மதுரையை சேர்ந்த சசிகுமார், ரம்யா தம்பதியினர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மருத்துவ பொருட்களை வாங்கி, அதற்கான தொகையை செலுத்தாதது தொடர்பாக விஜயகுமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரர்கள் மருந்து பொருட்களை வாங்கியதற்காக 15 லட்சம் ரூபாய் செலுத்தியிருக்க வேண்டும், ஆனால் மதுரை திலகர் திடல் காவல் நிலைய போலீசார் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து செய்ததில், சுமார் 8 லட்சம் ரூபாயை மனுதாரர்கள் காவல் நிலையத்தில் செலுத்தி ரசீது பெற்றுள்ளனர். இது அரசு வழக்கறிஞராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது
இது காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எவ்வாறு கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு உதாரணமாக திகழ்வதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கைது நடவடிக்கைக்கு பயந்து காவல் நிலையத்தில் மனுதாரர்கள் பணத்தை செலுத்தியிருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
மேலும் திலகர் திடல் காவல் நிலையம் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து நீதிமன்றமாக செயல்பட்டுள்ளது என்பது தெரியவந்திருப்பதாகவும், இந்த வழக்கில் மதுரை மாநகர துணை காவல் ஆணையரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்ப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு திலகர் திடல் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர துணை காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காவல்நிலையமா? கட்டப்பஞ்சாயத்து மன்றமா? – நீதிமன்றம் கேள்வி
துரைமுருகன் மீதான பிடிவாரண்டை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் துரைமுருகன் மீதான பிடிவாரண்டை செப்டம்பர் 15 அன்று அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் துரைமுருகன் 2006-2011 காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராகச் செயல்பட்டார். 2007-2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மீது புகார் எழுந்தது. 2011-ல் துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி சாந்தகுமாரி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2017-ல் வேலூர் சிறப்பு நீதிமன்றத்தால் இருவரும் விடுவிக்கப்பட்டார்கள். வேலூர் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி சாந்தகுமாரி ஆகிய இருவரையும் விடுவித்த வேலூர் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
பிறகு, வழக்கானது சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜராக வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாந்தகுமாரி மட்டும் நேரில் ஆஜராகி தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்தார். துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லை. எனவே, சாந்தகுமாரியின் பிடிவாரணட்டை மட்டும் நீதிபதி திரும்பப் பெற்று உத்தரவிட்டார். துரைமுருகன் ஆஜராகததால் அவருக்கு எதிரான பிடிவாரண்டை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கானது செப்டம்பர் 15 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. செப்டம்பர் 15-க்குள் துரைமுருகன் நேரில் ஆஜரானால் கைது நடவடிக்கையிலிருந்து அவர் தப்பலாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
காட்டுமன்னார் கோவிலில் பேட்டியளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக கூட்டணியில் இருந்து அமமுக விலகியதாகக் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கவில்லை என்றும் அவர் அறிவித்தார். மேலும் என்டிஏ கூட்டணியில் துரோகம் தலைவிரித்து ஆடுவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் ஏற்கனவே வெளியேறிய நிலையில் தற்போது டிடிவி தினகரனும் வெளியேறி இருக்கிறார்.
கவிதாவை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்!
பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் கே. கவிதாவை இடைநீக்ககுவதாக அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானாவின் முன்னாள் அமைச்சரும் பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஹரிஷ் ராவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை கவிதா முன்வைத்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், கடந்த பிஆர்எஸ் ஆட்சியில் காலேஸ்வரம் திட்டத்தில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடர்பான புகார் குறித்த விசாரணையை சிபிஐ-யிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.
இந்த நிலையில், பிஆர்எஸ் ஆட்சியில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ், முறைகேடுகள் செய்து சொத்துகளை குவித்து, தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து சந்திரசேகர் ராவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கே. கவிதா திங்கள்கிழமை குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பிஆர்எஸ் மூத்த நிர்வாகியுமான சந்தோஷ் குமாரும் தனது தந்தைக்கு எதிராக செயல்படுவதாக கவிதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கே. கவிதாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாகவும் சேதத்தை விளைவிக்கும் வகையிலும் இருப்பதால் அவரை உடனடியாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தடைந்தார்.
மைசூருவில் இருந்து சிறப்பு இந்திய விமானப் படை விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகர மேயர் பிரியா, டி.ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி. வெங்கட்ராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்திய ராணுவத்தின் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.
பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தம்பாக்கம் சென்றார். அங்கு உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார். இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

பின்னர் நாளை காலை 9:30 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு செல்கிறார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். ரங்கநாதரை தரிசித்து விட்டு அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஸ்ரீரங்கம் பஞ்சகரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் நேற்று ஹெலிகாப்டரை இறக்கி ராணுவ அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு இன்று முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் திருவாரூர் நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஜனாதிபதி சென்னை மற்றும் திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மூளையை தின்னும் அமீபா.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு
கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவின் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மேனிங்கோஎன்செபாலிடிஸ் பாதிப்பு கேரளா மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை சுமார் 42 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் காரணமாக பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மூன்று மாத குழந்தை மற்றும் 52 வயதுடைய மூதாட்டி உட்பட 2025 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்காக கேரள அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதாவது, கிணறுகள், நீச்சல் குளங்கள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை ஆய்வு செய்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் இந்த தொற்று நோய் பரவாமல் இருக்க மாவட்ட அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக, குளங்கள், ரிசார்ட்டுகளில் இருக்கக்கூடிய நீச்சல் குளங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும், நீச்சல் குளங்களில் இருக்கும் தண்ணீரை நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாற்றி குளோரின் பவுடர் சேர்த்து சுத்திகரிக்க வேண்டும் எனவும் கட்டாய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மாசடைந்த நீர்நிலைகளில் குழந்தைகள் விளையாடுவதை தவிர்க்க பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மூளையை தின்னும் அமீபா என்பது நன்னீரில் மட்டுமே வளரக்கூடியது. இது நீச்சல் குளங்களிலோ அல்லது குளங்களிலோ தண்ணீரை நாம் பயன்படுத்தும் போது, குளிக்கும் பொழுது மூக்குவழியாக உடலுக்குள் சென்று, மூளையை சென்றடையும். அங்கு இருக்கும் திசுக்களை அழித்து இந்த பாதிப்பு தொடங்குகிறது. இந்த அமீபா உடலுக்குள் சென்ற ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் மோசமாகத் தொடங்கும். குறிப்பாக தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், நரம்பு வலி, வலிப்பு, மயக்கம் போன்றவை அடங்கும்.
காட்டு யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டும்- கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை…
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், நரசிபுரம், பன்னிமடை, உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் ஊருக்குள் புகுந்து கடைகள் நியாய விலை கடைகளையும் சேதப்படுத்தும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகிறது.
இதன் காரணமாக மாதந்தோறும் லட்சக்கணக்கில் இழப்பீடு ஏற்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வெளியில் செல்வதற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக பொதுமக்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனவே காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளும் பொதுமக்களும் அந்தந்த பகுதிகளில் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வனத்துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காட்டு யானைகளை பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும்,வனத்துறையினர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.
சுங்கக்கட்டணத்தை மீண்டும் உயர்த்துவது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயல் – சீமான்
தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டிலுள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (31.08.25) முதல் 45 ரூபாய் வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்களின் விலையை பன்மடங்காக உயர்த்தி, அதனால் அத்தியாவசியப் பொருட்களின் கட்டற்ற விலையேற்றத்திற்கு வழிவகுத்துவிட்டு, சுங்கச்சாவடிக் கட்டணத்தையும் அவ்வப்போது உயர்த்தும் மத்திய பாஜக அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூட வேண்டுமென அரசியல் கட்சிகள், மண்ணுரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் மீண்டும் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது, வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயலாகும். எரிபொருள் மற்றும் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு இப்போது சுங்க கட்டணத்தையும் உயர்த்துவது துளியும் மனச்சான்றற்ற கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடேயாகும். ஏற்கனவே, விலைவாசி உயர்வு உயர்ந்து செல்கையில் அதனைக் குறைக்க முயற்சி செய்யாத மத்திய பாஜக அரசு சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி, மீண்டும் சுங்கக்கட்டணத்தை உயர்த்த முனைவது அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்படும் பொருளியல் போராகும்.
சொந்த நாட்டிலேயே 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்திப் பயணம் செய்வதென்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்கூட இல்லாத அடிமை நிலையாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைக்கப்படும் பணிக்குச் செலவான தொகையினைவிட அதிகமாக, தொடர்புடைய நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் வசூல் செய்துகொண்ட பிறகும், தொடர்ந்து 15, 20 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதக் கணக்கு வழக்குமின்றித் தொடர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதும், அரசு அதை அனுமதிப்பதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. வசூல் செய்யப்படும் கட்டணக்கணக்கை குறைத்துக்காட்டி மிகப்பெரிய மோசடியில் சுங்கவசூல் செய்யும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதையெல்லாம் தடுக்க ஒரு சாலை அமைக்கப்பட்டதற்கான செலவு எவ்வளவு? ஒவ்வொரு நாளும் சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்படும் தொகை எவ்வளவு? எத்தனை ஆண்டுகளில் அது நிறைவடைகிறது? சாலையை பராமரிக்க ஒவ்வொரு மாதமும் ஆகும் செலவு எவ்வளவு? மீதமாகும் வசூல் கட்டணம் யாருக்குச் செல்கிறது? என்பது குறித்த தகவல்கள் என யாவற்றையும் நாட்டிலுள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளும் வெளிப்படையாக அறிவிக்காதவரை சுங்கக்கட்டணம் என்பது பகல் கொள்ளையாகத்தான் இருக்கும். ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் முடிவை உடனடியாகக் கைவிடுவதோடு, மக்களின் உழைப்பைச் சுரண்டி பகற்கொள்ளையில் ஈடுபடும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூட வேண்டுமெனவும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன். மக்களை வஞ்சிக்கும் தனியார் நிறுவனங்களின் சுங்க கட்டணக் கொள்ளையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் முற்றுகையிடும் மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி விரைவில் முன்னெடுத்து, தமிழர் நிலத்தில் எந்தவொரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிக்க முடியாத நிலையை உருவாக்கும் என்றும் எச்சரிக்கிறேன், என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா இனி நண்பர்கள்..!மத்திய அரசு விளக்கம்
எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருக்கிறார். இரு தலைவர்களும் பேசிக்கொண்டது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விவரித்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது, “இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர். நட்பு ரீதியான இந்திய-சீனா உறவு, இரு நாடுகளின் 208 கோடி மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் இரு தலைவர்களும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுடன் உறவை மேம்படுத்த நான்கு முன்மொழிவுகளை சீன அதிபர் முன்வைத்தார். பதிலுக்கு உறவுகளின் சீரான முன்னேற்றத்திற்கு எல்லையில் அமைதி எவ்வளவு முக்கியம் என்பதை மோடி வலியுறுத்தினார். ஆனால் இரு தலைவர்களும், வேறுபாடுகள் சச்சரவுகளாக மாற அனுமதிக்கப்படக்கூடாது என ஒப்புக்கொண்டனர். வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேசிய தலைவர்கள், உலகளாவிய வர்த்தகத்தை மேம்படுத்த இருநாட்டின் பொருளாதாரம் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினர். வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கப் பணியாற்றும் அதேவேளையில், அரசியல் கண்ணோட்டத்தில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலா விசாக்கள் மீண்டும் தொடங்கப்பட்டதன் அடிப்படையில், நேரடி விமானங்கள் சேவையை கொண்டுவருவது, விசா செயல்முறைகளை எளிதாக்குவது குறித்தும் பேசியிருக்கிறார்கள். இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தன்னாட்சிப் பாதையைப் பின்பற்றுகின்றன என்று பிரதமர் கூறியிருந்தார். மேலும், இந்தியா மற்றும் சீனா உறவுகள் ஒரு மூன்றாவது நாட்டின் பார்வையில் பார்க்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தியிருந்தார். பயங்கரவாதம் போன்ற சவால்கள் மற்றும் பலதரப்பு மன்றங்களில் நியாயமான வர்த்தகத்தின் தேவை உட்பட, இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களில் பொதுவான தளத்தை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். 2026 இல் இந்தியா நடத்தும் BRICS உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதேபோல பதிலுக்கு இந்தியாவின் BRICS தலைமைக்கு தனது ஆதரவை தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.
கோவையில் 25 டன் ரேசன் அரிசி பறிமுதல்..!
கோவையில் கடந்த 28.08.2025-ம் தேதி அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் முரளிதரன், சார்பு ஆய்வாளர் ஞானபிரகாஷ், தலைமைக்காவலர் முத்துப்பாண்டி மற்றும் கோயம்புத்துார் பறக்கும்படை குடிமைப் பொருள், தனி வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் மதுக்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது, அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கோவை மதுக்கரை பாலத்துறை நால்ரோடு சந்திப்பு அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்துக்கு இடமான லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டனர், அதில் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட சுமார் 25 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தவர்,
இது தொடர்பாக வாகன ஓட்டுநர் சின்னச்சாமி என்பவரை விசாரித்த போது கர்நாடகா மாநிலம், பங்காரு பேட், பெங்கலூர் கிராமம், ஸ்ரீ லஷ்மி சீனிவாச அரிசி இண்டஸ்ட்ரீஸ் என்ற மில்லின் உரிமையாளர் ராஜூ (எ) சத்தியராஜூ என்பவர் புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் குருணை அரிசி ஆகியவைகளை கர்நாடகா மாநிலத்திலிருந்து கேரளா மாநிலம், பாலக்காட்டில் உள்ள ஆசிப் டிரேடர்ஸ், விக்னேஸ் டிரேடர்ஸ், பெருமாள் டிரேடர்ஸ் மற்றும் கிருஷ்ண டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய அனுப்பி வைத்துள்ளதை விசாரணையில் கண்டுபிடித்தனர்.
காவல் கண்காணிப்பாளர் பாலாஜிசரவணன் மற்றும் சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோரின் உத்தரவின் பெயரில்
ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் லாரியை கைப்பற்றி, ஓட்டுநரான சின்னச்சாமியை கைது செய்தனர், மேலும் உரிமையாளர் ராஜூ (எ) சத்தியராஜூ என்பவர் மீது பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினரால் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.











