திமுகவின் ஆட்சி கனவு கதம், கதம்தான் என்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், “மிக மிக முக்கியமான நேரத்தில் நாம் இருக்கிறோம். திமுக ஆட்சியையும், ஸ்டாலின் சாரையும் வீட்டுக்கு அனுப்பப் போற, தேர்தலின் கடைசி பிரச்சாரம் இது. மக்களை கண்டுக்காத ஆட்சியையும், அதன் தலைவரையும் வீட்டுக்கு அனுப்பும் தேர்தலின் கடைசி பிரச்சாரம் இது. திமுக ஆட்சியில் வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, விலைவாசி உயர்வு மற்றும் குப்பைக்கும் கூட வரி போடப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்களை வீட்டிற்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்ப முடியும்?” என்று கேள்வியெழுப்பினார்.
நம் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக
தொடர்ந்து விஜய் பேசியபோது, “தமிழ்நாட்டில் எந்த அரசாங்கமும் வாங்காத அளவிற்கான கடனை திமுக பெற்றுள்ளது. 6 லட்சம் கோடி ரூபாய் கடனை அவர்கள் வாங்கியுள்ளனர். நம் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற நிலைப்பாட்டில் இதுவரை நாம் ஒரு அங்குலமும் மாறவில்லை. மதச்சார்பற்ற சமூக நீதிதான் நமது கொள்கை. இந்த விஷயத்தில் நூறு சதவீதம் என்னை நம்பலாம்.
திமுகவின் சாயம் வெளுக்கும்
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான ஆளாகவே நான் இருப்பேன். எம்மதமும் நம் மதம். நான் ஒன்று சொன்னால், அதிலிருந்து மாறமாட்டான். முதலமைச்சர் ஸ்டாலினை போல நான் இல்லை. சிறுபான்மையினரின் வாக்கிற்காக காங்கிரஸ் உடனும், கட்சியைக் காப்பாற்றுவதற்காக பாஜகவுடனும் திமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது. எனவே இந்த தேர்தலில் திமுக தோற்பது உறுதி. தேர்தலில் தோற்ற பிறகு கட்சியை காப்பாற்ற மோடி மற்றும் அமித் ஷாவின் காலில் திமுக விழும். அன்று திமுகவின் மொத்த சாயமும் வெளுக்கும். அப்போது பாஜகவின் முதல் அடிமை யார் என்ற போட்டி திமுகவிற்கும், பிறருக்கும் இடையில் நடைபெறும்.
திமுக ஆட்சி கனவு கதம்-கதம்
சிறுபான்மை சகோதரர்களுடன் நான் எப்போதும் நிற்பேன். இந்த தேர்தலில் திமுகவும் மற்றும் பலரும் மண்ணை கவ்வப்போவது உறுதி. திமுகவின் ஆட்சி கனவு கதம்-கதம் தான். ஸ்டாலின் சாரிடம் இருந்து நாட்டை காப்பாற்றி ஆக வேண்டும். தயவுசெய்து விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். தயவு செஞ்சு உங்கள் விஜய்க்கு வாய்ப்பு கொடுங்கள்” என்றார்.
எடப்பாடிக்கும் கேள்வி ?
தொடர்ந்து பேசிய அவர், “சேலத்தில் இல்லாமல் வேற ஏதாவது தொகுதியில் நின்று எடப்பாடி பழனிசாமியால் வெற்றி பெற முடியுமா?. முதலில் அதை செய்துவிட்டு என்னை பற்றி பேசுங்கள். சொந்த தொகுதியில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தவெகவின் சின்னத்தை திருடியவர் அவர். எடப்பாடி தொகுதி மக்கள் சுயேட்சை சின்னமான டிவி சின்னத்தில் ஓட்டு போட வேண்டும். பாஜகவை சேர்ந்தவர் என்னை நடிகன் என்று கூறுகிறார். ஆம் நான் நடிகன்தான். நான் அரசியலில் நடிக்கவில்லை. ஆனால் நீங்கள் அரசியலில் இருந்து கொண்டு நடிக்கிறீர்கள். உங்களை நாடக நடிகர்கள் என்று கூறலாமா? நீங்கள் அனைவரும் டேஞ்சரான நாடக கம்பெனி என்று கூறலாமா?
75 ஆண்டுகால பவள விழா பாப்பா, 55 வருட பல்லாங்குழி பாப்பா
இது ஒரு மாற்றத்திற்கான தேர்தல். போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை தூக்கி வீசுவது போல, இந்த தேர்தலில் 75 ஆண்டுகால பவள விழா பாப்பாவையும், 55 வருட பல்லாங்குழி பாப்பாவையும், தூக்கி வீசி எறிவோமா? புதிய அரசாங்கத்தை கொண்டு வருவோமா? திமுக, அதிமுக என யாருக்கு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு ஓட்டு போடுவது போல்தான்” என்றார்.
சூரியன் பட்டால் சன் ஸ்டோக் வரும்
மேலும் பேசிய அவர், “மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கும் நாள். அன்று அக்கினி வெயில் மண்டையை பிளக்கும். அன்று சூரியன் பட்டால் சன் ஸ்டோக் வரும். ஆகவே அன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அந்த சூரியனை வெறுத்து ஒதுக்குவார்கள்.200 யூனிட் கட்டணம் இல்லா மின்சாரம் தவெக ஆட்சிக்கு வந்ததும், 200 யூனிட் கட்டணம் இல்லா மின்சாரம், முதியோர்கள் அனைவரும் அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். பெண்கள் பாதுகாப்புக்கான கடுமையான சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும். போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்” என்றும் அவர் கூறினார்.
மனசாட்சி வேண்டாமா?
பின்னர், கரூர் சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், “அங்கு என்ன நடந்தது என்று பொதுமக்களிடம் கேட்டால் அவர்களே புட்டு, புட்டு வைப்பார்கள். மாறாக என் மீது பழியை போடுகிறார்கள்? கரூரில் காவல்துறை கொடுத்த நேரத்தில் சரியாக அங்கு நான் இருந்தேன். நாமக்கல்லில் இருந்து கரூருக்கு எப்படி வந்தேன் என்று உலகமே லைவில் பார்த்துக் கொண்டிருந்தது. என் மீது பழி போடுகிறீர்கள். மனசாட்சி வேண்டாமா?” என்றும் விஜய் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.


