அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கங்காரு குட்டி போல சுற்றிக்கொண்டு வரும் ஒருவருக்கு (உதயநிதி ஸ்டாலின்) முதலமைச்சர் பட்டம் சூட்ட திமுக காத்திருக்கிறது. ஊழல் என்றாலே திமுக தான் நியாபகத்திற்கு வரும். அறிவியல் பூர்வமாக ஊழல் செய்பவர்கள் எங்களை குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண் குழந்தை முதல் மூதாட்டி வரைக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் கடத்தலில் தமிழ்நாடு முக்கிய மாநிலமாக மாறியுள்ளது” என்றார்.
தே.ஜ., கூட்டணியில் இணைந்ததை குறித்து பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. என்னுடன் பல ஆண்டுகளாக ஆதரவாக இருந்தவர்களை அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. தமிழ்நாட்டை ஊழல் ஆட்சியில் இருந்து மீட்டெடுத்து அம்மாவின் ஆட்சியை கொண்டு வர பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். அம்மாவின் இடத்தில் எங்களுக்கு மோடி தான் இருக்கிறார். பங்காளி சண்டை இல்லாத குடும்பங்களே இல்லை. எங்கள் வீட்டு குடும்ப விஷயங்களை நான் மனம் விட்டு பேசினேன், தற்போது அம்மாவின் ஆட்சி அமைய ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் பிரிந்து தேர்தலை சந்தித்ததால் தான் 2019 எம்.பி தேர்தல், 2024 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. நாங்கள் ஒன்றாக போட்டியிட்டு இருந்தால் மேலும் 20- 25 தொகுதியில் வெற்றிப் பெற்று இருப்போம். என தெரிவித்தார்.தே.ஜ., கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ” அதுகுறித்து அவர் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ் மீண்டும் இணைய அவருக்கு தேனியில் இருந்து நான் அழைப்பு விடுக்கிறேன் ஓபிஎஸ் வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கு உள்ளது. அவர் சென்ற உயரங்களுக்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஆனால், யார் பேச்சையோ கேட்டு தர்ம யுத்தம் நடத்தினர். அது மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் 2024 இல் மீண்டும் முதலமைச்சராகி இருப்பார்.
அதிமுகவை ஊழல் கட்சி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்திருப்பது குறித்து பேசிய டிடிவி தினகரன் எங்கள் தலைவர் எம்ஜிஆர் படத்தை வைத்துக்கொண்டு எங்களின் கட்சியை ஊழல் கட்சி என விஜய் சொல்கிறார். முதலில் அவரது திரைப்படங்களுக்கான கள்ள டிக்கெட் விற்பனை ஊழல்களை விஜய் தடுத்து நிறுத்த வேண்டும். நாங்கள் அமைதியாக இருப்பதால் அவர் எதுவேண்டுமானாலும் பேசலாமா? நாங்கள் வெகுண்டெழுந்தால் என்ன ஆவது? விஜயகாந்த் போல தேர்தலில் தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்று நான் கூறி இருந்தேன். ஆனால், அவர் எம்.ஜி.ஆர் போல வருவார் என்று நான் சொல்லவில்லை என தெரிவித்தார்


