தமிழ்நாடு பாஜகவில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதில் தேர்தல் தோல்விக்கான காரணங்களையும் ஆராய்ந்தனர்

இதநிடையே, சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் கடந்த ஜூன் 4-ஆம் தேதி தனது பிறந்த நாளில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய இயக்கத்தை துவங்கி உள்ளார். அந்த இயக்கத்திற்கு பாஜகவில் இருந்தவர்கள் அதிகளவில் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியிலும், இயக்கத்திலும் ஒரே நேரத்தில் இருக்க தொண்டர்களால் இருக்க முடியாது. அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் ஆதரவு இல்லை என்று தெரிவித்தார். மேலும், பாஜகவில் இருந்து பிரிந்து இருந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் மையக்குழு ஆலோசனைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைசசர் முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியக் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில், “மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் தமிழக பாஜகவின் மையக் குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த முக்கிய மையக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இணைந்து பங்கேற்றோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கியை இழக்கவில்லை. தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாஜகவை பலப்படுத்த வேண்டும். சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தோல்வியாக கருத வேண்டாம். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்துவிட்டு, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அடுத்தக் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலை மனதில் வைத்து பாஜகவினர் தங்களின் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


