கோவையில் அட்வான்ஸ் பணத்தைப் பறித்துக் கொண்டு குடும்பத்தை நடுத்தெருவில் வீசிய வீட்டு உரிமையாளர் – மேம்பால அடியில் பள்ளி குழந்தைகளுடன் தவிக்கும் வரும் பெண்.
கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் வறுமையின் பிடியில் சிக்கிய ஒரு ஏழைக் குடும்பத்தை, வீட்டின் உரிமையாளர் இரக்கமின்றி நடுத்தெருவில் தூக்கி வீசியுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒட்டுமொத்த கோவையையும் உறைந்துபோகச் செய்து உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூபாய் 30,000 முன் தொகை கொடுத்து ஒரு குடும்பத்தினர் குடியேறி வசித்து வந்து உள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த வேலை முடங்கிப் போனதால், அவர்களால் வீட்டு வாடகையைச் சரியாகச் செலுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டின் உரிமையாளர், மனிதாபிமானமே இல்லாமல் அவர்கள் ஏற்கனவே கொடுத்து இருந்த முன்தொகை 30,000 ரூபாயையும் மொத்தமாகப் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.அதோடு நிறுத்தாமல், ‘இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது’ என மிரட்டி, அவர்களை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார். வேறு வழியின்றி, நேற்று நள்ளிரவு முதல் பள்ளிக்குச் செல்லும் தங்களது பிஞ்சு குழந்தைகளுடன், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஆவாரம்பாளையம் மேம்பாலத்தின் அடியில் உள்ள குளிர்ந்த சாலையில் பரப்பி வைத்து விட்டு, அந்தப் பெண் தனித்து தவித்து வருகிறார். விடிந்தால் பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள், புத்தகப் பைகளுடன் சாலையோரப் புழுதியில் படுத்துறங்கும் இந்தக் கொடூரக் காட்சி பொதுமக்களைக் கண்ணீர் சிந்த வைத்து உள்ளது. ஏழைக் குடும்பத்தின் இயலாமையைப் பயன்படுத்தி அட்வான்ஸ் பணத்தையும் அள்ளிக் கொண்டு, குழந்தைகளைப் பனியில் தவிக்கவிட்ட அந்த வீட்டு உரிமையாளருக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த அவல நிலை குறித்துத் தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர், நடுத்தெருவில் தவிக்கும் அந்தப் பெண்ணிற்கும் அவரது குழந்தைகளுக்கும் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் தற்காலிக மறுவாழ்வு மற்றும் சட்ட ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


