Friday, April 24, 2026
Home Blog Page 9

கோவையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மேம்பாலம்..!

0

கோவை சிங்காநல்லூர் அடுத்த SIHS காலனியில் ரயில்வே தண்டவாளம் செல்வதால் அதனை கடப்பதற்கு உயர்மட்ட மேம்பாலம் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ரயில்வே தண்டவாளத்திற்கு கீழ் சுரங்க வழி அமைத்து தரப்பட்டது. ஆனால் மழை காலங்களில் மழை நீர் தேங்கி விடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். எனவே உயர்மட்ட மேம்பாலம் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்த நிலையில் 2010ம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் போது அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் நிலங்கள் கையப்படுத்தப்பட்டு 2013ம் ஆண்டு மேம்பால வேலைகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது.

இதனிடையே நிலம் கையகப்படுத்தும் பொழுது உரிமையாளர்களுக்கு போதிய தொகை கிடைக்காத காரணத்தினால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது முடிவுக்கு வந்தது. மேலும் மேம்பால பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்றது. அதனால் அந்த மேம்பால பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். பின்னர் 2021ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சியில் மேம்பால பணிகள் முடிவடைந்தது. சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு 55.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு முடிக்கபட்ட இந்த மேம்பாலத்தை, இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

ஆயுள் தண்டனையை எதிர்த்து பவாரியா கொள்ளையர் மேல்முறையீடு – காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.

0

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனத்தை கொலை செய்து, 62 சவரன் நகைகளை கொள்ளையடிக்கபப்ட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, பவாரியா கொள்ளையர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், சில காலம் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஜாமீன் பெற்ற 3 பெண்கள் தலைமறைவான நிலையில், கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்து விட்டனர்.மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த மாதம் தீர்ப்பளித்தது. மேலும், ஜெயில்தார் சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த மனுவில், அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மேல் முறையீட்டு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் பி. தனபால் அமர்வு, நான்கு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும்படி, பெரியபாளையம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி!

0

கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்கள் ஒன்றிணைந்து இவ்விழாவைக் கொண்டாடினர். இதையொட்டி, டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று காலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல்வேறு
பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான கிறிஸ்தவ மக்களுடன் இணைந்து அவர் பிரார்த்தனைகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் திருவிழாவுக்குரிய மகிழ்ச்சி, சிந்தனை மற்றும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் பிரார்த்தனைகள், கிறிஸ்துமஸ் பாடல்கள் மற்றும் கீர்த்தனைகள் இடம்பெற்றன. மேலும், டெல்லி பிஷப் மேதகு பால் ஸ்வரூப் பிரதமருக்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது “X” சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “டெல்லியில் உள்ள ‘தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன்’ தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை வழிபாட்டில் கலந்து கொண்டேன். இந்த வழிபாடு அன்பு, அமைதி மற்றும் கருணை ஆகிய காலத்தால் அழியாத செய்தியைப் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், “அனைவருக்கும் அமைதி, கருணை மற்றும் நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கேரளா பறவைக் காய்ச்சல் எதிரொலி- தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு

0

கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்க உத்தரவு.

கால்நடை மருத்துவர்களோடு இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தமிழ்நாடு பொதுசுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கோழி, வாத்து போன்றவை இறைச்சி மற்றும் முட்டைக்காக பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணைகளில் வளர்த்து வரும் கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து மடிந்தன. இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டது. அதன்படி பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை மொத்தமாக அழிக்க கால்நடை பராமரிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கவும், கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசிக்கு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கால்நடை மருத்துவர்களோடு இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தமிழ்நாடு பொதுசுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தாயை பிரிந்த கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழப்பு…!

0

கோவை மாவட்டம் மருதமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டெருமை, புலி, காட்டுப்பன்றி போற்றவன விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக மருதமலை சுற்றுவட்டாரப் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில்,நேற்று அதிகாலை மருதமலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கருஞ்சிறுத்தை ஒன்று, தனது குட்டியை அங்கு யாரும் வசிக்காத வீட்டில் விட்டுவிட்டு சென்றது. இதில், குட்டியின் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் சென்று பார்த்தபோது அங்கு கருஞ்சிறுத்தை குட்டி தனியாக இருந்தது தெரியவந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கருஞ்சிறுத்தை குட்டியை பத்திரமாக மீட்டு கூண்டிற்குள் அடைத்தனர். தொடர்ந்து, குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். இதற்காக குட்டி கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதனுள் குட்டியை வைத்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நேற்று மதியம் முதல் கண்காணித்து வந்தனர். அப்போது நள்ளிரவு 1. 45 மற்றும் அதிகாலை 4.30 மணி அளவில் இரண்டு சிறுத்தைகள் குட்டி அருகே வந்து செல்வது கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, 4.30 மணிக்கு குகையில் இருந்து கருஞ்சிறுத்தை குட்டி வெளியேறியுள்ளது.

இந்நிலையில், வனத்துறையினரால் உருவாக்கப்பட்ட குகைக்கு அருகில் கருஞ்சிறுத்தை குட்டி அசைவில்லாமல் இருந்துள்ளது. இதனை கண்ட வனத்துறையினர், வனக் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள், குட்டி உயிரிழந்ததை உறுதி செய்தனர். தொடர்ந்து குட்டியின் உடலை பிரேதப்பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த அறிக்கை வெளியான பிறகே சிறுத்தைக் குட்டி உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துக்கு அனுமதி – பாஜக கடும் எதிர்ப்பு

0

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா இந்து முன்னணி, பாஜகவினரின் பலத்த எதிர்ப்புக்கு இடையே கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மலையில் ஏற்றப்படும் கொடி கம்பத்தை காவல்துறை பாதுகாப்புடன் பத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றதால் மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது.
இதற்காக 21 ஆம் தேதி மலை மேல் உள்ள தர்காவில் கொடியேற்ற நிகழ்வை நடத்துவதற்காக இஸ்லாமிய சமூகத்தினர் சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
கோட்டாட்சியர் உத்தரவைத் தொடர்ந்து 20 ஆம் தேதி மலை மேல் உள்ள தர்கா கொடிக்கம்பத்தை பழுது பார்ப்பதற்காக மலைப்பாதை வழியாக இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மலைப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பகுதி மக்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அகல் விளக்கேற்றி போராட்டம்

இதனைத் தொடர்ந்து சந்தனக்கூடு கொடியேற்ற விழாவை முன்னிட்டு மலைக்குச் செல்லும் பாதையில் நேற்று காலை 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் மலைக்கு செல்ல இஸ்லாமியர்கள் 100 பேருக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் பரவியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மலையடிவாரத்தில் உள்ள தங்களை மலைக்குச் செல்ல அனுமதிக்காமல் வெளியூரில் இருந்து வரக்கூடிய இஸ்லாமியர்களை எப்படி அனுமதிக்கலாம் என கூறி கையில் அகல் விளக்குடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்களை திருநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களை பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும். பொதுமக்களை மாலை 6 மணியை கடந்தும் விடுவிக்காததால் அவர்களை விடுவிக்க கோரி பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் – மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து போலீசார் அவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சந்தனகூடு விழா தொடக்கம்

இந்த நிலையில் சந்தனக்கூடு விழா பெரிய ரத வீதியில் உள்ள தர்காவில் இரவு 8 மணி அளவில் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் கொடி எடுத்துச் செல்லப்பட்டு பெரிய ரத வீதி, கீழ ரத வீதி, 16 கால் மண்டபம் வழியாக மீண்டும் பள்ளிவாசலை அடைந்தது. மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட கொடி பள்ளிவாசலில் தொழுகைக்கு பின்னர் ஏற்றப்பட்டது. இதனிடையே,ஏற்கனவே மலை மேல் ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தை பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள்
காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் மலைப்பாதை வழியாக மலை மேல் உள்ள தர்காவிற்கு கொண்டு சென்றனர்.அப்போது, மலைக்கு செல்ல தங்களை அனுமதிக்காமல் இஸ்லாமியர்களை மட்டும் எப்படி அனுமதிக்கலாம் எனக்கூறி, பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள குடியிருப்புவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ இஸ்லாமியர்களை மட்டும் அனுமதிக்கும் காவல்துறை தங்களை ஏன் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை? என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள், தங்கள் கையில் அகல் விளக்கை ஏந்தி, மலை மேல் தீபம் ஏற்ற செல்வதாக கூறி ‘அரோகரா’ கோஷமிட்டு காவல்துறையினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுப்பை தாண்டி செல்ல முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மற்றொரு பாதையில் கையில் அகல் விளக்குகளுடன் சென்று தீபம் ஏற்ற முயற்சித்தவர்களை காவல்துறை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து தாங்கள் கொண்டு வந்த தீபத்தை பழனியாண்டவர் கோவிலில் ஏற்ற அனுமதி தாருங்கள் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஒருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, பெண் ஒருவர் கோயில் முன் விளக்கேற்றி வழிபாடு செய்தார்.

பல்வேறு பரபரப்புகளுக்கு பின் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டது. அதேசமயம் மலை அடிவாரத்தில் உள்ள மக்கள் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலாகலமாக தொடங்கியது இந்திய நாட்டிய விழா; ஒரு மாதத்துக்கு களைகட்டும்

0

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் ’இந்திய நாட்டிய விழா’ மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்கியது. வருகிற ஜனவரி 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் ஒரு மாதம் இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் நாட்டிய விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதனை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், “கலைகளின் பிறப்பிடமாக உள்ளது மாமல்லபுரம். இங்குள்ள சிற்ப கலைகள் உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக மாமல்லபுரத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தவும், பாரம்பரியமிக்க பரத நாட்டியம், இசை, கிராமிய கலைகளை அழியாமல் காத்திட வேண்டும் என்ற நோக்கிலும் இந்த விழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

1992-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்த விழா கடந்த 2009 ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் ‘இந்திய நாட்டிய விழா’வாக அறிவிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் மாமல்லபுரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. உலக தரம் வாய்ந்த போட்டிகளான செஸ் ஒலிம்பியாட், கடல் அலை சறுக்கு போட்டி, காத்தாடி திருவிழா, பலூன் திருவிழா போன்றவற்றை மாமல்லபுரத்திற்கு கொண்டு வந்தது திமுக அரசு” என்றார்.
அதனைத்தொடர்ந்து பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், “மாமல்லபுரம் கட்டட கலையின் தாயகமாக, சிற்பக் கலையின் சிகரமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு நடைபெறும் இந்திய நாட்டிய விழாவின் மூலம் சுற்றுலா பயணிகள் இங்கு தங்கும் காலம் அதிகரிக்கிறது. இப்படி இந்தியாவின் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்” என்றார். இதன் பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடன குழுக்கள் வரவழைக்கப்பட்டு நடத்தப்படும் இந்த விழாவில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுலா பயணிகளுக்கு அமைச்சர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க தேவைப்படும் 12 ஆவணங்கள்

0

சிறப்பு தீவிர திருத்தத் தின் மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் களை மீண்டும் சேர்க்க தேவைப்படும் 12 ஆவணங்கள் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (SIR) மேற்கொள்ளப் பட்ட நிலையில், தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய இணைய தளத்திலும்
வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பெயர் நீக்கப்பட்டவர்கள், முகவரி மாறியவர்கள் உரிய ஆதாரங்களுடன் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம். முகாமுக்கு செல்ல இயலாதோர் https://www.eci.gov.in/voters-services-portal
என்ற இணையதளம் மற்றும் வோட்டர் ஹெல்ப்லைன் App செயலியில் விண்ணப்பிக்கலாம்.

2026 ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைவோர் வாக்காளர் பட்டியலில்
தங்களது பெயரைச் சேர்க்க பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம். இதேபோல தொகுதிக்குள் இடம் பெயர்ந்தவர்கள், தொகுதி விட்டு தொகுதி மாறி வந்தவர்களும் தங்களுடைய தற்போதைய முகவரிக்கான ஆவணத்துடன் படிவம் 8-ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம். மேலும், பெயரைச் சேர்க்க தேவையான 12 ஆவணங்கள் என்பவை, பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, ஒன்றிய-மாநில அரசு பொதுத்துறை நிறு வனங்களில் பணியாற்றும் அல்லது ஓய்வூதியதாரர்கள் அடையாள அட்டை, 1987-க்கு முன்பு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் அலுவலகம், எஸ்ஐசி வழங்கிய ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பள்ளி, பல்கலைக்கழக சான்றிதழ்கள், வன உரிமை சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் ஆகியவற்றில் ஒன்றை அளித்து பெயரைச் சேர்க்கலாம்.

மக்களவையில் வெடித்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் விவகாரம்

0

புதுடெல்லி: மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் எழுத்துப்பூர்வமாக கேள்வியெழுப்பினார்.

மக்களவையில் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் மதுரை, கோவை மெட்ரோ ரயில் குறித்து கேள்வி எழுப்பினார். எழுத்துப்பூர்வமாக அவர் எழுப்பிய கேள்வியில், “மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள், அந்த நகரங்களில் 20 லட்சம் மக்கள்தொகை இல்லை என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டதா? ஆக்ரா, போபால், இந்தூர் மற்றும் நாக்பூர் போன்ற ஒப்பிடத்தக்க நகரங்களில் அல்லது குறிப்பிட்ட வரையறைகளை விட குறைந்த மக்கள்தொகை கொண்ட வட மாநில நகரங்களில் மெட்ரோ திட்டங்களை அங்கீகரிப்பதற்கான அளவுகோல்கள் எவை?

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே இப்போதும் முடிவெடுக்கப்படுகிறதா? தற்போதைய மக்கள்தொகை உயர்வு கணக்கில் கொள்ளப்படுவது இல்லையா? பயணிகளின் எண்ணிக்கை குறித்த கணிப்புகள் சுயமதிப்பீடா அல்லது மூன்றாம் தரப்பு மதிப்பீடா? திட்டங்கள் நிராகரிக்கப்படுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா? 50:50 என்ற விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிதி திட்டங்கள் ஏற்கப்படவில்லையா? பிற பகுதிகளிலும் இதே அணுகுமுறை கையாளப்பட்டுள்ளதா? இல்லையெனில் இது புது அணுகுமுறையா? மக்கள் மத்தியில் மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்படாமல் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிற பின்னணியில் அரசின் முடிவு மறு பரிசீலனை செய்யப்படுமா?” கேட்டிருந்தார்.இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சர் ஸ்ரீ தோக்கன் சாகு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் பேசுகையில், “நகர்ப்புற வளர்ச்சி, மாநிலங்களின் அதிகார பட்டியலில் வருவதால் அவர்களே திட்டங்களை உருவாக்கி தருகிறார்கள். அந்த முன்மொழிவுகளை ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கப்படுகிறது. ஒரே ஒரு அளவுகோலின் அடிப்படையில் மட்டும் முடிவுகள் அமைய வேண்டியதில்லை. திட்ட அமலாக்கத்திற்கான சாத்தியக் கூறுகள், வளங்களை திரட்டும் வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுகிறது. திட்டங்களை அங்கீகரிப்பதற்கு எந்த நிலையான காலக்கெடுவையும் நிர்ணயம் செய்ய முடியாது.

தமிழ்நாடு அரசு மதுரைக்காக சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் மதுரை மக்கள்தொகை 15 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி இது 10.84 லட்சம்தான். கோவையை பொருத்தவரை பயணத்தின் குறைந்த சராசரி தூரங்கள் (low average trip lengths) மற்றும் சாலைகளில் உள்ள தற்போதைய சராசரி வேகங்களைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ அமைப்புக்கு மாறுவதால் ஏற்படும் போக்குவரத்து மாற்றம் (modal shift) மிகக் குறைவான நேர சேமிப்பை மட்டுமே அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதி மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (LPA) ஆகியவற்றின் மக்கள்தொகை, முன்மொழியப்பட்ட மெட்ரோ அமைப்பால் சேவை செய்ய கடினமாக உள்ளது. ஏனெனில், உள்ளூர் திட்டமிடல் பகுதியில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை, முன்மொழியப்பட்ட மெட்ரோ அமைப்புக்கு சேவை செய்யப்பட உள்ள மாநகராட்சி பகுதியை விட 5 மடங்கு பெரியதாகும்.

கோயம்புத்தூரில் 34 கி.மீ.க்கான முன்மொழியப்பட்ட வலைப் பின்னலில் ஒரு நாளைக்கான பயணிகளின் எண்ணிக்கை 5.9 லட்சமாக திட்டமிடப்பட்டுள்ளது. இது சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டத்தின் (Phase-1) 54.10 கி.மீ. செயல்பாட்டு வலைப் பின்னலில் ஒரு நாளைக்கு 4 லட்சமாக உள்ள தற்போதைய பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் ஒரு பெரிய மக்கள்தொகைக்கு சேவை செய்கிறது. எனவே, விரிவான திட்ட அறிக்கையில் திட்டமிடப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கை யதார்த்தமானதாக இல்லை. பல இடங்களில், போதுமான நிலம் (Right of Way – RoW) கிடைக்காததால் கட்டுமான நிலையங்களை (construct station) அமைக்கச் சாத்தியமில்லை.மெட்ரோ ரயில் திட்டங்களைத் தவிர, மத்திய அரசு ரூ. 20,000 கோடி செலவில் ரூ. 10,000 கோடி குளிரூட்டப்பட்ட இ-பேருந்துகளை இயக்குவதற்கான e-Bus Sewa திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் பங்கேற்றன. இருப்பினும், தமிழ்நாடு மற்றும் கேரளா இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

சு.வெங்கடேசன் எம்பி “X” தள பதிவில்

இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சு.வெங்கேடசன் எம்பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ஒன்றிய அமைச்சர் எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் அளிக்கவில்லை. அளவுகோல்கள் என்றிருந்தால் அவை பொதுவானதாக இருக்க வேண்டும். நாங்கள் கேள்வியில் நான்கு நகரங்களை குறிப்பிட்டு கேட்டிருக்கிறோம். ஆக்ரா, போபால், இந்தூர், நாக்பூர் போன்ற ஒப்பிடத்தக்க நகரங்களில் நீங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை அணுகியதற்கும் மதுரை, கோவைக்கும் என்ன வேறுபாடு? மதுரை கோவையை விட குறைவான மக்கள்தொகை கொண்ட வடமாநில நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதல் எதுவும் தரப்படவில்லையா? தரப்பட்டிருந்தால் எந்த அளவுகோல்களின் அடிப்படையில்? மதுரைக்கும், கோவைக்கும் நீங்கள் சொல்லுகிற காரணங்கள் ஏற்கனவே நீங்கள் ஒப்புதல் அளித்துள்ள மெட்ரோ ரயில் திட்டங்களில் இல்லையா? 50:50 என்ற நிதி திட்டம் அடிப்படையில் திட்டங்களுக்கு ஒப்புதல் தருவது மீதான அணுகுமுறை பாரபட்சம் இன்றி பிற பகுதிகளிலும் சீராக அமலாக்கப்படுகிறதா? இந்தக் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலில் எந்த விளக்கமும் இல்லை. 2011 மக்கள்தொகை அடிப்படையில் தான் முடிவெடுப்பீர்களா? நீங்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததற்காக அதற்குப் பின்னர் 14 ஆண்டுகள் உயர்வை கண்டுள்ள மக்கள்தொகையை கணக்கில் எடுக்க மாட்டீர்களா? என்ற கேள்விக்கும் நேரடி பதிலில்லை. இந்த அரசாங்கம் எப்போதுமே தனக்கு விருப்பமில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பதும், நழுவுவதும், திசை திருப்புவதும் வாடிக்கையாக வைத்துள்ளது. திட்டங்களுக்கு ஒப்புதல் தருவதற்கெல்லாம் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று அராஜகமாக பதில் தரப்பட்டுள்ளது. எங்கள் கேள்வியே தமிழ்நாட்டிற்கு என்று அறிவிக்கப்படும் திட்டங்கள் மட்டும் எந்த கால வரையறையும் இன்றி தாமதமாவது ஏன் என்பது தான். மதுரை “எய்ம்ஸ்” ஒன்றிய அரசின் பாரபட்சத்தால் தாமதமாவது போல தற்போது மதுரை மெட்ரோவும் நிராகரிக்கப்படுகிறது ஏன் என்பது தான்.
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வது போல, பி.எம்.இ. சேவா குளிரூட்டப்பட்ட பேருந்து திட்டம் பற்றி பதிலில் குறிப்பிட்டுள்ளார். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், கேட்காத கேள்விக்கு பதில் சொல்வதும் இவர்களின் வாடிக்கைதான். எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் கோபம் அதிருப்தியை கருத்தில் கொண்டு உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா என்ற கேள்விக்கும் பதில் இல்லை. நீங்கள் பதிலை தயாரித்த உடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்பாக மேலே எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கும் எங்கள் தருகிற பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று பாருங்கள். அது குறைந்தபட்ச நாடாளுமன்ற நெறிமுறை.

மதுரை மெட்ரோவை புறக்கணிப்பதற்காகத்தான் மக்கள் கவனத்தை திசை திருப்ப நீங்கள் மதுரையில் நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மதுரை மக்கள் விழிப்புணர்வு கொண்டவர்கள். நீங்கள் அவர்களை நாடி செல்லும் போது நாடாளுமன்றத்தில் பதிலளிக்காத கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டி இருக்கும் என்று சு.வெங்கடேசன் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

கோவை ஐடி பார்க்கிற்குள் புகுந்த யானைகள்

0

கோயம்புத்தூர் கீரணத்தம் ஐடி பார்க் உள்ள பகுதியில் 3 காட்டு யானைகள் சுற்றி வரும் நிலையில் வனத்துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பெரியநாயக்கன்பாளையம், தடாகம் பகுதயில் அதிகளவிலான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு மலையடிவார கிராமங்களில் புகுந்து வருகின்றன. மேலும் அவ்வாறு வரும் யானைகள் பயிர் சேதங்களை ஏற்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து இறங்கிய 3 காட்டு யானைகள் கௌசிகா நதி பள்ளம் வழியாக தண்ணீரைத் தேடி நீண்ட தூரம் வந்துள்ளன. வனத்தில் இருந்து 15 கி.மீ தூரம் நடந்து கோவை மாநகர் பகுதியை ஒட்டியுள்ள கீரணத்தம் ஐ.டி.பார்க் அருகே இருந்த குட்டையில் இறங்கின.

இதனை பார்த்து அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டிய நிலையில் குட்டையில் இருந்து வெளியேறிய யானைகள் அங்கிருந்த அடர் மரங்கள் இருக்கும் பகுதிக்குள் சென்று விட்டன. மேலும், இன்றிவு 3 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்தனர்.