முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அங்கு சென்ற திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

அவருடன் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு, திமுக துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ ராசா எம்பி, கனிமொழி எம்பி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் நினைவிடத்தில் “புத்தெழுச்சி நாள் அகவை 103” என்ற வாசகம் மலர்களால் எழுதப்பட்டுள்ளது.

தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு எதிரே உள்ள கருணாநிதியின் திருவுருவ சிலைக்கும் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கும் அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், 75 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து, அங்குள்ள கருணாநிதியின் திருவுருவச்சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார். கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தலைவரின் பிறந்தநாள்! தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சு வரை, தமிழினத்திற்காக – தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்.வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது. நீங்கள் நிறைந்த போது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.

உறுதியாய்ச் சொல்கிறோம்… மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம். உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்


