதப் படையினரால் பாதுகாக்கப்படும். அவர்கள் வளாகத்திற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதோடு, அனுமதியற்ற நடமாட்டம் அல்லது நடமாடுவதைத் தடுப்பார்கள். கைபேசிகள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மூன்றாவது அடுக்கு (உட்புறப் பகுதி): வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) பாதுகாப்பு அறைகளின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த மிக முக்கியமான பாதுகாப்பு அடுக்கு, மத்திய ஆயுதப் காவல் படையினரால் (CAPF) நிர்வகிக்கப்படும். கைபேசிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்கள் வாக்கு எண்ணும் அறைகளுக்குள் கொண்டு செல்லப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்ளூர் காவல் துறை மற்றும் மாநில ஆயுதப் படையினருடன் கூடுதலாக, மத்திய ஆயுதக் காவல் படையின் (CAPF) 65 கம்பெனிகள் வாக்கு எண்ணும் மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், முதல்முறையாக, இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதியற்ற நபர்கள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் ECINET மூலம் QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மூன்றாவது மற்றும் மிக உட்புறப் பாதுகாப்புச் சாவடியில், QR குறியீட்டை ஸ்கேன் செய்து வெற்றிகரமாகச் சரிபார்த்த பிறகு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அறைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணும் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கட்டாயமாகும்.
வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும், அதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மூலம் பதிவான
வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் சுற்றுவாரியான முடிவுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி அமைப்பு மூலம் அறிவிக்கப்படும். இந்த முடிவுகளை ECINET செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்’ என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தொகுதிவாரியாக வாக்குப்பதிவு விவரம்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 -ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் குறித்த புள்ளிவிவரத்தை தொகுதிவாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வரை தொகுதிவாரியாக பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, ஆண் வாக்காளர்கள் 2,35,34,720, பெண் வாக்காளர்கள் 2,52,59,596 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 4.517 என மொத்தம் 4,87,98,833 பேர் இத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 85.10 சதவீதமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தேர்தல் 2026;மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு முழு விவரம்

0

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் புதிய உச்சமாக இந்த முறை இரவு 10 மணி நிலவரப்படி 85.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சுதந்திர இந்தியாவில், தமிழக சட்டமன்றத்துக்கு இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவு எனும் பெருமையை பெற்றுள்ளது.

வரலாற்று சாதனையாக நடைபெற்று முடிந்துள்ள 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், இரவு 10 மணி நிலவரப்படி மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவீதத்தை இங்கு காண்போம்.மாநிலத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் அதிகபட்சமாக கரூரில் 92.62 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. தலைநகர் சென்னையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 83.73 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவு பெற்றது தமிழக சட்டப் பேரவை தேர்தல் – சாதனை படைத்த வாக்குப்பதிவு

0

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு இரவு 11.15 மணி நிலவரப்படி 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் 17-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று (ஏப்.23) நடைபெற்றது. இதில், 2.80 கோடி ஆண் வாக்காளர்கள், 2.93 கோடி பெண் வாக்காளர்கள், 7,728 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் 3,580 பேர் ஆண் வேட்பாளர்கள், 442 பேர் பெண் வேட்பாளர்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி மாவட்ட வாரியாக வாக்குப்பதிவை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பார்வையிட்டுக் கண்காணித்தார்விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்த போதிலும், இளைஞர்களும், இளம்பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையங்களுக்கு எளிதில் வந்து வாக்களிக்க ஏதுவாக பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தமிழகத்தில் சென்னை, வேலூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய போதிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 11 மணிக்கு 37.56 சதவீதம் வாக்குகளும், பிற்பகல் 1 மணிக்கு 56.81 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. பிற்பகல் 3 மணிக்கு 70 சதவீத வாக்குகளும், 5 மணிக்கு 82.24 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனையடுத்து, வாக்குச்சாவடியில் காத்திருந்தவர்கள் டோக்கன் பெற்று வாக்களித்தனர். இரவு 11.15 மணி நிலவரப்படி 85.15% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்து, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

வரலாற்று சாதனை படைத்த வாக்குப்பதிவு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 78.12 வாக்குகள் பதிவானதே சாதனையாக இருந்தது. இந்த நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இரவு 11.15 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 85.15 சதவீதத்தை கடந்தது.

2011-ம் ஆண்டுக்கு முன் 1967 சட்டப் பேரவைத் தேர்தலில் 76.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 72.81 % வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் சட்டவிரோத மதுபான விற்பனை – 5,102 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – 3 நபர்கள் கைது..!

0

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயில்ஸ் பகுதியில், மௌலிக்கா பேக்கரி பின்புறம் உள்ள குடிசையில் காளிமுத்து என்பவர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தேர்தல் காலத்தை முன்னிட்டு சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் பிற குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,, வழங்கிய உத்தரவின்பேரில், PEW பிரிவு உதவி ஆய்வாளர் முருகநாதன் தலைமையிலான காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது வீரமணி (35) மற்றும் குமார் (42) ஆகிய இரு நபர்கள் சுமார் 200 மது பாட்டில்களுடன் பிடிபட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முக்கிய குற்றவாளியான காளிமுத்து (48) என்பவர் காரியம்பாளையம் காட்டுத்தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் அதிகளவு மதுபானங்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிராண்டி பாட்டில்கள் – 3,897, ரம் பாட்டில்கள் – 1,019, பீர் பாட்டில்கள் – 156
வோட்கா பாட்டில்கள் – 30 என மொத்தம் 5,102 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய காளிமுத்து (48), அவிநாசி, திருப்பூர் மாவட்டம், வீரமணி (35), புதுக்கோட்டை மாவட்டம், குமார் (42), சிவகங்கை மாவட்டம் ஆகிய 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ஓட்டுக்கு ₹5000… எல்லாம் கொள்ளை அடித்த பணம்  இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் கோவை வடக்கு வேட்பாளர் வானதி ஆவேச பேச்சு !

0

கோவையை ரவுடிகளிடம் அடகு வைக்காதீர்கள்  செந்தில் பாலாஜிக்கு செவாலியே விருது கொடுக்கலாம் – கோவை இறுதி கட்டப் பிரச்சாரத்தில் எம்.எல்.ஏ வானதி கிண்டல் !

கோவை வடக்குத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று வடவள்ளி பகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது

பா.ஜ.க வில் வெளி மாவட்டங்களில் இருந்து கூட இங்கு வந்து தேர்தல் களப்பணி ஆற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ஒரே ஒரு வழி தான் உள்ளது. அதற்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க வும் கைகோர்த்தாக வேண்டும் என்று மோடியும், அமித்ஷாவும் முடிவெடுத்தார்கள்.

கோவை என்பது தே.ஜ கூட்டணியின் பக்கம் என்பதை கடந்த தேர்தலில் காட்டினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தி.மு.க ஆட்சிக்கு வந்தது.

உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி இருந்த போது மாதத்திற்கு மூன்று முறை டெல்லிக்கு செல்வார். எதற்காகவென்றால் முதலில் விருதுகள் வாங்கவும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து திட்டங்களைக் கேட்கவும் செல்வார்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருந்த காலம் இருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1500 கோடி ரூபாய் கோவைக்கு கிடைக்கப்பெற்றது. ஏழு குளங்கள் இந்த திட்டத்தில் புனரமைக்கப்பட்டன.

வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ராணுவ தளவாட மையத்தை கோவை, சேலம், ஓசூர் வரை நீட்டித்துக் கொடுத்தார் மோடி.

உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று உத்தரப்பிரதேசத்தில் ராணுவ தளவாட உற்பத்தி அதிகரித்து உள்ளது. ஆனால் தி.மு.க ஆட்சியில் இங்கு அந்த திட்டம் பாதாளத்திற்கு சென்று விட்டது.

நாம் முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். உலக தலைவர்கள் பிரதமர் மோடி எங்கள் நாட்டிற்கு வரமாட்டாரா ? என்று ஏங்குகின்றனர்.

நாம் பெட்ரோல், டீசல், கேஸுக்காக காத்து இருக்கவில்லை. மோடி நம்மை கண் இமை போல் காத்துக் கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட மோடியை கோ பேக் என்று சொல்லியும் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எப்படி மோடி கொடுக்கும் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவார்கள்.

ரம்ஜான், கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லும் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து சொல்கிறாரா ? இந்துக்களுக்கு விரோதமான கட்சி தி.மு.க.

கோவில் குறித்தோ, சாமிகள் குறித்தோ ? உயர்வாக பேசியிருக்கிறார்களா ? ஓட்டுக்காக இப்போது ஸ்டாலின் நாடகம் போடுகிறார்.

பா ஜ.க வை பார்த்தால் அவருக்கு பயம்.
பெண்கள் பாதுகாப்பு மோசமாக உள்ளது. பகல் நேரத்தில் கூட பெண்கள் நடமாட முடியவில்லை. பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று யாராவது சொல்ல முடியுமா ?

தி.மு.க அரசு தூக்கி எறியப்படா விட்டால் நாம் வீட்டை விட்டு வெளியே போக முடியாது.

சாக்லேட், ஊசி என்று பல வடிவங்களில் போதைப் பொருட்கள் அதிகரித்து உள்ளன.

தடுப்பூசியைக் கூட ஸ்டாலின் அரசு அனுப்பவில்லை. கோவையை பழி வாங்குகிறார்.

அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் போது மட்டும் தான் பாதுகாப்பாக தொழில் செய்ய முடியும். கடந்த இரண்டு நாட்களாக ஆயுதம் ஏந்திய கும்பல்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் அமர்ந்து இருக்கிறார்கள்.

ஒரு ஓட்டுக்கு ரூ.2,500, ரூ.5,000 என்று கொடுக்கிறார்கள். ஸ்டாலின் அடித்த கொள்ளைப் பணம் தான் இது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது தான் தேர்தல், ஆனால் ஓட்டுப்போட 5 நொடிகள் போதும். யோசித்து ஓட்டுப்போடுங்கள்.

கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் யாரும் வேலை செய்வதில்லை. அந்த தேர்தலுக்கு வெள்ளிக் கொலுசு கொடுத்தார். அது மூன்றே மாதத்தில் பல் இளித்து விட்டது. எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இங்கு மலரப் போவது தாமரையும், இரட்டை இலையும் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உத்தமபுத்திரனாக பார்த்து செந்தில் பாலாஜியை ஸ்டாலின் இங்கு அனுப்பி உள்ளார்.

நம்மை நம் வீட்டில் கூட நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். எஸ்.பி. வேலுமணி மேம்பாலங்கள் கட்டினார். திட்டங்களைக் கொண்டு வந்தார். ஆனால் ஸ்டாலின் ஸ்டிக்கர் மட்டும் ஒட்டினார்.

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

இங்கிருக்கும் மாநகராட்சி கவுன்சிலர்கள் செந்தில் பாலாஜியின் கலெக்‌ஷன் ஏஜெண்டுகளாக உள்ளனர். அதையே இந்த தேர்தலில் செய்யப்பார்க்கிறார். எனவே அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று வானதி சீனிவாசன் பேசினார்.

திமுக ஆட்சி கனவு கதம், கதம் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விஜய்…

0

திமுகவின் ஆட்சி கனவு கதம், கதம்தான் என்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “மிக மிக முக்கியமான நேரத்தில் நாம் இருக்கிறோம். திமுக ஆட்சியையும், ஸ்டாலின் சாரையும் வீட்டுக்கு அனுப்பப் போற, தேர்தலின் கடைசி பிரச்சாரம் இது. மக்களை கண்டுக்காத ஆட்சியையும், அதன் தலைவரையும் வீட்டுக்கு அனுப்பும் தேர்தலின் கடைசி பிரச்சாரம் இது. திமுக ஆட்சியில் வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, விலைவாசி உயர்வு மற்றும் குப்பைக்கும் கூட வரி போடப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்களை வீட்டிற்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்ப முடியும்?” என்று கேள்வியெழுப்பினார்.

நம் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக

தொடர்ந்து விஜய் பேசியபோது, “தமிழ்நாட்டில் எந்த அரசாங்கமும் வாங்காத அளவிற்கான கடனை திமுக பெற்றுள்ளது. 6 லட்சம் கோடி ரூபாய் கடனை அவர்கள் வாங்கியுள்ளனர். நம் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற நிலைப்பாட்டில் இதுவரை நாம் ஒரு அங்குலமும் மாறவில்லை. மதச்சார்பற்ற சமூக நீதிதான் நமது கொள்கை. இந்த விஷயத்தில் நூறு சதவீதம் என்னை நம்பலாம்.

திமுகவின் சாயம் வெளுக்கும்

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான ஆளாகவே நான் இருப்பேன். எம்மதமும் நம் மதம். நான் ஒன்று சொன்னால், அதிலிருந்து மாறமாட்டான். முதலமைச்சர் ஸ்டாலினை போல நான் இல்லை. சிறுபான்மையினரின் வாக்கிற்காக காங்கிரஸ் உடனும், கட்சியைக் காப்பாற்றுவதற்காக பாஜகவுடனும் திமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது. எனவே இந்த தேர்தலில் திமுக தோற்பது உறுதி. தேர்தலில் தோற்ற பிறகு கட்சியை காப்பாற்ற மோடி மற்றும் அமித் ஷாவின் காலில் திமுக விழும். அன்று திமுகவின் மொத்த சாயமும் வெளுக்கும். அப்போது பாஜகவின் முதல் அடிமை யார் என்ற போட்டி திமுகவிற்கும், பிறருக்கும் இடையில் நடைபெறும்.

திமுக ஆட்சி கனவு கதம்-கதம்

சிறுபான்மை சகோதரர்களுடன் நான் எப்போதும் நிற்பேன். இந்த தேர்தலில் திமுகவும் மற்றும் பலரும் மண்ணை கவ்வப்போவது உறுதி. திமுகவின் ஆட்சி கனவு கதம்-கதம் தான். ஸ்டாலின் சாரிடம் இருந்து நாட்டை காப்பாற்றி ஆக வேண்டும். தயவுசெய்து விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். தயவு செஞ்சு உங்கள் விஜய்க்கு வாய்ப்பு கொடுங்கள்” என்றார்.

எடப்பாடிக்கும் கேள்வி ?

தொடர்ந்து பேசிய அவர், “சேலத்தில் இல்லாமல் வேற ஏதாவது தொகுதியில் நின்று எடப்பாடி பழனிசாமியால் வெற்றி பெற முடியுமா?. முதலில் அதை செய்துவிட்டு என்னை பற்றி பேசுங்கள். சொந்த தொகுதியில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தவெகவின் சின்னத்தை திருடியவர் அவர். எடப்பாடி தொகுதி மக்கள் சுயேட்சை சின்னமான டிவி சின்னத்தில் ஓட்டு போட வேண்டும். பாஜகவை சேர்ந்தவர் என்னை நடிகன் என்று கூறுகிறார். ஆம் நான் நடிகன்தான். நான் அரசியலில் நடிக்கவில்லை. ஆனால் நீங்கள் அரசியலில் இருந்து கொண்டு நடிக்கிறீர்கள். உங்களை நாடக நடிகர்கள் என்று கூறலாமா? நீங்கள் அனைவரும் டேஞ்சரான நாடக கம்பெனி என்று கூறலாமா?

75 ஆண்டுகால பவள விழா பாப்பா, 55 வருட பல்லாங்குழி பாப்பா

இது ஒரு மாற்றத்திற்கான தேர்தல். போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை தூக்கி வீசுவது போல, இந்த தேர்தலில் 75 ஆண்டுகால பவள விழா பாப்பாவையும், 55 வருட பல்லாங்குழி பாப்பாவையும், தூக்கி வீசி எறிவோமா? புதிய அரசாங்கத்தை கொண்டு வருவோமா? திமுக, அதிமுக என யாருக்கு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு ஓட்டு போடுவது போல்தான்” என்றார்.

சூரியன் பட்டால் சன் ஸ்டோக் வரும்

மேலும் பேசிய அவர், “மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கும் நாள். அன்று அக்கினி வெயில் மண்டையை பிளக்கும். அன்று சூரியன் பட்டால் சன் ஸ்டோக் வரும். ஆகவே அன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அந்த சூரியனை வெறுத்து ஒதுக்குவார்கள்.200 யூனிட் கட்டணம் இல்லா மின்சாரம் தவெக ஆட்சிக்கு வந்ததும், 200 யூனிட் கட்டணம் இல்லா மின்சாரம், முதியோர்கள் அனைவரும் அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். பெண்கள் பாதுகாப்புக்கான கடுமையான சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும். போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்” என்றும் அவர் கூறினார்.

மனசாட்சி வேண்டாமா?

பின்னர், கரூர் சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், “அங்கு என்ன நடந்தது என்று பொதுமக்களிடம் கேட்டால் அவர்களே புட்டு, புட்டு வைப்பார்கள். மாறாக என் மீது பழியை போடுகிறார்கள்? கரூரில் காவல்துறை கொடுத்த நேரத்தில் சரியாக அங்கு நான் இருந்தேன். நாமக்கல்லில் இருந்து கரூருக்கு எப்படி வந்தேன் என்று உலகமே லைவில் பார்த்துக் கொண்டிருந்தது. என் மீது பழி போடுகிறீர்கள். மனசாட்சி வேண்டாமா?” என்றும் விஜய் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் ஓய்ந்தது பிரச்சாரம் – வெளியாட்கள் தொகுதிகளில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு…

0

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது. இதனையடுத்து வெளியாட்கள் தொகுதியை விட்டு வேளியேற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த ஒரு மாதமாக தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடந்த சில நாட்களாக சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தனர்.

பிரச்சாரம் நிறைவு நாளில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம்,

இறுதி நாளான இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை மாவட்டத்திற்கு உள்பட்ட சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் இறுதிகட்ட பரப்புரை மேற்கொண்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் பரப்புரை செய்தார். அதே போன்று தவெக தலைவர் விஜய், சென்னையில் சைதாப்பேட்டை, நந்தனம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் பரப்புரையை நிறைவு செய்தார்.
ஆறு மணியுடன் பரப்புரை நிறைவு.
இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டம், சாலை வலம் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 126-இன் கீழ் ஏப்ரல் 21 மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை (ஏப்ரல் 23) திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ்-ஆப், முகநூல், எக்ஸ் போன்ற எவ்வித மின்னணு சாதனங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

வெளியாட்கள் வெளியேற உத்தரவு,

அதே போன்று அந்தந்த தொகுதிகளில் வாக்காளர்கள் அல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இதனை உறுதி செய்ய கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் மாநிலம் முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பணிமனைகளை வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே மட்டுமே அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பணிமனையில் 2 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், தேவையற்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிடுவோம் – முதல்வர் ஸ்டாலின்

0

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் ஏப்ரல் 16ஆம் தேதி கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று (14-04-2026) தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்ட பேராபத்தைப் பற்றிச் சொல்லவும், ஒன்றிய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தாலும் இந்தக் கடமையை தவிர்க்க முடியாது. நாளை மறுநாள் ஏப்ரல் 16 அன்று, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது. கூடுகிறது என்று சொல்வதைவிட, தமிழ்நாடு, மேற்கு வங்கத் தேர்தலுக்கு இடையில் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

‘Delimitation’ என்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்டத் திருத்தத்தை இந்தத் தொடரில் ‘புல்-டோஸ்’ செய்யப் போகிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே இதுபற்றி நாம் தொடர்ந்து எச்சரித்தோம். மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமிருந்து, இதனால் பாதிப்படையவுள்ள மாநில முதலமைச்சர்களையும், முக்கியக் கட்சித் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடத்தினோம்.

‘மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துங்கள்; அளவாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடியுங்கள்’ என ஒன்றிய அரசு சொன்னதையெல்லாம் நாங்கள் கேட்டோம். சொன்னதை ஒழுங்காகச் செய்ததற்காகவே எங்களுக்குத் தண்டனை தருவீர்களா?

‘தென்மாநிலங்கள் பாதிப்படையாது’ என நாடாளுமன்றத்தில் வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவாதம் தரவேண்டுமென்று கேட்டதற்கு பதில் இல்லை. இதற்காக பல்வேறு கட்சி எம்.பிக்கள் பிரதமரை நேரில் சந்தித்து முறையிட நேரம் கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை. இப்படி நாங்கள் சொன்ன எதையும் காதில் வாங்காமல், பிற கட்சிகள், மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தாமல், அவர்கள் இஷ்டத்துக்கு செய்யப் பார்க்கிறார்கள்.இப்படி அவசர அவசரமாக ‘Delimitation’ செய்ய நினைப்பது, பாஜக அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல். மாநில உரிமைகளை படுகொலை செய்யும் இந்த செயல் குறித்தும், சட்டத்திருத்தம் என்ன என்பது பற்றியும் இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இப்படி மறைத்து செய்தாலே அதில் ஏதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் வலுவடைகிறது. குறிப்பாக, தென்மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

நான் ஒன்றிய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்த நேரத்தில் முக்கியமாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எங்கள் எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டை பாதிப்பது போன்றோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ, ஏதாவது நடந்தால், நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பைக் கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம். தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் என்னுடைய தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

தேர்தல் மீதுதான் கவனம் இருக்கும். நாம் டெல்லியில் அமைதியாக தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை செய்துவிடலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். ஏனென்றால் இதை சொல்கிற நான் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கத்தின் தலைவரும் கூட. நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டியிருக்கும். 50-கள், 60-களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும்.இதை மிரட்டலாக நினைக்காதீர்கள். நாங்கள் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் இதை மிரட்டல் என்று நினைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. தேர்தல், ஆட்சி அதிகாரம் எல்லாம் எங்களுக்கு இரண்டாம்பட்சம் தான். நாங்கள் சுயமரியாதைக்காரர்கள். எங்களுக்குக் கொள்கைளும், மாநில உரிமையும் தான் முக்கியம்.

தமிழ்நாட்டுக்குத் தவறிழைத்துவிட்டு, வழக்கம்போல் சும்மா கடந்துசெல்ல நினைத்தால், நடப்பதே வேறு. சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில், அவர் மேல் ஆணையாகச் சொல்கிறேன். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிடுவோம். பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டிலிருந்து விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை இது.

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.