பாண்டிபஜார் அருகே டாக்டர் நாயர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது…
சென்னையில் நாள்தோறும் மழை பெய்துவரும் நிலையில், சாலைகளில் உள்ள மேடு, பள்ளங்களால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகளுக்காக சென்னை மாநகரில் தோண்டப்பட்ட ஏராளமான சாலைகள் மீண்டும் புதிதாக போடப்படாததால் நகரின் பெரும்பாலான உட்புற சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.
இதனால், மழை பெய்யும் போது வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வரும் நிலையில், சென்னையின் மிக முக்கியமான இடமும், லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமுமான தியாகராயநகரில் உள்ள சாலை திடீரென பள்ளம் ஏற்பட்டிருப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தியாகராயநகரில் உள்ள முக்கிய சாலைகளான கோபதி நாராயணா சாலை மற்றும் சர் தியாகராய சாலைகளை இணைக்கும் வகையில் டாக்டர் நாயர் சாலை உள்ளது. இந்த சாலையுடன் கோபாலகிருஷ்ணா சாலை மற்றும் ராம தெரு சந்திக்கும் இடத்தின் அருகே இன்று(28.09.2023) காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது.


