சென்னையில் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்து வந்தது ஹோட்டல் உரிமையாளர் வெளியான அதிர்ச்சி தகவல்…

சென்னை புழல், மற்றும் காவாங்கரை பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக கொளத்தூர் உதவி ஆணையர் தனிப்படை பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் சம்மந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்த யோகேஷ் தலைமறைவானதால் தனிப்படை போலீசார் அருகில் உள்ள பொதுமக்களிடம் யோகேஷ் வந்தால் தகவல் தெரிவிக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை யோகேஷ் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் தனிப்படை போலீஸார் விரைந்து சென்று யோகேஷை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.மேலும், அவரது செல்போனை போலீஸார் ஆய்வு செய்த போது அதில் யோகேஷ் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
புழல் அம்மா நினைவு நகர் முதல் தெருவில் வசித்து வரும் யோகேஷ் (35) புழல், காவாங்கரை, பகுதியில் சொந்தமாக தாதா ஓட்டல் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருவது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்று வந்த யோகேஷ், சட்டவிரோதமாக கள்ளத் துப்பாக்கி வாங்கி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.கடந்த 9 மாதங்களுக்கு முன்பு யோகேஷ் உத்திர பிரதேசத்தில் இருந்து இரண்டு கள்ளத் துப்பாக்கியை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வாங்கி வந்த துப்பாக்கியை சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அபுதாகீர் என்பவருக்கும், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது.


