டெல்லி: எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எல்.ஐ.சி. பங்கு விற்பனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர் பாபு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு செய்ய மறுத்தவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சேனனி ராயப்பேட்டையில் சித்தி புத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரியபாளையத்து அம்மன் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றார். அதிகாரிகளை ஆய்வு செய்ய மறுக்கப்பட்டது தொடர்பாக சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் ஆதீனங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எதிர்காலங்களில் பட்டினப்பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் ஆய்வு.
மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மான்கோவில் சாலையில் குழியும் குண்டுமாக தண்ணீர் தேங்கி நின்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த பகுதியை நகராட்சி அதிகாரிகள் நகர மன்ற தலைவர், நகர மன்ற துணைத் தலைவர், நகரமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டு விரைவாக சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை வழங்கினார் சபாநாயகர்
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் ஒரு மாத சம்பளத்திற்கான காசோலையை வழங்கினார் சபாநாயகர் அப்பாவு
முதல்வர் பாராட்டு.
மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மாநகர காவல்துறை துரிதமாக செயல்பட்டு 6 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை கைது செய்ததற்காக அவர்களது பணியினை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை பாராட்டி, வாழ்த்தினார்.
தமிழ்நாட்டில் கூலிப்படைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, உள்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார். உள்துறை சரியாக செயல்பட்டால் மற்ற துறைகளின் பணிகளும் சிறப்பாக செயல்படும் என்று முதல்வர் குறிப்பிட்டார் மேலும் அவர் பேசுகையில்
தமிழ்நாட்டில் விரைவில் 3,000 காவலர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடவுச்சீட்டு விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரவேண்டிய நிலை மாற்றப்படும். எந்த சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரக்கூடிய சம்பவங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் கலவரம் செய்ய நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்
சாதி, வன்முறையை தூண்டும் பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும்; சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டுவோரை கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். எந்த சூழ்நிலையிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறவில்லை. பாலியல் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.
வன்முறை காடாக மாறிய இலங்கை
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், நேற்று கடும் வன்முறை வெடித்தது.
பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில் ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான பொதுமக்களின் கோபம் தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீடு மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த பல எம்.பி.க்கள் மற்றும் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக காணப்படும் சூழலில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார்.
பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் சொகுசு வீட்டை விட்டு வெளியேறிய ராஜபக்சே வேறு ஒரு இல்லத்தில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்சே மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு தப்பிச்செல்லலாம் எனவும் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
விக்ரம் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு.
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா மே 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது
10 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து தற்கொலை செய்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மந்தைவெளி, மயிலாப்பூரில் மாற்று இடம் வழங்கப்படும். மாற்று இடம் வழங்குவது குறித்து வரும் காலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்.
தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம் இன்று (8ம் தேதி) 1 லட்சம் இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் 50 லட்சம் பேரும், 2வது தவணை செலுத்திக் கொள்ளாமல் 1.42 கோடி பேரும் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.











