Wednesday, April 22, 2026
Home Blog Page 7

மயங்கி விழுந்த எச்.ராஜா.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!

0

சென்னையில் இன்று என்டிடிவி ஊடகத்தின் தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், இன்று சென்னை கிண்டியில் நடைபெற்று நடைபெற்று வரும் இந்த ஊடக நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று தங்களின் கருத்துக்களை அதில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தேர்தல் பரப்புரை செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் இன்று இரவு நடந்த விவாதத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். விவாதத்தின் போது எச். ராஜா திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழப்போன மேடையில் இருந்தவர்கள் சுதாரித்துப் பிடித்தனர். சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்டு அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. எனினும், அவரால் நிற்க முடியவில்லை.

மூளை பக்கவாதம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதால், உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுத்தனர். MRI மற்றும் CT ஸ்கேன்களை எடுத்தனர். பின்னர் அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறோம்…’ – பிரேமலதா விஜயகாந்த்

0

திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் உரையாடினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பிற மாநிலத்திலிருந்து இங்கு வந்து பணியாற்றிக் கொண்டிருந்த குடும்பம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எல்ஐசி அதிகாரி கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில், காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை இன்னும் தீவிர படுத்த வேண்டும். தேமுதிக சார்பாக அனைத்து முக்கிய நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிடுவார்கள். நானும் களத்தில் இறங்கி கண்டிப்பாக விளையாடுவேன். உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம். தேமுதிக-விற்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கிடைத்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது. வரும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி உள்ளது. அதிமுக, திமுக களத்தில் உள்ள நிலையில், சீமான் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். விஜய்யும் போட்டியில் உள்ள நிலையில் நான்கு முனை போட்டி உள்ளது.
2011 தேர்தலுக்குப் பிறகு தேமுதிக தனித்துப் போட்டியிடவில்லை. தேமுதிக யாருடன் கூட்டணி என்பது தான் தமிழ்நாட்டில் தற்போதைய தலைப்புச் செய்தியாக உள்ளது. ஒரு முடிவு எடுத்தால், அதில் நாங்கள் தீர்க்கமாக இருப்போம். யாருடனும் தேமுதிக பேரம் பேசவில்லை, எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் அந்த கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். தேமுதிக கூட்டணி அமைக்கும் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தோழமைக் கட்சிகள் தான். யாருடனும் நாங்கள் தற்போது வரை கூட்டணி குறித்து பேசவில்லை. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. பிப்ரவரி 3 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அதற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்போம்.” என்றார்.

தேமுதிக நிதி கேட்பதால் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படாமல் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”சொந்த பணத்தில் கட்சி நடத்தி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் லஞ்சம் மற்றும் கையூட்டு பெற்ற நபர்கள் பட்டியலில் தேமுதிக இருக்கிறதா? தவறான கேள்விகளை கேட்க வேண்டாம்” என ஆவேசம் அடைந்தார்.

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் பிப்.5-ல் பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை

0

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆளும் திமுக தீவிரம் காட்டி வருகிறது. ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ள போதிலும், அது திமுக கூட்டணியில் இருந்து விலகாது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்க்க திமுக மும்முரம் காட்டி வருகிறது.

அதே போல, எதிரணியில் இருக்கும் அதிமுகவும் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக மற்றும் பல சிறிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அமைத்துள்ளது. இது தவிர, தற்போதைய தேர்தல் களத்தில் விஜய்யின் தவெகவும், சீமான் தலைையிலான நாம் தமிழர் கட்சியும் உள்ளன.

இந்த சூழலில், தமிழ்நாடு சட்டப் பேரவை பிப்ரவரி மாதம் கூடவுள்ளது. இந்த சட்டப் பேரவைக்கு மே மாதம் வரை மட்டுமே அவகாசம் இருப்பதால், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இதனால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிப்ரவரி 13 அல்லது 14ஆம் தேதியன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.சட்டப் பேரவை தேர்தல் நெருங்கியுள்ளதால், இந்த பட்ஜெட்டில் பல தரப்பு மக்களை கவரும் வகையிலான கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெண்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், நடுத்தர மக்கள் ஆகியோரை கவரும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், எந்த அறிவிப்பையும் தமிழக அரசால் அறிவிக்க முடியாது. எனவே, இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலை, இதற்கான வாய்ப்பாக அரசு பயன்படுத்திக் கொள்ளும் எனத் தெரிகிறது. இருந்த போதிலும், இது முழுமையான பட்ஜெட் கிடையாது. 2026 ஜூன் மாதம் பதவியேற்கும் புதிய அரசே, ஜூலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவது, மக்களுக்கு சலுகைகளை அறிவிக்கலாமா? என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்

0

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான அஜித் பவார், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் இன்று காலை தனது சொந்த தொகுதியான பாராமதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க தனி விமானத்தில் பயணித்துள்ளார். 8 இருக்கைகள் கொண்ட லியார்ஜி என்ற சிறிய ரக விமானத்தில் அஜித் பவாருடன் விமானிகளான சுமித் கபூரும், சாம்பவி பதக்கும் இருந்துள்ளனர். இவர்களுடன் 2 உதவியாளர்கள் மற்றும் ஒரு நிர்வாகி பயணித்துள்ளனர்.காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையம் அருகே சென்றபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டதால், விமானிகள் உடனடியாக தரையிறக்க முயன்றுள்ளனர். ஆனால் விமான நிலையத்தின் ஓடுபாதை நுழைவு பகுதியிலேயே விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 6 பேரையும் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து அஜித் பவார் உட்பட 6 பேரின் உடல் பாராமதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் 6 முறை துணை முதலமைச்சராக பணியாற்றி, அதிக முறை துணை முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் அஜித் பவார். இவர் பலமுறை பாராமதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர் மூத்த அரசியல்வாதியான சரத் பவாரின் மருமகன் ஆவார்.

அதிர்ச்சியாக உள்ளது – பிரதமர் மோடி

இதனிடையே, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “அஜித்பவார் ஒரு மக்கள் தலைவர். மக்களிடம் நேரடி தொடர்பு வைத்திருந்தவர். மகாராஷ்டிரா மக்கள் நலனுக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர் என்ற பெயரை அவர் பெற்றிருந்தார். நிர்வாகத்தில் அவருக்கு இருந்த புரிதலும், ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் அவருக்கு இருந்த வேட்கையும் குறிப்பிடத்தக்கவை.

அவரது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் தந்துள்ளது. இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் உயிழந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் மன உறுதி அவர்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கருப்பு பெட்டி மீட்பு

இதனிடையே, விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை போலீசார் மீட்டுள்ளனர். இந்த கருப்புப் பெட்டியில்தான் விமானத்தில் பயணம் செய்தவர்களின் பேச்சு பதிவாகியிருக்கும். இதனை ஆய்வு செய்தால், விபத்து நிகழ்வதற்கு முன்பு விமானிகள் என்ன பேசினார்கள், விபத்துக்கான காரணம் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மிரட்டி வீடியோ; தவெக மாவட்ட செயலாளர் ‘லெப்ட்’ பாண்டி மீது வழக்குப்பதிவு

0

தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் பாண்டி (எ) லெப்ட் பாண்டி. சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அடிக்கடி வீடியோக்களை லெப்ட் பாண்டி வெளியிடுவது வழக்கம்‌‌.இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜயை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வந்தார். மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயையும், தவெக தொண்டர்களை குறித்தும் கட்சி மேடைகளில் விமர்சித்து வந்தார். இந்நிலையில், லெப்ட் பாண்டி சீமானையும், சாட்டை துரைமுருகனையும் மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டி விடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் தேனி மாவட்ட கிழக்கு செயலாளர் ஜெயக்குமார் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், லெப்ட் பாண்டியை விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.

தவெகவுக்கு வாக்களிக்க வெளிநாடுகளிலிருந்து 3 லட்சம் பேர் வருவார்கள்…! -செங்கோட்டையன்

0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு களத்தில் முதன்முறை போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட அளவிலான கழக செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று (ஜன 25) நடைபெற்றது. அந்த கூட்டத்தில், எதிர்வரும் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, செயல் வீரர்கள் மத்தியில் விஜய் பேசினார். அதில் குறிப்பாக “அரசியலில் இருக்கும்போதும் சரி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் சரி, விஜய் ஊழல் செய்யவே மாட்டான். ஒரு துளி ஊழல் கறை கூட படியாது. படியவும் விடமாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறினார்.இந்த நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று விட்டு அக்கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தலைவர் (விஜய்) செயல்வீரர் கூட்டத்தில் நேற்று உரையாற்றி இருக்கிறார். அவர் உரையைப் பொறுத்தவரை தமிழகம் வளம் பெறுவதற்கு, தூய்மையான ஆட்சியை தமிழகத்தில் தருவதற்கு ஊழலற்ற ஆட்சியை தருவேன் என்று தெளிவாக முழக்கமிட்டு இருக்கிறார்.

அதனை கருத்தில்கொண்டு தான் தமிழர்கள் தேர்தல் நாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர். தேர்தல் தேதியை அறிவித்தவுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஏறத்தாழ 3 லட்சம் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாக்களிக்க தயாராகி வருகின்றனர்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், உலக வரலாற்றிலேயே நம்முடைய தலைவர் விஜய் ஒருவருக்கு தான் இத்தகைய புகழ் உள்ளது என்று கூறினார்.

தேர்தலில் போட்டியிட போவதில்லை – டிடிவி தினகரன் பேட்டி

0

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கங்காரு குட்டி போல சுற்றிக்கொண்டு வரும் ஒருவருக்கு (உதயநிதி ஸ்டாலின்) முதலமைச்சர் பட்டம் சூட்ட திமுக காத்திருக்கிறது. ஊழல் என்றாலே திமுக தான் நியாபகத்திற்கு வரும். அறிவியல் பூர்வமாக ஊழல் செய்பவர்கள் எங்களை குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண் குழந்தை முதல் மூதாட்டி வரைக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் கடத்தலில் தமிழ்நாடு முக்கிய மாநிலமாக மாறியுள்ளது” என்றார்.

தே.ஜ., கூட்டணியில் இணைந்ததை குறித்து பேசிய அவர்  வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. என்னுடன் பல ஆண்டுகளாக ஆதரவாக இருந்தவர்களை அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. தமிழ்நாட்டை ஊழல் ஆட்சியில் இருந்து மீட்டெடுத்து அம்மாவின் ஆட்சியை கொண்டு வர பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். அம்மாவின் இடத்தில் எங்களுக்கு மோடி தான் இருக்கிறார். பங்காளி சண்டை இல்லாத குடும்பங்களே இல்லை. எங்கள் வீட்டு குடும்ப விஷயங்களை நான் மனம் விட்டு பேசினேன், தற்போது அம்மாவின் ஆட்சி அமைய ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் பிரிந்து தேர்தலை சந்தித்ததால் தான் 2019 எம்.பி தேர்தல், 2024 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. நாங்கள் ஒன்றாக போட்டியிட்டு இருந்தால் மேலும் 20- 25 தொகுதியில் வெற்றிப் பெற்று இருப்போம். என தெரிவித்தார்.தே.ஜ., கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ” அதுகுறித்து அவர் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ் மீண்டும் இணைய அவருக்கு தேனியில் இருந்து நான் அழைப்பு விடுக்கிறேன் ஓபிஎஸ் வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கு உள்ளது. அவர் சென்ற உயரங்களுக்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஆனால், யார் பேச்சையோ கேட்டு தர்ம யுத்தம் நடத்தினர். அது மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் 2024 இல் மீண்டும் முதலமைச்சராகி இருப்பார்.

அதிமுகவை ஊழல் கட்சி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்திருப்பது குறித்து பேசிய டிடிவி தினகரன்  எங்கள் தலைவர் எம்ஜிஆர் படத்தை வைத்துக்கொண்டு எங்களின் கட்சியை ஊழல் கட்சி என விஜய் சொல்கிறார். முதலில் அவரது திரைப்படங்களுக்கான கள்ள டிக்கெட் விற்பனை ஊழல்களை விஜய் தடுத்து நிறுத்த வேண்டும். நாங்கள் அமைதியாக இருப்பதால் அவர் எதுவேண்டுமானாலும் பேசலாமா? நாங்கள் வெகுண்டெழுந்தால் என்ன ஆவது? விஜயகாந்த் போல தேர்தலில் தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்று நான் கூறி இருந்தேன். ஆனால், அவர் எம்.ஜி.ஆர் போல வருவார் என்று நான் சொல்லவில்லை என தெரிவித்தார்

பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டம் தொடக்கம்..!

0

பதிவுத் துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தின் ஸ்பிரின்ட் 1 செயல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பதிவுத் துறை, பொதுமக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களை பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத் துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள் ஏற்படுத்துதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 160 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பதிவுத் துறையில் 6.2.2000 அன்று ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தை தொலைநோக்கு கண்ணோட்டத்துடன் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடக் களப்பணியின்றி ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை எளிய முறையில் வில்லங்கச்சான்றில் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகள் அடங்கிய செயல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.22) தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த திட்டத்தின் பயன்கள்

காகிதமில்லா ஆவணப்பதிவு
காகிதமில்லாமல் இணைய வழியில் ஆவணங்கள் சமர்ப்பித்திடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சொத்தினை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவரின் அடையாளமானது ஆதார் வழி பெறப்பட்ட குறுஞ்செய்தி (OTP) அல்லது விரல் ரேகை வழி சரிபார்க்கப்பட்டு ஆவணதாரர்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆவண விபரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சார் பதிவாளரின் மின்னணு கையொப்பம் இடப்பட்டு மின்னணு ஆவணமாக இணையதள வழி பொதுமக்களுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும்.

நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு
கட்டுமான நிறுவனத்திடமிருந்து புதிய அடுக்குமாடி குடியிருப்பினை வாங்கும் போதும், புதிதாக உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளிலிருந்து மனைகளை மட்டும் வாங்கும் போதும், ஆன்லைன் வழி கட்டணம் செலுத்திய உடன் பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே இணைய வழியாக ஆவணம் பதிவுக்கு சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும். சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விபரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, இணையதள வழியாக ஆவணதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற அரசு வாரியங்களால் எழுதிக் கொடுக்கப்படும் சொத்துக்களுக்கு சம்பந்தப்பட்ட வாரிய அலுவலகத்திலிருந்தே பத்திரத்தை பதிவுக்கு தாக்கல் செய்து, பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை உடனே வாரிய அலுவலகத்திலிருந்தே தரவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தானியங்கி பத்திர உருவாக்கம்
பொதுமக்கள் பிறர் உதவியின்றி தங்களின் ஆவணத்தை தாங்களே உருவாக்கும் வண்ணம் கேள்வி, பதில் வடிவிலான தானியங்கி பத்திரம் உருவாக்கிடும் வகையில், இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் சொத்து தொடர்பான குறைந்தபட்ச விபரங்களை அளித்து, உருவாக்கப்படும் ஆவணத்தை காகிதமில்லா ஆவணப்பதிவு முறையிலோ அல்லது அச்சுப்பிரதி எடுத்து வழக்கமான பத்திரப்பதிவு முறையிலோ பதிவு செய்து கொள்ளலாம்.

விரைவுக் குறியீட்டின் (QR Code ) வழி பணம் செலுத்தும் முறை
நடைமுறையில் உள்ள ஆன்லைன் கட்டண வசதியுடன் ரூ.1,000-க்கும் குறைவாக பணம் செலுத்த வேண்டிய நிகழ்வுகளில், கூடுதல் வசதியாக பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்பட்ட குறுபணப் பரிவர்த்தனை இயந்திர (Point of Sales) விரைவுக்குறியீட்டின் (QR code with UPI) வழி பணம் செலுத்தும் வசதியும் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு மறுவிற்பனை ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் வசதி
அடுக்குமாடி குடியிருப்பு மறுவிற்பனை ஆவணத்தில் கார் பார்க்கிங் மற்றும் மின்தூக்கி போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் நிலையில், கட்டட களப்பணியின்றி பதிவு செய்த அன்றே ஆவணங்களை திருப்பித் தரும் வகையில் இந்த மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிட்ட நகல்கள் உடனுக்குடன் வழங்கும் வசதி
பொதுமக்கள் சொத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகல் கோரும் நிகழ்விலும், வெளிநாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அளிக்கும் பொது அதிகார ஆவணங்கள், நீதிமன்ற ஆணைகள், கடன் ஆணைகள் மற்றும் குறிப்பு ஆணைகள் (Memo) உள்ளிட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை ஆன்லைன் வழி உடனுக்குடன் மையக் கணினியின் மின்னணு கையொப்பத்துடன் வழங்கும் புதிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை எளிய முறையில் வில்லங்கச்சான்றில் தேடுதல்
ஓர் ஆவணத்தின் பதிவு எண்ணை கொடுத்து தேடுதல் மேற்கொள்ளும் போது, அதனுடன் தொடர்புடைய அனைத்து முன்பதிவு மற்றும் பின்பதிவு ஆவணங்கள் வில்லங்கச் சான்றில் வரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வருவாய் மாவட்டம், வருவாய் வட்டம் மற்றும் வருவாய் கிராமம் ஆகியவற்றினை உள்ளீடு செய்தும் சொத்துப் பரிவர்த்தனை விபரங்களை தேடும் வசதி கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.பதிவுத் துறையில் தற்போது தனித்தனியாக வில்லங்கச் சான்று வழங்கப்பட்ட நிலையை மாற்றி, ஒரு கிராமமானது வெவ்வேறு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும், ஒரு கிராமத்தை பொறுத்து ஒரே ஒரு கணினி கட்டணத்துடன் ஒரே வில்லங்கச்சான்றாக வழங்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

கைபேசி செயலி மற்றும் புலனவழி செய்தி
‘TNREGINET’ என்ற கைபேசி செயலி வழியாக வில்லங்கச்சான்று, ஆவணப்பதிவுக்கான முன்பதிவு வில்லை (Token) நிலை, வழிகாட்டி மதிப்பு, திருமணம், சங்கம், கூட்டு நிறுவனம், சீட்டு நிறுவனம், ஆவணப்பதிவு விபரம், சொத்தின் மதிப்பு கணக்கீடு ஆகியவற்றை எளிதாக அறியும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுத்துறையின் வெவ்வேறு சேவைகளின் நிலை தொடர்பாக புலனம் (WhatsApp) வழியாகவும் செய்தி அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்போர் சங்கப்பதிவு
தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் 2022-ன் படி, சங்கங்களை பதிவு செய்ய, பொதுமக்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே முற்றிலும் இணையதள வாயிலாக பதிவு செய்யும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட திருமணத் தேடுதல்
மணமகன் (அ) மணமகள் பெயர், பிறந்த தேதி விபரத்தை உள்ளீடு செய்து திருமண விபரங்களை பெறும் வசதியும் இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலாண்மை தகவல் அமைப்பு
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை கண்காணிக்க ஏதுவாக அனைத்து நிலை உயர் அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்டார் 3.0 ஸ்பிரின்ட் 1 மென்பொருள் திட்டத்தின் மூலம், பொதுமக்களின் நலனுக்காக மேற்கண்ட 18 சேவைகள் செயல்படுத்தப்படும்.

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

0

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளது. அதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேபோல் தவெக இந்த தேர்தலில் முதல்முறையாக போட்டியிடவுள்ளது. இதனால் தவெக என்ன சின்னத்தில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கேற்ப தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் பொதுச் சின்னம் வழங்கக்கோரி விண்ணப்பிக்கப்பட்டது.தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இதற்காக நவம்பர் மாதமே டெல்லியில் முகாமிட்டு விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் தேர்தல் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கான 190 சின்னங்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு கட்சியும் 10 சின்னங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.அதன்படி தவெக தரப்பில் முதல் சின்னமாக விசில் சின்னத்தை அளிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. விசில் சின்னம் கிடைக்கவில்லை என்றால், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட சின்னங்கள் கேட்கப்பட்டன. இந்த நிலையில் தவெகவுக்கு பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை ஒதுக்கி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, தேர்தல் ஆணைய விதிகளின்படி கணக்குகளை தாக்கல் செய்ததால், அந்தக் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக விஜய்யின் வி செண்ட்மெண்ட்டும் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விஜய் பெயரில் உள்ள V என்ற வார்த்தையை கட்சியின் பெயரில் வெற்றி (V) என்ற கொண்டு வந்தார்.தற்போது அதே வி செண்ட்மெண்ட் தவெக சின்னத்திலும் இடம் பெற்றுள்ளது. இதனால் “V” செண்டிமெண்ட் விஜய்க்கு தேர்தலில் வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

21 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் – கோவை மாநகர புதிய காவல் ஆணையர் அதிரடி..!

0

கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று உள்ள கண்ணன் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து உள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், சிங்காநல்லூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் சரவணம்பட்டி விசாரணை பிரிவுக்கும், வெரைட்டி ஹால் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி பெரிய கடைவீதி விசாரணை பிரிவுக்கும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் சுந்தராபுரத்துக்கும், ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி கரும்புக்கடை இன்ஸ்பெக்டராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.மேலும் காத்து இருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் மாநகர குற்ற பிரிவு 2 க்கும், சகிலா மாநகர குற்றப்பிரிவு 1 க்கும், ராஜசேகரன் சிங்காநல்லூர் சட்ட – ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், ராஜசேகர் ரேஸ்கோர்ஸ் விசாரணை பிரிவுக்கும், கண்ணன் குனியமுத்தூர் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சாரதா வடவள்ளி இன்ஸ்பெக்டராகவும், மணிவண்ணன் பீளமேடு விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பிரகாஷ் வெரைட்டி ஹால் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், விஜயேந்திரன் சிங்காநல்லூர் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், கிருஷ்ண லீலா உக்கடம் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், வெங்கடேசன் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர் கூடுதலாக காட்டூர் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றுவார்.மாநகர குற்றப்பிரிவு 1 இன்ஸ்பெக்டராக நிர்மலா போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு கிழக்கும், ஈரோட்டில் பணியாற்றிய பூரண சந்திரன், பாரதி மேற்கு மகளில் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், பிரபா மத்திய மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், சுந்தராபுரம் இன்ஸ்பெக்டர் கண்ணையன் குனியமுத்தூர் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் கட்டுப்பாட்டு அறைக்கு காத்து இருப்போர் பட்டியலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.