தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் வேலைகளிலும் பாஜகவினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த மாதம் மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் தமிழ்நாட்டில் அவர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அந்த வகையில், மார்ச் 1ம் தேதி மதுரையிலும், மார்ச் 7 ஆம் தேதி வேலூரிலும் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். பிரதமரின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்த, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி மதுரைக்கு பொறுப்பாளர்களாக பாஜக மாநில பொதுச் செயலாளர்கள் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், பொன் வி.பாலகணபதி ஆகியோரும்; வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக மாநில துணைத்தலைவர் நாகராஜன், பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இவர்களுடன் அதிமுகவின் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் மற்றும் கூட்டணி கட்சியினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக, வேலூர் கோட்டை மைதானம் மற்றும் பள்ளிகொண்டா அருகே கந்தனேரி பகுதியில், சென்னை – பெங்களூரு ஆறுவழிச் சாலையோரம் உள்ள மைதானம் ஆகிய இடங்கள் பார்வையிடப்பட்டன. தேர்வு செய்யப்படும் இடத்தின் பரப்பளவை பொருத்து, கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களின் எண்ணிக்கை திட்டமிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 7-ம் தேதி நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட தே.ஜ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அதுமட்டுமின்றி, புதிதாக இணையவுள்ள கூட்டணிக் கட்சிகளும் மோடி வருகை தரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி வேலூருக்கு வருகை தரும் அதே நாளில், ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் மும்முரமாக நடந்து வருகிறது. குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடி இந்த கோயிலுக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்


