சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது, பெரும் ஏமாற்றத்தை தந்தது. அமெரிக்காவின் வரி கொடுமையிலிருந்து தப்பிக்க, ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் ஈடு கொடுக்கும் என தெரிவித்தார்கள். ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் 2027 ஏப்ரலுக்குப் பின்புதான் வரும். அதுவரை பொருளாதார மந்த நிலையை மத்திய அரசு எப்படிச் சமாளிக்கும்? பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை; கோவை, கரூர், திருப்பூர் நூற்பாலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் இல்லை.
ரூ. 11.7 லட்சம் கோடி கடன் வாங்க போகிறோம் என்கிறார்கள். அதே சமயத்தில், 7 சதவீத வளர்ச்சியையும் அடைவோம் என்கிறார்கள். இதை எப்படி ஏற்க முடியும்? கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் இல்லை. ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது” என வைகோ கூறினார்.
ஆட்சியில் பங்கு கேட்பீர்களா? என கேட்டதற்கு பதிலளித்த வைகோ, “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்ற கோஷங்களை நாங்கள் என்றைக்குமே வைத்தது இல்லை. அப்படி கோரிக்கை வைக்கின்ற நோக்கமும் எங்களுக்கு இல்லை. திமுக நிச்சயம் தனிப் பெரும்பான்மை பெறும். மீண்டும் 2026-ல் ஸ்டாலின் முதல்வராக அமர்வார், திராவிட மாடல் ஆட்சி தொடரும்” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “பாலத்தீனம் தனி நாடாக உருவெடுக்க இந்தியா ஆதரவு அளித்திருப்பது நல்ல விஷயம். பாலஸ்தீனத்தை நேரு காலத்தில் இருந்தே இந்தியா ஆதரித்தது. இடைக்காலத்தில் நரேந்திர மோடி பொறுப்புக்கு வந்த பின்னர், இஸ்ரேல் உடனான உறவை நெருக்கமாக்கிக் கொண்டனர். பாலஸ்தீனத்திற்காக ஐ.நாவிலோ, மற்ற இடங்களிலோ இந்தியா குரல் கொடுக்காமல் இருந்தது. பாலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை ஆரம்பத்திலிருந்து நாங்கள் ஆதரித்து வந்திருக்கிறோம்” என்றார்.
பின்னர், தொகுதி பங்கீடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வைகோ, “தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த 3 மணிநேரத்திற்குள் மதிமுக சார்பில் குழு அமைக்கப்படும். எத்தனை இடங்களை கேட்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது. சிலர் தங்கள் வாய்க்கு வரும் எண்களை எல்லாம் சொல்கிறார்கள். நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம்” எனத் தெரிவித்தார்.


