18,600 கோடி முதலீட்டில் எல்&டி லிமிடெட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் எல்&டி நிறுவனம் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொண்டு தொழில்துறையில் வலுவான தடம் பதித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பரவலாகவும், வெவ்வேறு துறைகளிலும் மேலும் 18,600 கோடி ரூபாய் முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் அமைக்க முன்வந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தொடர்ந்து வழங்கும்.
லார்சன் & டூப்ரோ லிமிடெட் (L&T) நிறுவனம், தமிழ்நாட்டில் மேற்கொள்ள இருக்கும் மூன்று திட்டங்கள்காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம்,
கோயம்புத்தூரில் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம்,
திருவள்ளூர் மாவட்டத்தில், 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் 5,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காட்டுப்பள்ளி எல்&டி கப்பல் கட்டும் தளம் விரிவாக்கத் திட்டம்.2036- ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் இலட்சிய இலக்கினை எய்துவதற்கான முயற்சியின் மைல் கல்லாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும். பல்துறை சார்ந்த இம்முதலீடுகளின் மூலம் மாநிலத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள் வளர்ச்சிப் பெறுவதுடன், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பு மேம்படும்.
மேலும் காட்டுப்பள்ளி திட்டம், கடலோர காற்றாலை கட்டுருவாக்கத் தொழிலுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டு வரும். இத்திட்டங்கள் செயலாக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பெரிய அளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், மாநிலத்தின் பொருளாதாரமும் மேம்படும்.தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது


