அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் குறித்து கவலைப்படாமல், மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதையே தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு அவர் செயல்படுகிறார். இதன் ஒருபகுதியாக, இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், சூலூர், அவிநாசி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அவர் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி , “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோவை நகரம் உலகத்தரத்துக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், “இந்த பிரச்சினைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில்தான் தீர்க்கப்படும். தற்போது திமுக அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை” என குற்றம்சாட்டினார். திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். “அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட பல திட்டங்கள், திமுக ஆட்சி அமைந்ததும் நிறுத்தப்பட்டன. அதில் அவிநாசி திட்டமும், கோவை மெட்ரோ ரயில் திட்டமும் அடங்கும். திமுக அரசின் அலட்சியத்தால் வளர்ச்சித் திட்டங்கள் தடைபட்டுள்ளன. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக நாங்கள் செய்த பணிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பெண்களுக்கு தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப், விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு – இவை அனைத்தும் அதிமுக ஆட்சியில்தான் சாத்தியமானது. கோவை நகரம் உலகளவில் முன்னேற்றம் அடைய வேண்டிய அனைத்து சாத்தியங்களும் உள்ளதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் இருந்தால் கோவைக்கு தொழிற்துறை வளர்ச்சி, அடிப்படை வசதி மேம்பாடு, போக்குவரத்து வசதிகள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். ஆனால், தற்போதைய திமுக அரசு எந்தக் கண்ணோட்டமும் இன்றி செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.
உங்கள் பிரச்சினைகள் எங்களின் பிரச்சினைகளே. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உங்களுக்கு தேவையான அனைத்து தீர்வுகளும் உடனடியாக வழங்கப்படும்” என்று உறுதியளித்து பேசினார்.

இந்த பிரசாரப் பயணத்தின் போது, எடப்பாடி பழனிசாமி மீது பொதுமக்களிடமிருந்து அதிக வரவேற்பு காணப்படுகிறது. பெண்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என பல தரப்பினரும் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஒவ்வொரு கோரிக்கையையும் கவனமாகக் கேட்ட அவர், “அதிமுக ஆட்சியே உங்களுக்கான உண்மையான தீர்வு” என கூறினார். இதன் மூலம், வரும் தேர்தலை முன்னிட்டு அதிமுக வலுவான அடித்தளத்தை கோவையில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது தெரிய வருகிறது. கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் ஒரு பக்கம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்து வருவது அதிமுக தொண்டர்களிடையே தைரியத்தை ஏற்படுத்துகிறது.


