Wednesday, April 22, 2026
Home Blog Page 14

கோவையில் லஞ்சம் வாங்கிய 3 வனக்காவலர்கள் கையும் களவுமாக சிக்கினர்..!

0

கோவையில் தமிழக- கேரள எல்லை வன சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்ற மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனைகட்டி சாலையில் கேரள எல்லையில் கோவை வனகோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்கு உட்பட மாங்கரை மற்றும் ஆனைகட்டி ஆகிய இரண்டு பகுதிகளிலும் வன சோதனை சாவடிகள் உள்ளன.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சோதனைச் சாவடியை கடந்து செல்கின்றன. குறிப்பாக இந்த வழியே கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டைத்துரை, மன்னார்காடு, அகழி, சோலையூர் ஆகிய இடங்களுக்கும் அதிகபடியான வாகனங்கள் செல்கின்றன.கனரக வாகனங்களிலும் பொருட்கள் எடுத்து செல்லப்படுகின்றன. அப்போது இரண்டு சோதனை சாவடிகளிலும் சோதனை மேற்கொள்ளப்படும்.மதுக்கரை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கேரள மாநிலத்தில் தோட்டம் வைத்துள்ளார். தோட்டத்திற்கு உரங்களுக்கான கோழி எருவுகளை பல்லடத்தில் இருந்து லாரி மூலம் 27ம் தேதி அனுப்பி வைத்துள்ளார்.அப்போது இரண்டு சோதனை சாவடிகளிலும் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. மாங்கரை சோதனை சாவடியில் இருந்த வனக்காப்பாளர் செல்வகுமார் ஆயிரம் ரூபாயில் லஞ்சமும் அதேபோல் ஆனைகட்டி வனசோதனை சாவடியிலும் வனக்காவலர் சுப்ரமணியம் என்பவர் ஆயிரம் ரூபாய் லஞ்சமும் பெற்றுள்ளனர்.

இது குறித்து லாரி ஓட்டுநர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாரிடம் அந்த ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளார்.அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையும் உரங்களுக்கான கோழி எருவுகளை எடுத்து செல்வதாகவும் அப்பொழுதும் சோதனை சாவடிகளில் லஞ்சம் பெறுவார்கள் என்று கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்துவிட்டு இரண்டு சோதனை சாவடிகளிலும் சாதாரண உடையில் இருந்துள்ளனர்.

அப்பொழுது மாங்கரை சோதனைச் சாவடியில் வன காவலர் செல்வகுமார் ரசாயனம் தடவிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக பெறும்பொழுது அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
அதேபோன்று ஆனைகட்டி சோதனை சாவடியிலும் வனகாவலர் சதீஷ்குமார் என்பவர் லஞ்சம் பெறும் பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.அதே சமயம் சுப்பிரமணியம் அங்கு வந்த பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரையும் பிடித்தனர்.

இதனை அடுத்து மூவரிடம் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர்கள் பிரபுதாஸ், அறுமுகம் மற்றும் ஏடிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் 12 பேர் இரண்டு குழுக்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரத் தாக்குதல் – சீமான் ஆவேசம்

0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை அருகே கடந்த 05.10.2025 அன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை நம்பியார் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் உள்ளிட்ட 10 மீனவச்சொந்தங்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அவர்களின் உடைமைகளைப் பறித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தாக்கி பல இலட்சம் மதிப்பிலான வலைகள், விசைப்படகு இயந்திரம், இருப்பிடக் கருவி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றதால் மீனவ மக்கள் செய்வதறியாது பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய ஒன்றிய – தமிழ்நாடு அரசுகளின் தொடர் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. இத்தனை காலமும் இலங்கை கடற்படையால் கொடுந்தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் மீது, தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பது தமிழ் மீனவ மக்களுக்கு இன்னுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. இந்திய நாட்டின் கடற்படை என்னதான் செய்துகொண்டுள்ளது? அடுத்த நாட்டு கடற்படையும், கடற்கொள்ளையர்களும் சொந்த நாட்டு மீனவர்களைத் தாக்குவது இந்திய நாட்டிற்கு அவமானம் இல்லையா? அமெரிக்காவோ, சீனாவோ, ரஷ்யாவோ இப்படி சொந்த நாட்டு மீனவர்களைத் தாக்குவதை வேடிக்கை பார்க்குமா?
கடற்கொள்ளையர்கள் என்றால் அவர்கள் எந்த நாட்டு மீனவர்கள்? இலங்கை கடற்கொள்ளையர்கள் என்றால், தமிழ்நாட்டு மீனவர்களை விரட்டி விரட்டி வேட்டையாடும் இலங்கை கடற்படைக்கு, தன் எல்லைக்குள் உலவும் கடற்கொள்ளையர்களைப் பிடிக்க திறனில்லையா? அல்லது கடற்கொள்ளையர்களாக வந்தவர்களே இலங்கை கடற்படையினர்தானா? இத்தனை குறுகிய கடற்பரப்பில் இலங்கை – இந்தியக் கடற்படைகளைக் கடந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவிட்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் எங்கே மாயமாய் மறைந்தார்கள்?இந்தியக் கடற்படையால் இலங்கை கடற்படையிடமிருந்துதான் தமிழ் மீனவர்களைக் காக்க முடியவில்லை? இலங்கை கடற்கொள்ளையர்களிடமிருந்து கூடவா காக்கும் திறன் இந்திய இராணுவத்திற்கு இல்லை? சொந்த நாட்டு மீனவர்களைக் காக்க முடியவில்லை என்றால் இந்த நாட்டிற்கு கடற்படை என்ற ஒன்று எதற்கு? இத்தனைக் கோடிகள் கொட்டி கொள்முதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்தான் எதற்கு?

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை தாண்டி இந்திய நாட்டு குடிகள் மீது தாக்குதல் நடத்தியவுடன் பதறி துடித்த பெருமக்கள், இலங்கை கடற்கொள்ளையர்கள் எல்லை தாண்டி தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதற்கு எந்த பதற்றமும் கொள்ளாமல் அமைதி காப்பது ஏன்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லையா? இந்திய அரசுக்கு எந்த நாடு தாக்கியது? தாக்கப்பட்ட மக்கள் யார் என்பதெல்லாம் பார்த்துதான் கோபமும் இரக்கமும் கூட வருமா? என்று அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கு இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் பதிலுண்டா?
சொந்த நாட்டு மக்களைத் தாக்குவதிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தி காக்க முடியவில்லை என்றால் இலங்கையின் நட்பு இந்தியாவிற்கு எதற்கு? இந்திய நாட்டுக் குடிகளைத் தாக்கும் பாகிஸ்தானிடம் வரும் கோவமும், பகையும், இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு இலங்கையிடம் வர மறுப்பதேன்?வழக்கம்போல இன்னொரு கடிதம் எழுதுவதைத் தவிர, தமிழ் மீனவர்களைக் காக்க மாநில சுயாட்சி நாயகர் ஐயா ஸ்டாலின் அவர்களிடம் மாற்று திட்டம் ஏதாவது உண்டா? ஐந்துமுறை திமுக தமிழர் நிலத்தை ஆண்ட பிறகும் கச்சத்தீவு மீட்கப்படவும் இல்லை; தமிழ் மீனவர் சிக்கல் தீர்க்கப்படவும் இல்லை. இதைத்தான் திராவிட மாடல் அரசு தமிழ் மீனவர்களைக் காக்கும் முறையா?

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் தமிழ் மீனவர்களைக் காக்க இனியேனும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதோடு, பாதிக்கப்பட்ட 10 மீனவச்சொந்தங்களுக்கும் உரிய மருத்துவம், துயர்துடைப்பு உதவிகளைச் செய்துதர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பெயரை வைத்து பணம் கேட்டு மிரட்டிய கோவை பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது!

0

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைச் சொல்லி இளைஞரை பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக, பாஜக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று, ரூ.50 லட்சம் இழப்பீடு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சட்ட உதவி செய்ததற்காக அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.கவை சேர்ந்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் ரூ.10 லட்சம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்த 3 பேரும் மேலும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுவதாக இறந்த திருமூர்த்தியின் சகோதரர் அருணாச்சலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், ‘தனது சகோதரன் திருமூர்த்தி உயிரிழந்த நிலையில், இதுதொடர்பான வழக்கிற்கு அதே ஊரை சேர்ந்த பாஜகவை சேர்த்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் உதவி செய்தனர். இதற்கு இழப்பீடு வந்தவுடன் ரூ.10 லட்சம் கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டனர். தற்போது மீண்டும் தேர்தல் செலவுக்கு ரூ.10 லட்சம் பணம் வேண்டும் என அண்ணாமலை பெயரை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ என குற்றம்சாட்டி இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.இதுதொடர்பாக அருணாசலத்தின் தந்தை நாகராஜ், அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல், ‘எனது பெயரை சொல்லி பணம் வாங்கியதாக வெளியான வீடியோவிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என அண்ணாமலையும் விளக்கம் அளித்திருந்தார். தொடர்ந்து, இதுதொடர்பாக பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அண்ணாமலை தனது உதவியாளர் மூலம் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில், நாகராஜ் அளித்த புகாரின் பேரில், அண்ணாமலை பெயரை பயன்படுத்தி ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில், பாஜக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன், பாஜக உறுப்பினர் கோகுலகண்ணன், அன்னூர் குமாரபாளையத்தைச் சேர்ந்த ராசுகுட்டி ஆகிய 3 பேரை அன்னூர் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, 3 பேர் மீதும் கொலை மிரட்டல், பணம் பறித்தல் ஆகிய இருபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கைதான கோகுலகண்ணனிடம் இருந்து பாஜக, திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர் அட்டை இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில் பாலாஜி அமைச்சராவதை தடுக்கவில்லை

0

செந்தில் பாலாஜி அமைச்சராகக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. வேண்டுமானால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அவர் மீண்டும் அமைச்சராகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்த 2011 -2015 அதிமுக ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையின் போதே, அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. 2021 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த திமுக, அவரை மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக நியமித்தது. இதனையடுத்து, பண மோசடி வழக்கின் தொடர்ச்சியாக 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை அன்றிரவே கைது செய்தது. கைதானதை அடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜிக்கு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமின் வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஜாமினை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்தது. இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அமைச்சர் பதவியா? ஜாமினா? இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள் என செந்தில் பாலாஜியை நீதிபதிகள் கேட்டனர். இதனையடுத்து மீண்டும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பில் உள்ள கடுமையான சில கருத்துகளை நீக்கக் கோரி, செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது இன்று (அக் 6) நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஓகா ஓய்வு பெற்ற பிறகு இந்த மனுவை ஏன் தாக்கல் செய்ய வேண்டும்? என செந்தில் பாலாஜி தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், இதனால் சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் எடுத்துரைத்தார்.

இதனையடுத்து செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது நீதிபதி வாய்மொழியாகக் கூறியது தான் என்றும், ஜாமின் உத்தரவில் அமைச்சராக தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் கூறினார். அதற்கு நீதிபதிகள், “செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தால் அவருக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கலைக்க நேரிடும் என்பதால், அவர் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததை கருத்தில் கொண்டு தான் ஜாமின் வழங்கப்பட்டது” என்று தெரிவித்தனர். மேலும் அவர் அமைச்சராவதை யாரும் தடுக்கவில்லை என்றும், ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு சாட்சியங்களை கலைத்தால், ஜாமின் ரத்து செய்யப்படும் என்று தான் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக விளக்கினர். மேலும் இந்த வழக்கை ஏன் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி, இதற்கு இன்னும் 2 வாரங்களில் பதிலளிக்க கூறிய நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

கரூர் சம்பவம்… நிதியுதவி செய்த கமல்..!

0

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்.27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது விஜய் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிதி வழங்கியது.

அதே போல, தவெக சார்பில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பிலும் தலா ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு மொத்தமாக 1 கோடி நிவாரண நிதி நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை சந்தித்து வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்பி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க இன்று கரூர் வருகை தந்தார். அதன் பின்னர் ஏமூர் புதூர், வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் 41 லட்சம் ரூபாய் நிதி உதவியை நேரடியாக வழங்கினார்.இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது. சதி திட்டம் குறித்து நாம் பேச வேண்டியது இல்லை. சட்டமும், நீதியும் அதை பார்த்துக் கொள்ளும். விரைவாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து உயிர் பலி குறைவுக்கு காரணமான செந்தில் பாலாஜியை பாராட்ட வேண்டும். கட்சி பேதமை பார்க்காமல், சட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்தும் ஒரு முதலமைச்சராக செயல்பட்ட திமுக தலைவரை இந்த நேரத்தில் எண்ணி பெருமை கொள்கிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழக முதல்வருக்கு ஒரே ஒரு வேண்டுகோள். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் ஒதுக்குப்புறமாக தனி இடம் ஒன்றை ஒதுக்கி தர வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றேன். தமிழ்நாடு எப்படி முன்னுதாரணமாக மற்ற மாநிலங்களுக்கு உள்ளதோ? அது போல, அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த தனியிடம் மேற்கொண்டால் அனைத்திலும் தமிழகம் முன்னுதாரணமாக திகழும்.தமிழக வெற்றிக் கழகம் கூட்டம் நடத்த கோரிய லைட் ஹவுஸ் கார்னர் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே உள்ளது. அந்த இடத்தில் வழங்கியிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என கூற முடியாது. இனிவரும் காலங்களில் இது போன்று எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறக்கூடாது.” என்றார்.

கரூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியுமே என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை குறித்து கேட்டதற்கு, ” இது அரசியல் பேசும் நேரம் அல்ல, மனிதாபிமானம் குறித்து பேசும் நேரம். அதிமுக பேசுவது அரசியல். அனைத்து கட்சிகளும் அமர்ந்து இதில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியது குறித்து கேட்டதற்கு,  எவ்வளவு நிதி உதவி கொடுத்தாலும் இழந்த உயிரை மீட்டு தர முடியாது. அவர்களுக்கு நாம் பெற்று தர வேண்டியது நீதி மட்டும் தான்” என்றார்.

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் முன் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன..!

0

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், முன் ஜாமின் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தன. நீதிபதி ஜோதிராமன் முன்பு நடைபெற்ற விசாரணையில் மனுதாரர் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மாறி மாறி காரசார விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.

தவெக தரப்பு வாதம்

அப்போது, தவெக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன், “காவல் துறையின் செயல்பாடு ஏற்கக்கூடியதல்ல. பிரச்சாரம் நிகழ்ந்த இடத்தில் ரவுடிகள் உள்ளே புகுந்தனர். நாங்கள் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றினோம். இருப்பினும் காவல் துறை ஏன் தொண்டர்கள் மீது தடியடி நடத்தியது? இது குறித்து FIR -யில் தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன” என்றார்.
தொடர்ந்து அவர், “ஒரு நாளைக்கு முன்பாகவே வேறு இடத்தில் நடத்த அனுமதி கோரி முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அன்று முறையிட இயலவில்லை. அதனால் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்தை நடத்தும் நிலை வந்தது. அந்த இடத்தில் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் போதே காலி ஆம்புலன்ஸ்கள் கூட்டத்திற்கு நடுவே கொண்டு வரப்பட்டன. இதனால் விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்துகளை விபத்துகளாக பார்க்காமல், பொதுச் செயலாளர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்” என கேள்வி எழுப்பினார். மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்துவது அரசின் கடமை என்றும், திமுக நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கும் போது இது போன்று நடந்தால் முதல்வர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வீர்களா? எங்கள் கட்சிக்கு ஒரு நியாயம், திமுகவிற்கு ஒரு நியாயமா? எனவும் தவெக சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், அப்படியே வழக்குப்பதிவு செய்தாலும் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தான் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டுமே தவிர, மாநில நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்? எனவும் மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு போலீசார் தரப்பில், வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. தவெகவினர் தங்கள் கடமையை சரியாக செய்யவில்லை எனவும், தங்கள் கட்சித் தலைவர் 12 மணிக்கு வருவார் என இவர்கள் அறிவித்ததே, 41 பேரின் மரணத்தில் இவர்களுக்கு இருக்கும் தொடர்பு என குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு நீதிபதி ஜோதிராமன், “மதியம் 3 – 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், 41 பேரின் உயிரிழப்புக்கு இதுவரை பொறுப்பான தகவல்கள் வழங்கப்படவில்லை. காவல் துறை இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது?” என கேள்வி எழுப்பினார். அதற்கு, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படாத போதிலும், நடத்தியதாக அரசு தரப்பில் கூறப்பட்டதற்கு, நிகழ்ச்சியை ஏன் ரத்து செய்யவில்லை என நீதிபதி பதில் கேள்வி எழுப்பினார். பிரச்சினை எழக் கூடாது என்று தான் அவ்வாறு செய்யவில்லை என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, “தங்களது கட்சித் தலைவர் பேசும் போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருக்க வேண்டும் என எண்ணி கூட்டத்தை அதிகளவில் அக்கட்சியினர் கூட்டி உள்ளனர். விஜய் வருவதற்காக அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் 8 மணி நேரமாக அந்த பகுதியில் காத்திருந்தனர். எனவே இந்த உயிரிழப்புகளுக்கு தவெக தான் காரணம். ஆனால் சம்பவம் நடைபெற்றவுடன் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். உயிரிழப்புகள் நிகழ்ந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அந்த பகுதியில் வந்து பார்க்கவில்லை” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடியிருந்த தொண்டர்களுக்கு குடிநீர் கூட வழங்கவில்லை எனவும், அதனால் சோர்வு ஏற்பட்டதாகவும் கூறியதோடு, இதுகுறித்து ஆணையம் விசாரணை நடத்தி வருவதால் முன் ஜாமின் வழங்கக் கூடாது எனவும் காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. அதற்கு மனுதாரர்கள் தரப்பில், கூட்டத்தில் ஸ்ப்ரே அடிக்கப்பட்டதும், தடியடி நடத்தியதுமே நெரிசலுக்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், இன்று மாலை முன் ஜாமின் குறித்து அறிவிப்பதாக கூறி நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வாதத்தை ஏற்று புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவரின் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து இருவரும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது… 936 மது பாட்டில்கள் பறிமுதல்…  கோவை மாவட்ட காவல்துறையினரின் அதிரடி….

0

கோவை மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல்துறையினர்களும் மேற்கொண்ட அதிரடி சோதனையில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் , இதேபோன்று
பேரூர் உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 4 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 118 மது பாட்டில்கள் மற்றும் 7 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும், இதேபோன்று கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 110 மது பாட்டில்கள் மற்றும் 11 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் , இதேபோன்று பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 27 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 2 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும், இதேபோன்று வால்பாறை உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 408 மது பாட்டில்கள் மற்றும் 15 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் , மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 8 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 157 மது பாட்டில்கள் மற்றும் 12 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் , இதேபோன்று மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 7 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 84 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் கள் என கோவை மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 37 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 936 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 77 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் கைது

0

திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தார் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்று இரவு (செப்.29) திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. அப்போது வாகனத்தின் ஓட்டுநர் திருவண்ணாமலைக்கு செல்வதால் தனது அக்கா மற்றும் (அக்கா மகள்) 19 வயதுடைய இளம்பெண் ஆகிய இருவரையும் கோயிலுக்கு செல்ல உடன் அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.திருவண்ணாமலைக்கு வந்ததும், வாழை மண்டிக்கு செல்வதற்காக புறவழிச்சாலை வழியாக வந்து, வேட்டவலம் ரோடு வழியாக நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஏந்தல் புறவழிச்சாலை அருகே இரவு சுமார் 2 மணி அளவில் வந்துள்ளனர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸார் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்அப்போது வாகனத்தில் டிரைவர் உடன் இரண்டு பெண்கள் இருந்தால் உங்கள் மீது சந்தேகம் உள்ளது என கூறி அவர்களை கீழே இறங்கக்கூறி விசாரித்துள்ளனர். அப்போது, ஓட்டுநர் வாழைத் தார் ஏற்றி வந்ததாகவும், தன்னுடன் எனது உறவினர் கோயிலுக்கு செல்ல வந்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார். பின்னர், போலீஸார் வாகனத்தை நீங்கள் எடுத்துச் சென்று வாழைத் தார்களை இறக்கிவிட்டு வாருங்கள், நாங்கள் பெண்கள் இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது.அதனை ஏற்க மறுத்த ஓட்டுநர் இருவரையும் வண்டியில் ஏற்றிச் செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் போலீஸார் ஓட்டுநரை மிரட்டி இளம் பெண் மற்றும் அவரது தாயை தங்களது இரண்டு பைக்கில் அழைத்துச் சென்று ஏந்தல் கிராமம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இளம் பெண்ணை தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.பின்னர் போலீஸார் இருவரும் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் அவ்வழியாகச் சென்றவர்கள் 2 பெண்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு விசாரித்துள்னனர். பின்னர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்த தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த ஏந்தல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.

இதனிடையே, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீஸார் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருமே காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு எடுத்த சீரிய நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு விளக்கம் அளித்துள்ளார்.

0

கரூரில் நேற்று இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டம், கூட்ட நெரிசல் காரணமாக சோகமாக மாறியது. தவெக பரப்புரையில் விஜய்யை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசலால் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.விஜய் பிரச்சார நிகழ்வில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல், சமூக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர்.கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு கூறுகையில், “கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நடந்தது. கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ச்சியில் கூடிய 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் இந்த சம்பவத்தால் இறந்ததும் அனைவருக்கும் துயரத்தை அளித்துள்ள செய்தி.
கூட்ட நெரிசல் குறித்த தகவலறிந்ததும் முதலமைச்சர் உத்தரவுப்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. 39 பேர் உயிரற்ற சடலங்களாவே மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டனர். இன்று சிகிச்சையில் இருந்த ஒருவரும் உயிரிழந்தார். கரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு சிகிச்சை அளித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது.இறந்தவர்கள் அனைவரின் உடல்களும் கூராய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. கரூரை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து 114 மருத்துவர்கள், 23 செவிலியர்கள், தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் விரைந்தனர்.கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிர்காக்கும் சிகிச்சை அளித்தனர். தமிழ்நாடு அரசு எடுத்த சீரிய நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கரூர் வருகை தந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும், அவர்கள் உடன் இருப்பவர்களுக்கும் ஆறுதல் அளித்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு யாருக்கேனும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அந்த அறையை தொடர்பு கொள்ள இங்கும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தவெகவினர் குறுகலான பகுதிகளில் அனுமதியை கோரினர். 23 ஆம் தேதி அளித்த முதல் மனுவில் தவெகவினர் பெட்ரோல் பங்க் உள்ள ரவுண்டானா பகுதிக்கு அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டது தவெகவினரிடம் கலந்து ஆலோசித்த பின்னர்தான் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டது. வேலுசாமிபுரத்தில் முன்னதாக வேறு கட்சியினர் கூட்டம் நடந்ததால் அதனை சுட்டிக்காட்டி அப்பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக – பாஜக இடையே கள்ளக் கூட்டணி… விஜய் ஆவேசம்

0

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, ‘உங்க விஜய் நா வரேன்’ எனும் பெயரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 13 ஆம் தேதி தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.20) நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு பேசிய விஜய், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குடும்பத்தை வைத்து தமிழ்நாட்டை கொள்ளையடித்து வருகிறார் என்று கூறினார்.

இந்நிலையில், இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது பரப்புரையை விஜய் மேற்கொண்டார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் வந்தடைந்தார். இந்நிலையில், நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் அருகில் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணாக நாமக்கல் இருந்து வருகிறது. அந்த மண்ணில் இருந்து பேசுவதை பெருமையாக கருதுகிறேன். நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் முட்டைகளை சேமிக்க பாதுகாப்பான கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதை இப்போது ஆளுகின்ற அரசு செய்ததா? திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் ஏழை எளிய மக்களின் கிட்னி திருடப்படுகிறது. இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தவெக ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தவெக ஆட்சியில் செய்து கொடுப்போம் என்று கூறினால், புதிதாக ஏதாவது கூறுங்கள் என அரசியல் விஞ்ஞானிகள் கேட்கிறார்கள். புதிதாக என்றால் என்ன? வீட்டில் அனைவரும் விமானம் ஓட்ட வைப்போம் என்று கூறலாமா? அல்லது அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை அமைப்போம் என்று கூறலாமா? என்றும் கேள்வி எழுப்பினார். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பேசிய விஜய், “மூச்சுக்கு 300 முறை அம்மா, அம்மா என்று கூறுபவர்கள் ஜெயலலிதா மேடம் சொன்னதை எல்லாம் மறந்துவிட்டு, பொருந்தா கூட்டணியை அமைச்சுகிட்டு, தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணி என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களை போல தவெக எப்போதும் இருக்காது” என்றார்.
திமுக, பாஜக தொடர்பாக பேசிய அவர், “பாஜக – திமுக இடையே மறைமுக உறவு உள்ளது. திமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றதுதான். மோசமான ஆட்சியை தமிழகத்தில் கொடுக்கும் இந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? இல்லை நம்முடைய தவெக ஆட்சி வேண்டுமா? மக்கள் நீங்கள் தான் அதை சொல்ல வேண்டும். என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். வரும் தேர்தலில் நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்றார்.