Wednesday, April 22, 2026
Home Blog Page 13

கோவையில் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் சிக்கினார்!

0

கோவையில் வீட்டுமனை அங்கீகாரம் பெற லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் மற்றும் ஊழியர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள மூக்கனூரைச் சேர்ந்தவர் ராஜபிரபாகரன். இவருக்கு மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் 15 சென்ட் வீட்டுமனை உள்ளது. இதற்கு வீட்டுமனை அங்கீகாரம் பெற ராஜபிரபாகரன் மசக்கவுண்டன் செட்டிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தின் செயலாளர் ரங்கசாமியிடம் விண்ணப்பம் அளித்தார். அப்போது அவர் அங்கீகாரம் வழங்க லஞ்சம் தர வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதை அடுத்து ராஜபிரபாகரன், ரங்கசாமிக்கு 15000 ரூபாய் கொடுத்து உள்ளார். இதை தொடர்ந்து ராஜபிரபாகரனை மீண்டும் அழைத்த ரங்கசாமி மேலும் 19000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்பதி அடைந்த ராஜ பிரபாகரன் இதுதொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையில் புகார் அளித்தார். கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ராஜபிரபாகரனிடம் கொடுத்து அனுப்பினர். ரங்கசாமியிடம் கொடுக்க சென்ற போது, தனது உதவியாளர் பூபதி என்பவரிடம் பணத்தை கொடுக்கும் படி ரங்கசாமி கூறினார். அதன்படி பூபதியிடம் பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், லஞ்சம் வாங்கிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை – நீதிபதி அதிரடி உத்தரவு

0

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் ஆடு, கோழி பலியிட தடைவிதித்து நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தி, மூன்றாவது நீதிபதி ஆர். விஜயகுமார் தீர்ப்பளித்துள்ளார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி வருகை புரிந்திருந்தார். அப்போது, எம்.பி-யுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பரவியதால், பெரும் சர்ச்சை வெடித்தது. இதனால், மலையை பாதுகாப்போம் என்று இந்து முன்னணியினர் அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் சார்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் 144 தடை உத்தரவை பிறப்பித்தனர். ஆனாலும், தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. சோலை கண்ணன் மற்றும் பரமசிவன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், “மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது; சிலர் அங்கு ஆடு, கோழி பலியிட்டு மலைப்பகுதியை ‘சிக்கந்தர் மலை’ என அழைக்க முயற்சிக்கிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரினர்.

மற்றொரு மனுவில் ராமலிங்கம் என்பவர், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கக்கூடாது” என கூறினார். இதனுடன், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பாகவும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், “தர்காவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும், தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும்” என கோரப்பட்டது. மேலும், சுவஸ்தி ஸ்ரீலெட்சுமிசேனா பட்டாச்சார்ய மகா சுவாமி என்பவர், “திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க வேண்டும்” என்ற மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்குகள் அனைத்தும் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.நிஷா பானு மற்றும் எஸ்.ஸ்ரீமதி ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்பட்டன. இருவரும் தனித்தனியாக மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதி நிஷா பானு, “திருப்பரங்குன்றம் மலை பகுதியில் அமைதி நிலவ வேண்டும்; மத நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டு, இஸ்லாமியர்களுக்கு நெல்லித்தோப்பில் தொழுகை நடத்த அனுமதி வழங்கினார். மேலும், சிக்கந்தர் தர்கா புனரமைப்புப் பணிகளுக்கு தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால், நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, “திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும்; நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தக்கூடாது” என்ற கோரிக்கைகளை ஏற்று உத்தரவிட்டார். இவ்வாறு மாறுபட்ட தீர்ப்புகள் வந்ததால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வுக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்த விசாரணைக்கு பின், இன்று (அக். 10) மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் தீர்ப்பளித்தார். அதில் அவர், “திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்த நீதிபதி ஸ்ரீமதியின் உத்தரவு சரியானது” என்றும், “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்துகிறேன்” என்றும் கூறினார். மேலும், மலைப்பகுதி தொடர்பான சொத்து உரிமை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து தேவையெனில் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவித்தார்இந்த தீர்ப்பின் மூலம், திருப்பரங்குன்றம் மலை குறித்து பல ஆண்டுகளாக நீண்டு வரும் மத, சட்டப் பிரச்சினைகளுக்கு நீதிமன்றம் தெளிவான தீர்வை வழங்கியுள்ளது. இதனுடன், மலைப்பகுதியில் மத நல்லிணக்கம் நிலைநிறுத்தப்படும் என்றும், தர்கா மற்றும் கோயில் பக்தர்கள் அமைதியான முறையில் தங்கள் வழிபாட்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் சாலையில் காரோடு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!

0

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் வசந்தாமில் அருகே நேற்று சுடலைமுத்து என்பவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது ஆட்டோவை திருப்பும் போது, அந்த வழியாக வந்த கார் மீது லேசாக உரசியதாக கூறப்படுகிறது. மது போதையில் காரில் வந்த இளைஞர்கள் சுடலை முத்துவிடம் சண்டையிட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஆட்டோ ஒட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். தொடர்ந்து இளைஞர்கள் காரை எடுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது, காரை எடுக்க விடாமல் ஆட்டோ ஓட்டுநர் காரின் முன்பு நின்று தடுத்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் காரை இயக்கியதில் பக்கவாட்டில் தொங்கியபடி சிறிது தூரம் ஆட்டோ ஓட்டுநரை காரில் இழுத்து சென்றனர். சிறிது தூரம் தொங்கியபடி இருந்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை முத்து பின்னர் காரில் இருந்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே காரில் தொங்கிய ஆட்டோ ஓட்டுநரை சாலையில் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தன்னை தாக்கியவர்கள் குறித்து ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில், காரில் வந்த இளைஞர்கள் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிங்காநல்லூர் பகுதி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு காரில் வந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அவினாசி சாலை மேம்பாலம் எடப்பாடி ஆட்சியின் சாதனை -எஸ்.பி.வேலுமணி

0

அவினாசி சாலையில் திறக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு அதிமுக ஆட்சியில் முழு நிதியையும் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை அவினாசி சாலையில் ரூ.1,791 கோடி மதிப்பில் கோல்ட் வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை புதியதாக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயரிட்ட தமிழக அரசு அதனை நேற்று திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தது. இந்நிலையில், இந்த மேம்பால பணிகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது என்பதால் இன்று உப்பிலிபாளையம் பகுதியில் அதிமுகவினர் மேளதாளம் முழங்க, வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே. ஆர்.ஜெயராமன் ஜமாப் இசைக்கு ஏற்ப நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் 10 கி.மீ ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.உப்பிலிபாளையம் முதல் கோல்ட் வின்ஸ் வரை கட்சியினருடன் வாகனத்தில் பயணித்த எஸ்.பி.வேலு மணி, கோல்ட்வின்ஸ் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். பாலத்தை பார்வையிட்ட பின்பு கோல்ட் வின்ஸ் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ”50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி, அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அவினாசி சாலையில் மேம்பாலம் வேண்டுமென்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்த நிலையில், அவர் முழு நிதியையும் கோவை மக்களுக்காக ஒதுக்கி தந்தார்இந்த பாலத்தின் பணிகள் அதிமுக ஆட்சியில் 55 சதவீதம் நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு மற்றும் ஆட்சி மாற்றம் போன்றவற்றால் ஒன்றரை ஆண்டுகள் பணிகள் நின்றது. தற்போது இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சிதான். கோவைக்கு நான்கரை ஆண்டுகளாக இந்த ஆட்சியில் எதுவும் அறிவிக்கவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டத்தை தான் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த பாலத்தில் வேகத்தை கட்டுப்படுத்த கேமரா பொருத்த வேண்டும். முறையாக டைவர்சன் செய்து விபத்தில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றார்.

கோவை – அவினாசி சாலை மேம்பாலத்திற்கு வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை பெயரைச் சூட்டுக!

0

பொது இடங்களுக்கு தேவர், தேவேந்திரர் பெயர்களை வைத்தால் சாதி கலவரம் வரும் வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு, நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது என்?” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது “X” வலைதள பக்கத்தில், “கோவையில் புதிதாக 1791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை – அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து கட்டப்பட்டிருக்கும் இப்பாலத்திற்கு இந்த நாட்டின் விடுதலைக்காக வீரத்துடன் போர் புரிந்து இன்னுயிர் ஈந்தபாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? அவ்வீரத்திருமகன் கழுத்திறுகி கசிந்து வெளியேறிய கடைசி மூச்சுக்காற்று அந்த மண்ணில் தானே உலாவிக்கொண்டு இருக்கிறது? நாங்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதற்காகத்தானே பாட்டன் தீரன் சின்னமலை உயிர் நீத்தார். அவர் பாதம் பட்ட மண்ணில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு அவருடைய பெயரைச்சூட்டி நாங்கள் நடமாடக்கூடாதா?
விடுதலை போராட்டக்களத்தில் தலையில் தடியால் தாக்கப்பட்டு தன்னுயிர் நீத்த பின்பும் விடுதலைக்கொடியை வீழ்ந்துவிடாமல் காத்த பாட்டன் கொடி காத்த குமரன் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? மாடு கூட இழுக்கத் திணறுகிற செக்கை கோவை கொடுஞ்சிறையில் தாயக விடுதலைக்காக இழுத்து, தன் சொத்தை எல்லாம் இழந்து, இறுதியில் மண்ணெண்ணெய் விற்று மண்ணை விட்டு மறைந்த கப்பலோட்டிய தமிழர் பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? இந்தி திணிப்பை எதிர்த்து 1938இல் தொடங்கிய முதலாவது மொழிப் போரில் 03.06.1938ஆம் நாள் கைது செய்யப்பட்டு முதலாவது வீரராக சிறைக்களம் புகுந்த மொழிப்போர் மறவர் பல்லடம் பொன்னுசாமி அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?உலகெங்கும் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கியே நீர் பாயும் என்ற இயல்புக்கு மாறாக, பள்ளத்திலிருந்தும் மேடான பகுதிக்கும் நீர் செல்லும் பாதையை உருவாக்க முடியும் என்பதைத் தம்முடைய நுண்ணறிவால் உணர்ந்து அறிவியல் வளர்ச்சியுறாத காலத்திலேயே பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போல் கால்வாய் வெட்டி காவிரியின் துணை ஆறுகளான பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைத்து, உலகம் வியக்க கீழிலிருந்து மேலாக நீரைத் திருப்பி, வறண்டு கிடந்த கொங்கு மண்டலத்தைப் பொன் விளையும் பூமியாக, பயிர் செழித்து உயிர் செழிக்கும் தாய்நிலமாக மாற்றிய பெரும்பாட்டன் காலிங்கராயன் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

கொங்கு நாட்டு மக்களால் அண்ணன்மார் சாமிகளாகப் போற்றி வணங்கப்பெறும் பண்பாட்டு நாயகர்களான பொன்னர் – சங்கர் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? உங்கள் தந்தையே அவர்களின் புகழ் வரலாற்றை பொன்னர் – சங்கர் திரைப்படமாக உருவாக்கினார்கள்தானே? அப்பெயரை வைத்திருக்கலாமே? இவர்களின் பெயரையெல்லாம் விடுத்து ஐயா ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததன் காரணமென்ன? ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் எடிசன் என்று எப்படி கூறுகிறீர்கள்? எடிசன் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. ஜி.டி.நாயுடு கண்டுபிடிப்புகளில் அப்படி எதுவொன்று இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது? எதற்காக அவர் பெயரை வைத்துள்ளீர்கள்?ஜி.டி. என்பது உயிரெழுத்தா? மெய்யெழுத்தா? ஆங்கிலம் தானே?. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கியவர்கள் ஜி.டி. என்று ஆங்கில முன்னொட்டுக்களில் பெயர் சூட்டுவது ஏன்? இதுதான் தி.மு.க ஆட்சியாளர்கள் தமிழை வளர்க்கும் முறையா?

எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது; எல்லாவற்றிலும் சாதியை ஒழித்துவிட்டோம் என்று பேசிய திராவிடத்திருவாளர்கள், பெயரின் பின்னால் சாதிப்பெயரை நீக்கிய திராவிட இயக்கம் என்று நூற்றாண்டு விழா கொண்டாடியவர்கள் ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன்? திராவிட இயக்கத்தின் பிதாமகர் பெரியாரின் உடனிருந்த உற்ற தோழரின் பெயரிலிருக்கும் சாதியையே ஒழிக்க முடியாதவர்கள் ஊரில் உள்ள சாதியை எப்படி ஒழிப்பீர்கள்? இதுதான் திராவிட இயக்கம் சாதியை ஒழித்த முறையா? சென்னையில் நந்தனம் சாலைக்கு முதலில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத்தேவர் சாலை என பெயர் வைத்துவிட்டு பிறகு அதை முத்துராமலிங்கனார் சாலை என்று மாற்றிய இவ்வரசு பாலத்திற்கு சாதியோடு பெயரை சூட்டுவது ஏன்?பொது இடங்களுக்கு தேவர், தேவேந்திரர் பெயர்களை வைத்தால் சாதி கலவரம் வரும்? வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு, நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி? நாங்கள் வாண்டையார் என்றால் வரும் சாதி, நாங்கள் படையாட்சி என்றால் சாதி, நீங்கள் நாயுடு என்றால் மட்டும் வராதா? நாயுடு என்பது சாதிப்பெயர் அல்லாமல் பொதுப்பெயரா? தமிழர்கள் நாங்கள் படையாட்சி, கவுண்டர், வாண்டையார், தேவர் என்று பேசினால், உடனடியாக சாதிவெறி என்று கூச்சலிடும் திராவிடத் திருவாளர்கள், ஜி.டி. நாயுடு என்று பெயர் வைப்பதற்கு மட்டும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காப்பது ஏன்? இது சாதிவெறி அல்லாமல் சிரங்கு சொறியா? இதுதான் பகுத்தறிவு, முற்போக்கு பெரியார் உரி உரியென உரித்த வெங்காயங்களா? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களை இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்? ஊரில் உள்ள தமிழ் சாதியை எல்லாம் ஒழித்துவிட்டு தங்கள் சாதியை காப்பாற்றுவதுதான் திராவிடத்தின் சாதி ஒழிப்பா?

இன்று ஒரு பக்கம் சாதிப் பெயர்களை நீக்குதல் / மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆணையாக வெளியிட்டுவிட்டு இன்னொரு பக்கம் சாதியோடு பாலத்திற்கு பெயரிடும் இரட்டை நிலைப்பாட்டுக்கு பெயர் தான் திராவிட மாடலா? கடந்த ஜூன் மாதம் தெருக்களுக்கு சாதிப்பெயரை நீக்க அரசாணை வெளியிட்டது திமுக அரசு. ஆதிதிராவிட நல விடுதி என்பதை சமூகநல விடுதி என்று வெறும் கட்டிடத்திற்குப் பெயர் மாற்றியதையே, சமூகநீதி சாதனைபோல் பேசிய திமுக அரசு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்று சாதிப்பெயரைச் சூட்டுவது அயோக்கியத்தனமல்லவா? தமிழர் மண்ணில் தமிழர்க்கென்று எந்த தனித்த அடையாளமும் இருக்கக்கூடாது என்ற தீய எண்ணத்தை தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்? இது தமிழ்ப்பேரினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும்.

ஆகவே, கோவை – அவினாசி சாலை மேம்பாலத்திற்கு ஐயா ஜி.டி.நாயுடு பெயரை வைக்கும் முடிவை கைவிட்டு, தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களாக, கொங்கு மக்களின் பண்பாட்டுப் பெருமைகளாகத் திகழும் பாட்டன்கள் தீரன் சின்னமலை, கொடி காத்த குமரன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், முதல் மொழிப்போர் வீரர் பல்லடம் பொன்னுசாமி, மாமன்னர் காலிங்கராயன், அண்ணன்மார் சாமிகளான பொன்னர் – சங்கர் ஆகியோரின் பெயர்களில் ஒன்றைச் சூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார் .

தவெக நிர்வாகி மதியழகனை 2 நாள் காவலில் எடுத்தது எஸ்ஐடி

0

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, கரூர் மேற்கு மாவட்ட தவெக பொதுச் செயலாளர் மதியழகனை 2 நாள் காவலில் எடுத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டது. தொடர்ந்து மதியழகன் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு கரூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. இந்த வழக்கு இன்று நீதிபதி பரத்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது, தவெக தரப்பில் ஏற்கெனவே போலீஸார் விசாரணை நடத்திவிட்டனர். அதனால் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த எஸ்ஐடி விசாரணையே தேவையில்லை என்று தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோவையின் புதிய அடையாளம்: தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு

0

கோவையின் புதிய அடையாளமாக மாறியுள்ள ஜி.டி.நாயுடு பெயரிடப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதனால் கோவை நகரில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல முன்பு 45 நிமிட பயணம் அமையும். ஆனால் இனி 10 நிமிடங்களாக குறையும் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவையில் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. கோவையில் அவினாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலமாக இது அமைந்துள்ளது. தமிழகத்தின் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை நத்தம் மேம்பாலம் சுமார் 7.3 கிமீ தூரத்திற்கு உள்ள நிலையில், இது அதைவிட பெரியதாக 10.1 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே மிக நீளமான இந்த உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இந்த பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தினை, முதல்வர் ஸ்டாலின் கோல்டு வின்ஸ் பகுதியில் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காரில் பயணித்தபடி மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மக்களை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கையசைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த பாலம் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாலம் திறப்பு விழாவையொட்டி நேற்று இரவு மேம்பாலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

4 வழித்தட உயர்மட்ட 8 வழித்தடங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்ததின் மூலம், நகரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி ஆகிய பகுதிகளுக்கும் இனி விரைவாக செல்ல முடியும். தமிழ்நாட்டில் முதல் முறையாக, பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள், உலக தரமான பாதுகாப்பு வசதிகள் மேம்பாலத்தில் செய்யப்பட்டுள்ளன. தற்போது கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்ல சுமார் 10 கிமீ தூரத்தை கடக்க குறைந்தது 45 நிமிடங்கள் ஆகிறது. ஆனால் இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்ததால், 10 நிமிடங்களில் செல்ல முடியும். விமான நிலையம், கொடிசியா, ஹோப் காலேஜ், நவ இந்தியா, லட்சுமி மில்ஸ், அண்ணா சிலை மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய சந்திப்புகளில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
தற்போது பொதுமக்களின் வாகனங்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. திறப்பு விழாவையொட்டி மேம்பாலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

0

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோவை அவினாசி ரோடு புதிய மேம்பாலம் திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவை வர இருப்பதால் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலாம்பூர் பைபாஸ் வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள்

(i) பேருந்து மற்றும் கனரக வாகனங்கள்

நீலாம்பூர் ஏர்போர்ட் வழியாக சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் ஆம்னி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து நகருக்குள் வருவதற்கு தடை செய்யப்படுகிறது.

மாறாக நீலாம்பூரிலிருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், இராமநாதபுரம், சுங்கம் வந்து வலது புறம் திரும்பி KR ரோடு, அவினாசி சாலை, அண்ணா சிலை வழியாக காந்திபுரம் வந்தடையலாம்.

(ii) இலரகு வாகனங்கள்

நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வரும் இலரகு வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவில் வலது புறம் திரும்பி தொட்டிபாளையம், காளப்பட்டி நால்ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.

நகருக்குள் இருந்து ஏர்போர்ட் வழியாக அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள்

(i) பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்

காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அவினாசி ரோடு, ஏர்போர்ட் வழியாக நகருக்கு வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி மில்லில் யு டர்ன் செய்து புளியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர், L&T பைபாஸ் வழியாக வெளியே செல்லலாம்.

காந்திபுரத்திலிருந்து சத்தி சாலை வழியாக கணபதி, வாட்டர் டேங்க், விளாங்குறிச்சி, காளப்பட்டி நால் ரோடு வழியாக L&T பைபாஸ் சென்று அடையலாம்.

(ii) இலரகு வாகனங்கள் மற்றும் நகர பேருந்துகள்

நகருக்குள் இருந்து அவினாசி ரோடு, ஏர்போர்ட் வழியாக செல்லும் இலரகு வாகனங்கள் மற்றும் நகர பேருந்துகள் டைட்டல் பார்க் வரை சென்று யு டர்ன் செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டும்.

விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், காந்தி மாநகர், கொடீசியா வழியாக செல்லும் கனரக வாகனங்கள் கொடீசியா வழியாக செல்வதற்கு தடை செய்யப்படுகிறது. அதற்கு மாறாக காளப்பட்டி நால் ரோடு, தென்னம்பாளையம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தண்ணீர் பந்தலில் இருந்து கொடீசியா வழியாக செல்லும் இலரகு வாகனங்கள் காந்தி மாநகர், பயனீயர் மில் வழியாக அவினாசி ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

(i)உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம், சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் அனைத்தும் குறிச்சி பிரிவில் இடது புறம் திரும்பி போத்தனூர் கடை வீதி, இரயில் கல்யாண மண்டபம், செட்டிபாளையம் ரோடு வழியாக ஈச்சனாரி அடைந்து சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.

(ii) பொள்ளாச்சி சாலை வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் கற்பகம் காலேஜ் சந்திப்பிலிருந்து மேம்பாலத்தின் மேல் வராமல் சர்வீஸ் சாலையில் வந்து ஈச்சனாரி கோயில் முன்பு யு டர்ன் செய்து, செட்டிபாளையம் ரோடு, இரயில் கல்யாண மண்டபம், போத்தனூர், நஞ்சுண்டாபுரம் ரோடு, இராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம்.

(iii) மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் பிள்ளையார்புரம் செக் போஸ்ட், சுகுனாபுரம் வழியாக கோவைப்புதூர் பிரிவு, குனியமுத்தூர், புட்டு விக்கி வழியாக நகருக்குள் வரலாம்.

(iv) மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் மாச்சாம்பாளையம் பிரிவிலிருந்து இடது புறம் திரும்பி ஞானபுரம், பாலக்காடு ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

தமிழகத்தில் மிக நீளமான பாலம் கோவையில் நாளை திறப்பு..

0

கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகின்றது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். எனவே, இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்தப் பாலமானது உப்பிலிபாளையம் முதல் கோல்ட் வின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் 4 வழிச் சாலையாக இருக்கும். இந்த பாலமானது தமிழ்நாட்டின் முதல் நீண்ட தொலைவுடைய மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலத்தில் விளக்குகள் பொருத்தும் பணி உள்ளிட்டவை முடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், ரூ.1,791.23 கோடி மதிப்பில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டப்பணி தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்டு, இந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் நாளை (அக்.9ம் )தேதி திறந்து வைக்கிறார்.

இந்த மேம்பாலத்தில் உள்ள சிறப்புகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியது, இந்த பாலத்தின் மொத்த தூரம் 10.10 கிலோ மீட்டர். ஓடுதள அகலம் 17.25 மீட்டர். 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவிநாசி சாலையில், 4 வழித்தட உயர்மட்டப் பாலம், 6 வழித்தடத்துடன் விரிவுபடுத்தப்பட்ட தரைத்தளச் சாலை என மொத்தம் 10 வழித்தடங்களுடன் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட பாலமாக இது உள்ளது.
உப்பிலிபாளையம் – கோல்டுவின்ஸ் வழித்தடத்தில் அண்ணாசிலை, பீளமேடு ஆகிய இடங்களில் ஏறுதளங்களும், ஹோப்காலேஜ், விமான நிலையம் ஆகிய இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது. கோல்டுவின்ஸ் – உப்பிலிபாளையம் வழித்தடத்தில் விமான நிலையம், ஹோப் காலேஜ் ஆகிய இடங்களில் ஏறுதளங்களும், பீளமேடு, அண்ணாசிலை ஆகிய இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது.விமான நிலைய ஏறுதளம் 577 மீட்டர், விமான நிலைய இறங்குதளம் 567 மீட்டர், ஹோப்காலேஜ் ஏறுதளம் 483 மீட்டர், இறங்குதளம் 527 மீட்டர், நவ இந்தியா ஏறுதளம் 561 மீட்டர், இறங்குதளம் 551 மீட்டர், அண்ணாசிலை ஏறுதளம் 411 மீட்டர், இறங்குதளம் 391 மீட்டர் தூரம் கொண்டதாகும். இதில் அண்ணாசிலை ஏறுதளம் மட்டும் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிலுவையில் உள்ளது.அணுகு சாலையாக கோல்டுவின்ஸ் அருகே 183 மீட்டரும், உப்பிலிபாளையம் அருகே 267 மீட்டரும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஹோப்காலேஜ் சந்திப்பில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் மீது 52 மீட்டர் தூர நீளத்து 8 இரும்பு கார்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது 725 டன் எடை கொண்ட தாகும். தூண்களில் முதலில் கட்டப்பட்டன. இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் ஓடுதளம் காரிடர், தென்னம் பாளையத்தில் உள்ள தனியிடத்தில் தயாரித்து இங்கு கொண்டு வந்து பொருத்தப்பட்டது.
20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, புதிய தொழில் நுட்பங்களுடன் ‘சைனஸ் பிளேட்’ பொருத்தப்பட்டுள்ளது. கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடத்திலிருந்து வெறும் 10 நிமிடமாக குறைகிறது. கோவை நகரிலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி செல்வதற்கு முன்பு 10 சிக்னல் சந்திப்புகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த மேம்பாலம் மூலம் அந்த பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறினர். இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘2020-ல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவிநாசி சாலை மேம்பாலம், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மக்களை சந்திக்க அனுமதி கோரி தவெக தலைவர் விஜய்

0

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதி கோரி தவெக தலைவர் விஜய் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்வதாக அறிவித்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அன்றிரவே முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் , திமுக அமைச்சர்களும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, பிற கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தனர். இருப்பினும், சம்பவத்தன்று இரவே சென்னைக்கு திரும்பிய தவெக தலைவர் விஜய், அடுத்த சில நாட்களில் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.இருப்பினும், ஓரிரு நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் விஜய். அவர் நேரில் செல்லாதது குறித்தும், அந்த வீடியோவில் பேசிய கருத்துக்களும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், விஜய்யின் செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு நேற்று ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் நேரில் சந்திக்க வருவதாகவும் அவர்களுக்கு உறுதியளித்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அறிவழகன், தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க அனுமதி அளிக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் எந்த தேதியில் அனுமதி கொடுத்தாலும் அன்று தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் அறிவழகன், “கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்” என தெரிவித்தார்.

மனுவிற்கு டிஜிபி அலுவலகத்தில் என்ன பதில் கொடுக்கப்பட்டது? விஜய் எப்போது செல்கிறார்? போன்ற பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விஜய்யின் வழக்கறிஞர் அறிவழகன் பதிலளிக்க மறுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.