தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆளும் திமுக தீவிரம் காட்டி வருகிறது. ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ள போதிலும், அது திமுக கூட்டணியில் இருந்து விலகாது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்க்க திமுக மும்முரம் காட்டி வருகிறது.
அதே போல, எதிரணியில் இருக்கும் அதிமுகவும் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக மற்றும் பல சிறிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அமைத்துள்ளது. இது தவிர, தற்போதைய தேர்தல் களத்தில் விஜய்யின் தவெகவும், சீமான் தலைையிலான நாம் தமிழர் கட்சியும் உள்ளன.
இந்த சூழலில், தமிழ்நாடு சட்டப் பேரவை பிப்ரவரி மாதம் கூடவுள்ளது. இந்த சட்டப் பேரவைக்கு மே மாதம் வரை மட்டுமே அவகாசம் இருப்பதால், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இதனால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிப்ரவரி 13 அல்லது 14ஆம் தேதியன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.சட்டப் பேரவை தேர்தல் நெருங்கியுள்ளதால், இந்த பட்ஜெட்டில் பல தரப்பு மக்களை கவரும் வகையிலான கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெண்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், நடுத்தர மக்கள் ஆகியோரை கவரும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், எந்த அறிவிப்பையும் தமிழக அரசால் அறிவிக்க முடியாது. எனவே, இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலை, இதற்கான வாய்ப்பாக அரசு பயன்படுத்திக் கொள்ளும் எனத் தெரிகிறது. இருந்த போதிலும், இது முழுமையான பட்ஜெட் கிடையாது. 2026 ஜூன் மாதம் பதவியேற்கும் புதிய அரசே, ஜூலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவது, மக்களுக்கு சலுகைகளை அறிவிக்கலாமா? என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


