மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டிசம்பர் 2-ந் தேதி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தம்மை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது மற்றும் தனிக்கட்சி தொடங்குவது பற்றி அமித்ஷாவிடம் ஓ.பன்னீர்செல்வம் தமது இறுதி முடிவை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் தங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். பாஜக இதற்கான அழுத்தத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கும் எனவும் நம்பினார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் பாஜக தரப்பில் தமக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டே வெளியேறுவதாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம், திமுக அணியில் இணைவாரா? விஜய்யின் தவெக அணிக்கு போவாரா? என விவாதங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோருடன் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில்,டிசம்பர் 10-ந் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி ஏதேனும் முடிவு எடுக்கப்படுமா? என பொறுத்திருந்து பார்ப்பது
அதிமுக பொதுக்குழுவில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் டிசம்பர் 15-ந் தேதி தனி அரசியல் கட்சியை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டதாக நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென டெல்லி சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன
புதிய அரசியல் கட்சியை முறைப்படி பதிவு செய்ய டெல்லி சென்றார்
பாஜகவில் இணைய முடிவெடுத்துவிட்டார்
பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து தம்மை மீண்டும் அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர வேண்டும் என பேசினார் என்பதுதான் அந்த தகவல்கள்.
இது தொடர்பா பாஜக மூத்த தலைவர்களிடம் நாம் விசாரித்த போது, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெற அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது முக்கியம் என்று சொன்னார் ஓபிஎஸ். அத்துடன் அதிமுகவில் தங்களை மீண்டும் சேர்க்காவிட்டால் டிசம்பர் 15-ந் தேதிக்குப் பின்னர் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதையும் அமித்ஷாவிடம் ஓபிஎஸ் தெரிவித்தார். இதனை கேட்டுக் கொண்ட அமித்ஷா, டிசமப்ர் 10-ந் தேதிக்குப் பிறகு அதிமுக பொதுக்குழுவுக்குப் பின்னர் சென்னை வரும் போது பேசிக் கொள்ளலாம் என்று மட்டும் ஓபிஎஸ்ஸிடம் சொல்லி அனுப்பிவிட்டார் என்றனர்.


