Wednesday, April 22, 2026
Home Blog Page 17

சுங்கக்கட்டணத்தை மீண்டும் உயர்த்துவது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயல் – சீமான்

0

தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (31.08.25) முதல் 45 ரூபாய் வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்களின் விலையை பன்மடங்காக உயர்த்தி, அதனால் அத்தியாவசியப் பொருட்களின் கட்டற்ற விலையேற்றத்திற்கு வழிவகுத்துவிட்டு, சுங்கச்சாவடிக் கட்டணத்தையும் அவ்வப்போது உயர்த்தும் மத்திய பாஜக அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூட வேண்டுமென அரசியல் கட்சிகள், மண்ணுரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் மீண்டும் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது, வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயலாகும். எரிபொருள் மற்றும் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு இப்போது சுங்க கட்டணத்தையும் உயர்த்துவது துளியும் மனச்சான்றற்ற கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடேயாகும். ஏற்கனவே, விலைவாசி உயர்வு உயர்ந்து செல்கையில் அதனைக் குறைக்க முயற்சி செய்யாத மத்திய பாஜக அரசு சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி, மீண்டும் சுங்கக்கட்டணத்தை உயர்த்த முனைவது அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்படும் பொருளியல் போராகும்.
சொந்த நாட்டிலேயே 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்திப் பயணம் செய்வதென்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்கூட இல்லாத அடிமை நிலையாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைக்கப்படும் பணிக்குச் செலவான தொகையினைவிட அதிகமாக, தொடர்புடைய நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் வசூல் செய்துகொண்ட பிறகும், தொடர்ந்து 15, 20 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதக் கணக்கு வழக்குமின்றித் தொடர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதும், அரசு அதை அனுமதிப்பதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. வசூல் செய்யப்படும் கட்டணக்கணக்கை குறைத்துக்காட்டி மிகப்பெரிய மோசடியில் சுங்கவசூல் செய்யும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதையெல்லாம் தடுக்க ஒரு சாலை அமைக்கப்பட்டதற்கான செலவு எவ்வளவு? ஒவ்வொரு நாளும் சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்படும் தொகை எவ்வளவு? எத்தனை ஆண்டுகளில் அது நிறைவடைகிறது? சாலையை பராமரிக்க ஒவ்வொரு மாதமும் ஆகும் செலவு எவ்வளவு? மீதமாகும் வசூல் கட்டணம் யாருக்குச் செல்கிறது? என்பது குறித்த தகவல்கள் என யாவற்றையும் நாட்டிலுள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளும் வெளிப்படையாக அறிவிக்காதவரை சுங்கக்கட்டணம் என்பது பகல் கொள்ளையாகத்தான் இருக்கும். ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் முடிவை உடனடியாகக் கைவிடுவதோடு, மக்களின் உழைப்பைச் சுரண்டி பகற்கொள்ளையில் ஈடுபடும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூட வேண்டுமெனவும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன். மக்களை வஞ்சிக்கும் தனியார் நிறுவனங்களின் சுங்க கட்டணக் கொள்ளையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் முற்றுகையிடும் மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி விரைவில் முன்னெடுத்து, தமிழர் நிலத்தில் எந்தவொரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிக்க முடியாத நிலையை உருவாக்கும் என்றும் எச்சரிக்கிறேன், என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இனி நண்பர்கள்..!மத்திய அரசு விளக்கம்

0

எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருக்கிறார். இரு தலைவர்களும் பேசிக்கொண்டது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விவரித்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது, “இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர். நட்பு ரீதியான இந்திய-சீனா உறவு, இரு நாடுகளின் 208 கோடி மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் இரு தலைவர்களும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுடன் உறவை மேம்படுத்த நான்கு முன்மொழிவுகளை சீன அதிபர் முன்வைத்தார். பதிலுக்கு உறவுகளின் சீரான முன்னேற்றத்திற்கு எல்லையில் அமைதி எவ்வளவு முக்கியம் என்பதை மோடி வலியுறுத்தினார். ஆனால் இரு தலைவர்களும், வேறுபாடுகள் சச்சரவுகளாக மாற அனுமதிக்கப்படக்கூடாது என ஒப்புக்கொண்டனர். வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேசிய தலைவர்கள், உலகளாவிய வர்த்தகத்தை மேம்படுத்த இருநாட்டின் பொருளாதாரம் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினர். வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கப் பணியாற்றும் அதேவேளையில், அரசியல் கண்ணோட்டத்தில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலா விசாக்கள் மீண்டும் தொடங்கப்பட்டதன் அடிப்படையில், நேரடி விமானங்கள் சேவையை கொண்டுவருவது, விசா செயல்முறைகளை எளிதாக்குவது குறித்தும் பேசியிருக்கிறார்கள். இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தன்னாட்சிப் பாதையைப் பின்பற்றுகின்றன என்று பிரதமர் கூறியிருந்தார். மேலும், இந்தியா மற்றும் சீனா உறவுகள் ஒரு மூன்றாவது நாட்டின் பார்வையில் பார்க்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தியிருந்தார். பயங்கரவாதம் போன்ற சவால்கள் மற்றும் பலதரப்பு மன்றங்களில் நியாயமான வர்த்தகத்தின் தேவை உட்பட, இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களில் பொதுவான தளத்தை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். 2026 இல் இந்தியா நடத்தும் BRICS உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதேபோல பதிலுக்கு இந்தியாவின் BRICS தலைமைக்கு தனது ஆதரவை தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.

கோவையில் 25 டன் ரேசன் அரிசி பறிமுதல்..!

0

கோவையில் கடந்த 28.08.2025-ம் தேதி அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் முரளிதரன், சார்பு ஆய்வாளர் ஞானபிரகாஷ், தலைமைக்காவலர் முத்துப்பாண்டி மற்றும் கோயம்புத்துார் பறக்கும்படை குடிமைப் பொருள், தனி வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் மதுக்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது, அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கோவை மதுக்கரை பாலத்துறை நால்ரோடு சந்திப்பு அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்துக்கு இடமான லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டனர், அதில் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட சுமார் 25 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தவர்,
இது தொடர்பாக வாகன ஓட்டுநர் சின்னச்சாமி என்பவரை விசாரித்த போது கர்நாடகா மாநிலம், பங்காரு பேட், பெங்கலூர் கிராமம், ஸ்ரீ லஷ்மி சீனிவாச அரிசி இண்டஸ்ட்ரீஸ் என்ற மில்லின் உரிமையாளர் ராஜூ (எ) சத்தியராஜூ என்பவர் புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் குருணை அரிசி ஆகியவைகளை கர்நாடகா மாநிலத்திலிருந்து கேரளா மாநிலம், பாலக்காட்டில் உள்ள ஆசிப் டிரேடர்ஸ், விக்னேஸ் டிரேடர்ஸ், பெருமாள் டிரேடர்ஸ் மற்றும் கிருஷ்ண டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய அனுப்பி வைத்துள்ளதை விசாரணையில் கண்டுபிடித்தனர்.

காவல் கண்காணிப்பாளர் பாலாஜிசரவணன் மற்றும் சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோரின் உத்தரவின் பெயரில்
ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் லாரியை கைப்பற்றி, ஓட்டுநரான சின்னச்சாமியை கைது செய்தனர், மேலும் உரிமையாளர் ராஜூ (எ) சத்தியராஜூ என்பவர் மீது பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினரால் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

ஜெர்மனியில் மு.க.ஸ்டாலின்… தமிழர்கள் உற்சாக வரவேற்பு..!

0

ஜெர்மனி சென்றடைந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் தமிழர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்த்துள்ளார். ஜெர்மனியில் தமிழர்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் செயலர்கள், அமைச்சர் டிஆர்பி ராஜா, பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர். நேற்று இரவு 9 மணியளவில் ஜெர்மனி சென்றடைந்தார் ஸ்டாலின். அங்கு அவருக்கு ஜெர்மனி வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தமிழக முதல்வர் ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஜெர்மனியில் தமிழர்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாக ஸ்டாலின் X தளத்தில் பதிவு செய்துள்ளார். தமிழர்களின் சாதகமான அம்சங்களை எடுத்துக் கூறி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதை உறுதி செய்வோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 31) முதலீட்டாளர்களைச் சந்திக்கிறார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்படுகிறார். 2 ஆம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று, தொழில்முனைவோரை சந்திக்கிறார். 3 ஆம் தேதி லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் 4 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைக்கிறார். 6 ஆம் தேதியும் அயலக தமிழர் நலவாரிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இங்கிலாந்தில் இருந்து 7 ஆம் தேதி புறப்பட்டு, செப்டம்பர் 8 ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறார்

இதற்கிடையே, பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நிறுவனர்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை தமிழ்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா குற்றவாளிகள் அதிரடி கைது

0

கோவை மாவட்டத்தில் கஞ்சா குற்றவாளிகள் அதிரடி கைது

பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனை சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி பிரிவு அருகில் சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சாரதி பெஹ்ரா மகன் சந்திப் குமார் பெஹ்ரா(22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 6 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மற்றும் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த லத்தீப் மொல்லா மகன் மதியார் ரஹ்மான் மொல்லா (26) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இவ்வாறாக கோவை மாவட்டத்தில் 11.30 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள், வைகை ஆற்றில் வீச்சு

0

சிவகங்கை: திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்’ நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவைக்கு பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர். இந்த மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உங்களுடன் ‘ஸ்டாலின் திட்ட முகாம்கள்’ நடைபெற்றன. இதில் பல ஆயிரம் பேர் மனுக்கள் கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மேலும் அந்த மனுக்களில் பெரும்பாலும் பட்டா மாற்றத்துக்காக வழங்கப்பட்டவை. அங்கு வந்த போலீஸார் மனுக்களை சேகரித்து விசாரிக்கின்றனர். மனுக்களை ஆற்றில் தூக்கி எறிந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆற்றில் மிதந்த மனுக்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டவை. மனுக்கள் எப்படி ஆற்றில் மிதந்தன என்பது குறித்து விசாரிக்கிறோம் என்றனர்.

திமுக மேயரே நேருக்கு நேர் விவாதிக்க தயாரா ? கோவை அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு …

0

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர்  திமுக மேயரே தொழில் நகரமான  கோவையை குப்பைமேடு ஆக்காதே என்ற வாசகங்கள் அடங்கிய பேனருடன் வந்தனர்

இதுகுறித்து கவுன்சிகர் பிரபாகரன் கூறுகையில், கோவை மாநகராட்சி பகுதியில் அ.தி.மு.க ஆட்சியில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள், நீர் நிலைகள் மேம்படுத்தி அழகு படுத்துதல் போன்ற எண்ணற்ற பணிகள் செய்யப்பட்டன. ஆனால் கடந்த 4 ஆண்டு தி.மு.க ஆட்சியில் மாநகராட்சி பகுதியை குப்பையை மேடாக்கும் வேலையைத் தான் செய்கிறார்கள். இதனால் கோவைக்கு தொழில் நிறுவனங்கள் வருவதில்லை. ஏற்கனவே , கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் குப்பை கிடங்கு அமைக்க அ.தி.மு.க .எம்.எல்.ஏ க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் திருப்பூரில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டி பயோ கேஸ் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்த போவதாக கூறி உள்ளார்கள். சமீபத்தில் சென்னையில் இந்தத் திட்டத்தால் வாய்வு கசிவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

கோவை மாநகரை குப்பை மேடாக்க கூடாது. வெள்ளலூர் குப்பை கிடங்கு விஷயத்தில் மாநகராட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
கோவை மாநகரில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து மேயர் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்கிறாரா ? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்து பெண்ணிற்கும் ..முஸ்லீம் பையனுக்கு பாஜக ஆபிசில் மணமுடித்து வைப்பார்களா? சீமான் கேள்வி..

0

கம்யூனிஸ்ட், பாஜக கட்சி அலுவலகத்தில் வைத்து காதல் திருமணம் செய்வதாக அறிவித்திருக்கும் நிலையில், கட்சி ஆபீசை கல்யாண மண்டபமாக மாற்றி வருகிறார்கள்‌ எனவும், பிஜேபி ஆபீஸில் இஸ்லாமிய ஆணுக்கும், இந்து பெண்ணுக்கும் திருமணம் முடித்து வைப்பார்களா? எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உயர்ந்த வகுப்பினருக்கும் தாழ்ந்த வகுப்பினருக்கும் திருமணம் நடக்க வைப்பார்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை : ஆணையூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். திருமணத்தை நடத்து வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் புதிய மசோதா அனைவருக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள். குஜராத் கலவரத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பில்லை என்று கூறுகிறார். அதை நீங்கள் ஏற்க்கிறீர்களா? ED ரைடு செய்வது எந்த கட்சியில்? எலக்ட்ரோல் பாண்டு அதிகம் பெற்றது எந்த கட்சி? முதல்வர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார். முதலீடுகள் ஈர்க்க சென்றால் ஏற்கனவே ஈர்க்க சென்றது என்ன ஆனது? 2026 சட்டமன்ற தேர்தலில் தனியாகத் தான் நிற்பேன். கூட்டணி வைத்து ஏதாவது பிரச்சனையை இதுவரை சரி செய்து உள்ளார்களா? என்ன சாதித்துள்ளார்கள். முதல்வராக வந்தால் முதல் கையெழுத்து அரசு பள்ளி கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு அரசு வேலை என்பது தான். இது போல 100 கையெழுத்து போட்டு நாட்டின் தலை எழுத்தை மாற்ற வேண்டும் . கம்யூனிஸ்ட், பாஜக கட்சி அலுவலகத்தில் வைத்து காதல் திருமணம் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். கட்சி ஆபீசை கல்யாண மண்டபமாக மாற்றி வருகிறார்கள்‌. பிஜேபி ஆபீஸில் இஸ்லாமிய ஆணையும் இந்து பெண்ணையும் திருமணம் முடித்து வைப்பார்களா ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உயர்ந்த வகுப்பினருக்கும் தாழ்ந்த வகுப்பினருக்கும் கல்யாணம் நடக்க வைப்பார்களா?” என்றார்.

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

0

பொது மறுவாழ்வுத் துறை அரசு செயலர் சஜ்ஜன்சிங் ரா சவான், திட்டம், வளர்ச்சித் துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலர் கி.பாலசுப்பிமணியம், பொது, மறுவாழ்வுத் துறை கூடுதல் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக வெங்கட பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக நலத் துறை இயக்குநராக ஷரண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ்.பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக நல இயக்குநரக கூடுதல் இயக்குநராக ஷரண்யா அறி, டிட்கோ செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்பு துறை அரசு துணைச் செயலராக பானோத் ம்ருகேந்தர் லால் மாற்றப்பட்டுள்ளார்.

பேட்ச் வொர்க் மாடல் அரசு திமுக- அண்ணாமலை கருத்து

0

பேட்ச் வொர்க் செய்து தொழிற்துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமைப்படுகிறார் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில், “திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்! திரு. அமித்ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள ‘நெத்தியடி பதில்’ இதோ! சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் – போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத்தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது! திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை, சாரமும் இல்லை என மக்கள் புரிந்து கொள்வார்கள்!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள அண்ணாமலை தனது X தளத்தில், “கடந்த கால சாதனைகளுக்கு பேட்ச் வொர்க் செய்து தொழிற்துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமை பேசுகிறார். கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. கடந்த நிதி ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் வேலைவாய்ப்பு 1.2% உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாட்டின் வேலவாய்ப்பு விகிதம் ஒரே அளவாக உள்ளது. 2020-21 ஆம் ஆண்டைப் போலவே 2023-24 ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அப்படியே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தொழில்துறை தொழில்முனைவோர் குறிப்பாணை மூலம் பெறப்பட்ட முதலீடுகளில் தமிழ்நாட்டின் நிலை என்னவென்று முதல்வருக்குத் தெரியுமா? தமிழ்நாடு எதிர்காலம் குறித்த தொலைநோக்கை இழந்துவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.