தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
இங்கு அரசின் விதியை மீறி அளவிற்கு அதிகமாக கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, அதிக பாரத்துடன் கனிமவளத்தை ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் கிராமப்புறச் சாலைகள் சேதம் அடைவதாகவும், கட்டுப்பாடு இல்லாமல் கனரக வாகனங்கள் இயங்குவதால் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு மனுக்கள் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை என்பதும் அப்பகுதி மக்களின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. ஆகையால், கனிமவளங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்வதற்கு நேர கட்டுப்பாடு விதிக்க தேவையில்லை, அவற்றை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது புளியரை பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது இந்த கோரிக்கை வலுத்துள்ளது. இதையடுத்து, கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு நேரடியாக இங்கு வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில், இன்று (மே 25) அதிகாலை கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு, புளியரை சோதனை சாவடியில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது, புளியரை சோதனைச்சாவடி வழியாக சென்ற கனிமவள வாகனங்களின் பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆய்வின் ஒரு பகுதியாக சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலர்களிடமும் கனிமவள வாகனங்களின் வருகை போன்ற பல்வேறு முக்கிய விபரங்களைக் கேட்டறிந்தார்.குறிப்பாக, அனுமதி சீட்டுடன் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறதா? அனுமதிக்கப்பட்ட அளவில் தான் கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? முறைப்படிதான் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்துள்ளார். கனிமவளத் துறை அமைச்சர் பிரபுவின் இந்த திடீர் ஆய்வு அதிரடியாக இருந்த நிலையில், இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


