கேரளாவில் ஓராண்டாகத் தனிமையில் வாடிய குடும்பம் – உடற்கூறு ஆய்வு முடிந்து சூலூர் போலீஸார் விசாரணை
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காங்கேயம்பாளையம் அருகே, நீலாம்பூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI) மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கண்ணடி கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (54). இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நீலாம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாக இவரது மனைவியும் இரண்டு மகன்களும் கேரளாவில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
இதனால், கடந்த ஓராண்டாக மனோஜ் மட்டும் காங்கேயம்பாளையம் அருகே உள்ள ராயல் அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்து உள்ளார். தனிமையின் காரணமாக அவர் நீண்ட நாட்களாக மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. இந்நிலையில், ஜூலை 5-ஆம் தேதி அதிகாலை சுமார் 5.00 மணி அளவில், தனது மூத்த மகனுக்கு மனோஜ் வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தனக்கு கடுமையான உடல் வலி, மன அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், இதனால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போவதாகவும், குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் அவர் உருக்கமாகத் தெரிவித்து இருந்தார். இதை அடுத்து, வழக்கம் போல் காலை மனோஜ் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர், காலை 9.30 மணி அளவில் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் காவல் நிலையப் போலீசார், நிகழ்விடத்தைப் பாதுகாத்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த அவரது மூத்த மகன், தனது தந்தையின் செல்போனைப் பரிசோதித்ததில் தற்கொலைக்கு முன்பு அவர் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சட்டப்படியான விசாரணைகள் மற்றும் பிற நடைமுறைகள் முடிவடைந்த பிறகு, உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு உடற்கூறு ஆய்வும் நிறைவடைந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து உள்ள போலீசார், தற்கொலைக்கான முழுமையான காரணங்களை அறிய தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


