சட்டப் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 6 முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைப்பது, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குவது, தொகுதிப் பங்கீடு, பரப்புரை என தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களம் காணவுள்ள தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது. தேர்தல் பரப்புரை ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு விருப்ப மனு விநியோகம் செய்யப்பட இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவருடைய பதிவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ஆணைக்கிணங்க, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கிறோம். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நம் வெற்றித் தலைவரின் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் 06.02.2026 வெள்ளிக்கிழமை முதல் 14.02.2026 சனிக்கிழமை வரை தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படும். பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று (பிப்ரவரி 2) நடைபெற்ற தவெக 3 ஆம் ஆண்டு விழாவில் பேசிய கட்சித் தலைவர் விஜய், கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தனது பகுதியில் உள்ள தவெகவினரை பூத்திற்கு அழைத்து வந்து அவர்களை விசில் சின்னத்தில் ஓட்டு போட வைக்க வேண்டும் என்று பேசியிருந்தார். அதற்கு அடுத்த நாளே விருப்ப மனு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


