Thursday, June 25, 2026
Home Blog Page 13

கோவையில் இரண்டு இடங்களில் புதிய போலீஸ் சோதனைச் சாவடிகள்!

0

கோவை – கேரளா எல்லைகளான வாளையாறு, வேலந்தாவளம் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இதில் கோவையிலிருந்து கேரளா செல்லும் வியாபாரிகளை குறிவைத்து அடிக்கடி வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எட்டிமடை பகுதியில் புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சுமார் 2 கோடி அளவிற்கான ஹவாலா பணம் பிடிபட்டுள்ளது. மேலும் பல வழிப்பறி சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவன நிதி பங்களிப்போடு கோவை – கேரளா எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் ஆகிய 2 எல்லைகளிலும் அதிநவீன வசதிகளுடான புதிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் வாளையாறு பகுதியில் ஏ.என்.ஆர் கேமரா பொருத்தப்பட உள்ளது. மேலும் இந்த இரண்டு சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் இருப்பதோடு அடிக்கடி வாகன சோதனைகளும் ஈடுபட உள்ளனர்.

மேலும்,இந்த நிகழ்ச்சியில் பேரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், கே ஜி சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் தங்கம் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

விஜய்க்கு கூடும் கூட்டம் தேர்தலில் ஓட்டாக மாறுமா? ஜான் பாண்டியன்

0

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் 4 கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, 25 பெண்களுக்கு வாழ்வாதார உதவிக்கு தையல் இயந்திரம், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரம், 200 பேருக்கு அரிசி, பருப்பு, வேஷ்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதை தொடர்ந்து ஜான் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதன் பின்னர் யாருடன் கூட்டணி? என்பது குறித்து தெரிவிப்போம். எந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அது நல்ல திட்டம் என்றால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்க்கட்சி என்பதால் திமுக உள்ளிட்டவர்கள் எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்வார்கள்.நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனிமவள கொள்ளை அதிகமாக இருக்கிறது. இதனை தடுக்க அந்த பகுதி மக்கள் வெகுண்டு எழ வேண்டும். விஜய்க்கு கூடும் கூட்டம் தேர்தலில் ஓட்டாக மாறாது. மக்கள் கூட்டத்தை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அவர் வரட்டும். தேர்தலை சந்திக்கட்டும். அரசியல் சூழ்நிலையை பொறுத்து தேர்தல் நேரத்தில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமையும்.
விரைவில் தமிழ்நாட்டிற்கு வர இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், அனைத்து கூட்டணி கட்சியினரும் ஒரே மேடையில் சந்திப்போம் என கூறியுள்ளார்கள். எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை அழைப்பு வந்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிமுக, திமுக என்ற 2 கட்சிகள் இடையே தான் போட்டி. மூன்றாவது, நான்காவது அணிகள் போட்டிக்கு வராது.பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறீர்கள். பெண்களை பெண்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் மதுக்கடைகள் நாட்டில் இருக்க தான் செய்யும். பெற்றோர் குழந்தைகளை சரியாக வளர்க்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் மதுவுக்கு அடிமையாக போகிறார்கள்? அனைத்துக்கும் அரசை குறை கூறக்கூடாது. நடிகர் விஜய் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அனைத்தையும் நிறைவேற்றி விட முடியாது” என்று ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

திருத்தணி கொடூரம்; வடமாநில இளைஞரின் தற்போதைய நிலை என்ன? – ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்

0

திருத்தணி ரயில் நிலையம் அருகே 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரின் கழுத்தில் கத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்துள்ளனர். அதனை தட்டிக்கேட்டதால் சிறுவர்கள் நான்கு பேரும் சேர்ந்து அந்த இளைஞரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். மேலும், அந்த கொடூர நிகழ்வை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் ஆகவும் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொடூர தாக்குதலுக்கு ஆளான வடமாநில இளைஞரின் தற்போதைய நிலை என்ன? குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விவரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 சிறுவர்களில் 3 பேர் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு மாற்றுத்திறனாளி (வாய் பேச முடியாத, காது கேளாத) சிறுவன் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். என தெரிவித்தார்.
தொடர்ந்து விவரித்த அவர், “எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒடிசாவை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ரயில் மூலம் தமிழ்நாடு வந்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக அவர் இங்கு சுற்றி வந்து உள்ளார். இந்த நிலையில், அந்த இளைஞர் சென்னையில் இருந்து ரயில் மூலம் திருத்தணிக்கு சென்றுகொண்டிருந்தார். அதே ரயிலில் அரக்கோணத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள், திருத்தணியை சேர்ந்த இரண்டு சிறுவர்களும் பயணித்துள்ளனர். அப்போது ரயிலில் அமர்ந்திருந்த வடமாநில இளைஞரை சிறுவர்கள் நான்கு பேரும் சேர்ந்து திடீரென தாக்கியுள்ளனர். மேலும், திருத்தணி ரயில் நிலையம் வந்ததும் அவரை கீழே இறக்கி பட்டாக்கத்தியால் வெட்டி உள்ளனர். அதனை வீடியோவாக பதிவு செய்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர்,” என்று கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், “ஒடிசாவை சேர்ந்த இளைஞர் வேலைக்காக சென்னை வரவில்லை. அவர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தவர் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு எத்தனை வெட்டு காயங்கள் என்று தெரியவில்லை, ஆனால் அதிக அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக கொலை முயற்சி (BNS 109) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து குற்றத்தில் ஈடுபட்ட நான்கு சிறுவர்களை சம்பவம் நடந்த 28ஆம் தேதியே பிடித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட நீதிபதி முன் அவர்களை ஆஜர்படுத்தி மூன்று சிறுவர்களை செங்கல்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பினர். அதில் ஒரு சிறுவரை மட்டும் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் தாக்கப்படவில்லை. அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. புகார் கொடுத்தவர் கூறிய தகவலின்படி, ”ஏன் எங்களை முறைத்துப் பார்த்தாய்” என கேட்டு சிறுவர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். சிறுவர்கள் நான்கு பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தார்களா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்போது வரை அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அவர்கள் வைத்திருந்த இரண்டு பட்டாக்கத்திகளும் வீட்டிலிருந்து கொண்டு வந்ததாகவும், அவர்களுக்கும் மற்றொரு கும்பலுக்கும் முன்விரோதம் இருந்ததால், கத்தியுடன் சுற்றி திரிந்ததாக தெரிவித்தனர். கைதான சிறுவர்கள் மீது எந்த வழக்குகளும் இல்லை, அவர்களிடமிருந்து இரண்டு பட்டாக்கத்தி, இரண்டு செல்ஃபோன்களை பறிமுதல் செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்குப்பின் அவரது வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு மருத்துவமனையில் இருந்து சென்றுள்ளார்” என்று தெரிவித்தார்.

மேலும், ” திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் 500 கிராம் மெத்தபெட்டமைன், 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 100 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள், 60,000 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்குகளில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு சென்று தொடர்புடையவர்களை கைது செய்துள்ளோம். கடந்த ஆறு மாதத்தில் ஆந்திரா மற்றும் ஒடிசா சென்று 8 வழக்குகளில் சுமார் 1,000 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர்புடையவர்களை கைது செய்துள்ளோம்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வடமாநில நபர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். இதுபோன்று வேறு எந்த சம்பவமும் நடைபெறவில்லை. சின்ன சின்ன சம்பவங்கள் நடைபெறும்போது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
சிலர் சமூக விரோத செயல்களை செய்து இணையதளங்களில் ரீல்ஸ் பதிவேற்றி வருகின்றனர். அதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதுபோன்ற ரீல்ஸ்கள் வெளியிட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளோம். மேலும் எதிர்காலம் கருதி பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரைகளையும் வழங்கி வருகிறோம் என்று ஐஜி அஸ்ரா கார்க் கூறினார்.

தமிழ்நாட்டின் முதல் வன விலங்கு சிறப்பு சிகிச்சை மறுவாழ்வு மையம் – திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

0

கோவை மாவட்டம், வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியக வளாகத்தில், தமிழ்நாடு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டனர். முன்னதாக, வனத்துறைக்காக புதிதாக வாங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை அவர் பார்வையிட்டார். பணியின்போது உயிர் நீத்த வனத்துறையினருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கோவையில் தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 123 துப்பாக்கிகள், 19 பிஸ்டல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வனத்துறைக்கு வழங்கினார். மேலும், கோவை மாவட்டம் சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் ரூ.19.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இது தமிழ்நாட்டில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட முதல் சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையமாகும். அதேபோல், ரூ.8 கோடி மதிப்பீட்டில் கோவை சாடிவயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை முகாம் மற்றும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட மின்னணு ஆவண காப்பக சேமிப்பகத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த மின்னணு ஆவண காப்பகத்தின் மூலம் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆவணங்களை பார்வையிட முடியும்.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.31.72 கோடி மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் உட்பட ரூ.162.52 கோடி மதிப்பீட்டில் 107 முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதையடுத்து 10,626 பயனாளிகளுக்கு ரூ.136.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.முன்னதாக விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கோவைக்கு புத்தாண்டு பரிசாக ரூ.10 கோடி மதிப்பில் புதிய ஹாக்கி மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இனி சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் இங்கும் நடைபெறும். SIHS காலனியில் உயர் மட்ட ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 2010 ஆம் ஆண்டு கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது ஆனால், அதிமுக ஆட்சியில் அதனை கிடப்பில் போட்டுவிட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்த மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

கோவையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மேம்பாலம்..!

0

கோவை சிங்காநல்லூர் அடுத்த SIHS காலனியில் ரயில்வே தண்டவாளம் செல்வதால் அதனை கடப்பதற்கு உயர்மட்ட மேம்பாலம் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ரயில்வே தண்டவாளத்திற்கு கீழ் சுரங்க வழி அமைத்து தரப்பட்டது. ஆனால் மழை காலங்களில் மழை நீர் தேங்கி விடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். எனவே உயர்மட்ட மேம்பாலம் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்த நிலையில் 2010ம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் போது அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் நிலங்கள் கையப்படுத்தப்பட்டு 2013ம் ஆண்டு மேம்பால வேலைகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது.

இதனிடையே நிலம் கையகப்படுத்தும் பொழுது உரிமையாளர்களுக்கு போதிய தொகை கிடைக்காத காரணத்தினால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது முடிவுக்கு வந்தது. மேலும் மேம்பால பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்றது. அதனால் அந்த மேம்பால பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். பின்னர் 2021ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சியில் மேம்பால பணிகள் முடிவடைந்தது. சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு 55.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு முடிக்கபட்ட இந்த மேம்பாலத்தை, இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

ஆயுள் தண்டனையை எதிர்த்து பவாரியா கொள்ளையர் மேல்முறையீடு – காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.

0

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனத்தை கொலை செய்து, 62 சவரன் நகைகளை கொள்ளையடிக்கபப்ட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, பவாரியா கொள்ளையர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், சில காலம் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஜாமீன் பெற்ற 3 பெண்கள் தலைமறைவான நிலையில், கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்து விட்டனர்.மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த மாதம் தீர்ப்பளித்தது. மேலும், ஜெயில்தார் சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த மனுவில், அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மேல் முறையீட்டு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் பி. தனபால் அமர்வு, நான்கு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும்படி, பெரியபாளையம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி!

0

கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்கள் ஒன்றிணைந்து இவ்விழாவைக் கொண்டாடினர். இதையொட்டி, டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று காலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல்வேறு
பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான கிறிஸ்தவ மக்களுடன் இணைந்து அவர் பிரார்த்தனைகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் திருவிழாவுக்குரிய மகிழ்ச்சி, சிந்தனை மற்றும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் பிரார்த்தனைகள், கிறிஸ்துமஸ் பாடல்கள் மற்றும் கீர்த்தனைகள் இடம்பெற்றன. மேலும், டெல்லி பிஷப் மேதகு பால் ஸ்வரூப் பிரதமருக்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது “X” சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “டெல்லியில் உள்ள ‘தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன்’ தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை வழிபாட்டில் கலந்து கொண்டேன். இந்த வழிபாடு அன்பு, அமைதி மற்றும் கருணை ஆகிய காலத்தால் அழியாத செய்தியைப் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், “அனைவருக்கும் அமைதி, கருணை மற்றும் நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கேரளா பறவைக் காய்ச்சல் எதிரொலி- தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு

0

கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்க உத்தரவு.

கால்நடை மருத்துவர்களோடு இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தமிழ்நாடு பொதுசுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கோழி, வாத்து போன்றவை இறைச்சி மற்றும் முட்டைக்காக பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணைகளில் வளர்த்து வரும் கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து மடிந்தன. இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டது. அதன்படி பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை மொத்தமாக அழிக்க கால்நடை பராமரிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கவும், கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசிக்கு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கால்நடை மருத்துவர்களோடு இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தமிழ்நாடு பொதுசுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தாயை பிரிந்த கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழப்பு…!

0

கோவை மாவட்டம் மருதமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டெருமை, புலி, காட்டுப்பன்றி போற்றவன விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக மருதமலை சுற்றுவட்டாரப் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில்,நேற்று அதிகாலை மருதமலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கருஞ்சிறுத்தை ஒன்று, தனது குட்டியை அங்கு யாரும் வசிக்காத வீட்டில் விட்டுவிட்டு சென்றது. இதில், குட்டியின் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் சென்று பார்த்தபோது அங்கு கருஞ்சிறுத்தை குட்டி தனியாக இருந்தது தெரியவந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கருஞ்சிறுத்தை குட்டியை பத்திரமாக மீட்டு கூண்டிற்குள் அடைத்தனர். தொடர்ந்து, குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். இதற்காக குட்டி கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதனுள் குட்டியை வைத்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நேற்று மதியம் முதல் கண்காணித்து வந்தனர். அப்போது நள்ளிரவு 1. 45 மற்றும் அதிகாலை 4.30 மணி அளவில் இரண்டு சிறுத்தைகள் குட்டி அருகே வந்து செல்வது கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, 4.30 மணிக்கு குகையில் இருந்து கருஞ்சிறுத்தை குட்டி வெளியேறியுள்ளது.

இந்நிலையில், வனத்துறையினரால் உருவாக்கப்பட்ட குகைக்கு அருகில் கருஞ்சிறுத்தை குட்டி அசைவில்லாமல் இருந்துள்ளது. இதனை கண்ட வனத்துறையினர், வனக் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள், குட்டி உயிரிழந்ததை உறுதி செய்தனர். தொடர்ந்து குட்டியின் உடலை பிரேதப்பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த அறிக்கை வெளியான பிறகே சிறுத்தைக் குட்டி உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துக்கு அனுமதி – பாஜக கடும் எதிர்ப்பு

0

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா இந்து முன்னணி, பாஜகவினரின் பலத்த எதிர்ப்புக்கு இடையே கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மலையில் ஏற்றப்படும் கொடி கம்பத்தை காவல்துறை பாதுகாப்புடன் பத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றதால் மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது.
இதற்காக 21 ஆம் தேதி மலை மேல் உள்ள தர்காவில் கொடியேற்ற நிகழ்வை நடத்துவதற்காக இஸ்லாமிய சமூகத்தினர் சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
கோட்டாட்சியர் உத்தரவைத் தொடர்ந்து 20 ஆம் தேதி மலை மேல் உள்ள தர்கா கொடிக்கம்பத்தை பழுது பார்ப்பதற்காக மலைப்பாதை வழியாக இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மலைப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பகுதி மக்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அகல் விளக்கேற்றி போராட்டம்

இதனைத் தொடர்ந்து சந்தனக்கூடு கொடியேற்ற விழாவை முன்னிட்டு மலைக்குச் செல்லும் பாதையில் நேற்று காலை 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் மலைக்கு செல்ல இஸ்லாமியர்கள் 100 பேருக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் பரவியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மலையடிவாரத்தில் உள்ள தங்களை மலைக்குச் செல்ல அனுமதிக்காமல் வெளியூரில் இருந்து வரக்கூடிய இஸ்லாமியர்களை எப்படி அனுமதிக்கலாம் என கூறி கையில் அகல் விளக்குடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்களை திருநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களை பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும். பொதுமக்களை மாலை 6 மணியை கடந்தும் விடுவிக்காததால் அவர்களை விடுவிக்க கோரி பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் – மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து போலீசார் அவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சந்தனகூடு விழா தொடக்கம்

இந்த நிலையில் சந்தனக்கூடு விழா பெரிய ரத வீதியில் உள்ள தர்காவில் இரவு 8 மணி அளவில் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் கொடி எடுத்துச் செல்லப்பட்டு பெரிய ரத வீதி, கீழ ரத வீதி, 16 கால் மண்டபம் வழியாக மீண்டும் பள்ளிவாசலை அடைந்தது. மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட கொடி பள்ளிவாசலில் தொழுகைக்கு பின்னர் ஏற்றப்பட்டது. இதனிடையே,ஏற்கனவே மலை மேல் ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தை பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள்
காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் மலைப்பாதை வழியாக மலை மேல் உள்ள தர்காவிற்கு கொண்டு சென்றனர்.அப்போது, மலைக்கு செல்ல தங்களை அனுமதிக்காமல் இஸ்லாமியர்களை மட்டும் எப்படி அனுமதிக்கலாம் எனக்கூறி, பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள குடியிருப்புவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ இஸ்லாமியர்களை மட்டும் அனுமதிக்கும் காவல்துறை தங்களை ஏன் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை? என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள், தங்கள் கையில் அகல் விளக்கை ஏந்தி, மலை மேல் தீபம் ஏற்ற செல்வதாக கூறி ‘அரோகரா’ கோஷமிட்டு காவல்துறையினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுப்பை தாண்டி செல்ல முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மற்றொரு பாதையில் கையில் அகல் விளக்குகளுடன் சென்று தீபம் ஏற்ற முயற்சித்தவர்களை காவல்துறை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து தாங்கள் கொண்டு வந்த தீபத்தை பழனியாண்டவர் கோவிலில் ஏற்ற அனுமதி தாருங்கள் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஒருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, பெண் ஒருவர் கோயில் முன் விளக்கேற்றி வழிபாடு செய்தார்.

பல்வேறு பரபரப்புகளுக்கு பின் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டது. அதேசமயம் மலை அடிவாரத்தில் உள்ள மக்கள் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.