கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயில்ஸ் பகுதியில், மௌலிக்கா பேக்கரி பின்புறம் உள்ள குடிசையில் காளிமுத்து என்பவர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தேர்தல் காலத்தை முன்னிட்டு சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் பிற குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,, வழங்கிய உத்தரவின்பேரில், PEW பிரிவு உதவி ஆய்வாளர் முருகநாதன் தலைமையிலான காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது வீரமணி (35) மற்றும் குமார் (42) ஆகிய இரு நபர்கள் சுமார் 200 மது பாட்டில்களுடன் பிடிபட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முக்கிய குற்றவாளியான காளிமுத்து (48) என்பவர் காரியம்பாளையம் காட்டுத்தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் அதிகளவு மதுபானங்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிராண்டி பாட்டில்கள் – 3,897, ரம் பாட்டில்கள் – 1,019, பீர் பாட்டில்கள் – 156
வோட்கா பாட்டில்கள் – 30 என மொத்தம் 5,102 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய காளிமுத்து (48), அவிநாசி, திருப்பூர் மாவட்டம், வீரமணி (35), புதுக்கோட்டை மாவட்டம், குமார் (42), சிவகங்கை மாவட்டம் ஆகிய 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


