Wednesday, April 22, 2026
Home Blog Page 16

இயற்கை விவசாயம் செய்யத்தான் நிலம் வாங்கினேன் -அண்ணாமலை அறிக்கை

0

கோவை மாவட்டம், காளப்பட்டியில் நிலம் வாங்கியது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவர் தாமாக முன்வந்து விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை தனது “X” தள பக்கத்தில் அளித்துள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது அரசியல் வேலைகளுக்கு சமுதாய நலனுக்காகவும் இயற்கை விவசாய நலனிற்காகவும் நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பி வருவதாக எனது கவனத்திற்கு வந்தது.

இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தினால் ‘We the Leaders’ அறக்கட்டளை, இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும் உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். எனவே இது தொடர்பான பின்வரும் குறிப்புகளை உங்கள் முன்வைப்பது எனது கடமை என நான் கருதுகிறேன். கடந்த ஜூலை 12, 2025 அன்று விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இந்த நிலத்தை, நான் என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரு மாதங்களாக எனது வங்கிக் கணக்கு மூலம் அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன். நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை பவர் ஆஃப் அட்டார்னி மூலம் வாங்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலை 10, 2025 காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் எனது மனைவி அகிலாவுக்கு எனது பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது. இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு முத்திரைத் தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ 40,59,220 செலுத்தியுள்ளோம். மேலும் நான் மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ் ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான். நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து உதவுவதன் மூலமாகவும், சமூக நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலை மற்றும் சிறு குறு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும் தங்கள் முதலீட்டுக் கனவுகளை நனவாக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவ, விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தை தொடங்கும் ஆரம்பக் கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவரானதிலிருந்து கடந்த ஏப்ரல் 2025 வரை, என் குடும்பத்துடன் செலவிட எனக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்தது. நானும் என் மனைவியும் நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றிலிருந்து வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றுள்ளோம். தற்போது எனது குடும்பத்திற்காகவும் எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் சட்டத்திற்கு உள்பட்டு நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் சில ஆர்வக் கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால் அவர்களை கடவுள் காப்பாற்றட்டும்.
இத்தனை ஆண்டுகளாக எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும் உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் என மரியாதை கலந்து நன்றிகள். குறை சொல்வதற்காகவே வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது அறிக்கையில் பாஜக என குறிப்பிடாமல் கே.அண்ணாமலை Ex IPS என குறிப்பிட்டுள்ளார்.

சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கட்டு கட்டாக சிக்கிய பணம்..!

0

கோவை, சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் வெள்ளலூர் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த அலுவலகத்தில் பத்திரப் பதிவு உட்பட பல்வேறு பணிகளுக்கு அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு கடந்த சில மாதங்களாக ஏராளமான புகார்கள் சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர், லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் தலைமையில் வந்த காவல் துறையினர் இந்த தீடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அலுவலக வளாகத்தில் இருந்த இடைதரகர்கள் தெறித்து ஓடி உள்ளனர்.

சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், சார் பதிவாளர் அறையில் இருந்த கணக்கில் வராத 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் எப்படி வந்தது ? யாருடைய பணம்? என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட, நிலையில் தற்போது மீண்டும் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்…!

0

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். அதன்படி வரும் 13ம் தேதி திருச்சியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

இதனிடையே திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் எந்தெந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,

13-09-2025 : சனிக்கிழமை – திருச்சி, பெரம்பலூர், அரியலூர்

20-09-2025 : சனிக்கிழமை – நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை

04-10-2025 : சனிக்கிழமை – கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

05-10-2025 : ஞாயிற்றுக்கிழமை – கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

11-10-2025 : சனிக்கிழமை – குமரி, நெல்லை, தூத்துக்குடி

11-10-2025 : சனிக்கிழமை – காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை

25-10-2025 : சனிக்கிழமை – தென் சென்னை, செங்கல்பட்டு

01-11-2025 : சனிக்கிழமை – கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்

08-11-2025 : சனிக்கிழமை – திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்

15-11-2025 : சனிக்கிழமை – தென்காசி, விருதுநகர்

22-11-2025 : சனிக்கிழமை – கடலுர்

29-11-2025 : சனிக்கிழமை – சிவகங்கை, ராமநாதபுரம்

06-12-2025 : சனிக்கிழமை – தஞ்சாவூர், புதுக்கோட்டை

13-12-2025 : சனிக்கிழமை – சேலம், நாமக்கல், கரூர்

20-12-2025 : சனிக்கிழமை – திண்டுக்கல், தேனி, மதுரை

காவல்நிலையமா? கட்டப்பஞ்சாயத்து மன்றமா? – நீதிமன்றம் கேள்வி

0

மதுரையை சேர்ந்த சசிகுமார், ரம்யா தம்பதியினர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மருத்துவ பொருட்களை வாங்கி, அதற்கான தொகையை செலுத்தாதது தொடர்பாக விஜயகுமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரர்கள் மருந்து பொருட்களை வாங்கியதற்காக 15 லட்சம் ரூபாய் செலுத்தியிருக்க வேண்டும், ஆனால் மதுரை திலகர் திடல் காவல் நிலைய போலீசார் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து செய்ததில், சுமார் 8 லட்சம் ரூபாயை மனுதாரர்கள் காவல் நிலையத்தில் செலுத்தி ரசீது பெற்றுள்ளனர். இது அரசு வழக்கறிஞராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது
இது காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எவ்வாறு கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு உதாரணமாக திகழ்வதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கைது நடவடிக்கைக்கு பயந்து காவல் நிலையத்தில் மனுதாரர்கள் பணத்தை செலுத்தியிருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
மேலும் திலகர் திடல் காவல் நிலையம் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து நீதிமன்றமாக செயல்பட்டுள்ளது என்பது தெரியவந்திருப்பதாகவும், இந்த வழக்கில் மதுரை மாநகர துணை காவல் ஆணையரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்ப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு திலகர் திடல் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர துணை காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

துரைமுருகன் மீதான பிடிவாரண்டை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

0

அமைச்சர் துரைமுருகன் மீதான பிடிவாரண்டை செப்டம்பர் 15 அன்று அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் 2006-2011 காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராகச் செயல்பட்டார். 2007-2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மீது புகார் எழுந்தது. 2011-ல் துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி சாந்தகுமாரி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2017-ல் வேலூர் சிறப்பு நீதிமன்றத்தால் இருவரும் விடுவிக்கப்பட்டார்கள். வேலூர் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி சாந்தகுமாரி ஆகிய இருவரையும் விடுவித்த வேலூர் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
பிறகு, வழக்கானது சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜராக வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாந்தகுமாரி மட்டும் நேரில் ஆஜராகி தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்தார். துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லை. எனவே, சாந்தகுமாரியின் பிடிவாரணட்டை மட்டும் நீதிபதி திரும்பப் பெற்று உத்தரவிட்டார். துரைமுருகன் ஆஜராகததால் அவருக்கு எதிரான பிடிவாரண்டை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கானது செப்டம்பர் 15 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. செப்டம்பர் 15-க்குள் துரைமுருகன் நேரில் ஆஜரானால் கைது நடவடிக்கையிலிருந்து அவர் தப்பலாம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு

0

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
காட்டுமன்னார் கோவிலில் பேட்டியளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக கூட்டணியில் இருந்து அமமுக விலகியதாகக் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கவில்லை என்றும் அவர் அறிவித்தார். மேலும் என்டிஏ கூட்டணியில் துரோகம் தலைவிரித்து ஆடுவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் ஏற்கனவே வெளியேறிய நிலையில் தற்போது டிடிவி தினகரனும் வெளியேறி இருக்கிறார்.

கவிதாவை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்!

0

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் கே. கவிதாவை இடைநீக்ககுவதாக அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

தெலங்கானாவின் முன்னாள் அமைச்சரும் பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஹரிஷ் ராவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை கவிதா முன்வைத்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், கடந்த பிஆர்எஸ் ஆட்சியில் காலேஸ்வரம் திட்டத்தில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடர்பான புகார் குறித்த விசாரணையை சிபிஐ-யிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.
இந்த நிலையில், பிஆர்எஸ் ஆட்சியில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ், முறைகேடுகள் செய்து சொத்துகளை குவித்து, தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து சந்திரசேகர் ராவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கே. கவிதா திங்கள்கிழமை குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பிஆர்எஸ் மூத்த நிர்வாகியுமான சந்தோஷ் குமாரும் தனது தந்தைக்கு எதிராக செயல்படுவதாக கவிதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கே. கவிதாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாகவும் சேதத்தை விளைவிக்கும் வகையிலும் இருப்பதால் அவரை உடனடியாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தடைந்தார்.

0

மைசூருவில் இருந்து சிறப்பு இந்திய விமானப் படை விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகர மேயர் பிரியா, டி.ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி. வெங்கட்ராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்திய ராணுவத்தின் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.
பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தம்பாக்கம் சென்றார். அங்கு உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார். இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

பின்னர் நாளை காலை 9:30 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு செல்கிறார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். ரங்கநாதரை தரிசித்து விட்டு அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஸ்ரீரங்கம் பஞ்சகரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் நேற்று ஹெலிகாப்டரை இறக்கி ராணுவ அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு இன்று முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் திருவாரூர் நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஜனாதிபதி சென்னை மற்றும் திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மூளையை தின்னும் அமீபா.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு

0

கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவின் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மேனிங்கோஎன்செபாலிடிஸ் பாதிப்பு கேரளா மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை சுமார் 42 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் காரணமாக பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மூன்று மாத குழந்தை மற்றும் 52 வயதுடைய மூதாட்டி உட்பட 2025 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதற்காக கேரள அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதாவது, கிணறுகள், நீச்சல் குளங்கள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை ஆய்வு செய்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் இந்த தொற்று நோய் பரவாமல் இருக்க மாவட்ட அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக, குளங்கள், ரிசார்ட்டுகளில் இருக்கக்கூடிய நீச்சல் குளங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும், நீச்சல் குளங்களில் இருக்கும் தண்ணீரை நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாற்றி குளோரின் பவுடர் சேர்த்து சுத்திகரிக்க வேண்டும் எனவும் கட்டாய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மாசடைந்த நீர்நிலைகளில் குழந்தைகள் விளையாடுவதை தவிர்க்க பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மூளையை தின்னும் அமீபா என்பது நன்னீரில் மட்டுமே வளரக்கூடியது. இது நீச்சல் குளங்களிலோ அல்லது குளங்களிலோ தண்ணீரை நாம் பயன்படுத்தும் போது, குளிக்கும் பொழுது மூக்குவழியாக உடலுக்குள் சென்று, மூளையை சென்றடையும். அங்கு இருக்கும் திசுக்களை அழித்து இந்த பாதிப்பு தொடங்குகிறது. இந்த அமீபா உடலுக்குள் சென்ற ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் மோசமாகத் தொடங்கும். குறிப்பாக தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், நரம்பு வலி, வலிப்பு, மயக்கம் போன்றவை அடங்கும்.

காட்டு யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டும்- கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை…

0

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், நரசிபுரம், பன்னிமடை, உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் ஊருக்குள் புகுந்து கடைகள் நியாய விலை கடைகளையும் சேதப்படுத்தும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகிறது.
இதன் காரணமாக மாதந்தோறும் லட்சக்கணக்கில் இழப்பீடு ஏற்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வெளியில் செல்வதற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக பொதுமக்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனவே காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளும் பொதுமக்களும் அந்தந்த பகுதிகளில் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வனத்துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காட்டு யானைகளை பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும்,வனத்துறையினர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.