இறைச்சி கடையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய கோயம்புத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் .
கோவை திருமால் வீதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்தவர் மொய்தீன் பாஷா. கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இவரது கடையில் வேலை செய்யும் சிறுவன் இருந்த போது, உக்கடம் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்த சாதிக் அலி என்பவர் நான்கு கிலோ மாட்டு ஈரல் மற்றும் எலும்பு துண்டுகளை எடுத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் கடையில் இல்லாத போது எப்படி இறைச்சி மற்றும் எலும்புகளை எடுத்துச் செல்லலாம்? என உக்கடம் பகுதிக்கு சென்று சாதிக் அலி கடையின் முன் நின்று மொய்தீன் பாஷா கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அன்றைய தினம் இரவு சமரசம் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பை சேர்ந்தவர்களும் இடையர் வீதியில் உள்ள பேக்கரி அருகே அன்று இரவு சந்தித்தனர். அப்போது இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் மொய்தீன் பாஷா மற்றும் அவரது நண்பர் அபிப் முகமது ஆகியோரை சாதிக் அலி தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக சாதிக் அலி, ஷேக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகிர் உசேன், அசாருதீன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஷேக் அலி 2019 ஆம் ஆண்டு வழக்கு விசாரணை நடைபெறும் போது உயரிழந்தார். இந்த கொலை வழக்கு கோயம்புத்தூர் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்கள் மற்றும் விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட சாதிக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகிர் உசேன் மற்றும் அசாருதீன் ஆகிய ஐந்து பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டணை மற்றும் தலா 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோயம்புத்தூர் 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் தீர்ப்பளித்தார். இரட்டை கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.


