கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் ஏக்கர் அல்லது கட்டுமானத்திற்கு ஏற்ப லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அந்தப் புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு 37 லட்ச ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்தனர்.அதன் தொடர்ச்சியாக, அரசு அலுவலகங்களை கண்காணித்து வருவதாகவும், குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் தொடர் சோதனைகள் நடைபெறும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எச்சரித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தாம்பரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாகனத்தின் ஆவணங்களில் பெயர் மாற்றுதல், பெயர் நீக்குதல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனப் பதிவு மற்றும் தகுதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக வரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.இவர்கள் வாகனப் பதிவு தகுதி சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு எவ்வளவு பணம் லஞ்சம் பெறுகிறார்கள்? அதற்கான ஆவணங்களில் எவ்வளவு பணம் வாங்கியதாக கணக்கு காட்டுகிறார்கள்? என பல்வேறு முக்கிய கோப்புகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவது, புதிய வாகனங்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான குழுவினர் வட்டடார போக்குவரத்து அலுவலகத்திற்குள் நுழைந்து அனைத்து கதவுகளையும் மூடினர்.சோதனை தொடங்கியதும், அலுவலக வளாகத்தில் இருந்த இடைத்தரகர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் அதிகாரிகளின் மேஜைகளில் இருந்த கோப்புகளைப் போலீசார் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சோதனைக்குப் பயந்து போலீசாரை கண்டதும் ஊழியர்கள் வெளியே ஓட முயன்றனர். அவர்களை போலீசார் அழைத்து வந்து சோதனையை தொடர்ந்துள்ளனர்


