கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப் பிரித்து ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் நடைபெற்றது. புதிய விதிகளின்படி குப்பைகள் ஈரக்கழிவு, உலர்க்கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்பு கவனத்துடன் கையாள வேண்டிய கழிவு என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.
ஈரக்கழிவுகளில் சமையலறைக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் கழிவுகள் அடங்கும். இவை உரமாக்குதல் அல்லது உயிர்வாயு தயாரிப்பு போன்ற முறைகளில் பயன்படுத்தப்படலாம்.
உலர்க்கழிவுகளில் காகிதம், பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் அடங்கும்.
சுகாதாரக் கழிவுகளாக பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள், டயப்பர்கள் உள்ளிட்ட கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக மூடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
சிறப்பு கவனக் கழிவுகளில் காலாவதியான மருந்துகள், பேட்டரிகள், பல்புகள், பெயிண்ட் டப்பாக்கள் மற்றும் இதர வீட்டு அபாயகரமான பொருட்கள் அடங்கும். இவை அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் அல்லது குறிப்பிட்ட சேகரிப்பு மையங்கள் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டும்.
குப்பைகளைத் தரம் பிரிப்பது என்பது தூய்மை பணியாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல, குப்பை உருவாகும் இடத்திலேயே அதனை முறையாகப் பிரிப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்ற கருத்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வீடுகளில் பெற்றோரிடம் குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்குமாறு வலியுறுத்துதல், பள்ளி வளாகத்தில் குப்பைகளைத் தரம் பிரித்தல், தேவையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தூய்மையான சுற்றுச்சூழலுக்கு அடித்தளம்
குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிப்பதன் மூலம் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், மக்கும் கழிவுகளை உரமாக்கவும், குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லும் கழிவின் அளவைக் குறைக்கவும் முடியும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவதுடன், பொதுச் சுகாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.
“குப்பையை உருவாக்கும் இடத்திலேயே தரம் பிரிப்போம், தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்” என்ற நோக்கத்துடன் மாணவர்களிடையே இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.


