தருமபுரியில் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…
கோவை ராஜவீதியில் பிரசன்னா (வயது 40) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் புதன்கிழமை இரவு தனது கடைக்கு தேவையான 5 கிலோ எடையுள்ள புதிய நகைகளை பெங்களூருவில் இருந்து வாங்கிக்கொண்டு காரில் கோவை திரும்பினார். அவருடன் கடையில் பணியாற்றும் விஜயகுமார், சுரேஷ்குமார், ஜெய்சன் ஆகியோரும் பயணித்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பூலாம்பட்டி என்ற பகுதியில் அவர்கள் சென்றபோது, 2 கார்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அத்துடன், திடீரென பிரசன்னாவின் காரை வழிமறித்து அந்த கும்பல் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவர்களை அடித்து கீழே தள்ளி விட்டனர். பின்னர், அவர்களிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததுடன் காரையும் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து காரிமங்கலம் காவல்நிலையத்தில் பிரசன்னா புகார் அளித்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் விசாரணை நடைபெற்றது. மேலும், சம்பவ இடத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த இடத்தில் கொள்ளையர்கள் பயன்படுத்திய இரும்புக் கம்பி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.


