கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் என இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள ராயர்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி தனது பத்திரத்தை கிரையம் செய்வதற்காக கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது, பத்திரப்பதிவு பணியை மேற்கொள்வதற்காக ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக சார்பதிவாளர் சங்கர் (42) மீது, ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கையில் இறங்கினர், கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயி லஞ்சம் வழங்குவதற்காக ரூ.7 லட்சம் பணத்துடன் கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்,
அப்போது சார்பதிவாளர் சங்கர் நேரடியாக பணத்தைப் பெறாமல், வெற்றி (30) என்ற பத்திர எழுத்தர் மூலம் பணத்தைப் பெரும்பொழுது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை
கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் சங்கர் மற்றும் பத்திர எழுத்தர் வெற்றி ஆகியோரிடம், கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திலேயே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்திரப்பதிவு தொடர்பாக லஞ்சம் கேட்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பணியில் இருக்கும் பல சார்பதிவாளர்கள் எழுத்தாளர்கள் மூலம் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுவதாக பொதுமக்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


