திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த காரை ரவிக்குமார் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துவது ருஜைனா பாத்திமாவுக்கு தெரியவந்தது.
இதனால், ஒரு இடத்தில் ரவிக்குமார் நிறுத்தி இருந்த காரை மாற்று சாவி மூலம் எடுத்து பொள்ளாச்சி பகுதியில் ருஜைனா பாத்திமா நிறுத்தி உள்ளார். இதுகுறித்து ரவிக்குமார், சிறப்பு படையை சேர்ந்த கோவை காட்டூர் சிறப்பு-சப் இன்ஸ்பெக்டர் பூபதியிடம் புகார் கொடுத்து உள்ளார். விசாரணை நடத்திய பூபதி, ருஜைனா பாத்திமா மற்றும் அவருடைய கணவர் ஆகியோரின் 2 செல்போன்களை பிடுங்கி வைத்துக்கொண்டதாக தெரிகிறது. கார் அடமான விவகாரத்தையும், 2 செல்போன்களை திரும்ப கொடுக்கவும் ரூ.70 ஆயிரம் பூபதி ருஜைனா பாத்திமா மற்றும் அவருடைய கணவரிடம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ருஜைனா பாத்திமா கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜேஷ் ,இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள். ருஜைனா பாத்திமா உக்கடம் பஸ் நிலையத்தில் இருப்பதாகவும், லஞ்ச பணத்தை பெற்று கொள்ளுமாறும் சிறப்பு-சப் இன்ஸ்பெக்டர் பூபதியிடம் தெரிவித்துள்ளார். அவரும் உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்து ரூ.70 ஆயிரத்தை பெற்றபோது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து பூபதியை கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்சப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்சம் வாங்கி சிறப்பு -சப் இன்ஸ்பெக்டர் பூபதி கைதான விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


