அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ,பட்டக்காரன் புதூர் மற்றும் கரப்பாளையம் புதூர் ஆகிய கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பட்டக்காரன் புதூர் கிராமத்தில் உள்ள சில வீடுகளில் வசிப்பவர்கள் குடிநீர் வசதியின்றி அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து அவர்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் சிலர், ஊராட்சி குடிநீர் குழாயில் இணைப்பு எடுத்து அந்த வீடுகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளனர். தவெகவினர் ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு குழி தோண்டி குடிநீர் இணைப்பு கொடுத்த நிலையில், அது குறித்து அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு கொடுத்தது குறித்து அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலத்திற்கும் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், எங்களிடம் அனுமதி பெறாமல் எப்படி குழி தோண்டினீர்கள்? எப்படி குடிநீர் இணைப்பு கொடுத்தீர்கள்? என தவெக நிர்வாகிகளை கேள்வி எழுப்பினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தவெகவினர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மற்றொரு தரப்பினர் ஆளும் கட்சி என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? இதற்கு அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தனர். இதனையடுத்து தோண்டிய குழிகளை மூடியதுடன், சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
தவெக ஆட்சி அமைந்த பிறகு அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அவ்வப்போது மருத்துவமனை, மாநகராட்சி மண்டல கூட்டங்களில் அனுமதி இன்றி நுழைந்து ஆய்வு மேற்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு கொடுத்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


