அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியில் சார்- பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பத்திரப்பதிவு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இவ்வாறு வருகை தரும் பொது மக்களிடம் சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத சிலர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. அந்த புகாரின் பேரில், போலீசார் கீழப்பழுவூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் உள்ளே இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அலுவலகத்தின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றை அதிகாரிகள் பூட்டியதுடன், அலுவலக ஊழியர்களின் செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், பதிவு செய்வதற்கு நிலுவையில் உள்ள ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கணக்கில் வராத ரூ.41 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, கீழப்பழுவூர் சார்- பதிவாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் சில அலுவலர்கள், 3 இடைத்தரகர்கள் ஆகியோரிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென நடைபெற்ற இந்த அதிரடி சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. இங்கும், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அரியலூர் – புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு சோதனை, கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம், விசாரணை வளையத்தில் சார்-பதிவாளர்..!


