தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு இரவு 11.15 மணி நிலவரப்படி 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 17-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று (ஏப்.23) நடைபெற்றது. இதில், 2.80 கோடி ஆண் வாக்காளர்கள், 2.93 கோடி பெண் வாக்காளர்கள், 7,728 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் 3,580 பேர் ஆண் வேட்பாளர்கள், 442 பேர் பெண் வேட்பாளர்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி மாவட்ட வாரியாக வாக்குப்பதிவை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பார்வையிட்டுக் கண்காணித்தார்விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்த போதிலும், இளைஞர்களும், இளம்பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையங்களுக்கு எளிதில் வந்து வாக்களிக்க ஏதுவாக பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
தமிழகத்தில் சென்னை, வேலூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய போதிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 11 மணிக்கு 37.56 சதவீதம் வாக்குகளும், பிற்பகல் 1 மணிக்கு 56.81 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. பிற்பகல் 3 மணிக்கு 70 சதவீத வாக்குகளும், 5 மணிக்கு 82.24 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனையடுத்து, வாக்குச்சாவடியில் காத்திருந்தவர்கள் டோக்கன் பெற்று வாக்களித்தனர். இரவு 11.15 மணி நிலவரப்படி 85.15% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்து, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
வரலாற்று சாதனை படைத்த வாக்குப்பதிவு
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 78.12 வாக்குகள் பதிவானதே சாதனையாக இருந்தது. இந்த நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இரவு 11.15 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 85.15 சதவீதத்தை கடந்தது.
2011-ம் ஆண்டுக்கு முன் 1967 சட்டப் பேரவைத் தேர்தலில் 76.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 72.81 % வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.


