கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் (நவ.28) இந்தக் குடியிருப்பின் A-பிளாக்கில் 3 வீடுகள், C-பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளிலிருந்து 42 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப் (48), இர்பான் (45), கல்லூ ஆரிப் (60) ஆகிய 3 பேர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதையும், அவர்கள் குனியமுத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பதையும் கண்டறிந்தனர்.

நேற்று (நவ. 29) அந்த பகுதிக்குச் சென்ற போலீசார் திருடர்களை பிடிக்க முற்பட்டபோது அவர்கள் போலீசாரை தாக்கியுள்ளனர். இதில் பார்த்திபன் என்ற காவலருக்கு பலத்த காயம் ஏற்படவே, தப்பி செல்ல முயன்ற 3 பேரையும் அவர்களுடைய காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பின்னர் காயமடைந்தவர்களை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மூவரையும் சுட்டு பிடித்தது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்த விசாரணையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் ரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.3 பேரையும் கவுண்டம்பாளையம் பகுதிக்கு அழைத்துவந்த ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கு பணி நடைபெற்று வருகிறது” என்றார்.
இதனிடையே மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆசிப் என்பவருக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மருத்துவமனையில் விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக கொள்ளையன் ஆசிப்பின் உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.


