Thursday, June 25, 2026
Home Blog Page 12

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மிரட்டி வீடியோ; தவெக மாவட்ட செயலாளர் ‘லெப்ட்’ பாண்டி மீது வழக்குப்பதிவு

0

தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் பாண்டி (எ) லெப்ட் பாண்டி. சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அடிக்கடி வீடியோக்களை லெப்ட் பாண்டி வெளியிடுவது வழக்கம்‌‌.இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜயை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வந்தார். மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயையும், தவெக தொண்டர்களை குறித்தும் கட்சி மேடைகளில் விமர்சித்து வந்தார். இந்நிலையில், லெப்ட் பாண்டி சீமானையும், சாட்டை துரைமுருகனையும் மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டி விடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் தேனி மாவட்ட கிழக்கு செயலாளர் ஜெயக்குமார் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், லெப்ட் பாண்டியை விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.

தவெகவுக்கு வாக்களிக்க வெளிநாடுகளிலிருந்து 3 லட்சம் பேர் வருவார்கள்…! -செங்கோட்டையன்

0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு களத்தில் முதன்முறை போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட அளவிலான கழக செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று (ஜன 25) நடைபெற்றது. அந்த கூட்டத்தில், எதிர்வரும் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, செயல் வீரர்கள் மத்தியில் விஜய் பேசினார். அதில் குறிப்பாக “அரசியலில் இருக்கும்போதும் சரி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் சரி, விஜய் ஊழல் செய்யவே மாட்டான். ஒரு துளி ஊழல் கறை கூட படியாது. படியவும் விடமாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறினார்.இந்த நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று விட்டு அக்கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தலைவர் (விஜய்) செயல்வீரர் கூட்டத்தில் நேற்று உரையாற்றி இருக்கிறார். அவர் உரையைப் பொறுத்தவரை தமிழகம் வளம் பெறுவதற்கு, தூய்மையான ஆட்சியை தமிழகத்தில் தருவதற்கு ஊழலற்ற ஆட்சியை தருவேன் என்று தெளிவாக முழக்கமிட்டு இருக்கிறார்.

அதனை கருத்தில்கொண்டு தான் தமிழர்கள் தேர்தல் நாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர். தேர்தல் தேதியை அறிவித்தவுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஏறத்தாழ 3 லட்சம் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாக்களிக்க தயாராகி வருகின்றனர்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், உலக வரலாற்றிலேயே நம்முடைய தலைவர் விஜய் ஒருவருக்கு தான் இத்தகைய புகழ் உள்ளது என்று கூறினார்.

தேர்தலில் போட்டியிட போவதில்லை – டிடிவி தினகரன் பேட்டி

0

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கங்காரு குட்டி போல சுற்றிக்கொண்டு வரும் ஒருவருக்கு (உதயநிதி ஸ்டாலின்) முதலமைச்சர் பட்டம் சூட்ட திமுக காத்திருக்கிறது. ஊழல் என்றாலே திமுக தான் நியாபகத்திற்கு வரும். அறிவியல் பூர்வமாக ஊழல் செய்பவர்கள் எங்களை குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண் குழந்தை முதல் மூதாட்டி வரைக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் கடத்தலில் தமிழ்நாடு முக்கிய மாநிலமாக மாறியுள்ளது” என்றார்.

தே.ஜ., கூட்டணியில் இணைந்ததை குறித்து பேசிய அவர்  வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. என்னுடன் பல ஆண்டுகளாக ஆதரவாக இருந்தவர்களை அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. தமிழ்நாட்டை ஊழல் ஆட்சியில் இருந்து மீட்டெடுத்து அம்மாவின் ஆட்சியை கொண்டு வர பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். அம்மாவின் இடத்தில் எங்களுக்கு மோடி தான் இருக்கிறார். பங்காளி சண்டை இல்லாத குடும்பங்களே இல்லை. எங்கள் வீட்டு குடும்ப விஷயங்களை நான் மனம் விட்டு பேசினேன், தற்போது அம்மாவின் ஆட்சி அமைய ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் பிரிந்து தேர்தலை சந்தித்ததால் தான் 2019 எம்.பி தேர்தல், 2024 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. நாங்கள் ஒன்றாக போட்டியிட்டு இருந்தால் மேலும் 20- 25 தொகுதியில் வெற்றிப் பெற்று இருப்போம். என தெரிவித்தார்.தே.ஜ., கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ” அதுகுறித்து அவர் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ் மீண்டும் இணைய அவருக்கு தேனியில் இருந்து நான் அழைப்பு விடுக்கிறேன் ஓபிஎஸ் வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கு உள்ளது. அவர் சென்ற உயரங்களுக்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஆனால், யார் பேச்சையோ கேட்டு தர்ம யுத்தம் நடத்தினர். அது மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் 2024 இல் மீண்டும் முதலமைச்சராகி இருப்பார்.

அதிமுகவை ஊழல் கட்சி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்திருப்பது குறித்து பேசிய டிடிவி தினகரன்  எங்கள் தலைவர் எம்ஜிஆர் படத்தை வைத்துக்கொண்டு எங்களின் கட்சியை ஊழல் கட்சி என விஜய் சொல்கிறார். முதலில் அவரது திரைப்படங்களுக்கான கள்ள டிக்கெட் விற்பனை ஊழல்களை விஜய் தடுத்து நிறுத்த வேண்டும். நாங்கள் அமைதியாக இருப்பதால் அவர் எதுவேண்டுமானாலும் பேசலாமா? நாங்கள் வெகுண்டெழுந்தால் என்ன ஆவது? விஜயகாந்த் போல தேர்தலில் தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்று நான் கூறி இருந்தேன். ஆனால், அவர் எம்.ஜி.ஆர் போல வருவார் என்று நான் சொல்லவில்லை என தெரிவித்தார்

பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டம் தொடக்கம்..!

0

பதிவுத் துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தின் ஸ்பிரின்ட் 1 செயல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பதிவுத் துறை, பொதுமக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களை பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத் துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள் ஏற்படுத்துதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 160 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பதிவுத் துறையில் 6.2.2000 அன்று ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தை தொலைநோக்கு கண்ணோட்டத்துடன் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடக் களப்பணியின்றி ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை எளிய முறையில் வில்லங்கச்சான்றில் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகள் அடங்கிய செயல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.22) தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த திட்டத்தின் பயன்கள்

காகிதமில்லா ஆவணப்பதிவு
காகிதமில்லாமல் இணைய வழியில் ஆவணங்கள் சமர்ப்பித்திடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சொத்தினை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவரின் அடையாளமானது ஆதார் வழி பெறப்பட்ட குறுஞ்செய்தி (OTP) அல்லது விரல் ரேகை வழி சரிபார்க்கப்பட்டு ஆவணதாரர்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆவண விபரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சார் பதிவாளரின் மின்னணு கையொப்பம் இடப்பட்டு மின்னணு ஆவணமாக இணையதள வழி பொதுமக்களுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும்.

நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு
கட்டுமான நிறுவனத்திடமிருந்து புதிய அடுக்குமாடி குடியிருப்பினை வாங்கும் போதும், புதிதாக உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளிலிருந்து மனைகளை மட்டும் வாங்கும் போதும், ஆன்லைன் வழி கட்டணம் செலுத்திய உடன் பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே இணைய வழியாக ஆவணம் பதிவுக்கு சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும். சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விபரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, இணையதள வழியாக ஆவணதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற அரசு வாரியங்களால் எழுதிக் கொடுக்கப்படும் சொத்துக்களுக்கு சம்பந்தப்பட்ட வாரிய அலுவலகத்திலிருந்தே பத்திரத்தை பதிவுக்கு தாக்கல் செய்து, பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை உடனே வாரிய அலுவலகத்திலிருந்தே தரவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தானியங்கி பத்திர உருவாக்கம்
பொதுமக்கள் பிறர் உதவியின்றி தங்களின் ஆவணத்தை தாங்களே உருவாக்கும் வண்ணம் கேள்வி, பதில் வடிவிலான தானியங்கி பத்திரம் உருவாக்கிடும் வகையில், இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் சொத்து தொடர்பான குறைந்தபட்ச விபரங்களை அளித்து, உருவாக்கப்படும் ஆவணத்தை காகிதமில்லா ஆவணப்பதிவு முறையிலோ அல்லது அச்சுப்பிரதி எடுத்து வழக்கமான பத்திரப்பதிவு முறையிலோ பதிவு செய்து கொள்ளலாம்.

விரைவுக் குறியீட்டின் (QR Code ) வழி பணம் செலுத்தும் முறை
நடைமுறையில் உள்ள ஆன்லைன் கட்டண வசதியுடன் ரூ.1,000-க்கும் குறைவாக பணம் செலுத்த வேண்டிய நிகழ்வுகளில், கூடுதல் வசதியாக பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்பட்ட குறுபணப் பரிவர்த்தனை இயந்திர (Point of Sales) விரைவுக்குறியீட்டின் (QR code with UPI) வழி பணம் செலுத்தும் வசதியும் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு மறுவிற்பனை ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் வசதி
அடுக்குமாடி குடியிருப்பு மறுவிற்பனை ஆவணத்தில் கார் பார்க்கிங் மற்றும் மின்தூக்கி போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் நிலையில், கட்டட களப்பணியின்றி பதிவு செய்த அன்றே ஆவணங்களை திருப்பித் தரும் வகையில் இந்த மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிட்ட நகல்கள் உடனுக்குடன் வழங்கும் வசதி
பொதுமக்கள் சொத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகல் கோரும் நிகழ்விலும், வெளிநாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அளிக்கும் பொது அதிகார ஆவணங்கள், நீதிமன்ற ஆணைகள், கடன் ஆணைகள் மற்றும் குறிப்பு ஆணைகள் (Memo) உள்ளிட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை ஆன்லைன் வழி உடனுக்குடன் மையக் கணினியின் மின்னணு கையொப்பத்துடன் வழங்கும் புதிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை எளிய முறையில் வில்லங்கச்சான்றில் தேடுதல்
ஓர் ஆவணத்தின் பதிவு எண்ணை கொடுத்து தேடுதல் மேற்கொள்ளும் போது, அதனுடன் தொடர்புடைய அனைத்து முன்பதிவு மற்றும் பின்பதிவு ஆவணங்கள் வில்லங்கச் சான்றில் வரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வருவாய் மாவட்டம், வருவாய் வட்டம் மற்றும் வருவாய் கிராமம் ஆகியவற்றினை உள்ளீடு செய்தும் சொத்துப் பரிவர்த்தனை விபரங்களை தேடும் வசதி கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.பதிவுத் துறையில் தற்போது தனித்தனியாக வில்லங்கச் சான்று வழங்கப்பட்ட நிலையை மாற்றி, ஒரு கிராமமானது வெவ்வேறு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும், ஒரு கிராமத்தை பொறுத்து ஒரே ஒரு கணினி கட்டணத்துடன் ஒரே வில்லங்கச்சான்றாக வழங்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

கைபேசி செயலி மற்றும் புலனவழி செய்தி
‘TNREGINET’ என்ற கைபேசி செயலி வழியாக வில்லங்கச்சான்று, ஆவணப்பதிவுக்கான முன்பதிவு வில்லை (Token) நிலை, வழிகாட்டி மதிப்பு, திருமணம், சங்கம், கூட்டு நிறுவனம், சீட்டு நிறுவனம், ஆவணப்பதிவு விபரம், சொத்தின் மதிப்பு கணக்கீடு ஆகியவற்றை எளிதாக அறியும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுத்துறையின் வெவ்வேறு சேவைகளின் நிலை தொடர்பாக புலனம் (WhatsApp) வழியாகவும் செய்தி அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்போர் சங்கப்பதிவு
தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் 2022-ன் படி, சங்கங்களை பதிவு செய்ய, பொதுமக்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே முற்றிலும் இணையதள வாயிலாக பதிவு செய்யும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட திருமணத் தேடுதல்
மணமகன் (அ) மணமகள் பெயர், பிறந்த தேதி விபரத்தை உள்ளீடு செய்து திருமண விபரங்களை பெறும் வசதியும் இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலாண்மை தகவல் அமைப்பு
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை கண்காணிக்க ஏதுவாக அனைத்து நிலை உயர் அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்டார் 3.0 ஸ்பிரின்ட் 1 மென்பொருள் திட்டத்தின் மூலம், பொதுமக்களின் நலனுக்காக மேற்கண்ட 18 சேவைகள் செயல்படுத்தப்படும்.

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

0

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளது. அதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேபோல் தவெக இந்த தேர்தலில் முதல்முறையாக போட்டியிடவுள்ளது. இதனால் தவெக என்ன சின்னத்தில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கேற்ப தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் பொதுச் சின்னம் வழங்கக்கோரி விண்ணப்பிக்கப்பட்டது.தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இதற்காக நவம்பர் மாதமே டெல்லியில் முகாமிட்டு விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் தேர்தல் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கான 190 சின்னங்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு கட்சியும் 10 சின்னங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.அதன்படி தவெக தரப்பில் முதல் சின்னமாக விசில் சின்னத்தை அளிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. விசில் சின்னம் கிடைக்கவில்லை என்றால், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட சின்னங்கள் கேட்கப்பட்டன. இந்த நிலையில் தவெகவுக்கு பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை ஒதுக்கி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, தேர்தல் ஆணைய விதிகளின்படி கணக்குகளை தாக்கல் செய்ததால், அந்தக் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக விஜய்யின் வி செண்ட்மெண்ட்டும் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விஜய் பெயரில் உள்ள V என்ற வார்த்தையை கட்சியின் பெயரில் வெற்றி (V) என்ற கொண்டு வந்தார்.தற்போது அதே வி செண்ட்மெண்ட் தவெக சின்னத்திலும் இடம் பெற்றுள்ளது. இதனால் “V” செண்டிமெண்ட் விஜய்க்கு தேர்தலில் வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

21 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் – கோவை மாநகர புதிய காவல் ஆணையர் அதிரடி..!

0

கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று உள்ள கண்ணன் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து உள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், சிங்காநல்லூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் சரவணம்பட்டி விசாரணை பிரிவுக்கும், வெரைட்டி ஹால் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி பெரிய கடைவீதி விசாரணை பிரிவுக்கும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் சுந்தராபுரத்துக்கும், ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி கரும்புக்கடை இன்ஸ்பெக்டராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.மேலும் காத்து இருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் மாநகர குற்ற பிரிவு 2 க்கும், சகிலா மாநகர குற்றப்பிரிவு 1 க்கும், ராஜசேகரன் சிங்காநல்லூர் சட்ட – ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், ராஜசேகர் ரேஸ்கோர்ஸ் விசாரணை பிரிவுக்கும், கண்ணன் குனியமுத்தூர் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சாரதா வடவள்ளி இன்ஸ்பெக்டராகவும், மணிவண்ணன் பீளமேடு விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பிரகாஷ் வெரைட்டி ஹால் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், விஜயேந்திரன் சிங்காநல்லூர் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், கிருஷ்ண லீலா உக்கடம் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், வெங்கடேசன் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர் கூடுதலாக காட்டூர் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றுவார்.மாநகர குற்றப்பிரிவு 1 இன்ஸ்பெக்டராக நிர்மலா போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு கிழக்கும், ஈரோட்டில் பணியாற்றிய பூரண சந்திரன், பாரதி மேற்கு மகளில் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், பிரபா மத்திய மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், சுந்தராபுரம் இன்ஸ்பெக்டர் கண்ணையன் குனியமுத்தூர் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் கட்டுப்பாட்டு அறைக்கு காத்து இருப்போர் பட்டியலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

0

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரொக்கத்துடன் வழங்குவது வழக்கம். எனினும் கடந்த ஆண்டு ரொக்கப்பரிசு வழங்கப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி ரூ.5000 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதனிடையே, நடப்பாண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பொங்கல் பண்டிகைக்கு, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரொக்க பணத்தையும் தமிழக அரசு வழங்கும் என மக்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்தது.பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்காக பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு என மொத்தம் ரூ.6,936 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு சுமார் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.3000 பணம் வழங்கப்படவுள்ளது.

பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே, இந்த பொங்கல் பரிசு தொகுப்பை அனைத்து நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று ஆலந்தூரில் பொங்கல் பரிசு விநியோகத்தை முதலவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், தமிழக அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் பொங்கல் தொகுப்பு விநியோகத்தை இன்று தொடங்கி வைத்தனர்.

புகார்களை 30 நாளில் விசாரித்து 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

0

அரசு நிலம், நீர்நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார்கள் வந்தால் 30 நாட்களில் விசாரணையை துவங்கி 3 மாதங்களில் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரக்கோணம் நகராட்சியில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிடக் கோரி துரை சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் அளித்து மூன்று மாதங்களாகியுள்ளது. இந்த புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரக்கோணம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

மேலும், அரசு நிலங்கள், நீர்நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தால் அவற்றின் மீது 30 நாட்களுக்குள் விசாரணையை துவங்க வேண்டும். மூன்று மாதங்களில் விசாரணையை முடித்து ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கும் வகையில் இந்த உத்தரவு நகலை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லையா -கோவையில் பொதுமக்கள் வருத்தம்

0

கோவையில் மினி சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு பைப்புகள் சாலையில் திடீரென சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை எப்பொழுதும் அதிகமாக இருக்கும், இன்று பிற்பகல் திருச்சி சாலையில் ரெயின்போ பேருந்து நிறுத்தம் அருகே ஒரு மினி சரக்கு வாகனம் இரும்பு பைப்புகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வாகனத்தில் போதிய பாதுகாப்புகள் இன்றி அடுக்கி வைக்கப்பட்டு இருந்த இரும்பு பைப்புகள் திடீரென சாலையில் சரிந்து விழுந்தன. பைப்புகள் விழுவதை கவனித்த ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். பைப்புகள் சரிந்த போது அந்த வாகனத்தின் அருகே யாரும் இல்லை என்பதால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
வாகனத்தின் கொள்ளளவு மற்றும் நீளத்தை விட அதிக எடை மற்றும் அபாயகரமான வகையில் பொருட்களை எடுத்துச் செல்லும் இதுபோன்ற வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற விபத்து ஏற்பட்டது, கவுண்டம்பாளையம் அருகேயும் இதே போன்று ஒரு விபத்து நடைபெற்று அதில் பஸ் கண்ணாடி உடைந்தது அதில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர். கோவையில் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் இதுபோன்ற விதிமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில் இனியும் போலீசார் மவுனம் காக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

0

டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு!

சென்னை: நாளை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், இன்றிரவு தமிழ்நாடு முழுக்க பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ள நிலையில், மொத்தம் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் Armed Force DGPயாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்புத்தாண்டு நாளை வரும் நிலையில், தமிழ்நாட்டில் முக்கிய பதவிகளில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசுப் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. முதலில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியான நிலையில், இப்போது ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுக்க சுமார் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் Armed Force DGPயாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஏடிஜிபி சந்தீப் மிட்டல் பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் டி.ஜி.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஜிபி பால நாகதேவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சிபிசிஐடி ஐஜி அன்பு, ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி கமிஷனர் சங்கர் மற்றும் தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மொடாக் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. தாம்பரம் காவல் ஆணையராக ஏடிஜிபி அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படி தமிழ்நாடு முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சிலருக்குப் பதவி உயர்வும் தரப்பட்டுள்ளது.