சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் ’இந்திய நாட்டிய விழா’ மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்கியது. வருகிற ஜனவரி 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் ஒரு மாதம் இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் நாட்டிய விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதனை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், “கலைகளின் பிறப்பிடமாக உள்ளது மாமல்லபுரம். இங்குள்ள சிற்ப கலைகள் உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக மாமல்லபுரத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தவும், பாரம்பரியமிக்க பரத நாட்டியம், இசை, கிராமிய கலைகளை அழியாமல் காத்திட வேண்டும் என்ற நோக்கிலும் இந்த விழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
1992-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்த விழா கடந்த 2009 ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் ‘இந்திய நாட்டிய விழா’வாக அறிவிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் மாமல்லபுரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. உலக தரம் வாய்ந்த போட்டிகளான செஸ் ஒலிம்பியாட், கடல் அலை சறுக்கு போட்டி, காத்தாடி திருவிழா, பலூன் திருவிழா போன்றவற்றை மாமல்லபுரத்திற்கு கொண்டு வந்தது திமுக அரசு” என்றார்.
அதனைத்தொடர்ந்து பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், “மாமல்லபுரம் கட்டட கலையின் தாயகமாக, சிற்பக் கலையின் சிகரமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு நடைபெறும் இந்திய நாட்டிய விழாவின் மூலம் சுற்றுலா பயணிகள் இங்கு தங்கும் காலம் அதிகரிக்கிறது. இப்படி இந்தியாவின் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்” என்றார். இதன் பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடன குழுக்கள் வரவழைக்கப்பட்டு நடத்தப்படும் இந்த விழாவில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுலா பயணிகளுக்கு அமைச்சர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


