Thursday, April 23, 2026
Home Blog Page 12

துணை குடியரசு தலைவர் வருகை..! பாதுகாப்பு வளையத்தை மீறி நுழைந்த இளைஞர்கள் கைது…

0

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கோவை வந்த நிலையில். டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக குடியரசுத் துணைத் தலைவர் வருகையை ஒட்டி அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. அப்போது திடீரென மணிக்கூண்டு நோக்கி ஒருவழிப்பாதையில் போலீசாரின் தடையை மீறி ஹெல்மெட் அணியாமல் போதை இளைஞர்கள் இருவர் அதிவேகமாக அவ்வழியாகச் சென்றனர். அப்போது போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போதும் அதிவேகமாக தப்பிச்சென்றனர். அப்போது புனித மைக்கேல் பள்ளி அருகே அதிவேகமாக சென்ற இளைஞர்களின் வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதி இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக இருவரையும் பிடித்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் போதையில் அதிவேகமாக போலீசாரின் தடையை மீறி இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நபர்கள் கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஆனீஷ் ரகுமான் மற்றும் ஆஷிக் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு போதை பொருட்கள் விற்பனை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 நாள் சுற்றுப்பயணம் – மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

0

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக இன்றிரவு மதுரை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 63 ஆவது குருபூஜை விழா நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் மற்றும் எஸ்ஆர்எம்யூ உறுப்பினர்கள் சால்வை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி மற்றும் ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவில்பட்டி சென்று அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி திருஉருவ சிலையை திறந்து வைத்த பின் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் முக்கூடல் சென்று இரவு தங்குகிறார். நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு தென்காசி மாவட்டம் சீவநல்லூர் சென்று, அங்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை துவக்கி வைத்து விட்டு பின்பு அங்கிருந்து புறப்பட்டு அனந்தபுரம் சென்று அங்கு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு அமர் சேவா சங்கம் சென்று அங்கு பார்வையிட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு, மதியம் தென்காசி விருந்தினர் மாளிகை சென்று தங்குகிறார். பின்னர் நாளை மாலை மதுரை வந்து அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

நாளை மறுநாள் காலை அங்கிருந்து 8 மணிக்கு கோரிபாளையம் சென்று அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தெப்பக்குளம் சென்று அங்கு மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதன் பிறகு அங்கிருந்து கிளம்பி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் சென்று அங்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

இரட்டை கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை!

0

இறைச்சி கடையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய கோயம்புத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் .

கோவை திருமால் வீதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்தவர் மொய்தீன் பாஷா. கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இவரது கடையில் வேலை செய்யும் சிறுவன் இருந்த போது, உக்கடம் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்த சாதிக் அலி என்பவர் நான்கு கிலோ மாட்டு ஈரல் மற்றும் எலும்பு துண்டுகளை எடுத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் கடையில் இல்லாத போது எப்படி இறைச்சி மற்றும் எலும்புகளை எடுத்துச் செல்லலாம்? என உக்கடம் பகுதிக்கு சென்று சாதிக் அலி கடையின் முன் நின்று மொய்தீன் பாஷா கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அன்றைய தினம் இரவு சமரசம் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பை சேர்ந்தவர்களும் இடையர் வீதியில் உள்ள பேக்கரி அருகே அன்று இரவு சந்தித்தனர். அப்போது இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் மொய்தீன் பாஷா மற்றும் அவரது நண்பர் அபிப் முகமது ஆகியோரை சாதிக் அலி தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக சாதிக் அலி, ஷேக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகிர் உசேன், அசாருதீன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஷேக் அலி 2019 ஆம் ஆண்டு வழக்கு விசாரணை நடைபெறும் போது உயரிழந்தார். இந்த கொலை வழக்கு கோயம்புத்தூர் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்கள் மற்றும் விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட சாதிக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகிர் உசேன் மற்றும் அசாருதீன் ஆகிய ஐந்து பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டணை மற்றும் தலா 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோயம்புத்தூர் 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் தீர்ப்பளித்தார். இரட்டை கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கோட்டூர் அரசு பள்ளியில் இருக்கை உடைந்து விழுந்து 3 மாணவிகள் காயம்!

0

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்து, பிரார்த்தனை முடிந்தவுடன் அவரவர் வகுப்பறைகளுக்குச் சென்றனர். அதில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள், தங்களது வகுப்பறைக்குச் சென்று இரும்பால் ஆன இருக்கையில் அமர்ந்தனர். ஏற்கனவே வெல்டிங் விட்டிருந்த அந்த இருக்கை மாணவிகள் அமந்தவுடன் திடீரென உடைந்து விழுந்தது. இதில் 3 மாணவிகள் கீழே விழுந்தனர். இதனை பார்த்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக மாணவிகளை கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அந்த மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவியின் தந்தை சதீஷ் கூறுகையில், “இன்று காலையில் பள்ளிக்கு சென்ற எனது மகள் கீழே விழுந்ததாக பள்ளி ஆசிரியர்கள் மூலமாக தகவல் தெரிய வந்தது. அதன் பேரில் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றோம். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எனது மகளை அழைத்து வந்துள்ளோம். காலுக்கு கீழ்ப்புறம் அடிபட்டதால் எக்ஸ்ரே எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த வெள்ளை நடராஜ் கூறுகையில், “தமிழக அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் அமரும் இருக்கைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் அமரும் இருக்கை முறையாக பராமரிக்கப்படாததே காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

கொள்ளையனிடமே கொள்ளை.. லஞ்ச வழக்கிலும் சிக்கிய இன்ஸ்பெக்டர்..!

0

கன்னியாகுமரி மாவட்டம், நேசமணி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களிலும் இவர் பணி புரிந்துள்ளார். இந்நிலையில், இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது ஒருவர் கொள்ளையடித்த 38 சவரன் நகைகளில் சுமார் 20 பவுன் நகைகளை இவர் கொள்ளையடித்ததாக வழக்கு நடந்து வருகிறது.

அது தவிர, ஏற்கனவே அன்பு பிரகாஷ் வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. அப்போது அவரது வீட்டில் மேற்படி திருட்டு நகைகள் இருந்ததும் அம்பலமானது. அது தொடர்பான வழக்கும் லஞ்ச ஒழிப்பு பிரிவில் நிலுவையில் உள்ளது. நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளராக தற்போது அவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ‘சந்தை’ ராஜன் என்பவர் தன்னை ஒரு வழக்கில் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் பொய்யாக சேர்த்து உள்ளதாகவும், அதில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ‘சந்தை’ ராஜனை விடுவித்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அன்பு பிரகாஷ்க்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்க 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை பெற்ற அவர், மீதி ரூ.1,15,000 தந்தால் மட்டுமே வழக்கில் இருந்து விடுவிக்க இயலும் என்றும், இல்லை என்றால் குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்த்து விடுவதாகவும் ‘சந்தை’ ராஜனை மிரட்டியதாக கூறப்படுகிறது.லஞ்சம் கொடுக்க விரும்பாத ‘சந்தை’ ராஜனை லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து உள்ளார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாயை அவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். பின்னர் அன்பு பிரகாஷ் கேட்டபடி வெள்ளமடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற ‘சந்தை’ ராஜனை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து உள்ளார்.

அப்போது லஞ்ச பணத்தை வாங்கிய அன்பு பிரகாஷை அங்கு மறைந்திருந்த இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்கால், உதவி ஆய்வாளர் பொன்சன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், அருண் அசரியா உள்ளிட்ட போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியிலும், போலீஸ் வட்டாரத்திலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றத்தை தடுக்க வேண்டிய காவல் அதிகாரியே குற்றச்செயலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டு வருகிறது’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

0

கோவை சுங்கம் பகுதியில் இந்திய கட்டடக்கலை வல்லுனர்கள் குழுமம் சார்பில் கட்டடக்கலை கண்காட்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறுகையில், ”ஸ்மார்ட் சிட்டி திட்டம் பிரதமர் மோடியின் சிந்தனையில் உருவான அற்புதமான திட்டம். இந்தியாவிலேயே அதிகமான ஸ்மார்ட் சிட்டிகள் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. அதிலும் கோவையில் 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் இருக்கக்கூடிய பல்வேறு விஷயங்களை எடுத்து புதிதாக கல்வி கொள்கை திட்டத்தில் செயல்படுத்துகிறோம் என்று திராவிட மாடல் அரசு கூறுகிறது. தமிழ்நாடு கல்வியில் சிறந்தது என்று மாநாடு நடத்துகிறார்கள். அதே சமயம் பல்வேறு பள்ளிக்கூடங்கள் மூடப்படுகிறது. சமூக நீதி பேசுகின்ற திராவிட மாடல் அரசாங்கத்தில் சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டு வருகிறது” என்றார். பல்கலைக்கழகங்கள் மசோதா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு மசோதாவை கொண்டு வருவதற்கு முன் கலந்துரையாடி கொண்டு வர வேண்டும். அவசரகதியில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதும், அதன் பிறகு கூட்டணி கட்சிகள் எல்லாம் கூறியதை அடுத்து அதனை வாபஸ் பெறுவதும் என தமிழக அரசு டிராமா போடுகிறது” என்றார்.கரூர் சம்பவம் தொடர்பாக பேசிய அவர், “கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் குறைந்தபட்சம் மக்களை பார்க்கிறார் என்பதே நல்ல விஷயம் தான். சிபிஐ விசாரணை முடிந்து உண்மை வெளிவரும் பொழுது நீதி கிடைப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.

PM SHRI திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு கூடிய விரைவில் இணையும். கேரள மாநிலம் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று ஏற்றுக் கொண்டார்கள். தமிழக அரசும் இதனை ஏற்றுக் கொள்கின்ற காலம் நிச்சயம் வரும். கல்வியில் அரசியலை கலக்க வேண்டாம். யதார்த்தத்தை புரிந்து கொண்டு அந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளது என்ற கருத்து அபாண்டமான குற்றச்சாட்டு. நாட்டில் அனைத்து கட்சிகளும் சுதந்திரமாக செயல்படலாம். யாரும் யாரையும் முடக்க முடியாது” என்றார்.

சூரசம்ஹாரத்துக்கு முழுவீச்சில் தயாராகும் திருச்செந்தூர்..! 4,000 போலீசார் பாதுகாப்பு

0

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (வியாழக்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 8ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்காக இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலை சுற்றி குவிய தொடங்கியுள்ளனர்.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டுன் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்கும் மக்களின் கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்கும் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையில் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு; தூத்துக்குடி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் வாகனங்கள் J.J.நகர், ஆதித்தனார் மணிமண்டபம் எதிர்புறம், IMA மஹால் அருகில் (பிரசாத் நகர்), ITI எதிர்புறம் (விடுதி அருகில்), ITI வளாகம், ஆதித்தனார் விடுதி எதிர்புறம் ஆகிய 6 வாகன நிறுத்துமிடங்களிலும், திருநெல்வேலி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் வாகனங்கள் சுப்பையா லேண்ட் (சபி டிரேடர்ஸ் அருகில்), வியாபாரிகள் சங்கம் (சபி டிரேடர்ஸ் எதிர்புறம்), வேட்டையாடும் மடம் (TNSTC BUS) அன்புநகர் (குமாரபுரம்), குமரன் ஸ்கேன் சென்டர் எதிர்புறம், ஆதித்தனார் குடியிருப்பு (கோவிந்தமாள் கல்லூரி எதிர்புறம்), அருள்முருகன் நகர் (பாண்டி சங்கராச்சாரியார் பள்ளி அருகில்) ஆகிய 7 வாகன நிறுத்துமிடங்களிலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரமன்குறிச்சி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் வாகனங்கள் பால்பாயாசம் லேண்ட் ( FCI குடோன் கிழக்கு பகுதி), சுந்தர் லேண்ட் (பால்பாயாசம் லேண்ட் எதிர்புறம்), செந்தில்குமரன் பள்ளி (TNSTC BUS) ஆகிய 3 வாகன நிறுத்துமிடங்களிலும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

மேலும் தூத்துக்குடி சாலை வழியாக திருச்செந்தூருக்கும், திருநெல்வேலி சாலை வழியாக திருச்செந்தூருக்கும் வாகன அனுமதிச் சீட்டுடன் (Green Pass) வரும் வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச் வரை வந்து TB சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. 3 வாகன நிறுத்திமிடங்களிலும் பரமன்குறிச்சி சாலை வழியாக வாகன அனுமதிச் சீட்டுடன் (Green Pass) வரும் வாகனங்கள் திருச்செந்தூர் முருகா மடம் வழியாக அரசு மருத்துவமனை பின்புறம் மார்க்கமாக மெயின் ஆர்ச் வரை வந்து மேற்படி TB சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 வாகன நிறுத்திமிடங்களிலும் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்லாமல், ஆறுமுகநேரி DCW ஜங்ஷன், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி உடன்குடி வழியாக செல்லவும். அல்லது சண்முகபுரம் ரயில்வே கேட், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லவும்.
குரும்பூர் மார்க்கத்திலிருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லவும்.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக செல்லவும். அல்லது ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம், நடுநாலுமூலைக்கிணறு விலக்கு வழியாக காந்திபுரம், ராணிமஹாராஜபுரம் வந்து திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லவும்.

நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புயல்

0

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் (அக்.27) காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக உருவெடுக்கும். அதன்பிறகு அடுத்த 48 மணி நேரங்களில் வடமேற்காக ஆந்திர பிரதேச கடற்கரையை நோக்கி நகரலாம்.

எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், சென்னை ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற நண்பர்கள் 4 பேர் உயிரிழப்பு…

0

சிறுவாணி சாலையில் அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நண்பர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், கோவை செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் அதிவேகமாக வந்த கார் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவற்காக ஒதுங்கிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த நண்பர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருந்த இரண்டு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். படுகாயங்களுடன் போராடி வரும் மற்றோருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பேரூர் போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரீஷ், பிரகாஷ் மற்றும் திருச்சியை சேர்ந்த சபா ஆகிய மூன்று பேரும், பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள தனியார் வாட்டர்வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத்துறை 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களான, தஞ்சையை சேர்ந்த பிரபாகரன் மற்றும் அரியலூரை சேர்ந்த அகத்தியன் ஆகியோரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில், நேற்று ஹரீஷ் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 5 பேரும், வாட்டர் வாஷ் செய்வதற்காக வந்த காரை எடுத்துக் கொண்டு பேரூர் பகுதிக்கு சென்றனர்.

அங்கு பிறந்தாளை கொண்டாடி விட்டு மீண்டும் பணிபுரியும் இடத்திற்கு காரில் வந்தனர். அப்போது காரை பிரகாஷ் ஓட்டி வந்தார். இதில், கார் பேரூரை அடுத்த செட்டிபாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக இடது புறம் ஒதுங்கியது. இந்த சமயத்தில், ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணித்த ஹரீஷ், பிரகாஷ், அகத்தியன், சபா ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பிரபாகரனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்ற நண்பர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சாலையோரம் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடங்கியது சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரூர் துயரத்திற்கு மெளன அஞ்சலி!

0

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கரூர் கூட்ட நெரிலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், வால்பாறை எம்எல்ஏவாக இருந்த அமுல் கந்தசாமி உள்ளிட்டோரின் மறைவுக்கும் பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாம் நாளான நாளை (அக்.15) 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும். மூன்றாம் நாள் (அக்.16) கூட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து, 4ஆம் நாள் (அக்.17) கூட்டத்தொடரில் 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை நடைபெறும். சட்டமன்ற கூட்டம் நடைபெறும் அக்.15, 16, 17 ஆகிய தேதிகளில், பேரவை துவங்கிய பின் வினாக்கள் – விடைகள் நேரம் இடம்பெறும். அதனை தொடர்ந்து 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்னறிவு பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மேலும் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாளைய பேரவை கூட்டத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், அதிமுகவில் செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளதால், பேரவையில் அவர் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.