தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவில் கலைமகள் சபா நிதி நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைமகள் சபா என்ற நிதி நிறுவனம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 13 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது.
இந்த நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க, பதிவுத் துறை உதவி தலைமைப் பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அதை எதிர்த்து கோவையைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அதில், கலைமகள் சபாவுக்கான சொத்துக்கள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலும் உள்ளதால் தமிழக அரசு அதிகாரிகளுக்குப் பதிலாக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து முதலீட்டாளர்களுக்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஏற்கனவே கோவை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்கள் கணக்கிடப்பட்டு அவற்றின் சந்தை மதிப்பு உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள சொத்துக்களையும் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் சரி பார்த்து மின்னணு முறையில் பொது ஏலம் விட்டு, உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படுகிறது.
இவருக்கு உதவியாக வழக்கறிஞர்கள் எம்.எழிலரசி, என்.பிரேமலதா ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர். மேலும் அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் முறையாக இணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் இந்த ஆணையம் மேற்பார்வையிட வேண்டும் என உத்தரவிட்டனர்.


